Skip to content
Home » மனதில் விழுந்த விதையே-3

மனதில் விழுந்த விதையே-3

அத்தியாயம்-3

நான்கு ஆண்களும் திகைத்திருக்க, சுதாரித்தது என்னவோ வேதாந்த் தான். டாக்டர் அல்லவா?!

“ஹலோ கேர்ள்ஸ்… என்னதிது. அந்த பொண்ணுக்கு என்னாச்சு? ஏன் இப்படி தூக்கிட்டு போறிங்க” என்று பதறினான்.

“கூல் கூல்… எங்க பிரெண்ட் தான். கொஞ்சம் தூக்கத்துல இருக்கா. நடுவுல எழுப்பினா எழுந்துக்க மாட்டா. கும்பகர்ணனுக்கு தங்கச்சியா பிறக்க வேண்டியது” என்று சஹானா பதில் தரவும் வேதாந்தோ நம்பாமல் மிருதுளா கையை பிடித்து பல்ஸை சோதிக்க முற்பட்டான். ஆனால் மென்பனி தீண்ட விடாமல் தடுத்தாள்.

அதன் காரணமாக கோபத்தில் “டிரக்ஸ் யூஸ் பண்ணிருக்காளா.” என்று குற்றம் சாட்டும் விதமாக கேட்டான்.
சாக்ஷியோ “புல்ஷிட் அவ மயக்கமா இருக்கா. டிரக்ஸ் எல்லாம் எடுத்துக்கலை.” என்று கூறினாள்.

“ஏன் மயக்கத்துல இருக்கா? டிரிங்ஸ் பார்ட்டியா?” என்று ஆதேஷ் கேட்டதும் சாக்ஷியோ “வந்தேன் மண்டையை உடைச்சிடுவேன். எங்க செட்டுலயே ரொம்ப சாதுவான நல்ல பொண்ணு மிருதுளா. தப்பா பேசாதிங்க.” என்று கோபமாய் மொழிந்தாள்.

‘அப்ப இவங்க நல்ல பொண்ணு இல்லையாடா’ என்று ஆதேஷ் நக்கலாய் முனங்கினான். தமிழ் அதட்டும் பார்வையை வீசவும் அமைதியானான்.

“என்னங்க இது. இப்படி இருந்தா எப்படி கூட்டிட்டு போக? வர்ற வழியில போலீஸ் பிடிச்சா?” என்று வேதாந்த் கேட்க, “லுக் அதெல்லாம் வரமாட்டாங்க. இப்படி பப்ளிக்ல தன்னந்தனியா இரண்டு கார் நிறுத்திட்டு பேசிட்டு இருந்தா தப்பு தப்பா நினைப்பாங்க.” என்று மென்பனி கூறினாள்.

அதன் பிறகே தலையிலடித்து வேதாந்த் பெண்கள் உபயோகித்த காரை ஓரமாக நிறுத்தி, சாவியை அங்கே இருந்த மரப்பொந்தில் வைத்து போட்டோ பிடித்தான்.

“அம்ரிஷ் உன் போனுக்கு சாவி மறைச்சி வச்சிருக்கற பிக் அனுப்பிட்டேன். இந்த மரத்துல நம்பர் இருக்கு. அப்படியே அதையும் லொகேஷனையும் பி.ஏவுக்கு ஷேர் பண்ணி வந்து, காரை எடுத்து பஞ்சர் மாத்தி கொடைக்கானலுக்கு எடுத்துட்டு வரச்சொல்லிடு. நாம கிளம்பலாம்.” என்று உரைத்திடவும் முகமூடி அணிந்த அம்ரிஷ் தோழன் கூறியதை மடமடவென செய்து முடித்து ‘டன்’ என கைக்காட்டினான்.

வேதாந்த் கார் பெரிது. அதனால் பின்னிருக்கைக்கு அப்பால் இருந்த இடத்தில் பின்கதவு திறக்க மிருதுளா சஹானா இருக்கவும் மென்பனி அமர்ந்துக்கொண்டாள். மிருதுளா சரிந்து கிடக்க, சாக்ஷியோ முன்னால் அம்ரிஷ், தமிழ் அருகே அமர வேண்டிய கட்டாயத்திற்குள் ஆளானாள்.

ஆதேஷ் காரை இயக்க செல்ல, வேதாந்தோ, “மச்சி நீ ஓட்டி கிழிச்சது போதும். மூடிட்டு இங்கயே உட்காரு. நான் கார் டிரைவ் பண்ணறேன்” என்று சென்றான்.

கார் ஓட்டுனர் இருக்கைக்கு வந்ததும் சாவியை தேட, ஆதேஷோ “அந்த பொண்ணுகிட்ட தான் இருக்கு என்றான். சாக்ஷி அவளிடமிருந்த சாவியை தர வேதாந்தோ பெற்று கொண்டு காரை இயக்கினான்.

மென்பனியோ “என்னோட காரை உங்க பி.ஏ வந்து எடுத்துப்பார் தானே? பாதுகாப்பாக இருக்குமா?’ என்று இரண்டு மூன்று முறை கேட்டு நின்றாள். மற்றவரின் முறைப்பை பார்த்து அமைதியானாள். காரோ இடித்த இடம் தாண்டி சாலையில் புயலாய் கிளம்பியிருக்க, கவலையாக இருந்தாள்.

இப்படி நடக்குமென பெண்கள் யாரும் நினைக்கவில்லை. முகமறியா ஆண்களோடு பயணிப்பது சற்று அசௌகரியம் என்றாலும், மென்பனி மற்றும் சாக்ஷியால் நீண்ட தூரம் காரை இயக்க முடியுமா? என்பதும் சந்தேகம் தான். அதற்கு இப்படி டிரைவர்களாக வந்து சேர்ந்தவர்களை எண்ணி சிரித்து கொண்டார்கள்.

பாதுகாப்பை மட்டும் அடிக்கடி சரியாக உள்ளதாயென ஆராய்ந்து கொள்ள வேண்டும் என்று சாக்ஷி குகூள் மேப்பில் தாங்கள் போகும் வழி சரியாயென பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘நம்பிக்கையில்லைனா ஏன் ஏறணும். ஏதாவது ஏசி பஸ் வந்தா ஏத்திவிடலாமா?’ என்று கிசுகிசுத்தான் ஆதேஷ்.

“சும்மாயிரு டா. இந்த டைம்ல வண்டியை நிறுத்தி ஏத்தி விடறது நல்லதில்லை. முதல்ல வண்டி நிற்காது.” என்று அம்ரிஷ் கூறவும் நீண்ட நேரம் அம்ரிஷ் ஆதேஷ் இது போன்ற வாக்கு வாதத்தால் கிசுகிசுக்க, மென்பனியோ முன்னாலிருந்த ஆர்மியை சார்ந்த தமிழையும், வேதாந்தையும் அளவிட்டாள்.

இவனுங்க இரண்டு பேரும் தான் ஓரளவு நல்லவனுங்க மாதிரி இருக்காங்க. இவன் ஏன் முகத்தை மூடிட்டு இருக்கான். இவன் லொடலொடனு இருக்கான். ஓ மை காட் என்று சஹானாவை காணவும் அவளோ வீட்டிலிருந்து எடுத்து வந்த சாக்லேட் கவரை பிரித்து சுவைத்தாள்.

“எருமை எனக்கு” என்று மென்பனி கேட்க கொடுக்கும் நேரம் சாக்ஷி இடைப்புகுந்து வாங்கினாள்.

“கேட்டா கொடுக்க போறேன். ஏன்டி.” என்று மற்றொன்றை தரவும் விழுங்க, ஆண்களோ ‘நம்ம கார்லயே ஏறிட்டு நம்மளை பார்க்க வச்சி திங்குதுங்க’ என்று பெருமூச்சை வெளியிட்டான் ஆதேஷ்.

“ரொம்ப மூச்சு வாங்காதிங்க. இந்தாங்க” என்று சஹானா அவனுக்கும் கொடுக்க மறுத்தான்.

மறுத்தவன் சும்மா இருந்திருக்கலாம். வாயை விட்டான்.”சாக்லெட்ல ஏதாவது மயக்கம் கலந்து வச்சிருந்து நாங்க சாப்பிட்டதும் மயங்கிட்டப்பிறகு நகையை பணத்தை கொள்ளை அடிக்கவா? எனக்கு எதுவும் வேண்டாம்” என்று திரும்பினான்.

“அடச்சீ… நாங்க தெரியாதவங்க கார்ல வந்தாலும் தில்லா தைரியமா இருக்கோம். நீங்க என்ன இப்படி பயந்து நடுங்கறிங்க.

இங்க பாருங்க… நாங்க ஒன்னும் நமுத்து போன குடும்பம் கிடையாது. நல்ல குடும்பத்து பொண்ணுங்க தான்.” என்று காட்டமாக கூறிவிட்டு ‘தலைவிதி எங்க கார் பஞ்சர் ஆகாம இருந்தா நாங்களே போயிருப்போம். இப்படி கண்டதுங்ககிட்ட பேச்சு வாங்க வேண்டிதா இருக்கு.’ என்று முனங்கியவள், “இங்க நாம எல்லாம் தெரியாதவங்க என்பதால பேசமுடியலை அட்லீஸ்ட் இந்த நைட் டைம் அமைதியை உடைக்க சாங்ஸாவது போடுங்களேன்.” என்று சஹானா உரைத்திடவும் தமிழ் எஃப். எஃம்-மை தட்டினான்.

‘நீங்க கேட்டுட்டு இருக்கறது ஹலோ எஃப்எஃம். இந்த ரம்மியமான பௌவுர்ணமி இரவில் நிலா பாடல்களா ஒலிப்பரப்பிட்டு இருக்கோம். அடுத்து நீங்க கேட்கப் போற பாடல் மௌவுனராகத்திலிருந்து பனிவிழும் இரவு நனைந்திடும் பொழுது எஸ்.பி.பி சார் இப்ப நம்ம கூடயில்லை. ஆனாலும் அவரோட குரல் எப்பவும் நம்ம கூடவே பயணிக்கும்.’ என்று முடிந்தது.

பனிவிழும் இரவு
நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு
இசைக்கின்ற பொழுது
பூ பூக்கும்
ராப்பொழுது பூங்காற்றும்
தூங்காது வாவாவா

பனி விழும் இரவு
நனைந்தது நிலவு
பூவிலே ஒர் பாய் போட்டு
பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல்
பைங்கிளி ஏங்க…’ என்றதும் ஆதேஷ் கண்கள் சாக்ஷியை காண அவளோ வேதாந்த் சரியாக காரை இயக்குகின்றானா? என்று அளவிட்டாள்.
வேதாந்துமே குகூள் மேப்பில் மெயின் ரோட்டு பாதையை போட்டு விட்டு தான் வண்டியை இயக்கிக் கொண்டிருந்தான்.

ஆதேஷ் பின்னால் திரும்ப மென்பனியும் சஹானாவும் பின்னால் திரும்பியவனை என்னவென கடுகடுப்பாய் நோக்கினார்கள்.

மிருதுளா உறங்கிக் கொண்டிருக்கின்றாள். தன்னை தோழிகள் கடத்தி வந்ததும், அதுவும் யாரோ சில ஆண்களின் வண்டியில் உறங்குவதை அறிந்தால் திங்குதிங்கென்று குதிப்பாள்.

சாந்த சொரூபியாக பெயர் எடுத்தவள் ருத்ரகாளியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதில்லை.

சென்னை தாண்டி செங்கல்பட்டு மதுராந்தகம், விழுப்புரம் என பயணித்து திண்டிவனம் வந்தப்போது லேசான காலை பொழுது மலர்ந்தது.

ஒன்றிரெண்டு டீக்கடை திறந்திருந்தது.

சஹானா கொண்டு வந்த நொறுக்குதீனி பையை எடுத்து பார்த்தவள் காலியாகியிருக்க, மென்பனியோ “ஐ நீட் எ பிரேக். கால் வலிக்குது. அதோட காபி குடிக்கணும் போல இருக்கு. வண்டியை ஏதாவது டீக்கடையில நிறுத்தறிங்களா?” என்று கேட்டாள்.

அம்ரிஷோ “நோ.” என்று கத்த, “ஒய் நாட்” என்று சாக்ஷி கேட்க, தமிழோ “டேய்.. நீ கார்லயே இரு. அவங்க டீ குடிக்கட்டும். என்ன பிரச்சனை வந்துடப்போகுது.” என்றான்.

வேதாந்தும் “நாம ஏதோ ஸ்டேஞ்சர்ஸ் மாதிரி ஏதாவது மிஸ் பிஹேவ் பண்ணிடுவோம்னு இவங்க இரண்டு பேருமே தூங்கலை. பாவம்டா லேடிஸ்.. பேஸிக்காவே கேர்ள்ஸ் புட்டீஸ்(foodies) டா.” என்றதும் அம்ரிஷோ “என்னவோ பண்ணு” என்று கூறினான்.

“டீக்கடை பார்த்தா நீங்களே சொல்லுங்க.” என்று உரைத்துவிட்டு வேதாந்த் காரை இயக்க, இரண்டு இடத்தில் காலியாக இருந்த டீக்கடையில் விடுத்து மூன்றாவதாக இருந்த டீக்கடையை சுட்டிக்காட்டி “இங்க நிறுத்துங்க. காலையிலேயே மூன்று, நாலு பேர் டீக்குடிக்க வந்திருக்காங்க. சோ டீ டேஸ்ட்டியா இருக்கலாம்” என்று சாக்ஷி உரைத்திடவும் வண்டி ஓரமாய் நிறுத்தப்பட்டது.

சாக்ஷியும் மென்பனி இறங்கும் நேரம் சஹானா விழித்துவிட, “நானும் வர்றேன் டி” என்று மிருதுளா சீட்ல தானே படுத்திருக்கா” என்று இறங்கினாள்.

சாக்ஷியோ இறங்கியதும் கார் சாவியை எடுத்து கொண்டு, “எங்களை விட்டுட்டு மிருதுளாவோட காரை எடுத்துட்டு பறந்துட்டா. சாரி” என்று சென்றாள்.

“ஏய் லூசா நீ.. இந்தளவு கூட நம்பிக்கை வைக்க மாட்டியா?” என்று வேதாந்த் கத்த, அதனை செவிமடுத்திடாமல் நடந்தார்கள்.

“இந்த காலத்துல இப்படி தனியா… நைட் டைம்ல… கொடைக்கானல் போக முடிவெடுத்து ஃபோர் யங் கேர்ள்ஸ் தைரியமா வர்றாங்க. ஆச்சரியமா இருக்கு. நிஜமாவே பெண்கள் தைரியமாவும் துணிச்சலாவும், தனியாக சுய சிந்தனையோட வாழறாங்க.” என்று சிலாகித்தான் தமிழ்.

ஆதேஷோ “போடா… வீட்டுக்கு தெரியாம ஓடிவந்திருக்கற மாதிரி தெரியுது. இந்த பொண்ணை பார்த்தியா.? வந்ததிலருந்து தூங்குது. தப்பு தப்பு தூங்குதுனு சொல்லக்கூடாது. மப்புல மயக்கத்துல இருக்கா?” என்று கன்னத்தை தட்ட சென்றவனை அம்ரிஷ் தடுத்தான்.

“வேண்டாம்.. எந்த கிறுக்குத்தனமும் பண்ணாதே. நானே ஏகப்பட்ட இஸ்ஸுல மாட்டிக்கிட்டு எப்படி ரிவெல்லாகறதுனு முழிச்சிட்டு வர்றேன். புதுசா எந்த பிரச்சனையும் வேண்டாம்.” என்று உரைத்தவன் பின்னால் திரும்பி மயங்கியிருப்பவளை கண்டான்.

குழந்தை போன்ற முகம். மாசு மருவென்று எதுவும் இல்லை. இரண்டு அதட்டு போட்டால் அழுதிடுவாளோ என்பது போன்று இருந்தாள்.

“மச்சான் எனக்கும் டீ குடிக்கணும் போல இருக்கு. பட் இங்க ஹைஜீனிக்கா இருக்குமா?” என்று ஆதேஷ் தலையை வெளியிட்டபடி பார்த்தான்.

மூன்று பெண்களும் ஊதி ஊதி டீயை குடிப்பது பார்ப்பவர்களுக்கும் எச்சி ஊறியது. டீயை சுவைக்க மனம் பிராண்டியது.

தமிழோ, “இதை விட சின்ன சின்ன கடையில கூட காஷ்மீர் பக்கம் டீ குடிச்சிருக்கேன். பசி என்று பார்க்கறப்ப, ருசியோ சுத்தம் சுகாதாரமோ தெரியாது டா மச்சான். நான் டீ குடிக்க போறேன். வரணும்னா வா” என்று இறங்கினான்.

தமிழ் இறங்கவும் “டேய் மச்சான் நானும் வர்றேன்.” என்று வேதாந்த் வந்தான்.
ஆதேஷோ “நானும் போறேன் டா.” என்று இறங்கினான். அம்ரிஷால் வெளியே வரயியலாது. அவனுக்கான சூழ்நிலை அப்படி. “டேய்… டீ டேஸ்ட் நல்லாயிருந்தா எனக்கும் வாங்கிட்டு வா.” என்று கூறினான்.

ஸ்கூல் பெஞ்ச் போன்றதில் அமர்ந்து, டீயை பருகிய பெண்கள் பார்வை மூன்று ஆண்கள் நடந்து வரவும், ‘வேதாந்த், தமிழ், ஆதேஷ், அம்ரிஷ் ஆனா யார் யார் பெயர்னு சரியா தெரியலை. பட் எவனோ ஒருத்தன் டாக்டர் அண்ட் இன்னொருத்தன் ஆர்மி. அப்படியொன்னும் பிஹேவ் தவறா தோணலை. என்ன நம்ம பிரைவேஸி மில்ஸாகுது. நம்மளால அவங்க பிரைவேஸி மிஸ்ஸாகுது.’ என்று பேசிக் கொண்டிருந்தவர்கள் மௌனமானார்கள்.

பெண்கள் மூவரும் டீயை அருந்தி முடிக்க, அங்கிருந்த பட்டர் பிஸ்கேட், சூடான வடைகள், போண்டா என வாங்கி கொண்டார்கள்.

வேதாந்தோ ஆதேஷ் இருவரும் வாய் பிளந்து பார்க்க, தமிழோ காரிலிருக்கும் அம்ரிஷிற்கு டீயை எடுத்து வந்தான்.

அந்நேரம் அம்ரிஷ் உறங்கும் பெண்ணவளின் நெஞ்சில் கைவைக்க சென்றான்.

“அம்ரிஷ்” என்று கத்த, “உஸ்… சும்மாயிருடா… கத்தாத. ஏதோ லெட்டர் மாதிரி தெரியுது.” என்று கூறினான்.

தமிழோ மற்ற பெண்கள் வந்துவிட்டால் என்ன செய்வது. உறங்கும் பெண் சரிந்திருக்க, அவளது நெஞ்சு பகுதியில் வெள்ளைத்தாள் ஒளிந்திருந்தவை வெளியே பார்வையில் பட்டது.
பேப்பர் இருந்த இடம் பிரச்சனைக்குரியதானது. அதனால் மீண்டும் ஏதேனும் ஆரம்பித்து அம்ரிஷை வெளியே வரச்சொன்னால் அவன் யாரென அறிந்து அதற்கு ஒரு பஞ்சாயத்து நடக்கலாம்.

அம்ரிஷோ அந்த பெண்ணின் நெஞ்சில் சரிந்திருந்த காகிதத்தை அவள் உடலில் தன் விரல்படாமல் எடுத்தவன், காகிதத்தை வாசிக்க ஆரம்பித்தான்.

‘என் சாவுக்கு யாரும் காரணமில்லை. என் மனவுளைச்சலே காரணம்.’ என்று எழுதி மிருதுளா என்ற கையெழுத்து பதிவாகியிருந்தது.
கீழே ‘ஐ மிஸ் யூ பிரெண்ட்ஸ். என்னை மறந்துடாதிங்கடி.’ என்று இருந்தது.

தமிழும் அம்ரிஷும் மாறி மாறி திகைத்து பார்த்தார்கள்.

-தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *