📖 Premium தளத்தில் கதைகள் வாசிக்க, 🛒 Amazon Kindle‑இல் கதைகள் வாசிக்க, ▶️ YouTube Channel‑இல் Audio novel கேட்க👇
Skip to content
Home » அந்த வானம் எந்தன் வசம்-25

அந்த வானம் எந்தன் வசம்-25

25

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

படிப்பு உழைப்பு எதுவும் இல்லாது மைனர் போல ஊரில் சுற்றி திரிந்ததை தவிர வேறு ஏதும் வேலை இல்லை அவனுக்கு. 

“அதெல்லாம் சரி. இப்போது இங்கே வந்து உட்கார்ந்திருப்பானேன்?”

“நீ வந்து உன் அப்பாவின் சொத்துக்களை பண்ணையம் செய்து கொள்ளனும்”

“அவருக்கு நான் எதுவும் செய்யாத போது அவருடைய சொத்துக்களும் எனக்கு வேண்டாம்”

“அது அவருடையது இல்லை. உன் தாத்தாவின் தாத்தா காலத்து சொத்துக்கள். பரம்பரை சொத்து. உங்க குடும்பம் தான் அந்த ஊரிலேயே பண்ணையார் குடும்பம்.”

“தயவு செய்து எழுந்து போங்க. எனக்கு எந்த குடும்ப பெருமையும் வேண்டாம். எங்க அம்மா செத்து போனதும் இதோ இந்த தாய் மாமன் தான் என்னை வளர்த்து ஆளாக்கி தன் மகளையும் கட்டி கொடுத்து கரை சேர்த்தார். அவருக்கே இங்கே நிறைய சொத்து உண்டு. எனக்கு அது போதும்”

“உங்க அப்பா மனசு வேகாது.”

“அதை பற்றி உங்களுக்கு என்ன கவலை? அதான் உங்க தம்பி இருக்கானே. அவனுக்கும் அவன் 

பையனுக்கும் கொடுங்கள்.”

“என் தம்பியும் அவன் பையனும் இல்லையே”

“என்னது? ஏன்.? என்னாச்சு?”

“உங்க அப்பா உனக்கு கொடுக்க நினைத்ததை வேறு யாருக்கும் கொடுக்க விடுவாரா?.  அதனால்..” தரையோடு புரண்டு அழுதாள் 

“அதனால் ! அட சொல்லிட்டு அழுங்க. இப்படி அழுதால் நான் என்னவென்று நினைப்பது?”

“என்னவென்று சொல்வது? உங்க அப்பாவின் ஆவி தான்”

“அப்பாவின் ஆவியா?” 

“ஆமாம். ஒருநாள் என் தம்பியும் அவன் மகனும் வண்டியில் போகும் போது விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலி  ஆகிட்டாங்க.”

“அதுக்கு எங்க அப்பா ஆவி தான் காரணம்ன்னு எப்படி சொல்வீங்க?”

“குறி பார்த்தோம்”

“அட போங்கம்மா. இந்த காலத்தில் போய் ஆவி அது இதுன்னு.”

“இல்ல தம்பி, வீட்டில் கூட பண்டம் பாத்திரத்தை போட்டு உருட்டி கிட்டு தான் இருக்கிறார்.”

“அதுவும்  என் அப்பா தானா?”

“கேலி பண்ணாதே தம்பி. குறி சொல்றவர் சொன்னார் உன் சொத்தை உன்னிடம் ஒப்படைத்தால் தான் இந்த பிரச்சினை முடியும் என்று. நானும் வீட்டில் விளக்கு பொருத்தி உங்க அப்பாவை கும்பிட்டு உன் சொத்தை உன்னை தேடி கண்டு பிடித்து கொடுத்து விடுவதாக சொல்லவும் இப்போது அந்த உருட்டல் இல்லை.”

“உங்களை நினைத்தால் பாவமாக தான் இருக்கு. ஆனால் இங்கே எல்லாவற்றையும் விட்டு விட்டு அங்கே வந்து என்னால் இருக்க முடியாது”

இதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த அருள் உள்ளே அறைக்குள் படுத்திருந்தவன் வெளியே வந்து சொன்னான். “அப்பா, நான் போகிறேன்”

இதை அவன் சொல்லி முடிக்கவும் அவனுடைய தந்தையின் முகத்தில் சின்னதாக ஒரு பெருமிதமும் சந்தோசமும் எட்டி பார்த்தது. என்ன இருந்தாலும் அவருடைய மூதாதையரின் சொத்து. அதுவும் நம் அப்பாவும் நம்மை சேராமலே போய் விடுவார்களோ என்று இத்தனை காலங்கள் மனதிற்குள் மருகி கொண்டிருந்தவர் தானே. இப்போது அப்பாவின் அன்பு நம்மோடு தான் இத்தனை வருடங்களாக இருந்திருக்கிறது என்று சம்பந்தபட்டவளே இங்கே வந்து சாட்சி சொல்லும் போது அவளை தோற்று போனவளாகவும் தான் எல்லாவற்றிலும் ஜெயித்தவராகவும் அவர் உணர்ந்தார். ஆனால் தன்னுடைய உள்ளத்து உணர்சிகளை எங்கே சரோஜா கவனித்து விட போகிறாளோ என்று ஓர கண்ணால் அவளை பார்க்கும் முன்பு அவள் கிரீச்சிட்டாள்.

“டேய் தம்பி அங்கே ஆவி இருக்கு என்று இந்த அம்மாள் சொன்னதை கேட்டே இல்லே” சரோஜா தான் அலறி துடித்தாள். 

அவளை மிகவும் நிதானமாக பார்த்தான் அருள். இவள் நம்மை ஒரே மகன் என்று செல்லம் கொடுத்து திங்க வைத்து கொழுக்க வைத்து இன்றைக்கு ஒரு பெண்ணால் நிராகரிக்கப்பட்டு தோற்று போய் இப்படி இடிந்து போய் வந்திருக்கிறோம். இனியும் இவள் அருகாமையில் மனதாலும் கூட இருக்க கூடாது என்று சட்டென்று தீர்மானித்து தீர்மானமாக சொன்னான்.

“அப்பா, உங்கள் அப்பா நான் போய் இதை எல்லாம் ஆண்டு கொண்டால்  சந்தோஷப்பட மாட்டாரா?”

“இரட்டிப்பு சந்தோஷப்படுவார்”

“அப்போது உங்கள் பயம் நிவர்த்தி ஆகி விடும் தானே?” பொன்னியிடம் கேட்டான். “ஆமாம் தம்பி. நான் எல்லாவற்றையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டு காசிக்கு போய் விடுவேன்”

“காசிக்கா?” 

“ஆமாம். எனக்கு என் தம்பியை தவிர வேறு யாரும் கிடையாது”

“நீங்கள் எங்கும் போக வேண்டாம். என்னுடன் இருந்து விடுங்கள்”

அருள் புதுக்குடிக்கு வந்து சேர்ந்தான். 

சரோஜா தான் புலம்பி கொண்டே இருந்தாள். அருள் ஒரே வாரிசு என்று அவனை அழைத்து கொண்டு போய் சாப்பாட்டில் விஷம் கொடுத்து பொன்னி அவனை கொன்று விட கூடும் என்று அளவிற்கு அதிகமாகவே பயந்தாள். ஆனால் மாணிக்கம் தன்  தந்தை அருளுடன் இருந்து அவனை பாதுகாத்து கொள்வார் என்று திரும்ப திரும்ப சொல்லி அவளை ஆசுவாசபடுத்தினார்.

பொன்னியுடன் புதுக்குடிக்கு வந்து சேர்ந்த அருள் முதலில் ஒரு இடமாறுதலாக தான் இத்தகைய வாய்ப்பை நினைத்தான். ஆனால் அவன் தாய் வீட்டை விட நான்கைந்து மடங்கு பரப்பளவு உள்ள விவசாய நிலத்தை காணவும் அதை முத்தரசன் தரிசாக போட்டு வைத்திருப்பதை கண்டு சொத்துக்கு உடையவனாக கவலைப்பட்டான்.

அவன் மனதை சதாசர்வ காலமும் அரித்து கொண்டிருக்கும் நிவேதிதாவின்  நினைவுகளில் இருந்து அவனுக்கு மீளவே முடியாமல் ரொம்பவே சிரமபட்டான். அதிலும் குறிப்பாக “நல்லா நூறு கிலோ அரிசி மூட்டை போன்று இருக்கும் உன்னை நான் என்றில்லை. வேறு எந்த பெண்ணும் விரும்ப மாட்டாள்” என்ற நிவியின் வார்த்தைகள் அவனை புரட்டி கொண்டே இருந்தது. 

இப்போது அவனுக்கு முன்பாக இருக்கும் வழிகள் இரண்டு. 

ஒன்று உடல்பயிற்சி கருவிகளை வாங்கி வீட்டில் போட்டு பயிற்சி செய்வது. 

இரண்டு வயலில் இறங்கி வேலை செய்து உடலை குறைப்பது.

3 thoughts on “அந்த வானம் எந்தன் வசம்-25”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!