Skip to content
Home » மனதில் விழுந்த விதையே-2

மனதில் விழுந்த விதையே-2

அத்தியாயம்-2

   மூன்றாவதாக வந்த உருவம் முன்னிருக்கும் இருவரை கண்டு, “இப்ப எதுக்கு முகத்தை மறைச்சிட்டு இருக்கிங்க?” என்றதும் இருவரும் திரும்பி பார்த்தனர்.
  
   “சாக்ஷி… உன்னை தான். ஏய் மென்பனி ஏதாவது பேசுங்கப்பா. ரொம்ப நெர்வஸா இருக்கு. இவளுக்கு ஏன் மயக்கப்படுத்திருக்கிங்க.” என்று சஹானா கேட்கவும், முதலுருவம் வாயை திறந்தது.

    “என்ன பேச… எல்லாம் பேசி வச்சி தான் தூக்கிட்டோமே.
   இந்த ராத்திரி நாலு கேர்ள்ஸ் தனியா போனா என்னாகறது? அதனால இந்த வேஷத்தை கலைக்கலை. இப்படியே இருக்கட்டும். இந்த ஹூடி-ஜாக்கெட் தலையை மறைச்சிட்டு இருக்கறது தான் கம்பர்டபிள். இல்லைனா நமக்கும் சேப்டி இல்லை. நாம  நல்லாருக்கணும்னு நினைக்கற இவளுக்கும் சேப்டியில்லை.

   நாம கேர்ள்ஸ்னு தெரிந்தா, எதிர்ல தென்படுகின்ற போலீஸ், தனியா சுத்தற பசங்க யாருக்காவது சந்தேகம் வரலாம். இவளை காப்பாத்த நினைச்சு, பிறகு நாம நாலு பேரும் ஆபத்தை சந்திக்க வேண்டியதா போயிடும்.
   விடியற வரை இந்த வேஷமே இருக்கட்டும்.” என்றாள் சாக்ஷி முதல் உருவம்.

    “எஸ்…  சாக்ஷி சொல்லறது கரெக்ட் அதோட இவ எழுந்தா இவளே காரியத்தை கெடுத்துடுவா” என்றது காரோட்டும் உருவமான மென்பனி.

    மூன்றாவதாக வந்த சஹானாவோ மடியில் மிருதுளாவை தாங்கி, அவளது மாசுமருவற்ற முகத்தை கண்டு, “உண்மை தான். இவ எழுந்திருச்சா இவளே ஊரைக் கூட்டிடுவா. அழுதழுது எங்க வீட்டுக்கு போறேன். என்னை விட்டுடுங்கடி. நான் அங்கயே இருந்து செத்து போறேன்னு பிணாத்துவா” என்று கூறி முடித்தாள்.

  சாக்ஷி, மென்பனி, சஹானா, மிருதுளா நால்வரும் தோழிகள். பள்ளி கல்லூரி வரை ஒன்றாக பயின்ற தோழிகள். அதனால் அதிகப்படியான உரிமையான நட்பு நால்வருக்கும் உண்டு.

  யாரும் ஒருத்தரை உயர்த்தி மற்றவரை மட்டம் தட்டாதவர்கள். நால்வரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சமளவில் நேசத்தை, நட்பை கொண்டவர்கள்.
   அதனாலோ என்னவோ மிருதுளா பிரச்சனையை மற்ற மூவரும் ஒன்றுகூடி முடிவெடுத்து அவளை கடத்திக்கொண்டு செல்கின்றார்கள்.

   மென்பனி காரை மிதமான வேகத்தில் இயக்க, சஹானாவும் லேசாய் கண்ணயர்ந்தாள்.

    சாக்ஷியும் மென்பனியும் மட்டும் பொட்டு உறக்கமின்றி சாலையை கவனித்தார்கள்.

    சாக்ஷி தண்ணீர் பாட்டிலை திறந்து குடிக்க, கேளம்பாக்கம் தாண்டியிருப்பார்கள். “எனக்கும் கொஞ்சம் தண்ணி கொடு” என்று மென்பனி கேட்க சாக்ஷியும் கை மாற்றி தந்தாள்.

  ரோட்டை கவனமாய் பார்த்துக் கொண்டு மிடறுமிடறாய் நீரை குடிக்க, பின்னாலிருந்து செவ்ரோலெட் பெரிய வண்டி வேகமாய் மோதவருவது போல கண்ணாடியில் தெரியவும், நிலைத் தடுமாறி மென்பனி குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் பாட்டிலை கீழே போட்டு இடதுபக்கம் திருப்பி பிரேக்கிட்டு நிறுத்தினாள்.

    மோதுவது போல வந்த வண்டியும் இவர்கள் வண்டியை தாண்டி சடன்பிரேக்கிட்டு நின்றது.

    சாக்ஷியோ “ஏய்… முள்ளு பாதை” என்று கத்தி முடிக்க, மென்பனி பிரேக் போட்டதில் அதிர்வு உண்டாக சஹானா கண்விழித்தாள்.
  
   இடிக்க வந்த காரிலிருந்து இறங்கியவனோ “வாட் தி ஃபக்?” என்று காரை திறந்து இறங்கி அவன் ஓட்டிய காருக்கு எதுவும் ஆனாதா? என்று முதலில் கவனித்தான்.

   “ஏய் மேன்… என்ன வண்டி ஓட்டற. விட்டா எங்களை இடிச்சிருப்ப” என்று மென்பனி கீழே இறங்கி வந்தாள். முன் பக்க டயரில் முட்செடிகள் சுற்றியிருந்தது.

   “ஓ… சாரி… கொஞ்சம் கண்ட்ரோல் இல்லாம வந்துட்டேன்.” என்று வேகு இயல்பாய் பேசிட மென்பனிக்கு அனலாய் கோபம் உச்சம் தொட்டது.

  “வாட்… ரொம்ப ஈஸியா கண்ட்ரோல் இல்லாம வந்துட்டேன்னு பேசற. எங்களில் யாருக்காவது ஏதாவது ஆகியிருந்தா என்னாகியிருக்கும்?” என்று படபட பட்டாசாய் வெடித்தாள் சாக்ஷி.

   “ஹலோ… அதான் எதுவும் ஆகலையே. நல்லா தான இருக்கிங்க” என்றவனின் உடல் மொழி, கண்கள் சாக்ஷியை மென்பனியை எரிமலை வெடிக்க போதுமானதாக இருந்தது. சாக்ஷி மென்பனி குரலிலிருந்தே பெண்களென்று அறிந்திட வந்த நக்கல் தோணி அது.

   சாக்ஷி வேகமாக வந்தவள் அவர்கள் வந்த காரின் கீயை எடுத்து, “நைஸ்… நாங்க நல்லா தான் இருக்கோமானு போலீஸ் வந்து சொல்லட்டும்” என்றவள் போனை எடுத்தாள். ஆனால் போலீஸ் சென்றால் தாங்களும் இந்த நேரத்தில் என்ன ஏதென கேட்பார்கள் மிருதுளா வேறு மயங்கியிருக்கின்றாள் என்று தயங்கினாள்.

  “டேய்.. வேதாந்த் போலீஸ் எல்லாம் வேண்டாம் காம்பர்மைன்ஸ் பண்ணு” என்று காருக்குள் இருந்து குரல் வரவும் வேதாந்தோ வேகமாக தடுத்தான்.

   “ஓ..ஓ… சாரி கேர்ள்ஸ்.. அவன் கொஞ்சம் ஓவரா பேசிட்டான். தப்பு எங்க மேல தான். போலீஸ் எல்லாம் வேண்டாம். ஆதேஷ் ட்ரூவா சாரி கேளு.” என்று அதட்டு போட்டான்.
 
   “டேய் நாம ஏன்டா கேட்கணும்.” என்றவனை அவன் காரை காட்டி “உள்ள இருக்கறவன் கேட்க சொன்னான்.” என்றதும் ஆதேஷ் அமைதியானான்.

     “சாக்ஷி… மென்பனி இங்க பாருங்க டயர்ல முள்ளு சிக்கியிருக்கு.” என்று பாதி கதவை திறந்து கீழே இறங்காமல் சஹானா அழைக்க, ‘இன்னொரு டிக்கெட்டா?’ என்று ஆதேஷ் எட்டி பார்த்தான்.

    அதற்குள் மென்பனி மற்றும் சாக்ஷி அவர்கள் காரை ஆராய இடது பக்கமிருந்த இரண்டு டயரிலும் காற்று குறைந்துக் கொண்டிருப்பது ‘உஸ்ஸெ’ன சத்தமாய் ஒலித்தது.

    “போச்சு போச்சு…. கார் டயர் பஞ்சராகுது. ஸ்டெப்னி வேற இல்லை. இரண்டு டயரும் காற்று போகுது. இதுக்கு தான் கொடைக்கானல் எல்லாம் வேண்டாம்னு தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன்” என்று மென்பனி புலம்பினாள்.

   “டேய் இவங்களும் கொடைக்கானலாம் டா.” என்று ஆதேஷ் கூறவும் மூவரும் ஆதேஷை முறைத்து தள்ள காத்திருந்தனர். அதற்குள் சஹானா கீழே இறங்கியிருந்தாள்.

   “இந்த அர்த்தராத்திரியில இப்படி கண்ணு மண்ணு தெரியாம வண்டியை ஓட்டி, ஒழுங்கா வந்த எங்க காரை இடிக்கிற மாதிரி வந்து, எங்க காரை நிலைதள்ளி முட்களில் சிக்க வச்சிட்டு நக்கலா பேசறிங்க.

    எங்க காரை சரிபண்ணி தாங்க, இல்லை உங்களை இங்கிருந்து அனுப்ப மாட்டோம்” என்று பிடிவாதமாய் கூறவும் உள்ளிருந்து மற்றொருவன் இறங்கினான்.

    “எக்ஸ்கியூஸ் மீ. தப்பு எங்க மேல தான். இவன் இடிச்சிட்டான். நாங்க சாரி கேட்டுட்டோம். தெரியாம இப்படி நடந்துடுச்சு. அதுக்கு நாங்க என்ன பண்ணறது. சாவி கொடுங்க லேடிஸ்” என்று மரியாதை கலந்த பவ்யத்துடன் கூற, “தமிழ் அதெல்லாம் சாரி கேட்டும் வாயாடறாங்க டா. ஏதோ காசு பிடுங்கற கூட்டமோ என்னவோ” என்று ஆதேஷ் ஆரம்பிக்க, சஹானாவோ “யாரை பார்த்து காசு பிடுங்கற கூட்டம்னு சொல்லறிங்க” என்று கத்தினாள்.

   காரில் மற்றொருவன் இறங்காமல் “டேய் பிரச்சனை மேல பிரச்சனை பண்ணாதிங்க. மிட் நைட் டைம். போலீஸ் பேட்ரோல் வண்டி வந்ததுனா அது வேற விளக்கம் கொடுக்கணும். பக்கத்துல பாய்ஸ் காலேஜ் ஹாஸ்டல் இருக்கு. யாராவது பார்த்தாங்க கூட்டம் சேரும் அப்பறம் நமக்கும் பிரச்சனை.” என்று சுற்றியிருந்த இடங்களை ஆராய்ந்தபடி காரிலிருந்தே உரைத்தானவன்.

    “அது யாரு… துரை உள்ளயிருந்தே குரல் கொடுப்பாரா?” என்று சாக்ஷி கத்தவும், இம்முறை வேதாந்த் வந்து, “சாரி கேட்டுட்டோம்… பணமும் தர தயாரா இருக்கோம். என்னங்க உங்க பிரச்சனை? ஸ்டெப்னி இருந்தா இந்நேரம் மாற்றியிருப்பேன். எங்க கார் டயர் உங்களோட சின்ன வண்டில செட்டாகாது. இல்லைனா இந்நேரம் ஸ்டெப்னி மாற்றிட்டு இருப்பேன்.

   நீங்களே வழிச்சொல்லுங்க. என்ன பண்ணலாம்னு. அதுக்கு நாங்க கட்டுப்படறோம்.” என்று விளக்கினான்.

  காருக்குள் இருப்பவனோ “ஆன்திவே டிராப் பண்ணறதா இருந்தாலும் பண்ணிடலாம். மிட்நைட் வேற லேடிஸ் தனியா இருக்க முடியாது.” என்று அக்கறையாய் கூறினான்.

   மென்பனிக்கு உள்ளிருந்து பேசுபவனை கண்டு எரிச்சல் மண்டிட “ஹலோ சார் முதல்ல வெளியே வர்றிங்களா? பெரிய ஹீரோ மாதிரி உட்கார்ந்து நாட்டாமை பண்ணறிங்க” என்றதும் முகம் மாஸ்கில் மறைந்திருக்க தைரியமாய் வெளியே வந்தான்.

   “இங்க பாருங்க நாலு பேரும் கொடைக்கானல்ல ரிலாக்ஸ் பண்ண போறோம். இப்படி பாதி வழியிலயே அப்செட் பண்ணாதிங்க. இவன் ஒரு ஆர்மி ஆபிஸர். லீவு கிடைக்கிறதே அபூர்வம். கிடைச்ச லீவுல பிரெண்ட்ஸ் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண வந்திருக்கான். ப்ளிஸ் புரிஞ்சுக்கோங்க” என்று உரைத்தான்.

  இங்கே இருக்கும் மூவரோடு ஒப்பிட்டால் இறங்கி வந்த நாலாவது ஆள் பண்பாய் பேசுவதாக தோன்றியது.

    சாக்ஷியோ “நாங்களுமே கொடைக்கானலுக்கு ரிலாக்ஸ் பண்ண தான் கிளம்பறோம். இப்படி காரை பஞ்சர் பண்ணிட்டிங்க. இப்ப எப்படி போறது? இந்த நேரத்துல யார் ஹெல்ப் பண்ணுவா? பகல் நேரமா இருந்தா கூட கார்ல லிப்ட் கேட்டு மெக்கானிக் ஷாப்ல போய் காரை சரிசெய்து கிளம்புவோம்.” என்று கடுப்போடு நின்றாள்.
 
   பெண்களுள் மூவருக்கும் இப்படி நடுவழியில் மாட்டிக்க விதி சதி செய்யும் என எண்ணியதில்லை.

   வேதாந்தோ “கொடைக்கானல் வரை லிப்ட் கொடுத்தா வருவீங்களா? நாங்களே டிராப் பண்ணறோம்.” என்று வார்த்தையை விட்டான்.

   “வாட்” என்று மென்பனி பதற, ஆதேஷோ “வேதாந்த் பிரைவேஸி மிஸ்ஸாகும்” என்றான். தமிழோ “ஏன்டா இந்தநிலையில பிரைவேஸி முக்கியமா?” என்று கடிந்திட, மென்பனியோ “அப்படின்னாலும்  என் காரு ரோட்ல நிற்குமே?” என்று சலித்தாள்.

   காருக்குள் இருந்து வந்த நாலாவது ஆளோ “ஓரமா பார்க் பண்ணிட்டு கீயை இங்க மரத்து பக்கம் வைங்க. வித் இன் ஒன் ஹஸர்ல என் பி.ஏவை விட்டு இங்க வரச்சொல்லி கார் மெக்கானிக்கை கையோட கூட்டிட்டு சரி பார்த்து கொடைக்கானலுக்கு எடுத்துட்டு வர சொல்லிடலாம்.” என்று திட்டத்தை நவில்ந்தான்.

    பெண்கள் மூவரும் பார்வையால் ஒருவரை மாற்றி ஓருவர் பார்க்க, மென்பனியோ ஆண்கள் வந்த காரை நோட்டமிட்டாள்.

   காரில் டாக்டர் என்ற தொழில்குறியீடாக பிளஸ் இருந்தது.

   இதில் தமிழ் என்பவன் ஆர்மி மேன். டாக்டர், ஆர்மி என்ற பதவியை கணித்து முகங்களை உற்று நோக்கினாள். பொதுவாக மரியாதைக்குரிய பணிகள் என்று சிலதை மக்கள் இன்னமும் மதிக்கின்றனர். அதில் நாட்டை காப்பவணும், மனித உயிரை காப்பாற்றுபவனும் முக்கியமானவர்கள். அதை யாராலும் மறுக்க இயலாது
 
    ஆதேஷ் மட்டும் உரண்டை இழுக்கும் ரகமாக பார்வையை பதித்தானே தவிர மற்றபடி முகமூடி அணிந்து நின்றவனின் கண்கள் கூட கண்ணியம் காத்திருந்தது.

    இந்த இருட்டில், பஞ்சரான காரோடு, தோழியை கிட்னாப் செய்து மயக்கத்தில் இருக்க, சற்று யோசிக்க வேண்டிய நிலையில் இருந்தார்கள் பெண்கள் மூவரும்.

     நான்கு பெண்களும் பள்ளி கல்லூரியில் கராத்தே பயின்றவர்கள். உடல்பலம் திடக்காத்திரமாக தான் உள்ளது. இல்லையென்றால் மிருதுளாவை குண்டு கட்டாக சாக்ஷியால் தூக்க முடியுமா? அதோடு மனபலமும் மூவருக்கும் உண்டு. மயக்கத்தில் இருக்கும் மிருதுளா மட்டும் தான் நிலையற்ற முடிவும் பயமும் கொண்டவள். மற்றபடி சாக்ஷி, மென்பனி, சஹானா மூவரும் திடமனம் கொண்டவர்களே.

     எந்த காரியத்தையும் தைரியமாக செய்பவர்களே.
     இந்த இரவில் ரோட்டில் இருப்பதை விட இவர்களோடு செல்வதும் சரியென தோன்றியது.

    அதனை பார்வையாலே சம்மதம் கேட்டு முடித்து ஆண்களிடம் லக்கேஜை எடுத்து வைப்பதாக கூறி கதவை திறந்தார்கள்.

     வேதாந்த் கார் பெரிதாக இருக்க பின்னால் லக்கேஜை வைத்தனர்.

  ஒரளவு எல்லாமே முதுகுப்பைக்குள் அடங்கியிருந்தது. அதனால் குறைவான லக்கேஜ் எனலாம்.

   “பரவாயில்லைடா..  பொண்ணுங்கன்னா லக்கேஜ் அதிகமா இருக்கும்னு நினைச்சேன். ரொம்ப குறைவு.” என்று ஆதேஷ் தமிழிடம் கதைத்திருந்தான்.

   மென்பனியோ “ஹலோ அப்படியே போனா எப்படி இருங்க. என் பிரெண்ட் மிருதுளாவை தூக்கணும்.” என்று சாக்ஷி முதலில் தூக்கி காரில் கிடத்திய மிருதுளாவை, தற்போது மென்பனி தூக்கி கொண்டு வேதாந்த் காரை நோக்கி வந்தாள்.

   ‘இன்னொரு பொண்ணா?’ என்று வேதாந்த் வாய் பிளக்க, “அது அவ தூக்கத்துல இருக்கா?” என்று காரில் பின் பக்கம் சஹானா மடியில் தலைவைத்து கிடத்தினாள்.

   ஆண்கள் நால்வரும் மயக்கத்தில் இருப்பவளை கண்டு ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ந்தார்கள்.

தொடரும்

பிரவீணா தங்கராஜ்

3 thoughts on “மனதில் விழுந்த விதையே-2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *