📖 Premium தளத்தில் கதைகள் வாசிக்க, 🛒 Amazon Kindle‑இல் கதைகள் வாசிக்க, ▶️ YouTube Channel‑இல் Audio novel கேட்க👇
Skip to content
Share:
Notifications
Clear all

ருத்ரமாதேவி - 15

1 Posts
1 Users
0 Reactions
42 Views
Arulmozhi Manavalan
(@arulmozhi-manavalan)
Posts: 122
Member Author Access
Topic starter
 

அத்தியாயம் 15

 

          அப்படி என்ன விதிவிலக்காக இருக்க போகிறார் என்று அவனை பார்த்துக் கொண்டே இருக்க, 

 

       அவனே தொடர்ந்து, "எனக்கு நீயும், உனக்கு நானும் மட்டுமே இப்போது இருக்கிறோம்."  

 

       "நம் வாழ்க்கையில் நமக்கு இது சரி, இது தவறு என்று சொல்லி திருத்த பெரியவர்கள் இருப்பார்கள் என்ற  நம்பிக்கை எனக்கு குறைந்து விட்டது". 

 

      "நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது இரண்டிற்கும் நாம் இருவர் மட்டுமே பொறுப்பு".  

 

      "அப்படி இருக்க நான் மட்டும் தனியாக இல்வாழ்க்கையை கற்றுக் கொள்ள முடியாது அல்லவா. இருவரும் சேர்ந்தே கற்றுக் கொண்டே புதிய பாதையில் வாழ்க்கையை தொடங்குவோம். இனி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நம் இருவரின் மனமொத்த முடிவாக இருக்க விரும்புகிறேன். 

 

      அது மட்டும் அல்ல உனக்கு என்னென்ன பிடிக்கும் பிடிக்காது என்று எனக்கு இப்போது தெரியாது அல்லவா. அதான் உன்னிடம் கேட்டு கேட்டு தெரிந்து கொள்கிறேன்" என்று கூறி ஒற்றைக் கண் சிமிட்டினான். 

 

      அது வரை அவன் பேசுவதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்த மகாதேவி அவனின் ஒற்றை கண் சிமிட்டலில் சட்டென்று கன்னம் சிவக்க என்ன செய்வது என்று தெரியாமல் அங்குமிங்கும் பார்த்த படி தலை கவிழ்ந்தாள். 

 

       அவளின் செயலில் புன்னகைத்தவாறே, "என்ன மகா இப்படி வெட்க படுற. உன் கன்னத்தின் சிகப்பை பார்த்தால் எனக்கு என்னென்னவோ செய்யுது. நானும் கொஞ்ச நாள் நல்ல பையனாக இருக்கனும்னு நினைக்கிறேன்" என்றான் ஏக்கமாக. 

 

        அவன் கூறியது எங்கே அவளின் காதில் விழுந்தது. அவன் கண் அடித்ததிலேயே  அவளின் ஐம்புலன்களும் அடைத்து விட்டது. அப்படியே சிலை போன்று அமர்ந்தவளை, உணவு வந்ததும், "மகா, மகா" என்று அழைக்க. 

 

        அவனை பார்க்க தயங்கி மெதுவாக தலை நிமிர, அவளை மேலும் சங்கட படுத்த விரும்பாமல், முன்னாள் இருந்த உணவை காட்டி,  அவளை சாப்பிடும் படி செய்கை செய்தான். 

 

          அவளும் தலை நிமிராமலே உண்ண ஆரம்பித்தாள். இருவரும் உணவு முடித்து வீட்டிற்கு வர வீட்டு வாசலிலேயே ஹவுஸ் ஓனவரின் மனைவி அவர்கள் இருவரையும் நிறுத்தி சண்டை போட ஆரம்பித்து விட்டார். 

 

         "என்ன வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்படி ஓடி வந்துட்டீங்களா? ரவுடிங்க வந்து இங்க கலாட்டா செய்றாங்க. வேற எங்கேயாவது ஓடி போக வேண்டியது தானே?. எங்க வீட்டுக்கு ஏன் வந்தீங்க?" என்று கத்த ஆரம்பித்து விட்டார். 

 

        முதலில் ஒன்றும் புரியாமல் நின்ற சதாசிவம் பின்னர் தான் மகாதேவியின் வீட்டில் இருந்து ஆட்கள் வந்துள்ளார்கள் என்று புரிந்தது அவன் அவரிடம் மன்னிப்பு கேட்க, அவரோ முதலில் நீங்கள் இங்கிருந்து வெளியே போங்க என்று சிறிதும் கோபம் குறையாமல் கத்தினார். 

 

          சரி என்று அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினர். கிளம்பும் பொழுது அவன் அவரிடம் இதுவரை இங்கு எங்களுக்கு வீடு கொடுத்ததற்கு நன்றி என்று கூறிவிட்டு, "இனிமேல் உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. மீண்டும் அவர்கள் வந்தால் அவர்கள் எங்கோ சென்று விட்டார்கள் என்று கூறி விடுங்கள். 

        ஹவுஸ் ஓனரிடமும் என் நன்றியை தெரிவித்ததாக கூறுங்கள்' என்று கூறிவிட்டு  இருவரும் கிளம்பி விட்டார்கள். 

 

        இருவரும் அங்கிருந்து கிளம்பி பேருந்து நிலையம் சென்று திருநெல்வேலி செல்ல பேருந்தில் ஏறி விட்டார்கள். நேரடி பேருந்து இல்லாததால் மதுரை வந்து மதுரையில் இருந்து செல்ல முடிவு செய்தார்கள்‌. 

 

          அதன்படி அவர்கள் திருநெல்வேலி வந்து சேர இரவு எட்டு ஆகிவிட்டது. இந்த நேரத்தில் என்ன செய்வது என்று அவனுக்கும் புரியவில்லை. அப்படியே இருவரும் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருக்க, அங்கு இருந்த ஒருவர் என்ன சார் ஹோட்டல்ல ரூம் வேணுமா என்று கேட்டார். 

 

         அவனுக்கும் அது சரி என்றே பட்டது. நாளை காலை தான் எப்படியும் வேலை செய்யும் இடத்திற்கு செல்ல வேண்டும். அதுவரை தங்களுக்கு ஒரு இருப்பிடம் வேண்டும். அந்த நபரிடம் சரி என்று கூறி ஒரு நல்ல விடுதியாக காமியுங்கள் என்றான். 

 

         சரி என்று அவர் பேருந்து நிலையத்தின் அருகிலேயே உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்ல, அவனுக்கும் அது சரி என்று பட இருவரும் அங்கு தங்க முடிவெடுத்தான்.  இரவு உணவு கடையில் வாங்கி வந்து அறைக்குள்ளேயே உண்டு விட்டு இருவரும் ஓய்வெடுத்தனர்.

 

          மறுநாள் காலை எழுந்து குளித்து முடித்து அவளுக்கு காலை உணவு வாங்கி கொடுத்துவிட்டு, என்னைத் தவிர  யார் வந்து கதவை தட்டினாலும் திறக்காதே என்று ஆயிரம் பத்திரம் கூறி வேலைக்கு கிளம்பி சென்றான். 

 

            அங்கு சென்றதும் அவனிடம் நேர் காணல் முடித்து விட்டு, இன்றே வேலையில் சேர்ந்து விடுமாறு கூற,  அவன் சிறிது தயங்கினான். 

 

            என்ன தம்பி ஏன் தயங்குகிற  என்று அந்த மேனேஜர் கேட்க, 

அவரிடம் தன் நிலைமையை கூறி தனக்கு ஒரு இடம் வேண்டும் என்று கேட்டான். 

 

             அவர் தங்கள் கம்பெனி கெஸ்ட் ஹவுஸில் ஒரு வாரம் தங்கிக் கொள்ளலாம். அதற்குள் நீங்கள் வீடு பார்த்துக்கோங்க என்று கூறி கெஸ்ட் ஹவுஸின் சாவியை கொடுத்து, பியூனை அழைத்து கெஸ்ட் ஹவுஸ் இருக்கும் இடம் காண்பித்து வருமாறு கூறி அனுப்பினார். 

 

           சதாசிவம் அவருக்கு மிக்க நன்றி கூற, இதில் என்ன இருக்கிறது தம்பி. நம் கம்பெனி ரூல்ஸ்ல இருக்குறத தானே செய்தேன் என்று கூறி விட்டு, போய் உங்க மனைவியை அழைத்து அங்கு விட்டுவிட்டு வாங்க என்று அனுப்பினார். 

 

          அவனும் அதன் படியே செய்ய ஒரு வாரத்தில் கம்பெனியின் அருகேயே ஒரு வீடு பார்த்து குடியேறினார்கள். 

 

         அதன் பிறகு மகாதேவியை படிக்க கல்லூரியில் சேர்ப்பதாக சொல்ல  அவள் பிடிவாதமாக மறுத்து விட்டாள். ஆகையால் தபால் வழியாக படிக்க ஏற்பாடு செய்தான். 

 

        ஊரில் இருக்கும் நண்பன் ஒருவனை தொடர்பு கொண்டு அவனின் மூலம், அவளின் பள்ளி சான்றிதழை பெற்றான்.  

 

        அவள் தையல் தெரியும் என்று சொன்னதால் ஒரு தையல் இயந்திரம் வாங்கி கொடுத்தான். அவளும் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு தைத்துக் கொடுத்து சிறிது பணம் ஈட்டினாள். 

 

          இப்படியே இவர்களது வாழ்க்கை நலமாக சென்றது. அவள் அவனுக்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்தாள். அதேபோல் அவனும் அவளுக்கு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்தான்.

 

         சின்ன சின்ன முத்தங்கள் அப்பப்ப சிறு  அணைத்தல் என்று அவர்கள் இல்வாழ்க்கையும் சிறிது முன்னேறி இருந்தது. 

 

          இப்படியே இனிமையாக வாழ்க்கை சென்றால் சுவாரஸ்யமாக இருக்காது அல்லவா?

 

தொடரும்....

 

- அருள்மொழி மணவாளன்


 
Posted : November 29, 2025 6:18 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved