Skip to content
Home » அந்த வானம் எந்தன் வசம்-17

அந்த வானம் எந்தன் வசம்-17

17

Thank you for reading this post, don't forget to subscribe!

“அம்மா, எப்போ நீ இந்த கல்யாணத்தை நடத்தி வைத்தாயோ அப்போதிலிருந்து உன் ரோதனை கூடி போச்சு”

“ஏண்டி இப்படி கத்தறே? அப்பா, காதே கிழிஞ்சி போயிருச்சு.”

“போனில் தானே பேசறே. என்னவோ நேரில் பேசற மாதிரி ரீல் விடறே?”

“போனிலேயே இந்த பேச்சு பேசறியே, நேரில் இருந்தால் உண்மையிலேயே என் காதை இந்நேரம் அறுத்திருப்பே”

“ஏன்மா என்னை இப்படி படுத்தறே?”

“ஏண்டி ஆடி சீர் வைக்கணும். நீ உன் மாமியார் வீட்டுக்கு வா என்றால் நான் உன்னை படுத்தறேனா?”

“நீ ஆடி சீர் தான் வை. இல்லே, ஆடாத சீர் தான் வை. என்னை ஆளை விடு.”

“நிவி, சொன்னால் புரிஞ்சிக்கோ. அது கிராமம். எல்லோரும் கேட்கிற கேள்விக்கு என்னால் பதில் சொல்ல ஆகாது.”

“கிராமத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் வேறு வேலையே இல்லையா? நீ ஆடி சீர் வைக்க வருகிறாயா என்பது தான் முக்கிய வேலையா?”

“அக்கம்பக்கம் இருக்கும் அவர்களுடைய சொந்தகாரர்கள் பார்ப்பார்கள்”

“அம்மா, சொன்னால் புரிந்து கொள்.”

கெஞ்சும் குரலில் மிகவும் தன்மையாகவே அவளிடம் சொன்னாள்.

“எனக்கு இந்த ஒரு வருடத்திற்கான சேல்ஸ் ரிபோர்ட் குடுக்கணும். ரீஜனல் மேனேஜருடன் மீட்டிங் இருக்கு. இதில் தான் எனக்கு இன்கிரிமென்ட் பற்றி முடிவெடுப்பார்கள். இத்தனை முக்கிய விஷயம் இருக்கும் போது நான் எப்படிமா வர முடியும்?”

“சனிகிழமை வந்து விட்டு ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு மேல் திரும்பி விடலாம்.”

“சனி ஞாயிறு ரெண்டு நாளும் உட்கார்ந்து எல்லா ரிபோர்த்டையும் தொகுத்து குடுக்கணும் அம்மா. கொஞ்சம் பெரிய மனது பண்ணி புரிந்து கொள்.”

“வேறு வழியே இல்லையா?”

“இருந்திருந்தால் வந்திருக்க மாட்டேனா?”

“சரி பாப்பா, வேலை வேலைன்னு உடம்பை கெடுத்துக்காதே. வேளா  வேளைக்கு  சாப்பிடு. நான் ஊருக்கு போய் வந்து உனக்கு தகவல் சொல்கிறேன்”

“அம்மான்னா அம்மா தான்”

போனிலேயே அவள் கொடுத்த முத்தத்தை சிரிப்புடன் பெற்று கொண்டவளை நிவியின் மாமியார் என்ன சொல்வாளோ என்ற கவலை அடி மனதில் ஆக்கிரமித்து  கொண்டது உண்மை.

“அப்போ நீ ஊருக்கு வரமாட்டாயா நிவி?”

“இப்போது தான் என் அம்மாவிற்கு வியாக்கியானம் செய்து முடித்தேன். மறுபடியும் முதலில் இருந்தா?”

“என் அம்மா உன்னை கட்டாயம் ஊருக்கு அழைத்து வரும்படி சொன்னார்கள்”

“பாரு, படிச்சவனா லட்சணமா சொல்வதை கொஞ்சம் புரிந்து கொள்”

நிவேதிதா ஒரு பன்னாட்டு கம்பனியின் சென்னை  கிளையின் மார்கெட்டிங் சூப்பர்வைசராக  இருக்கிறாள். நேரடியாக களத்தில் இறங்கி ஆர்டர் பிடித்து கொண்டு வருவது அவளுடைய முக்கிய வேலை. அந்த ஆர்டருக்கு ஏற்ப பொருளை சப்ளை செய்வது ராம் மனோகர். பணம் வசூலிப்பது ராஜேஷ். இவர்கள் மூவருக்குள்ளும் நல்ல புரிதல் உண்டு. 

எந்தந்த கடைகளில் மால்களில் எத்தனை எத்தனை நம்பர் ஆர்டர் என்று ரிபோர்ட் தயாரிப்பது அவளுடைய வேலை. மாதாமாதம் அதன் நகல் ராம் மனோகருக்கும் ராஜேஷுக்கும் இவர்களுடைய நேரடி பாஸ் சிவரட்சகனுக்கும் ஒரு நகல் ரீஜனல் மேனேஜருக்கும் அனுப்பப்படும்.

வருடத்திற்கு ஒருமுறை இவர்கள் எல்லோரும் கூடி அவர்கள் கம்பனி புராடக்ட் எவ்வளவு ஆர்டர் கிடைத்தது? அதில் எவ்வளவு சப்ளை செய்தது? சப்ளை செய்ய முடியாததற்கு காரணம் என்ன? அதில் எத்தனை விற்பனை ஆயிருக்கு?, மொத்தமும் விற்பனை ஆகாததற்கு என்ன காரணம்? பணம் வசூல் எவ்வளவு.? மீதி எவ்வளவு? லாபம் எத்தனை சதவீதம்? இதை எல்லாம் கணக்கிட்டு அதற்கேற்றார் போல இவர்களுக்கு இன்சென்டிவ் மற்றும் இன்க்ரிமென்ட் தீர்மானிக்கப்படும்.

ஆகையினால் இன்றைய மீட்டிங்கை இவர்கள் மட்டுமன்றி இவர்களுக்காக களப்பணி ஆற்றும் அத்தனை பேரும் நிர்வாக ஊழியர்களை தவிர மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருப்பர்.

திங்கள் கிழமை காலையில் இந்த மீட்டிங் இருக்கிறது. அதற்குள் ஒரு முறை அவளுடைய ரிபோர்ட்டை சரி பார்த்து கொள்ள வேண்டும். இவளுடைய ரிபோர்ட்டின் அடிப்படையில் தான் மீதம் இருவரின் ரிபோர்ட் தயாரிக்கப்பட வேண்டும். அதை எல்லாம் கடைசியில் சிவரட்சகன் கன்சாலிடேட் செய்து இறுதி வடிவம் கொடுக்க வேண்டும்.

ஆகையினால் இவளுடைய ரிபோர்ட் சனி இரவிற்குள் மற்றவர்களுக்கு போய் சேர வேண்டியது முக்கியம்.

நீண்ட ஒரு விளக்கத்திற்கு பிறகும் அவன் கேட்டான்.

“ஞாயிறு அதி காலையில் போய் மாலை கிளம்பி வந்து விடலாம். ஒரு மூன்றரை மணி நேரம் பயணம் தான்”

“ஒருவேளை திரும்ப முடியாமல் போய் விட்டால்”

“போகாது நிவி. வந்து விடலாம்”

“அப்படியாவது ரிஸ்க் எடுத்து போய் ஆகணுமா?”

பொறுமையை இழுத்து பிடித்த குரலில் மிகவும் அமைதியாகவே கேட்டாள்.    

“ஆடி சீர், கிராமத்தில் முக்கியம்”

“அதற்கு நீ யாரையாவது கிராமத்து பெண்ணாக கட்டி இருந்திருக்கணும்”

“பட்டினத்தில் யாருமே ஆடி சீர் வைக்க மாட்டார்களா?”

“இதெல்லாம் நல்லா விவரமா பேசு”

“வேறு  எதில் நான் விவரம் இல்லாமல் இருக்கிறேனாம்?”

அவன் பார்வையும் முகமும் கேட்ட செய்தி நிவியின் குரலில் ஒரு தடையை  ஏற்படுத்தியது.  பேசாமல் இருந்தாள். 

“வா நிவி……”

அவனை ஏறிட்டு பார்த்தவளை பார்த்து புன்னகைத்தான்.

“என் மௌனத்தை பயம் என்று தப்பாக கணக்கிட்டு விட்டாய்.”

“இல்லையா.?”

இடது புருவத்தை உயர்த்தி அவன் கேட்ட விதம், என்னவோ அவளையே அவன் வெற்றி கொண்டதான அந்த பார்வை. 

இல்லை. இவன் சரி படமாட்டான்.

“ஏன், நீ ஒருவன் தண்டசோறு தின்பது போதாது என்று என் வேலையை விட்டுவிட்டு உன்னுடன் 

நானும் தண்டசோறு தின்ன வேண்டுமா?” நிதானமாக தெளிவாக எங்கே அடித்தால் அவன் சுருளுவானோ அங்கே அடித்தாள்.

அடுத்தது இவளிடம் வம்பிற்கு வந்தது அவனுடைய அம்மா.

3 thoughts on “அந்த வானம் எந்தன் வசம்-17”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *