Skip to content
Home » மனதில் விழுந்த விதையே-1

மனதில் விழுந்த விதையே-1

      மனதில் விழுந்த விதையே

அத்தியாயம்-1

     பௌவுர்ணமி இரவில் நிலா வெளிச்சம் மட்டும் அவ்விடத்தில் ஒளியை உமிழ்ந்திருந்தது. ஆங்காங்கே ஒன்றிரண்டு நட்சத்திரம் மட்டும் கண் சிமிட்டியது. இதமான தென்றல் இனி ஒரு புயலை சந்திக்க வேண்டுமோ? என  கிலியை தந்தது.

     அதற்கு ஏற்றார் போல தூரத்தில் நாய் குலைக்கும் சத்தம் கேட்டது.

    நடுத்தரவயது கொண்ட குருபிரசாத்தோ வீட்டின் கேட்டை பூட்டினார். சிறுவயதிலிருந்தே நாய் என்றால் அவருக்கு பிடிக்காது. அதுவும் இப்படி மனதை திகிலடைய செய்யும் விதமாக இரவில் குலைப்பது உறக்கத்தையே ஓடச்செய்திடும்.
    வீட்டை பூட்டியதும் பூட்டை ஒர் கணம் இழுத்து பார்த்துவிட்டு, ஆள்நடமாட்டம் அடங்கிய தெருவை வலது இடதென நோட்டமிட்டப் பின்னே, வீட்டின் கதவை சாற்றி சாவியை அதன் இருப்பிடத்தில் வைத்து விட்டு அறைக்கு வந்தார்.
   
   அந்த வீட்டிலிருந்த பெண்மணியோ, ‘அப்படியென்ன பயமோ?’ என்று எட்டி பார்த்துவிட்டு கிச்சனில் பாத்திரத்தை உருட்டி கழுவி, முகமலம்பி, உறங்குவதற்கு முன் தண்ணீர் ஜக்கில் நீரை எடுத்து கொண்டு கணவர் முன் நின்றார் பத்மா.

    “கிச்சன் கதவு, ஜன்னல் கதவெல்லாம் மூடிட்டியா பத்மா?” என்று மனையாளை எப்பொழுதும் கேட்கும் வார்த்தையை அச்சு பிசகாமல் கேட்டு நின்றார்.  

    பத்மாவுமே சலிக்காமல் தினசரி கூறும் பதிலை கூறினார்.
   “ஆச்சுங்க நீங்க மறக்காம மாத்திரையை போட்டுட்டு தூங்குங்க” என்று கூறி சேலை முனைப்பால் முகமலம்பி வழிந்த நீரை துடைத்தார். என்ன தான் துடைக்க துண்டு கண்ணெதிரில் இருந்தாலும் இல்லத்தரசிகளின் பிரத்யோக துணி சேலை முந்தானை தான்.

    கைத்துடைக்க, முகம் துடைக்க, சில நேரம் கரித்துணியாக என்று எதற்கெடுத்தாலும் முந்தானை வைத்து துடைத்து விடுவதே வாடிக்கையாக இருக்கும் பெண்களில் ஒருவரே பத்மா.

    மருந்துமாத்திரைக்கென கிழமையோடு, வண்ண வித்தியாசம் கொடுத்து இருந்த பெட்டியில், இரவு நேர மருந்தை எடுத்து வாயில் அதக்கி, நீரை குடித்து விழுங்கினார் குருபிரசாத்.  

     மாத்திரை விழுங்கினால் சில நேரம் இரவில் எழுந்திடாத அளவிற்கு உறக்கம் கண்ணை கட்டும். அதனாலே வீட்டை சுற்றி பாதுகாப்பாய் முன்னெச்சரிக்கையோடு நடப்பது குருபிரசாத்யின் பணிகளில் ஒன்று.

    பத்மாவோ கணவருக்கு போர்வையை எடுத்து போர்த்திவிட்டு, பீரோ கதவை மூடி சாவியை எப்பொழுதும் வைக்கும் பென் ஸ்டாண்டில் பதுக்கி வைத்து, பவ்யமாய் கணவர் பக்கத்திலேயே படுத்துக்கொண்டார்.

    இருவரும் நித்திராதேவியின் பிடியில் ஆட்பட்டுக்கொண்டிருக்கும் நேரம், உயர்தர (hoodie)ஹூடி  (jacket)ஜாக்கெட்டை அணிந்த அவ்வுருவம், தலையை மறைத்து பதுங்கி பதுங்கி பக்கத்து அறையிலிருந்து வெளிவந்தது.
   
    மடமடவென அங்கிருந்த பொருட்களை ஒரு பையில் திணித்தது. பொருட்கள் சில கீழே விழுந்து லேசான சப்தம் கொடுத்தது.
  
     மினிலைட் சிறிதாக ஒளிர்ந்தாலும் ஆள் நடமாடுவது நன்றாகவே அவ்விருட்டில் தெரியும். ஆனால் வயதான காலம் நித்திரைக்கு முன் மாத்திரையை விழுங்கியவர்களுக்கோ இருட்டில் சின்ன சின்ன சப்தம் கேட்டும் கண் திறக்க கடினாமானதாக இருந்தது.

    அது இவ்விருட்டில் இருக்கும் நபருக்கு சாதகமாக அமைந்தது. மெதுவாக பதுங்கிய அறையிலிருந்து வெளிவந்த அவ்வுருவம் உறங்கிகொண்டிருந்த தம்பதியர்கள் அறைக்கும் வந்தது.

   சிறு ஒளியையும் எழுப்பாத வகையில் நடையிட்டு, புத்தக அலமாரிக்கு பின்னால் இருந்த இடத்தில் டார்ச்சின் வெளிச்ச உதவியோடு சாவியை எடுத்தது.

   நிச்சயம் இந்த வீட்டின் மூலை முடுக்கை பற்றிய அறிந்த நபரென, சாவியை எடுக்கும் இடத்தை அறிந்தமையால் அறிந்திடலாம்.

   சாவி கொத்தினை ஒன்றோடு ஒன்று உரசாமல் பீரோவை திறக்க முயன்ற நபரோ, பீரோ கதவு திறந்ததும் முறுவல் கொண்டு கூத்தாடியது.

   டார்ச்சின் உதவியால் பீரோவின் உள் அறையில் பதுக்கியிருந்த பணத்தை எடுத்து, தான் கொண்டு வந்த பையில் திணித்தது.
  மேலும் அங்கிருந்த மோதிரமும் செயினையும் எடுத்து அணிந்து அழகு பார்த்தது.

   சேலைக்கு அடியே சிறு பணமும் இருக்க அதனையும் எடுத்து கொண்டு சத்தமில்லாமல் மீண்டும் பீரோவை பூட்ட முயல, அதுவோ மூடும் நேரம் லேசாய் கீரிச்சென சப்தம் எழுப்பியது.

      உறங்கிக் கொண்டிருந்தவர்கள் விழித்து விட்டார்களா? என்று நெஞ்சில் கை வைத்து எட்டிப்பார்த்த அவ்வுருவமோ இன்னமும் உறங்குகின்றார்கள் என்றதை ஊர்ஜிதப்படுத்தி கொண்டு பாதுகை சத்தம் கூட வராத அளவிற்கு அறையிலிருந்து வெளியேறியது.
    
    கதவு பூட்டியிருக்க, தான் ஒளிந்திருந்த அறையில் அமைந்திருந்த பால்கனி வழியாக குதிக்க தயாரானது அவ்வுருவம். பெரும்பாலும் கீழே விழுந்தாலும் ஒன்றுமாகாத அளவிற்கு தான் உயரம் சற்று தாழ்வாக அமைந்திருந்தது.

அதற்கு காரணம் அங்கிருந்த மணலும், ஜல்லி கல்லும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏதோ வீட்டின் சிமெண்ட் பூச்சு வேலை இருக்க வேண்டும் அதற்கான மணலும் கல்லும் குவிந்திருக்க, அது தற்போது பணத்தை எடுத்து செல்லும் உருவத்திற்கு சாதகமாய் அமைந்தது.

    ஆனாலும் ஐந்தடி உயரத்தில் சுவர் இருக்க, பையை முதலில் வைத்து, எம்பி குதிக்க சுவரின் மறுபக்கம் வந்திட நேரமெடுத்தது. நொடிகள் கடந்தாலும் சுவரேறி வந்தாயிற்று.

   இனி கவலையில்லை என்று தெரு முனைக்கு நடக்க, கார் ஒன்று முன் விளக்கால் ஒளியை அணைத்து அணைத்து வெளியிட்டது.
 
   உடனடியாக சுவரேறி குதித்த உருவமோ கையை தூக்கி இருப்பை உணர்த்த அசைத்தது.

   அதன்பின்னே முன் விளக்கு வெளிச்சம் சீராய் பாய்ந்தது.

    மடமடவென காரின் முன் கதவு திறக்க, ஏறி அமர்ந்ததும், கார் டிரைவர் சீட்டிலிருந்த உருவமோ “யாரும் பார்க்கலையே… பிரச்சனையில்லை தானே?” என்று கேட்கவும், “எந்த பிரச்சனையும் பின் தொடராது. முதல்ல அவ வீட்டுக்கு போ. அங்க போய் அவளை கிட்னாப் பண்ணி தூக்கிட்டு கிளம்பறோம்.” என்று கோபமாக உதிர்த்தது முதல் உருவம்.

  காரில் இருந்த உயிரோ ‘சாரதி’யான வண்டியோட்டும் வேலையை செவ்வென செய்ய ஆரம்பித்தது.

      இதுவரை ஹுடி ஜாக்கெட் கொண்டு தலையை மறைத்த முதல் உருவம், தன் முழு முகத்தையும் மறைக்கும் விதமாக மாஸ்கை போட்டது.

    “ஏய்… என்னதிது. க்ரைம் ரேஞ்சுக்கு?” என்று வண்டியை இயக்கி கொண்டே கேட்க, “கிட்டதட்ட க்ரைம் தானே. ஒரு பொண்ணை கிட்னாப் பண்ணறது என்ன சும்மாவா. அதுவும் அவளுக்கு தெரியாம? தொணதொணனு பேசாம வண்டியை ஓட்டு. நானே வர்ற கோபத்துக்கு கிட்னாப்பிற்கு பதில் பிராப்ளத்துக்குரியவளை கொன்றிடலாமானு தோணுது.” என்று கட்டளை பிறப்பித்தபடி கோபமாக வார்த்தை விழுந்தது.

   கார் ஓட்டும் உருவமோ “இப்ப மட்டும் க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் சார் பார்த்தா ஒரு கதையே எழுதிடுவார். கொலை பண்ணற லெவலுக்கு உன் பேஸ் ரியாக்ஷன், கிட்னாப் பண்ணற தேவையான அம்சங்கள், இந்த பௌவுர்ணமி இரவு, அமைதியான இருட்டு, பச்… ‘வரே..வ்வா'” என்று சிலாகித்து கூற, கார் வழுக்கி கொண்டு மெயின் ரோட்டில் வேகமாய் சென்றது.

   சிக்னல் காட்டும் இடமெல்லாம் ரோடு காலியாக இருக்க,எங்கும் நிற்க வேண்டிய அவசியமின்றி வரவேண்டிய இடத்திற்கு விரைவில் வந்து சேர்ந்தார்கள்.

     முதல் உருவம் காரை திறந்து கடத்த வேண்டிய பெண்ணின் வீட்டிற்கு நடையிட்டது. “நீ வரலை?” என்று முதல் உருவம் கேட்க, “வீட்டுக்குள்ள நாய் வளர்க்கறாங்களே மறந்து போச்சா? ஒரு நிமிஷம் இரு” என்று காரோட்டிய உருவம் கொண்டு வந்த பிஸ்கேட்டில் ஏதோ ஒரு வித ஸ்பிரேவை தூரமாகயிருந்து அதில் பாய்ச்சியது.

   மெதுவாக வரவேண்டிய வீட்டிற்கு வந்துவிட நாய்கள் குலைக்க தயாராக இருந்தது.

   ஆனால் முதலிலேயே பிஸ்கேட் பாக்கெட்டை தூக்கி போடவும் அந்த வீட்டிலிருந்த நாய் அதனை நுகர்ந்து சாப்பிட சில நொடியில் மயங்கி சரிந்தது.

    “டன்… இனி கூர்கா மட்டும் தான். அவனும் நம்ம பணம் கொடுத்து பேசியதால நமக்கு உதவி பண்ணுவான். எங்க போனான் அந்த நாய்” என்று முதல் உருவம் தாடையில் கைவைத்து தேட, காரை ஓட்டிய உருவமோ சட்டென கூர்காவிற்கு அலைப்பேசிக்கு அழைப்பை போடவும், கூர்காவின் பிரத்யோக இடத்திலிருந்த பாத்ரூமிலிருந்து தண்ணீர் சப்தம் கேட்டது.

  அங்கிருந்து வேகமாய் சிகரெட்டை ஊதி அணைத்தபடி “நிம்மில் வர லேட்டானதும் இப்ப தான் பாத்ரூம் போனேன்.” என்று பதில் தந்தப்படி கூர்கா வரவும், “பச்… அவனை இங்கயே இருக்க சொல்லு. நாம மட்டும் அவ ரூமுக்கு போகலாம். அவளை குண்டு கட்டா தூக்கிட்டு வந்துடலாம்” இது முதல் உருவம்.
  
   நான் வேணுமின்னா… உதவிபண்ண வரட்டா?” என்று கூர்கா கூற, “யோவ்… பிளான் போட்ட எங்களுக்கு தூக்க தெரியும். மூடிட்டு அங்க உட்காரு. கொடுத்த பணத்துக்கு மேல வேலை பார்க்காத.” என்று திட்டியது காரோட்டிய உருவம்.

    ‘இவனிடம் என்ன பேச்சு’ என்று முதலுருவம் இரண்டாவது உருவத்தை இழுத்து கொண்டு கடத்தப்போகும் பெண்ணின் அறைக்கு செல்ல அங்கே…..

   நாலைந்து சாவியில் ஒன்று கைக்கொடுக்க, கதவை திறந்தார்கள்.

  பெண்ணின் அறையில் நுழைய எதிரே பேனில் சேலையால் தூக்குப்போட வசதியாக கட்டியிருந்தது. ஆனால் அதுவுமே சரியாக கட்ட தெரியாமல் முடிச்சுகள் எளிதாக இருந்தது.

   இரண்டாம் உருவமோ தலையிலடித்தது. முதல் உருவமோ பெண்ணவள் உறங்கிக்கொண்டிருக்க, அருகே சென்றது.

   கொஞ்ச நேரம் முன் தான் அழுதழுது படுத்திருக்க, யாரோ அருகே வரவும் இமைத்திறந்தவளின் முன் க்ளவுஸ் அணிந்த கைகளும், முகமூடி அணிந்த முகமும், வாயை அழுத்தி முகத்தில் ஸ்பிரே செய்ய மயங்கி சரிந்தாள் அப்பெண்.

     “நீ தூக்கிடுவியா?” என்று கேட்டது இரண்டாம் உருவம். அதற்கு முதல் உருவமோ , “நான் தூக்கிடுவேன். நீ போய் கார் கதவை திறந்து நில்லு. இவளை பின் பக்கம் படுக்க வச்சிட்டு காரை உடனே இங்கிருந்து கிளப்பிடணும்.

  சத்தம் கேட்டு யாரும் நம்மளை பார்த்திட கூடாது. பார்த்தா மொத்த பிளானும் சொதப்பலாகிடும்.” என்று மூச்சு வாங்க பெண்ணவளை சுமந்தது அவ்வுருவம்.
  
    அந்த வீட்டில் மற்றவர்கள் உறங்கியிருக்க, கூர்கா உதவியோடு கடத்த வந்ததால் ஓரளவு சத்தமின்றி காரில் கடத்திய பெண்ணை பின்பக்கம் வைத்து விட்டு முன்னே அமர, கூர்கா ‘பாய்’ சொல்ல, வெற்றிகரமாக ‘கிட்னாப்’ நடைப்பெற்று கார் ரோட்டில் பறந்தது.

   “இனி எல்லாம் சுபமே” என்று முதல் உருவம் நிம்மதியடைய, “எங்க… மூன்றாவது அக்கியூஸ்ட் இன்னமும் ஜாயின் ஆகலை. ஆன்திவே வீடு என்பதால அப்படியே பிக்கப் பண்ணிட்டு போகணும்.” என்று சலித்துக்கொள்ள, முதல் உருவமோ பின்னால் திரும்பி பெண்ணவளை தான் ஏறிட்டது.

   “ரொம்ப பயந்திருக்கா… சூசைட் அட்டம்ட் பண்ண ட்ரை பண்ணிருக்கா பார்த்தியா.” என்றதும் கார் ஓட்டும் தலையோ “அதுக்கு நாம வந்து கிட்னாப் பண்ணுவோம்னு இவளுக்கு ஜோசியமா தெரியும்.” என்று பேசியப்படி கார் குறிப்பிட்ட இடத்தில் நிற்க, வேகமாய் ஒரு உருவம் கார் முன் வந்து பின் கதவை திறந்து ஏறியது.

    “வண்டியை எடுங்க” என்று கூறிவிட்டு மயங்கியிருந்தவளை மடியில் ஏந்தி “மிருதுளா… மிருதுளா…” என்று கன்னம் தட்ட, “ஏ.. மயக்க மருந்து அடித்திருக்கு. இப்ப எந்திரிக்க மாட்டா. கண் விழிச்சதும் மூன்று பேரும் அவளை உண்டுல்லைனு பண்ணறோம்” என்று பேசி முடிக்க மூன்றாவதாக வந்த உருவமோ மெதுவாய் மயங்கிய மிருதுளாவை வருத்தமாய் பார்த்தது.

   இந்த கிட்னாப்பில் மூன்றாம் நபருக்கு சிறு அதிருப்தி. அதை எடுத்து சொன்னால் முன்னேயிருக்கும் இரு ஜந்துவும் கேட்பார்களா? அதனால் வேறு வழியின்றி அமைதியாக வேண்டிய கட்டாயம்.

-தொடரும்

-பிரவீணா தங்கராஜ்

3 thoughts on “மனதில் விழுந்த விதையே-1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *