Skip to content
Home » புறங்கூறாமை-19

புறங்கூறாமை-19

திருக்குறள்| அறத்துப்பால் | இல்லறவியல் | புறங்கூறாமை-19

குறள்:181

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது

ஒருவன்‌ அறத்தைப்‌ போற்றிக்‌ கூறாதவனாய்‌ அறமல்லாதவற்றைச்‌ செய்தாலும்‌ மற்றவனைப்‌ பற்றிப்‌ புறங்கூறாமல்‌ இருக்கிறான்‌ என்று சொல்லப்படுதல்‌ நல்லது.

  • Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  
குறள்:182

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை

அறத்தை அழித்துப்‌ பேசி அறமல்லாதவைகளைச்‌ செய்தலைவிட, ஒருவன்‌ இல்லாதவிடத்தில்‌ அவனைப்‌ பழித்துப்‌ பேசி நேரில்‌ பொய்யாக முகமலர்ந்து பேசுதல்‌ தீமையாகும்‌.

குறள்:183

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்

புறங்கூறிப்‌ பொய்யாக நடந்து உயிர்வாழ்தலைவிட, அவ்வாறு செய்யாமல்‌ வறுமையுற்று இறந்துவிடுதல்‌ அறநூல்கள்‌ சொல்லும்‌ ஆக்கத்தைத்‌ தரும்‌.

குறள்:184

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்

எதிரே நின்று கணணோட்டம்‌ இல்லாமல்‌ கடுமையாகச்‌ சொன்னாலும்‌ சொல்லலாம்‌; நேரில்‌ இல்லாதபோது பின்‌ விளைவை ஆராயாத சொல்லைச்‌ சொல்லக்கூடாது.

குறள்:185

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்

அறத்தை நல்லதென்று போற்றும்‌ நெஞ்சம்‌ இல்லாத தன்மை, ஒருவன்‌ மற்றவனைப்பற்றிப்‌ புறங்கூறுகின்ற சிறுமையால்‌ காணப்படும்‌.

குறள்:186

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்

மற்றவனைப்பற்றிப்‌ புறங்கூறுகின்றவன்‌, அவனுடைய பழிகள்‌ பலவற்றிலும்‌ நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப்‌ பிறரால்‌ பழிக்கப்படுவான்‌.

குறள்:187

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்

மகிழும்படியாகப்‌ பேசி நட்புக்கொள்ளுதல்‌ நன்மை என்று தெளியாதவர்‌ தம்மைவிட்டு நீங்கும்படியாகப்‌ புறங்கூறி நண்பரையும்‌ பிரித்துவிடுவர்‌.

குறள்:188

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு

நெருங்கிப்‌ பழகியவரின்‌ குற்றத்தையும்‌ புறங்கூறித்‌ தூற்றும்‌ இயல்புடையவர்‌, பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

குறள்:189

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை

ஒருவர்‌ நேரில்‌ இல்லாதது கண்டு பழிச்சொல்‌ கூறுவோனுடைய உடல்பாரத்தை, “இவனையும்‌ சுமப்பதே எனக்கு அறம்‌’ என்று கருதி நிலம்‌ சுமக்கின்றதோ?

குறள்:190

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

அயலாருடைய குற்றத்தைக்‌ காண்பதுபோல்‌ தம்‌ குற்றத்தையும்‌ காணவல்லவரானால்‌, நிலைபெற்ற உயிர்‌ வாழ்க்கைக்குத்‌ துன்பம்‌ உண்டோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *