41
அவருடைய மகன் ராஜசேகர் தன் தந்தை பட்ட அவதியை அருகில் இருந்து கண்கூடாக
கண்டவர். அந்த ஜமீன்தார் வீட்டில் வேறு பெண்பிள்ளைகள் இல்லை. இருந்திருந்தால் நான்
அவளை கொண்டு வந்திருப்பேன் என்பார். என்றேனும் அந்த ஜமீன் வீட்டு பெண் நம் வீட்டிற்கு
வர வேண்டும் என்பார். அப்போது தான் என் மனம் ஆறும் என்பார். அதுவரை நான் மன அமைதி
இல்லாமல் இங்கேயே தான் அலைந்து கொண்டிருப்பேன் என்பார்.”
“அப்பா நீங்கள் இந்த கதை எல்லாம் எனக்கே சொன்னதில்லையே?”
“அவர் பட்ட கஷ்டத்தை கண்கூடாக கண்டவன் நான். அந்த வேதனையை வீணாக உனக்கு
எதற்கு கொடுப்பானேன் என்று தான் சொன்னது இல்லை”
“அப்படியானால் நம் ஊர் இங்கே தானா?”
“நம் ஊர் உறவு குலதெய்வம் எல்லாமே இங்கே தான்”
“அதனால் தான் நீங்கள் மீனாட்சியை குலதெய்வமாக ஏற்று கொண்டீர்களா?”
“அவளை மட்டுமால். இதோ இங்கே நிற்கிறாளே சாருலதா தேவி. அவளையும் என்னுடைய
குலதெய்வமாக ஏற்று கொண்டு விட்டேன்”
“ஏன் அப்பா அப்படி?”
“அன்று ஒருநாள் சம்பத் என்னை கொல்ல வந்த போது அருகில் இருந்து என்னை காத்தவள் என்
குலதெய்வம் இந்த சாரு தான்”
“இங்கே வா சாரு”
அவர் அழைத்ததும் போகாமல் உலகம்மையை பார்த்தாள் சாரு. அவர் அழைத்ததும் சென்று விட
முடியுமா? பாட்டியும் தாத்தாவும் சொல்லாமல், அல்லது ராஜசேகரின் பின்கதை சுருக்கத்தை
அவர்கள் ஒப்புக் கொள்ளாமல் எப்படி போக முடியும்? இத்தனைக் காலமும் இத்தகைய சாபம்
பாபம் அற்பாயுள் போன்ற வேதனைகளை உள்ளே வைத்துக் கொண்டு தனக்காக தினம் தினம்
செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் தாத்தாவும் பாட்டியும் சொல்லாமல் போய் விடத் தான்
முடியுமா? அது கௌதமிற்காக என்றாலும் கூட தன்னால் பாட்டியை வேதனைப்படுத்தி விட
முடியாது. பாட்டி சொல்லட்டும். பொறுத்திருப்போம் என்று பாட்டியைப் பார்த்துக் கொண்டு
நின்றாள்.
ராஜசேகரின் கதையை கேட்டு இப்படியும் கூட நடக்குமா என்று திகைத்து போய் இருந்த
உலகம்மையும் கருணாகரனும் சுயநினைவு அடைந்தவர்களாக சாருவை பார்த்தார்கள். பின்பு
ராஜசேகரிடம் கருணாகரன் மிகவும் தன்மையாக கேட்டார். “அய்யா, எங்களிடம் தயவு செய்து
கோபம் கொள்ளக் கூடாது. நீங்கள் தான் நாங்கள் தேடும் குடும்பத்தினர் என்பதற்கு..ஏதேனும்
ஆதாரம் இருக்கிறதா?”
“ஆமாங்க. கோபித்துக் கொள்ளக் கூடாது. எங்கள் குடும்பத்தின் சாபம் அது போல. எங்கள்
பெண்ணை உரிய இடத்தில் ஒப்படைத்தோம் என்ற நிம்மதி எங்களுக்கு வேண்டும்” உலகம்மை
தாழ்ந்தே கேட்டாள்.
“அப்பா இவ்வளவு தூரம் சொல்றாங்க” என்றார் தனசேகர்.
“மாமா இந்த வயதில் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?” குரலில் சிறு எரிச்சல் இருந்தது
கௌதமின் தாய் இந்துமதிக்கு.
“இல்லம்மா. அவுங்க சந்தேகம் நியாயமானது தானே” என்றான் கௌதம்.
“நீ தாத்தாவை நம்பவில்லையா கௌதம்?” தனசேகர் கேட்க,
“உனக்காகத் தானே மாமா இத்தனை தூரம் வந்திருக்கிறார்” என்று இந்துமதி சொல்ல,
“அதே தான். எனக்காக என்று எதையும் தாத்தா செய்து விடக் கூடாதில்லையா? இது நம்பிக்கை
சம்பந்தப்பட்ட விஷயம்” என்றான் கௌதம்.
அவனுடைய நேர்மையான பேச்சைக் கேட்ட கருணாகரன் தன்னருகில் இருந்த உலகம்மையைப்
பார்த்தார். “பார், எவ்வளவு நேர்மையானவனாக சிந்திக்கிறான். இவனுக்கு நம் பெண்ணைக்
கொடுக்க முடியவில்லையே. நாம் தேடும் பையன் இவனாக இருந்து விட்டால் நன்றாக
இருக்குமே” என்றது அந்த பார்வையின் பொருள்.
“நம்ம ஆசைப்பட்டால் ஆயிற்றா? ருசு படுத்திக் கொள்ளாமல் அவசரம் வேண்டாம்” என்றது
உலகம்மையின் பதில் பார்வை.
இவர்கள் அத்தனை பேரும் தங்களுக்குள் பேசிக் கொண்டு தர்கித்தவாறு இருந்தாலும் ராஜசேகர்
தன் கைப்பையைப் பிரித்து அதிலிருந்து ஒரு கட்டு பழுப்பான பழைய காலத்து ஆவணங்களை
வெளியே எடுத்து தன் கண்ணாடியை சரி செய்து போட்டுக் கொண்டு தீர பார்த்து விட்டு
கருணாகரனிடம் கொடுத்தார்.
அவர் என்ன கொடுக்கிறார் எதற்கு கொடுக்கிறார் என்று புரியாமல் குழப்பத்துடன் அவரைப்
பார்த்த கருணாகரன் “அய்யா, என்ன இது? புரியலைங்க” என்றார்.
“இது என் தந்தை, வீரையன் என்ற அவருடைய ஒரிஜினல் பெயரில் முதன் முதலில் வாங்கிய
சொத்தின் பத்திரம்” எடுத்துக் கொடுத்ததை வாங்கிப் பார்த்தார் கருணாகரன்.
“இது, பின்பும் வீரையன் என்ற பெயரில், பழைய இரும்பு வியாபாரம் வாங்கி செய்த தொழில்
தொடங்க வாங்கிய உரிமம்”
அவர் கொடுத்ததை வாங்கிப் பார்த்த கருணாகரன் “அட ஆமாம். வீரையன்னு தான் போட்டிருக்கு”
என்று தன்னருகில் நின்று பேப்பரை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியிடம்
கொடுத்தார்.
“ம்..இது..தன் பெயர் வீரையன் என்பதை வீரசேகர் என்று மாற்றிக் கொண்டதற்கான அரசாங்க
அத்தாட்சி”
“இதோ, இதைப் பாருங்கள்” என்று ஒரு போட்டோவை எடுத்துக் காண்பித்தார். அதில் “வீரையன்.
பழைய இரும்பு வியாபாரம்” என்ற பெயர் பலகை வாழை மரங்கள் இருபுறமும் கட்டப்பட்டிருக்க
சந்தனம் குங்குமத்துடன் காட்சியளித்தது. போட்டோக்கள் மங்கியநிலையில் இருந்தது.
அதை தன் கையில் வாங்கிப் பார்த்த கௌதமும் கூட “ஆமாம். இதை நான் முன்பே
பார்த்திருக்கிறேன்” என்றான்.
“உன்னாலே இந்த ரெண்டு கதையையும் கோர்த்து பார்க்க முடியவில்லையா?” தனசேகர்
கேட்டார்.
“இல்லப்பா. பழைய கதைகள், பழைய பெயர்கள் என்ற அளவில் தான் என் நினைவில் இருந்தது”
“எனக்கே இந்த கதை இப்போது தான் என் தாத்தா பாட்டி சொல்ல தெரியும்” என்றாள் சாருவும்.
“முன்பே சொல்லியிருந்தால் மட்டும் நம்பியிருக்கப் போகிறாயா என்ன?’ என்றாள் உலகம்மை.
“அதுவும் உண்மை தான் பாட்டி” என்று உடனே ஒப்புக் கொண்டாள் அவள்.
“நானே ஒப்புக் கொள்ளாமல் தானே எங்கள் ஒரே பெண்ணிற்கு திருமணம் செய்து அவளை
அல்பாயுசில் தொலைத்தோம்” என்றார் கருணாகரன்.
“எத்தனை சொன்னேன் இந்த கதையைப் பற்றி. யாரும் கேட்கவில்லை. ஒரு உயிரை இழந்த
பின்பு தான் எல்லோருக்கும் புத்தி வந்தது” என்று தன் கணவனை எல்லோருக்கும் முன்பு விட்டுக்
கொடுக்காமலும் அதே நேரத்தில் இவர் நம்பாததினால் அல்லவா நம் மகளை இழக்க நேரிட்டது
என்றும் என்றோ செத்துப் போன மகளை நினைத்து மூக்கை சிந்தினாள் அந்த தாய்.
“சாபம், பாவம் என்றெல்லாம் சொல்லி உன்னை பயமுறுத்த விரும்பவில்லை சாரும்மா” என்றார்
கருணாகரன்.
“இப்போது என்ன சொல்கிறீர்கள் கருணாகரன்?” என்று கேட்டார் தனசேகர்.
“ம். சொல்வதற்கு என்ன இருக்கிறது?” என்றார் அவர் சிரித்தவாறே.
“கொடுத்தால் போச்சு. அப்படி இல்லாட்டா, என் மகனை விட்டு தூக்கிட்டு போய்ட வேண்டியது
தான்” என்றார் தனசேகர் சிரித்தவாறே.
“என் தந்தையின் ஆசையும் அது தான்” என்றார் ராஜசேகர்.
“அப்பா வேண்டாமப்பா, அப்புறம் இவர்கள் வீட்டிலிருந்து யாரேனும் வந்து நம் வீட்டு பெண்ணை
தூக்குகிறேன் என்பான்” என்று பயந்தவனாக நடித்தான் கௌதம்.
“அதுவும் உண்மை தான். விளையாட்டிற்கு கூட இந்த பேச்சு வேண்டாம்” என்றார் ராஜசேகர்.
“இப்போது தான் ஒரு சாபவிமோசனம் ஆகியிருக்கு. இந்த ஆட்டத்தை இத்தோடு நிறுத்திக்
கொள்வோம்” என்றான் கௌதம்.
“அய்யா” என்றவாறே எழுந்து போய் கருணாகரன் கையைப் பற்றி “உங்கள் பெண்ணை என்
பேரனுக்கு கட்டித் தர வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்” என்று சம்பிரதாயமாக கேட்டார்
ராஜசேகர்.
“நான் சொன்னேன் இல்லையா? அந்த ஆலங்குடி மகான் சொன்னார். திருமணத்திற்கு உரிய
நேரத்தில் அவளுக்குரியவனை அந்த முருகனே காட்டுவான் என்று.” என்று சிலிர்த்துக்
கொண்டாள் உலகம்மை.
“ஆமாம் பாட்டி. எங்களுக்கு ஒருவருக்கு ஒருவரை அந்த முருகன் தான் காட்டி கொடுத்தான்”
என்றான் கௌதம்.
ஆம் என்று கூடவே தலையை ஆட்டினாள் சாருலதா தேவி.
“அப்படியா?” என்று அங்கே இருந்த எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள்.
“ஆமாம் அம்மா. நீ அன்றொரு நாள் கோவில் வாசலில் நிற்கிறாய். அப்படியே ஒரு எட்டு
கோயிலுக்குள் போயிட்டு வா என்றாய்” என்று கௌதம் சொல்லும் போதே
“உள்ளே போனால் என்ன கொடுப்பார் உன் முருகன் என்று கிண்டல் செய்தாய்” என்று
சிணுங்கினாள் இந்துமதி.
“ஆமாம். உள்ளே போனால் பொண்ணு கொடுப்பார் என்று நீ சொன்னாய்”
“சொன்ன மாதிரியே உனக்கு பொண்ணைக் கொடுத்தார் இல்லையா? அதற்குத் தான்
பெரியவர்கள் சொல்வதை தட்டாமல் கேட்க வேண்டும் என்பது” என்று அவனை செல்லமாக ஒரு
தட்டு தட்டினாள் இந்துமதி.
“அதேப்போல அன்னைக்கு என் பிறந்தநாள் என்று என்னையும் பாட்டி கோவிலுக்கு போக
சொல்லி வற்புறுத்தினார்கள்” என்று சாரு தொடங்க,
“புடவைக் கட்டிக் கொண்டு போ என்றும் வற்புறுத்தினேன்” என்றாள் உலகம்மை.
“அந்த சேலையில் உன்னை பார்த்ததில் இருந்து தானே சித்தம் கலங்கி பித்தம் பிடித்துப்
போனேன்” என்று யாரும் கேட்காதவாறு மெல்ல சாருவின் காதில் சொன்னான் கௌதம்.
ஆஹா என்று சத்தம் காட்டாமல் ஒழுங்கு காட்டினாள் அவள்.
“எவ்வளவு அழகா இருந்தே தெரியுமா?’ என்றான் மெல்லிய கிசுகிசு குரலில் கிறக்கத்துடன்.
அவள் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்த பார்வை அப்படியே அவனை சாப்பிட்டு விட்டது.
உலகம்மை தேவி சற்று முன்னே வந்து சாருவின் கையை பற்றி ராஜசேகரின் கைகளில் கொடுத்து
சொன்னாள்.
“உங்கள் வீட்டு பெண்ணால் எங்களுக்கு ஏற்பட்ட சாபம் இன்று எங்கள் வீட்டு பெண்ணை
உங்களுக்கு கொடுத்ததால் சரியாகி விட்டது. இந்தாருங்கள் உங்கள் வீட்டு பெண்”
42
அந்த மாளிகையின் மேல்தளத்தில் இருட்டில் ஒருவரை ஒருவர் பற்றி கொண்டு அமைதியாக
அமர்ந்திருந்தார்கள் இருவரும். எங்கோ தொடங்கிய வாழ்க்கை மூன்று தலைமுறை சாபம்
இவளை கொடுத்ததால் தீர்ந்தது. கௌதமின் முப்பாட்டனின் சபதப்படி சாருவும் அவர்கள்
பெண்ணானாள். எல்லாம் சுபம் ஆயிற்று.
டாண். டாண். டாண்
கீழே ஹாலில் மாட்டியிருந்த பழைய காலத்து பெல்ஜியம் கடிகாரத்தில் மணி பன்னிரண்டு
அடித்தது..
எங்கோ தொலைவில் வானத்தில் புது வருடம் பிறந்ததை கொண்டாடும் விதமாக வாணவேடிக்கை
வர்ணஜாலம் காட்டியது.
“ஹேப்பி நியு இயர் சாரு”
“ஹேப்பி நியு இயர் கௌதம்”
“வருகிறாயா எங்கேயாவது போய் வரலாம்”
“நீங்கள் திருந்தவே மாட்டீர்களா?”
“ஏய் நாம் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே?”
“அதற்காக இந்த நடு இரவில் வெளியே போவார்களா என்ன?”
“கரெக்ட். அதற்கு நீ என்னவோ சொல்வாயே?”
அவன் தலையில் செல்லமாக ஒரு முட்டு முட்டி விட்டு சொன்னாள்.
“ஊர் விட்டு ஊர் வந்தால் வேர் விட்டு போகுமா?”
“ம். அது”
“நீங்கள் இதை மறக்கவே இல்லையா?”
“மறக்க கூடியதா அது?”
கிண்டலாக சொன்னவனின் தலையை பிடித்து ஆட்டியவளின் கைகளுக்குள் சிக்காமல் அவளை
தன்னுடைய கரங்களுக்குள் சிறைபிடித்து கொண்டான்.
ஆசையாக……ஆயுள் முழுவதும்.
சுபம்
ஷியாமளா கோபு
வாசகரின் அன்பான ஆதரவுக்கு நன்றி. உங்கள் கருத்தை பகிர்ந்தால் மேலும் மகிழ்வேன்.
Miga miga arumai
Super… Nice ending
superb story . nice ending . starting engeyo veli nadula thodangi lastla sontha oorla eduthutu vanthu mudichi irukinga yaruku yar nu kandipa kadavul mudichi potu vachi iruparnu solrama iruku story . oru flash back vachi atha alaga crt ah kothu vitu nalla touching ah irunthuchi .
superb ma congratulaions ma