எலும்பகம் 2
வெறுப்பின் உச்சத்தில் “வேண்டாம் ஏகா உனக்கு நல்லதுக்கில்லை சொல்லிட்டேன் .. நான் பார்க்கத்தான் மாடர்ன்னா இருக்கேன். உண்மையில தரலோக்கல்” என்றபடி சக்தி பல்லைக் கடித்தான்.
“ஓ .. சார் ரௌடியா? நான் பயந்துட்டேன் பா” என்று இன்னுமாய் வெறுப்பேற்றினான் ஏகா. பின்பு நேருக்கு நேர் நின்று “போடா” என அழுத்தந்திருத்தமாக சொல்லி அறையைவிட்டு வெளியேற எத்தனித்தான்.
ஏகாவின் தோளை இருக்கப் பற்றியது சக்தியின் வலிமையான கைகள்.
“ஏகா உன்னால எதுவும் செய்ய முடியாது” வார்த்தைகள் கனலைக் கக்கின. சக்தி பற்றுதலில் இருந்த கோபத்தை ஏகா நன்கு உணர்ந்தான்.
ஒரு நிமிடம் நின்று திரும்பி சக்தியின் கண்களை ஊடுருவியவன் “நீ செய்றா எல்லா வேலையும் எனக்குத் தெரியும் சக்தி . . இதோட எல்லாத்தையும் நிறுத்திக்கோ. அதுதான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது” என்றவன்.
பின்பு பதில் எதிர்பாராமல் அறையிலிருந்து வெளியேறினான்.
ஏகாவின் தாய் பார்வதி பூஜை அறையில் இருந்தார்.
“அம்மா . . அம்மா” என அவசரமாக வந்த மகனைப் பார்த்தார். அவன் முகத்தைப் படித்தவர் “உனக்கும் சக்திக்கும் சண்டையா?”
“இல்லமா . . அது” மென்றுமுழுங்கினான்.
“ஏகா . . சக்தி உனக்கு அண்ணா. . . எதுக்கு அவனோட சண்டைப் போடற” என்றவர் முகத்தில் சின்ன கோபம் எட்டிப் பார்த்தது.
“என்னாது? சக்தி எனக்கு அண்ணாவா? சொல்லவே இல்ல ” என வடிவேலு பாணியில் பாவனை செய்தவனுக்கு அவன் தாயின முறைப்பு பதிலாக வந்தது.
புன்னகையோடு “போங்கம்மா . . இதெல்லாம் என்ன சொல்லிக்கிட்டு . . நானும் அவனும் அண்ணன் தம்பி தானே . . அவனோட விளையாடாம யாரோட விளையாடுவேனாம்.” தாய் மனம் வாடாமல் பார்த்துக் கொள்பவன் இந்த புத்திரன்.
அப்போது சக்தியும் அங்கே வந்தான் “இந்தாங்க சித்தி” என அவருடையத் தங்க வளையலை நீட்டினான். மறுகையில் கையில் அவனுடைய செல்போன் அடைக்கலம் புகுந்தது.
“இந்த டிசைன்ல உங்க அம்மாக்கு வளையல் கிடைச்சிதா?” வளையலை தன் கையில் பூட்டியபடி சக்தியைக் கேட்டார். சக்தியைக் கண்டதும் அவர் முகத்தில் தோன்றிய பாசம் அக்கறையை ஏகா கவனிக்கத் தவறவில்லை.
“ம்ம் .. கிடைச்சது” எனத் தலையசைத்து “கிளம்புறேன் சித்தி” என்றான் சக்தி,
“சாப்பிட்டு போப்பா”
“நேரமாகுது சித்தி . . இன்னொரு நாள் வரேன் . . உடம்ப பாத்துக்கோங்க ” எனச் சென்றான். தப்பித் தவறியும் ஏகா பக்கம் பார்வையை செலுத்தாமல் கிளம்பிவிட்டான்.
ஏகா “ஏன்மா யார் என்ன கேட்டாலும் எடுத்து கொடுத்துடுவியா? கர்னணனோட பெரியப்பா பொண்ணுனு நினைப்பா?” சக்தி காதை எட்டாமல் குரலைத் தாழ்த்தி கேட்க
“என்னடா நம்ம சக்தி தானே கேட்டான். அவனும் எனக்குப் பிள்ளைதான்”
“சரியாப்போச்சு” என அருகில் அமர்ந்தான்.
“சக்தி அவன் அம்மாக்கு வளையல் வாங்கி தரப்போறானாம். இந்த டிசைன் நல்லா இருக்கு . . இதே டிசைனா பாத்து வாங்கிட்டு உங்க வளையல திருப்பி தரேன்னு சொன்னான். இதுல என்ன இருக்கு ?” அம்மா தன் பக்கம் நடந்ததைச் சொல்ல
தன் அப்பாவி தாயை பரிதாபமாக பார்த்தான். சக்தியை இந்த அளவு நம்புகிறாரே எனக் கவலையாய் இருந்தது. சக்தி இந்த வளையலை விற்று . .. தன் நண்பர்களோடு குடித்து கும்மாளம் போடத்தான் கேட்கிறான் என அம்மாவிடம் எப்படி சொல்ல? . ‘சக்தியின் பெற்றோர் அவன் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டனர்” என ஏகா அறிந்திருந்தான்.
ஒரு வாரம் முன்பு ரம்யா அம்மாவிடம் “உங்க வளையல் எங்கே? என்று வினவ . . அம்மாவும் நடந்தவற்றைச் சொன்னார்.
ரம்யா மூலம் அறிந்த ஏகா உடனே சக்தியை சந்தித்து கேட்க அவனோ “அடகு கடையில இருக்கு” என விட்டேத்தியாகச் சொன்னான்.
ஆத்திரமாக வந்தது ஆனால் சண்டை போடும் தருணம் இதுவல்ல என ஏகா பொறுமை காத்தான்.
“நீயே வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட வளையலைக் கொடு” என்றான் சக்தியிடம் .
“முடியாது” திமிராகச் சக்தியிடமிருந்து பதில் வந்தது. ஏகா பொறுமையுடன் இரண்டு முறை சென்று சக்தியிடம் கேட்டுப் பார்த்தான். ஆனால் சக்தி சொல் பேச்சு கேட்பவன் போலத் தெரியவில்லை.
அதனால் அடுத்த முறை “டேய் மரியாதையா வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட வளையலை கொடுத்துட்டு . . உன்னோட போனை வாங்கிக்க” என்றுவிட்டு அடுத்த நொடி சக்தியின் செல்போனை பிடிங்கிக் கொண்டு ஏகா கிளம்பிவிட்டான்.
நொடியில் எதிர்பாராமல் இவை நிகழ்ந்துவிட , சக்தி செய்வதறியாமல் நின்றான். நன்கு குடித்திருந்தான் அதனால் போதையில் பெரியதாகச் சண்டையிட முடியவில்லை. போதை தெளிந்த பின் எப்படியோ பணம் புரட்டி அடகு வைத்ததை மீட்டு இதோ கொடுத்தும் விட்டான். தன் பெற்றோருக்குத் தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும்.
பெரிய தொழிலதிபரின் மகன் என்ற பெயர் மட்டும்தான். ஆனால் சந்தோஷமாக இருக்கப் பணம் இல்லை. தன் பெற்றோரை நினைத்து பல்லைக் கடித்தான். இத்தனை நாள் இல்லாமல் இப்பொழுது மட்டும் என்ன படி வேலை செய் எனக் கட்டளையிடுவது என தனக்குள் புலம்பினான்.
சக்தி ஏகா வீட்டைவிட்டு வெளியேற வாசலை நெருங்கும் நொடியில் அவன் அம்மா மங்களம் காவல்துறை அதிகாரியுடன் வந்தார். தன் தாயைக் கண்ட சக்தி பதறினான். ஆனால் பதட்டம் தேவையற்றது என இரண்டொரு நொடியில் புரிந்தது.
“இன்ஸ்பெக்டர் என் பையனுடைய ஒருலட்சம் மதிப்புள்ள ஐபோனை திருடியது .. இதோ இவன் தான் பேரு ஏகா” என மங்களம் சுட்டிக் காட்டினாள்.
“வாங்க மங்களம்” என இன்முகத்துடன் வரவேற்க முயன்ற பார்வதி இதைக் கேட்டு குழப்பமுடன் தன் மகனைப் பார்த்தார். அவருக்கு நன்கு தெரியும் இது அத்தனையும் சூழ்ச்சி என்று.
ஆனால் மங்களம் குடும்பத்தினர்க்குப் பணபலம் உள்ளது. அதை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அப்படியிருக்க தன் மகன் இதிலிருந்து எப்படி மீளுவான் என்னும் கவலை அவரை அலைக்கழித்தது.
இன்ஸ்பெக்டர் ஏகாவிடம் கேள்வி கேட்க வர
“வாங்க ஸ்டேஷனுக்கு போகலாம்” என ஏகா எதோ சுற்றுலா செல்வது போல சொன்னான்.
“என்ன திமிறு .. இப்பவே இவன ஜெயில்ல போடுங்க” என மங்களம் உக்கிரமாகக் கத்தினார்.
ஏகா தன் அன்னை மற்றும் தங்கையைப் பார்த்து “நீங்க ரெண்டு பேரும் வீட்லயே இருங்க பயப்படாதீங்க.” என்றுவிட்டு அவர்களுடன் கிளம்பினான்.
ஏகா காவல்துறையுடன் கிளம்புகையில் வெளியே நின்றிருந்த மனிதரைக் கண்டான். அவர் கண்கள் “நான் அப்பொழுதே எச்சரித்தேன்” என்பது போல இருந்தது.
ஏகா அவரை பார்த்துக் கண்ணடித்தான். அந்த மனிதரும் புரிந்து கொண்டார். தெரு முனைக்குச் சென்று போன் செய்தார்.
அடுத்த பத்தாவது நிமிடம் காவல் நிலையத்தில் “ஐ ம் அட்வகேட் பிரபு” என இளைஞன் ஒருவன் இன்ஸ்பெக்டரிடம் கை குலுக்கினான். “சக்தியுடைய ஐபோனை திருடியது ஏகா இல்லை” எனத் தொடங்கிய பிரபுவிடம்
“பொய் பொய் அத்தனையும் பொய்” என மங்களம் சத்தம் போட்டார்.
“மேடம் இது போலீஸ் ஸ்டேஷன்” என இன்ஸ்பெக்டர் காட்டமாக கூறவும் .. அவர் அடங்கினார்.
பெரிய தொழிலதிபர் மனைவி ஒரு வழக்கறிஞரை அனுப்பி இந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கலாம். எதற்காக தன் தாயே வர வேண்டும் எனச் சக்தி குழம்பினான். ஆனால் வாய் திறவாமல் தன் தாயின் செயல்களைக் கவனித்தபடி இருந்தான்.
ஏகா தான் எதிர்பார்த்த அனைத்தும் அச்சு பிசகாமல் நடப்பதைக் கண்டு நிம்மதியடைந்தான்.
பாயும்…
Interesting episode
What Eka expected?
Thanks a lot Abirami sis