Skip to content
Home » Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-19

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-19

  1.  

வானதியும் திவாகரும் திகைத்திருக்க, அப்போது காரியதரிசியும் வந்து வேளாண் அதிகாரி அவர்களை அழைப்பதாகச் சொல்ல, யாரிடம் செல்வதென்று புரியாமல் தவித்தனர் இருவரும்.

வானதியே முடிவு செய்யட்டும் என்று திவாகர் அவளைப் பார்க்க, அவளும் ஒரு நெடுமூச்சிற்குப் பிறகு, “நாங்க இப்ப வந்துடறோம்” என்று காரியதரிசியிடம் கூறிவிட்டு, அலுவலகத்திலிருந்து வெளியேறினாள். திவாகரும் பின்தொடர்ந்தான்.

ஆபீஸ் சுற்றுச்சுவருக்குப் பக்கத்தில் நின்றிருந்த அந்த மர்ம ஆசாமி இவர்கள் வெளியே வருவதைப் பார்த்ததும், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, தன்னுடன் வருமாறு சைகை காட்டிவிட்டு முன்னால் நடந்தான்.

வானதியும் திவாகரும் அவன்பின்னால் நடந்தனர். எவ்வளவு வேகமாக நடந்தும் அவனது நடைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை அவர்களால். ஒருகட்டத்தில் அவன் ஓடத் தொடங்க, இருவரும் மூச்சிரைக்க அவனைப் பின்தொடர்ந்து ஓடினர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அவர்களைக் கூட்டிச்சென்றான் அவன்.

ஓடிய களைப்பில் எதையும் கவனித்திராதவர்கள், அவர் ஏதோ தொழிற்சாலை போன்ற இடத்தில் வந்து நிற்கவும் தாங்கள் எங்கிருக்கிறோமென உணர்ந்து பார்த்தனர். அதற்குள் இவர்களைக் கூட்டி வந்தவன் ஒரு ஷட்டரைத் திறக்க, பத்துப் பதினைந்து ஆட்கள் கையில் கத்தி, கட்டைகளுடன் வெளிவந்தனர்.

வானதி அதிர்ந்துபோய், திவாகரின் கையைப் பிடித்துத் தப்பிப்பதற்காக இழுத்தாள். அவனோ, “வர சொல்லிட்டு ஒண்ணுமே சொல்லாம போயிட்டாரு அந்த சார்? அவர்கிட்ட என்னன்னு கேட்க வேணாமா?” என்றபடி தன் கையை விடுவித்துக்கொள்ள, ‘இவனுக்கு இங்கே நடப்பவை எதுவும் புரியவில்லையோ?’ என குழப்பமாக அவனைப் பார்த்தாள் வானதி.

“உளறாத திவா. அவனுங்க நம்மை பேசறதுக்கு கூப்பிடல. It’s a trap. பக்கத்துல வர்றதுக்குள்ள ஓடிறலாம் வா!”

அவனோ, போலி அதிர்ச்சியுடன், “ஓ… அடிச்சு மிரட்டப் போறாங்களா நம்மளை? அதுக்காகத் தான் ஓட வைச்சு கூட்டிட்டு வந்தானா?” என்று கேட்டுக்கொண்டிருக்க, அதற்குள் அடியாள் கும்பல் இவர்களை நெருங்கியிருந்தது.

வானதி திவாகரின் முட்டாள்தனத்தைக் கண்டு கோபமானாள். ஆனால் அவனை விட்டுச் செல்லவும் மனமின்லை. எனவே சமாதானம் பேச முயன்றாள்.

“ப்ளீஸ்… இத பாருங்க, சண்டை வேணாம். நாங்க போயிடறோம். எந்தப் பிரச்சினையும் வேணாம்… உங்களுக்கு என்ன வேணுமோ, சொல்லுங்க”

தலைவன் போல இருந்தவன் முன்னால் வந்து, “எதுவும் பேச சொல்லலையே கண்ணு எங்களை. கைய காலை உடைச்சுப் போட்டுட்டு வரத் தான் சொன்னாங்க” என்றிட, அவள் இரண்டடி பின்னால் நடந்தாள்.

என்ன செய்யலாம் என்று அதிவிரைவாக யோசித்தாள் அவள். தன் கைபேசியை எடுத்தால் அதன் மூலம் யாருக்கேனும் தகவல் சொல்லலாம் என நினைத்து, தன் பைக்குள் மெதுவாகக் கையை விட்டாள் அவள். அவள் கையைப் பிடித்துத் தடுத்தான் திவாகர். மெல்ல அவள் காதருகில், “இவங்களை யார் அனுப்பினான்னு தெரியணும்னா, இதை நாமளே தான் டீல் பண்ணணும்” என்றான்.

‘இந்த சிக்கலில் இவன் வேற..’ என அவள் சலித்துக்கொண்டாள். இவர்கள் இருவரும் ஏதோ பேசுவதைப் பார்த்த ஆட்கள் தப்பிச் செல்ல ஏதோ திட்டமிடுகின்றனர் என நினைத்து, “அடிடா அவனை!” எனக் கத்திக்கொண்டு திவாகர் மீது பாய, வானதி தலையைக் கையில் பிடித்தபடி கண்ணை இறுக்க மூடினாள்.

‘டமால்’ என்ற சத்தம் நெஞ்சை அதிர வைக்க, அவனுக்கு என்னவாயிற்றோ எனப் பயத்துடன் கண்ணைத் திறந்தாள் அவள். அவனோ நின்ற இடத்திலேயே ஐய்யனார் போல நிற்க , இவனை அடிக்க வந்தவன் பத்தடி தள்ளிச்சென்று விழுந்திருந்தான்.

இவன் அடிப்பான் என்று எதிர்பாராத அடியாட்களும் திடுக்கிட்டு நிற்க, அவர்களை விட அதிர்வோடு வானதியும் நின்றாள்.

“டே-க்வாண்-டோ சாம்பியன், பதினாலு வயசுல இருந்து.”

கண்ணைச் சிமிட்டியவாறு அவன் சிரிப்புடன் சொல்ல, வானதியோ ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்றாள். அடுத்த பத்தே நிமிடத்தில் எதிரே வந்தவர்களை எல்லாம் தாக்கி வீழ்த்தினான் அவன். வானதி திரைப்படத்தில் சண்டைக் காட்சியைப் பார்ப்பதுபோல் இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

பாதிப் பேர் ஓடிவிட, மீதிப்பேர் கை கால்கள் உடைந்துபோய் விழுந்திருக்க, முன்பு பேசியவனைப் பிடித்து, “உங்களை யார் அனுப்பினா??” என்று மிரட்டினான் திவாகர்.

“ஆதி..ஆதிகேசவன்…” என்று திக்கித் திணறிச் சொல்லிவிட்டு மூர்ச்சையானான் அந்த ஆசாமி.

_______________________________

நெற்றியில் ப்ளாஸ்திரியுடன் திவாகரைப் பார்த்ததும் ஹரிணி அதிர்ச்சியில் கத்தத் தொடங்க, வானதி  வேகமாகச் சென்று ஹரிணியின் வாயைப் பொத்தினாள்.

“ஷ்ஷ்!! எதுக்குக் கத்தற?”

நெற்றியைச் சுட்டிக் காட்டி சைகையால் என்னவெனக் கேட்டாள் அவள்.

“அட, ஒரு இடத்தில வாசக்கால் கீழால இருந்தது. சரியா கவனிக்காம முட்டிக்கிட்டாரு உங்கண்ணன். அஞ்சு ரூபா குடுத்து ஃபார்மசியில நானே பேண்டெய்ட் வாங்கி ஒட்டிட்டேன். உங்க அண்ணனே ஒண்ணும் சொல்லலை. நீ ஏன் டென்ஷனாகற?”

அப்போதும் நம்பாமல் அண்ணனை சந்தேகமாகப் பார்த்தாள் ஹரிணி. சட்டையில் தூசியும், முகத்தில் களைப்பும் அவனைக் காட்டிக்கொடுத்தன. ஹரிணி முறைக்க, அவன் அப்படியே நழுவினான் அறைக்குள். வானதி அசட்டுப் புன்னகையோடு நின்றாள்.

“ஒண்ணும் பெருசா இல்ல. அப்பாகிட்ட சொன்னா அவர் வருத்தப்படுவார்ல ஹரி? அதான்.. வேணாம். நானே பாத்துக்கறேன்”

அவளை எப்படியோ சமாளித்துவிட்டு, திவாகரிடம் வந்தாள் அவள். சட்டையைக் கூட கழற்றாமல் சோர்வாக மெத்தையில் மொத்தமாக மல்லாந்து படுத்திருந்தான் அவன்.

அவனையே மலைப்பாகப் பார்த்துக்கொண்டு நின்றாள் அவள்.

‘ப்ராய்லர் கோழி என்று நினைத்திருந்தோமே… சண்டைச் சேவல் போன்றல்லவா இருக்கிறான்!! நாம் தான் அவனை அடிக்கடி திகைக்க வைத்துக் கொண்டிருந்தோம். இன்று ஒரேயடியாக என்னை வாயடைக்கச் செய்துவிட்டானே!!

வானதி, உன் திவாகர் திறமையுள்ளவன் தான். நீ தான் கவனிக்கத் தவறிவிட்டாய்… நல்ல வேளை அவனிடம் பெரிதாக வம்புச் சண்டைக்குச் செல்லவில்லை நாம். எப்படி அடித்திருப்பானோ!’

