Skip to content
Home » ஒழுக்கமுடைமை-14

ஒழுக்கமுடைமை-14

அறத்துபால் -இல்லறவியல்

திருக்குறள் ஒழுக்கமுடைமை

Thank you for reading this post, don't forget to subscribe!
குறள்:131

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

ஒழுக்கமே எல்லோர்க்கும்‌ மேன்மையைத்‌ தருவதாக இருப்பதால்‌, அந்த ஒழுக்கமே உயிரைவிடச்‌ சிறந்ததாகப்‌ போற்றப்படும்‌.

குறள்:132

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை

ஒழுக்கத்தை வருந்தியும்‌ போற்றிக்‌ காக்க வேண்டும்‌; பலவற்றையும்‌ ஆராய்ந்து போற்றித்‌ தெளிந்தாலும்‌ அந்த ஒழுக்கமே வாழ்க்கையில்‌ துணையாக விளங்கும்‌.

குறள்:133

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

ஒழுக்கம்‌ உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின்‌ தன்மையாகும்‌; ஒழுக்கம்‌ தவறுதல்‌ இழிந்த குடிப்பிறப்பின்‌ தன்மையாகிவிடும்‌.

குறள்:134

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

கற்ற மறைப்பொருளை மறந்தாலும்‌ மீண்டும்‌ அதனை ஓதிக்‌ கற்றுக்‌ கொள்ள முடியும்‌; ஆனால்‌ மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம்‌ குன்றினால்‌ கெடும்‌.

குறள்:135

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு

பொறாமை உடையவனிடத்தில்‌ ஆக்கம்‌ இல்லாதவாறு போல, ஒழுக்கம்‌ இல்லாதவனுடைய வாழ்க்கையில்‌ உயர்வு இல்லையாகும்‌.

குறள்:136

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து

ஒழுக்கம்‌ தவறுதலால்‌ குற்றம்‌ உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர்‌ ஒழுக்கத்தில்‌ தவறாமல்‌ காத்துக்‌ கொள்வர்‌.

குறள்:137

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி

ஒழுக்கத்தால்‌ எவரும்‌ மேம்பாட்டை அடைவர்‌; ஒழுக்கத்திலிருந்து தவறுவதால்‌ அடையத்‌ தகாத பெரும்‌ பழியை அடைவர்‌.

குறள்:138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்

நல்லொழுக்கம்‌ இன்பமான நல்வாழ்க்கைக்குக்‌ காரணமாக இருக்கும்‌; தீயொழுக்கம்‌ எப்போதும்‌ துன்பத்தைக்‌ கொடுக்கும்‌.

குறள்:139

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்

தீய சொற்களை தவறியும்‌ தம்முடைய வாயால்‌ சொல்லும்‌ குற்றம்‌, ஒழுக்கம்‌ உடையவர்க்குப்‌ பொருந்தாததாகும்‌.

குறள்:140

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார

உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும்‌ முறையைக்‌ கற்காதவர்‌, பல நூல்களைக்‌ கற்றிருந்த போதிலும்‌ அறிவில்லாதவரே ஆவர்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *