29
“வாம்மா சாரு”
பெரியவர் ராஜசேகரின் இதமான அழைப்பு அந்த அறையின் ஏசியை விட இதமாக இருந்தது அவளுக்கு.
எப்போதும் அவளை தேவி என்று பின் பெயரை சொல்லி அழைப்பவர் அவர். அது தான் சரியானதும் கூட. அவள் தந்தையின் பெயரை பின் பெயராக எந்த ஆவணத்திலும் கொடுத்திருக்கவில்லை. ஆதலால் தந்தையின் பெயரை சொல்லி யாரும் அழைப்பதில்லை. அதனால் தேவி தான் எல்லோருக்கும்.
“வாம்மா. உட்காரு”
அவருக்கு எதிரில் என்றுமே அவள் அமர்ந்தது இல்லை. இப்போதும் அமருவதற்கு தயங்கியவளை நிமிர்ந்து பார்த்தவராக மீண்டும் அவளை அமர சொல்லி வற்புறுத்தவே வேறு வழியில்லாமல் அமர்ந்தாள் சாரு.
வெளிநாட்டில் பழகிய பழக்கத்தினால் தானோ என்னவோ அவள் இது போன்ற சம்பிரதாயங்களை கடைபிடிப்பதில்லை.
சாரு வந்த புதிதில், நந்தினி அவளை மேடம் என்றே மரியாதையுடன் அழைப்பாள். தன்னை விட இந்த கம்பனியில் நான்கு வருட காலங்கள் அவள் சீனியர் ஆதலாலும் கிட்டத்தட்ட சாருவின் வயது ஒத்தவளாகவும் நந்தினி இருந்ததால் சாரு அவளை தன்னுடைய பெயரை சொல்லியே பேச வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தாள்.
முதலில் மிகவும் தயங்கிய நந்தினி காலப்போக்கில் அதை நடைமுறைக்கு பழகி கொண்டாள். அதற்கு சாருவின் தோழமையான நடவடிக்கைகள் மிகவும் உதவியாக இருந்தது.
அவளுமே யாரையும் அவர்கள் தன்னை விட வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்களாக இருந்தாலும் பெயரை சொல்லியே அழைப்பாள். அவளுடைய பதவி அதுபோல.
அப்படிப்பட்டவள் ஏனோ பெரியவரான ராஜசேகரிடம் சகஜமாக இருக்க மாட்டாள். இந்த வயதிலும் அவரிடம் இருக்கும் சுறுசுறுப்பும் தொழிலின் மீது அவருக்கு இருக்கும் பக்தியும் அவளையும் அறியாமல் அவள் மனதில் அவரிடம் மிகுந்த மரியாதையும் ஏன் கிட்டத்தட்ட பக்தியுமே ஏற்பட்டிருந்தது. ஆதலால் அவர் எதிரில் அமருவதை எப்போதுமே கவனமாக தவிர்த்து விடுவாள்.
“உன்னுடைய பிரிவில் ஏதேனும் பென்டிங் வொர்க் இருக்கிறதா சாரு?”
“இல்லை சார். எல்லாவற்றையும் முடித்து விட்டேன். கடைசியாக ஒருமுறை சரிபார்த்து விட்டு கையெழுத்து இட வேண்டியது தான்”
“அதை நந்தினி செய்து விடுவாள் அல்லவா?”
எதற்கு இதை கேட்கிறார் என்று புரியவில்லை. ஆனால் அவர் கேட்பது போன்று மீதம் இருக்கும் வேலைகளை நந்தினியே சரி பார்த்து விட முடியும். சாரு கையெழுத்து இட வேண்டியது மட்டும் தான் பாக்கி.
“செய்து விடுவாள் சார்”
“அப்படியானால் நல்லது”
அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே சம்பத் உள்ளே வந்து வணக்கம் அய்யா என்று குழைந்து நின்றார்.
சம்பத் அந்த கம்பனியின் விற்பனை பிரிவின் மேனேஜராக நெடுநாளாக பணியில் இருப்பவர். நல்ல உயரம். அதற்கேற்ற பருமன். கண்களில் அதை விட பருமனான கண்ணாடி. அத்தனை உயரத்தையும் கூனி குறுக்கி தழைந்து பெரியவரின் முன்பு குலதெய்வத்தின் முன் நெக்குருகி நிற்கும் பக்தனை போன்று நிற்பார்.
“வாப்பா சம்பத்.
“ஐயா கூப்பிட்டீங்களாமே?”
“சம்பத்து நீ ஒன்னு செய்”
“சொல்லுங்கய்யா. நீங்க சொன்னா ஒன்னு என்ன ஓராயிரம் செய்வேன்”
“ஓராயிரம் எல்லாம் வேண்டாம். ஒன்னே ஒன்னு செய்’
“சொல்லுங்கய்யா.” முன்னை விட இன்னும் தாழ்ந்து குறுகி சொன்னவரைப் ஒரு பார்வை பார்த்து விட்டு பிறகு சாருவையும் ஒரு நீண்ட பார்வை பார்த்தார்.
சாருவின் முகத்தை சற்று நேரம் உற்று பார்த்து என்னத்தையோ கண்டு கொண்டவராக மனத்திருப்தியோடு அதில் ஒரு சந்தோசமும் அடைந்தவராக தொண்டையை கனைத்து கொண்டு சம்பத்தை பார்த்து சொன்னார்.
“சம்பத்து, நீ என்ன பண்றே. இந்த மேடத்தை அழைத்து கொண்டு போய் உன் சீட்டில் உட்கார வைத்து விட்டு வா”
“அய்யா…!”
திடுக்கிட்டது சம்பத்து மட்டுமன்றி சாருவும் கூட திகைத்து போனாள்.
“என்னப்பா புரியவில்லையா? இன்னொரு தடவை சொல்கிறேன். உன்னுடைய சீட்டில் இந்த சாருலதா தேவியை கொண்டு உட்கார வைத்து விட்டு வா”
“ஐயா, உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்லை. நான் சொல்றேன்னு தப்பா நினைத்து கொள்ள கூடாது. திடீர்னு இப்படி ஒரு முடிவு எடுத்துட்டீங்களே?”
“திடீரென்று எடுத்த முடிவு இல்லைப்பா சம்பத். ரொம்ப நாளா உனக்கு ஒரு பதவி உயர்வு கொடுக்கணும்னு நினைத்து கொண்டிருந்தேன்”
“அய்யா எனக்கு எதுக்குங்க அய்யா பதவி எல்லாம்?. இன்னும் ரெண்டு வருஷம். அப்புறம் ரிடைர்ட் ஆயிடுவேன். அதுவரைக்கும் இருக்கிற இடத்தில நிம்மதியா இருந்துட்டு போறேன்”
“நீ சொன்னா ஆச்சா? உன்னுடைய உழைப்புக்கு எவ்வளவோ கொடுத்தாலும் தகுமே”
“அய்யா அதெல்லாம் வேண்டாங்கய்யா. நான் இப்பவே திருப்தியாத் தான் இருக்கேன்”
“என்னவோ ஓராயிரம் செய்றேன்னு சொன்னே. ஒன்னே ஒன்னை தானே நான் கேட்டேன். அதை செய்ய மாட்டேங்கறே?”
“என்னுடைய வேலையில் தான் சொல்றீங்கன்னு நெனச்சேன். இப்படி வேலையையே மாத்திருவீங்கன்னு நினைக்கலே”
“சம்பத் தொனத்தொனன்னு பேசாதே. சொல்றதை செய். போம்மா இவருடன் போய் வேலையை சார்ஜ் எடுத்துக்க. நந்தினியை கோப்புகளை கொண்டு வந்து கையெழுத்து வாங்கி கொள்ள சொல்லு”
“சரிங்க அய்யா. ஒரு வாரம் கூட இருந்து வேலையை கத்து கொடுத்துட்டு போறேன்”
“ஒரு வாரமா?”
“ஒரு வாரம் ஆகும்”
“அப்படியா?” கேட்டவர் சாருவைப் பார்த்து “அப்படியா சொல்றே?” என்றார்.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று சாருவிற்கு புரியவில்லை. பேசாமல் இருந்தாள்.
”அதெல்லாம் வேண்டாம் சம்பத். நீ உடனே போய் ஹெச்.ஆர். முருகவேலிடம் ரிபோர்ட் பண்ணு. நீ வருவேன்னு நான் அவனுக்கு சொல்லி இருக்கேன்”
“ஐயா. இப்படி திடுதிப்புன்னு போகச் சொன்னா எப்படி?”
“ஏன் அதில் உனக்கு என்ன பிரச்சினை?”
“இன்னும் கணக்கு முடிக்கணும்”
“அதெல்லாம் இந்த அம்மா பார்த்துக்குவாங்க”
“அய்யா என்னாலே இந்த இடத்தை விட்டு விட்டு போக முடியாது”
“ஏன்?”
“உங்க பையன் வரட்டும். அவர் வந்து சொல்லட்டும். அவர் தான் இந்த பொறுப்பை கொடுத்தார். வேண்டாம் என்று அவரே வந்து சொல்லட்டும்”
“ஓஹோ, அப்படியா? அவன் சொன்னா கேப்பியா?”
“ஆமாம். அவர் சொன்னா கேட்பேன். அவரே வந்து விடட்டும்”
“நானும் அவன் சொன்னதையே கேட்கட்டுமா?”
“எ. என்ன சொன்னார்?”
அந்த குழைவும் பணிவும் எங்கே போயிற்று என்று தெரியவில்லை. நெஞ்சை நிமிர்த்தி சண்டைக் கோழி போல சிலிர்த்து கொண்டு சொன்னான்.
“அவன் உன்னை போலீசிலே ஒப்படைத்து விடச் சொன்னான். அவன் சொன்னது போல போலீசை கூப்பிடட்டுமா?”
“எதுக்கு..? எதுக்கு போலீசில் ஒப்படைக்கணும்? நான் என்ன தப்பு பண்ணினேன்?”
“என்ன பண்ணினியா? விற்பனையில் உன்னை பற்றி ஏகப்பட்ட புகார். என்னவோ பண்றேன்னு தெரியுது. ஆனால் அது என்னன்னு புரியலை. அத்தனை பக்கா ப்ளான். கண்டு பிடித்து விட்டால் கண்டிப்பாக ஜெயில் தான்.
“என்னைப் பற்றி யாரோ வேண்டாதவங்க உங்களிடம் இல்லாததையும் பொல்லாததையும் போட்டு கொடுத்திருக்காங்க.”
“வேண்டாம் சம்பத். என் வாயை கிளறாதே.”
“என் மேலே வந்த புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லேன்னு நீங்க தானே சொன்னீங்க”
“அது நேற்று வரை”
“இன்னைக்கு ஆதாரம் கிடைத்து விட்டதா?”
“திமிரா பேசறியா? போனா போவுதுன்னு உன்னை விடலாம்னு நினச்சேன். நீ சரிப்பட மாட்டே”
“என் மேலே அபாண்டமா பேசினா நான் எப்படி ஒத்துக்கறது?”
“அபாண்டமா? உட்காரு”
விளக்கினார். அவனுடைய திருட்டுத்தனத்தை. அவன் ஆச்சரியப்பட்டான். சின்னதாக செய்வது, யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்திருந்தது.
எப்படி கண்டுபிடித்தார்கள்? யார் கண்டுபிடித்திருப்பார்கள்?
30
விஷயம் இது தான்.
ஆர்டர் இருவத்தி அஞ்சு டன் கம்பிகள் என்று இருக்கும். அதற்குரிய பணம் வரவு ஆகி இருக்கும். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இதில் எந்த தவறும் தெரியவில்லை. ஆனால் சாருலதா ஆர்டர் போக கையிருப்பில் மீதமுள்ள மூலப்பொருட்களை கணக்கெடுத்ததில் தான் முறைகேடு வெளிப்பட்டது. அதுவும் சிறிய அளவில். வருட கணக்கில்.
மெயின் கேட் ரெஜிஸ்டரில் கிராஸ் செக் பண்ணியதில் உண்மை வெளிப்பட்டது. இருபத்தி அஞ்சு டன் கம்பிகள் ஆர்டர். ஆனால் அனுப்பப்பட்டிருப்பதோ இருபத்தி ஏழு டன் கம்பிகள். ஒரு லோடில் இரண்டு டன் கம்பிகள் எக்ஸ்ட்ரா வெளியே போயிருக்கிறது. வெறும் இரண்டு டன் கம்பிகள். அதுவும் வருடக்கணக்கில். சிறுதுளி பெருவெள்ளம்.
அதற்கு தனியாக பெறப்பட்ட பணத்தில் யார் யாருக்கெல்லாம் பங்கு? எவ்வளவு?
இதை கண்டு கொண்டதாக காட்டி கொண்டால் வீணில் அது தொழிற்சாலைக்கு அவப்பெயராகி விடும். அதனால் சம்பத்தை இடம் மாற்றி விடலாம் என்று பெரியவர் யோசனை. ஆனால் மகனுக்கோ மிகுந்த கோபம். போலீசில் ஒப்படைத்து விடலாம் என்று ஆலோசனை கொடுத்த மகனை சமாதானப்படுத்திய பெரியவர் போனால் போகட்டும் என்று சம்பத்திற்கு இரக்கம் பாராட்டினால் அதை பற்றி கொள்ளாமல் திமிர்த்தனமாக பேசுகிறான் இந்த கள்வன்.
“நானாக உன்னை வேலையில் இருந்து தூக்கி எறிந்து போலீசில் ஒப்படைக்கட்டுமா? அல்லது நீயாக போய் விடுகிறாயா?”
சம்பத் லேசுபட்டவன் இல்லை. பதிலுக்கு பதில் வாதாடினான். ஒப்புக் கொள்ள மறுத்தான். எதற்கும் பெரியவர் மசியாமல் போகவே அவரை கொன்று விடுவதாக மிரட்டினான்.
பயந்து போனவளாக சாரு போனை எடுத்து கௌதமை கால் பண்ணி பேசாமல் பிடித்து கொண்டிருந்தாள். மறுமுனையில் இதை எல்லாம் கேட்டு விட்டு விரைந்து வந்த கௌதம் உள்ளே நுழைந்து சம்பத்தை அடிக்க பாய்ந்தான். கௌதமை எதிர்பாராமல் அங்கே கண்டதில் சற்றே பின் வாங்கியவன் சாருவை முறைத்து கொண்டே விரைந்து வெளியேறினான் அவன்.
அதுவரை சமாளித்து கொண்டிருந்த பெரியவர் சட்டென்று தளர்ந்து நாற்காலியில் சரிந்தார். அதை பார்த்து விட்டு ஓடிப்போய் அவரை தாங்கி பிடித்து உட்கார வைத்த சாரு அவர் நெஞ்சை நீவி குடிக்க தண்ணீர் கொடுத்தாள்.
தண்ணீரை வாங்கி குடித்த ராஜசேகருக்கு படபடப்பு அடங்க நெடுநேரமாயிற்று. ஆசுவாசமான பின் கௌதமின் கரங்களை பற்றி பிடித்து கொண்டு கேட்டார்.
“நீ எப்படி சரியான நேரத்தில் இங்கே வந்தே?”
“சாரு தான் போனை டயல் செய்து இங்கே இவன் உங்களை மிரட்டியதை காட்டி கொடுத்தாள். ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்து ஓடி வந்தேன்”
“நல்ல சமயத்தில் வந்தீர்கள் கௌதம்”
“கௌதம் அவனிடம் ஜாக்கிரதையாக இருப்பா”
“என்னை அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அவன் வெளியே போகும் போது சாருவை முறைத்து கொண்டே போனான். அதனால் எனக்கு சாருவை நினைத்தால் தான் யோசனையாக இருக்கிறது”
“என்னை அவன் என்ன செய்து விட முடியும்?”
“அவனுடைய பின்புலம் தெரியாமல் பேசாதே. ஒரு பெரிய கூட்டமே இந்த திருட்டில் சம்பந்தப்பட்டிருக்கிறது.”
“தெரிந்தும் சாரை அவனுடன் தனியாக டீல் பண்ண விட்டு விட்டீர்களே?”
“ஒன்னும் தெரியாதது போல அவனை கூப்பிட்டு வேறு இடத்திற்கு மாற்றி விடலாம் என்று நினைத்தோம்”
“அப்பப்பா, எவ்வளவு பயங்கரமானவன். நல்லவேளை சார் தப்பித்தார்”
“இவன் இப்படி ஏதேனும் பண்ணுவான். இவன் திருட்டுத்தனம் உன்னால் தான் வெளியே தெரிந்தது என்பதை அறிந்து கொண்டால் உனக்கு அவனால் ஏதேனும் ஆபத்து வந்து விடக்கூடும் என்று நினைத்து தான் உன்னை வெளியே யாரிடமும் சொல்லாதே என்று எச்சரித்தேன்”
“ஓஹோ”
இவன் நம்முடைய நன்மைக்காக யோசித்திருக்கிறான். ஆனால் நாம் எப்போதுமே இவனை தப்பிதமாகவே நினைக்கிறோம் என்று ஒரு சின்ன குற்ற உணர்வு ஏற்பட்டது அவளுக்கு.
“சாரி” என்றாள் ஆத்மார்த்தமாக.
“என்ன திடீர்ன்னு?”
“ஊஹூம். ஒண்ணுமில்லை” என்றவள் மீண்டும் “தேங்க்ஸ்” என்றாள்.
“எனக்கு ஒன்னும் புரியலை” என்று தோளைக் குலுக்கியவன் “இங்கே நடந்ததை வெளியே சொல்லாதே” என்றான் மீண்டும்.
“ஆமாம்மா” என்றார் பெரியவர்.”ஜாக்கிரதையாக இரும்மா” என்றார் கூடுதலாக.
“சரிங்க” என்று பெரியவரிடம் வாய் சொன்னாலும் சம்மதம் என்று கௌதமிற்கு கண்கள் பதில் சொன்னது.
#####
விடுதியில் தன்னுடைய அறையில் படுத்திருந்தவளுக்கு உடனே உறக்கம் வரவில்லை. கடந்த பத்து நாட்களாக கடுமையான வேலை, இன்று சம்பத்திடம் நேருக்கு நேர் மோதியப் பிறகு இன்று தான் இது ஒரு முடிவிற்கு வந்தது. அப்பா..! என்னமாக மிரட்டினான்? கையில் கத்திக்கித்தி வைத்திருந்தால் பெரியவரை மட்டுமன்றி நம்மையும் ஒரே போடாகப் போட்டிருப்பான் என்று நினைத்தவளுக்கு பயத்தில் நாக்கு வறண்டது. ஆனால் சரியான நேரத்தில் கௌதம் வந்ததினால் எந்த ஆபத்தும் இல்லாமல் இருவரும் தப்பினோம் என்று நினைத்து மனம் லேசாக இருந்தது.
கௌதம். ஆபத்பாந்தவன்.
துறுதுறு என்று அலைந்த மனதை அடக்க முயற்சி செய்து பார்த்து விட்டு முடியாமல் மனதை அதன் போக்கிலேயே போக விட்டு அமைதியாக படுத்திருந்தாள்..
அதன் போக்கில் போன மனம் கடைசியில் கௌதமிடம் வந்து மண்டியிட்டு தெண்டனிட்டு அடிமையாய் நின்றது. அவனுக்கும் தனக்குமான சந்திப்புகளையும் உரையாடல்களையும் ஒவ்வொன்றாக நினைத்து பார்த்தாள். ஜன்னலின் வழியே தெரிந்த நிலா அவளுக்கு தேம்ஸ் நதியையும் அன்றைய இரவையும் நினைவுபடுத்தவே நெஞ்சை அடைத்த ஏக்கம் பெருமூச்சாக
வெளிப்பட்டது.
எப்போதும் அவனிடம் அசூசை கொண்டது அவனிடம் தனக்கிருந்த அதீத காதலினால் என்பது புரிந்தது. இந்த நள்ளிரவில் அவனை பார்க்க வேண்டும் என்று தனக்குள் எழுந்த பேராவலை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டாள்.
மயக்கி, மாயம் செய்து தன் மனதிற்குள் நுழைந்த அந்த மாயக்கண்ணனின் வசீகரத்தில் தான் வசியமாகி போனது இதமளித்தது.
அவனிடம் தனக்குண்டான காதலை சொல்லி விட மனது பட்ட கர்ப்ப வேதனை இருக்கிறதே. அப்பப்பா. படுக்கையில் படுக்க முடியாமல் எழுந்து கொண்டாள். தாகமாக இருந்தது. மனசும் நாக்கும் வறட்சி கண்டிருந்தது. நாக்கின் வறட்சிக்கு நீரை எடுத்து பருகியவள் நாளை கௌதமை கண்டு உண்மையை சொல்லி விட தீர்மானித்து கொண்டாள்.
வேண்டாம். இப்போது அல்ல.
பின் எப்போது?
ம். வார கடைசியில் எங்கேயாவது வெளியே போவோமா?
ம். ஊஹூம். வேண்டாம். அவனுடன் இது வரை எங்கேயும் தனியே போனதில்லை. இதற்காக போவது போல இருக்க கூடாது. இயல்பாக இருப்பது போல காட்டிக் கொள்ள வேண்டும்.
என்ன செய்யலாம்?
அடுத்த வாரத்தின் கடைசியில் வரப்போகும் தொழிற்சாலையின் வருடாந்திர விழா கொண்டாட்டத்தில் சொல்லிக் கொள்ளலாம்.
ஒருவழியாக ஒரு தீர்மானத்திற்கு வந்த பின்பு தான் அவளால் இயல்பாக மூச்சு விட முடிந்தது. ஜன்னலின் வழியே தெரிந்த வெண்ணிலாவிடம் சுட்டு விரலை நீட்டி சொன்னாள். “அடுத்த பவுர்ணமி இரவில் உன்னோடு நாங்கள் இருவரும் சேர்ந்திருப்போம். தெரியுமா?”
வெண்ணிலவும் தெரியும் என்று சிரித்துக் கொண்டே நகர்ந்தது. வெளிச்சம் நகர்ந்தால் இருள் தானே. இருளும் வந்தது. அதோடு உறக்கமும் வந்தது அவளுக்கு.
Alagana kaadham kadhai…. 🧡🧡🧡🧡🧡