அவள் பார்ப்பதை உணர்ந்து தலையை உயர்த்தினான் திவாகர். வானதி நன்றி மிக்க புன்னகையுடன், “நீ இல்லைன்னா இன்னிக்கு என்ன பண்ணியிருப்பேன்னே தெரியல. ரொம்ப தேங்க்ஸ் திவா..” என்க, அவனும் ஆமோதிப்பான முறுவலுடன், “தட்ஸ் அல்ரைட்” என்றான்.

கட்டிலில் அவனுக்கு அருகில் தயக்கமாக வந்து அமர்ந்தாள் அவள்.

“நான் உன்னை ரொம்பவே misjudge பண்ணிட்டேன்… ரியலி சாரி”

“நானும் தான் உன்னை பட்டிக்காடுன்னு நினைச்சேன். அதுக்கும் இதுக்கும் சரியாப் போச்சு!”

அவன் இலகுவாகச் சொல்லிவிட்டு மீண்டும் விட்டத்தைப் பார்த்தபடி சாய்ந்துகொண்டான்.

“உனக்கு டையர்டா இருக்கா? காபி எடுத்துட்டு வரவா?”

அவள் பரிவாகக் கேட்க, அவனோ, “என்ன, ஒரு ஃபைட் சீனுக்கு இவ்ளோ மரியாதையா? அப்ப சண்டை போட்டுக் காட்டலைன்னா, என்னை மனுசனா மதிக்க மாட்டயா?” என்றான் நக்கலாக.

வானதி சமாளிப்பாக எதையோ சொல்ல வர, அவன் கையமர்த்தித் தடுத்துவிட்டு, “We are individuals. We are very good at what we do. We all have our pros and cons. இதுனால யாரும் யாரையும் விட மேலோ, கீழோ கிடையாது. இதை நான் புரிஞ்சுக்கிட்டதே உன்னைப் பார்த்து தான். சோ, என்னை வித்தியாசமா ட்ரீட் பண்ண வேணாம். And I don’t blame you for your prejudice. NRIன்னாலே இப்படித் தான்னு சினிமால ஒரு ட்ரெண்ட் உருவாக்கி வச்சிருக்காங்களே… அதுவும் இதுக்கு ஒரு காரணம் தான். சோ, ரிலாக்ஸ். என்னப் பத்தி யோசிக்கறத விட்டுட்டு, அந்த ஆள் சொன்ன பேரு… அந்த ஆதிகேசவன் யாருன்னு யோசி.” என்றான்.

வானதியும் தலையசைத்துவிட்டு, தனது மடிக்கணினியில் தேடத் தொடங்கினாள்.

“ஆதி…கே..ச..வன்.. ம்ம்… சிவகங்கை டிஸ்ட்ரிக்ட்…”

அவள் தோளுக்குப் பின்னால் குனிந்து நின்றான் அவன்.

“அட, இப்படித் தேடுனா எப்டிக் கிடைக்கும்?”

“வேற என்ன பண்றதாம்?”

அவளை நகர்த்திவிட்டு, தட்டச்சில் “businessmen in Sivagangai” என்று தேடினான் அவன். அதிலும் ஒன்றும் உதவியாகக் கிடைக்கவில்லை.

“Farmers, land dealers, brokers” என வெவ்வேறு தேடல்களிலும் எதுவும் பெரிதாக சிக்கவில்லை.

அதற்குள் மதிய சாப்பாட்டு அழைப்பு வந்துவிட, இருவரும் அதைப் பாதியில் விட்டுவிட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. திரும்பி வந்த போது ஹரிணியும் அண்ணனுடன் பேசிக்கொண்டே அறைக்குள் வந்தாள். அப்போது வானதி கணினிமுன் அமரும் போது google imagesஐத் தவறுதலாக அழுத்திட, ஆதிகேசவன் என்ற பெயருக்கு சில புகைப்படங்கள் தோன்றின திரையில்.

அதை அவள் மூடுவதற்கு எத்தனிக்க, திடீரென அதைப் பார்த்த ஹரிணி, “அட.. இது கேசவன் சார் ஆச்சே? இவரை எதுக்கு நீங்க கூகுள்ல எல்லாம் தேடறீங்க?” என்றாள் ஆச்சரியமாக.

அவளது பேச்சில் திவாகரும் வானதியும் அதிர்ந்து திரும்பினர்.

“கேசவன்ங்கற ஒருத்தனை உனக்குத் தெரியுமா?”

அவள் ஆமோதிப்பாகத் தலையாட்டி, கணினியில் தெரிந்த புகைப்படத்தைக் காட்டினாள்.

“எங்க ஸ்கூல் ஆண்டு விழாவுக்கெல்லாம் வந்திருக்காரே இவர்… சிம்மக்கல் எக்ஸ் எம்எல்ஏன்னு நினைக்கறேன்”

3 thoughts on “Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-19”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *