Skip to content
Home » அடக்கமுடைமை-13

அடக்கமுடைமை-13

திருக்குறள்அறத்துபால் -இல்லறவியல் – அடக்கமுடைமை-13

குறள்-121

Thank you for reading this post, don't forget to subscribe!

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

அடக்கம்‌ ஒருவனை உயர்த்தித்‌ தேவருள்‌ சேர்க்கும்‌; அடக்கம்‌ இல்லாதிருத்தல்‌, பொல்லாத இருள்‌ போன்ற தீய வாழ்க்கையில்‌ செலுத்திவிடும்‌.

குறள்-122

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு

அடக்கத்தை உறுதிப்‌ பொருளாகக்‌ கொண்டு போற்றிக்‌ காக்கவேண்டும்‌. அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம்‌ உயிர்க்கு இல்லை.

குறள்-123

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்

அறியவேண்டியவற்றை அறிந்து, நல்வழியில்‌ அடங்கி ஒழுகப்‌ பெற்றால்‌, அந்த அடக்கம்‌ நல்லோரால்‌ அறியப்பட்டு மேன்மை பயக்கும்‌.

குறள்-124

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

தன்‌ நிலையிலிருந்து மாறுபடாமல்‌ அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின்‌ உயர்வைவிட மிகவும்‌ பெரிதாகும்‌.

குறள்-125

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து

பணிவுடையராக ஒழுகுதல்‌ பொதுவாக எல்லோர்க்கும்‌ நல்லதாகும்‌; அவர்களுள்‌ சிறப்பாகச்‌ செல்வர்க்கே மற்றொரு செல்வம்‌ போன்றதாகும்‌.

குறள்-126

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

ஒரு பிறப்பில்‌, ஆமைபோல்‌ ஐம்பொறிகளையும்‌ அடக்கியாள வல்லவனானால்‌, அஃது அவனுக்குப்‌ பல பிறப்பிலும்‌ காப்பாகும்‌ சிறப்பு உடையது.

குறள்-127

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

காக்க வேண்டியவற்றுள்‌ எவற்றைக்‌ காக்காவிட்டாலும்‌ நாவையாவது காக்கவேண்டும்‌; காக்கத்‌ தவறினால்‌ சொற்‌ குற்றத்தில்‌ அகப்பட்டுத்‌ துன்புறுவர்‌.

குறள்-128

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்

தீய சொற்களின்‌ பொருளால்‌ விளையும்‌ தீமை ஒன்றாயினும்‌ ஒருவனிடம்‌ உண்டானால்‌, அதனால்‌ மற்ற அறங்களாலும்‌ நன்மை விளையாமல்‌ போகும்‌.

குறள்-129

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

தீயினால்‌ சுட்ட புண்‌ புறத்தே வடு இருந்தாலும்‌ உள்ளே ஆறிவிடும்‌ . ஆனால்‌ நாவினால்‌ தீய சொல்‌ கூறிச்‌ சுடும்‌ வடு என்றும்‌ ஆறாது.

குறள்-130

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

சினம்‌ தோன்றாமல்‌ காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில்‌ சென்று அறம்‌ பார்த்திருக்கும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *