ஐயங்காரு வீட்டு அழகே
Thank you for reading this post, don't forget to subscribe!அத்தியாயம்-4
அன்னை ரோகிணியிடம் அலுவலகத்தில் காருண்யா பார்த்ததை தெரிவித்தான் ராவணன்.
அவரோ “அப்படியா… ரொம்ப நல்லதுடா. நீ பெங்களூர்ல இருந்தப்ப தூரமா இருந்தது போல தெரிந்தது. இப்ப காருண்யா கூட வேலை பார்ப்பதா சொல்லவும், ஏதோ என் பையன் என் கூட இருக்கற மாதிரி சந்தோஷமா இருக்கு. ” என்று உவகை கொண்டார்.
ராவணனோ ‘ம்கூம் அவளே என்னை கண்டா பேயை பார்த்த மாதிரி ஓடி ஒளியற மாதிரி இருக்கு’ என்று எண்ணினாலும் அன்னையிடம் எதுவும் கூறாமல் காருண்யாவை பற்றி பெருமையாக உரைத்து போனை துண்டித்தான்.
இரவு பீட்சா ஆர்டர் போட்டு விட்டு வந்ததும் மெதுவாக விழுங்கினான்.
பீட்சாவை இழுத்து சுவைக்கும் போது, மீண்டும் காருண்யா நினைப்பு வந்தது.
காஞ்சிப்புரத்தில் பீட்சா அதிகமாக புழங்காத சமயம். ராவணன் சாப்பிட அடம்பிடித்து வாங்கி வந்தான். வீட்டுக்கு வந்ததும் ஆறியதால், ஓவனில் சூடுப்படுத்த துவங்கினார் ரோகிணி.
பக்கத்தில் பாட்டியுடன் கோவிலுக்கு போய்விட்டு திரும்பி வந்த காருண்யா மூன்றாம் வகுப்பு படித்திருந்தாள்.
பாட்டி வீட்டுக்குள் நுழையும் பொழுது, மூக்கால் வாசம் பிடித்து, “பாட்டி ரோகிணி மாமி வீட்டுக்கு போய் ராவணாவோட விளையாடிட்டு வர்றேன்” என்று ஓடினாள்.
“ஹே காருண்யா… கோவிலுக்கு போயிட்டு நேரா நம்மாத்துக்கு தான்டி வரணும்” என்றதை செவிமடுக்காமல் ஓடியிருந்தாள்.
ராவணா ஹாலில் டைனிங்டேபிளில், பீட்சா வைத்து சாப்பிட தயாராக இருந்தான்.
“உங்காத்துல என்ன மணக்குது? வீதில வர்றச்ச வாசமா இருந்துச்சு” என்று கேட்டு ராவணன் தட்டிலிருந்ததை பார்த்தாள்.
“வர்ற வழியில புதுக்கடை ஒன்னு திறந்திருந்தாங்க. அங்க பீட்சா விற்றுச்சு. அம்மாவிடம் அடம் பிடிச்சி வாங்கிட்டு வந்தேன். இங்க வந்ததும் ஆறிடுச்சு. அம்மா தான் ஓவன்ல சூடுபடுத்தி கொடுத்துட்டு மாடில துணியெடுக்க போயிருக்காங்க. உனக்கு பீட்சா வேண்டுமா? டேஸ்ட் பண்ணறியா? பக்கத்துல வா நான் ஷேர் பண்ணறேன்” என்றான் ராவணன்.
பெரும்பாலும் பள்ளியில் யார் கொடுத்தாலும் எதையும் வாங்கி சாப்பிட கூடாது என்பது பாட்டி அமிர்தம் கூறியிருந்தார்.
ஆனால் ரோகிணி மாமி ஏதாவது கொடுத்தால் மறுக்காமல் வாங்கிக்க கூறியிருக்க, காருண்யா சாப்பிட அமர்ந்தாள். ராவணன் முள்கரண்டியால் பீட்சாவை பிடித்து கத்தியால் இரண்டாக பிரித்து காருண்யாவிடம் நீட்டினான்.
அவளோ புதிய பண்டம், பலரும் பீட்சா பற்றி கூறியிருந்ததால் அறிந்து சுவைக்க தயாரானாள்.
சீஸ் பீட்சா சாப்பிடும் பொழுது இழுக்கும். அதன் சுவை சாஸ், பெப்பர் கலந்து புதுவிதமாக ருசிக்கும் என்றதால் சுவைத்தாள்.
ராவணனும் காருண்யாவும் பீட்சாவை சுவைக்க, சீஸ் இழுத்து விளையாட, இருவரும் பீட்சா உணவோடு விளையாடினார்கள்.
“காரு… இங்க பாரு… சீஸ் என்னுடையது எவ்ளோ தூரம் இழுத்திருக்கேன்.” என்று ஜம்பம் காட்ட, “இங்க பாரு ராவணா நேக்கும் சீஸ் நூலாட்டும் இழுப்படுது” என்று சீஸை இழுத்தாள்.
இவர்கள் இருவரும் இப்படி பீட்சாவில் உள்ள சீஸை வைத்து விளையாட, ரோகிணி மாடியிலிருந்து துணியை எடுத்து வந்தவர், “ராவணா என்னடா பண்ணிட்ட?” என்று பதறியபடி வந்தார்.
“அச்சோ… காருண்யா.. துப்பு துப்பு” என்று பதற, “ஏன் மாமி உங்காத்து பண்டம் எல்லாம் நான் சாப்பிடலாம். பாட்டி ஏதும் திட்டமாட்டா” என்று கூற, தலையில் அடித்தபடி, “அப்படியில்லடிம்மா… இந்த பண்டம் மாமி வீட்ல செய்தது இல்லை. கடையில வாங்கியது. உங்க பாட்டி பார்த்தா திட்டுவாங்க. அதோட இதை நீ சாப்பிட கூடாது. துப்பும்மா” என்று பயந்தார்.
ஏனெனில் ராவணன் வாங்கி வந்தது சிக்கன் பீட்சா. சீஸ் அதிகமாக போட்டு வாங்கியது. அதனால் கறித்துண்டை கவனித்திருக்க வாய்ப்பில்லை. குழந்தை சீஸ் பீட்சா சாப்பிட ஆசைப்பட்டதில் அதில் என்ன கலந்திருந்தது என்று ஆராயாமல், சீஸ் கலந்த வாசம், இதுவரை சுவைக்காத பண்டமென காருண்யா விழுங்கிவிட்டாள்.
ரோகிணி வேகமாய் வாஷ்பேஷன் அருகே அழைத்து சென்று “துப்புமா. அய்யோ.. உங்க பாட்டிக்கு இது தெரிந்தா உன்னை திட்டுவாங்களே” என்று பயப்பட, மௌவுத் வாஷ் எடுத்து கொப்பளிக்க கூறினாள்.
காருண்யா பேந்த பேந்த விழித்து கொப்பளித்தாள். அவளுக்கு இந்த திண்பண்டத்தின் வாசமும் சீஸும் நாவை எச்சிப்படுத்தியது.
“இங்க பாருடிம்மா… இந்த திண்பண்டம் நீ சாப்பிடக்கூடாது. அதனால் தான் துப்ப சொன்னது” என்றதும் லேசான வருத்தம் கலந்து தலையாட்டிய காருண்யாவின் முகம் ராவணன் கண்முன் இப்பொழுது நடந்தது போல மனக்கண்ணில் காட்சியை கண்டான்.
எத்தனை முறை அதன்பின் பீட்சாவை திண்றிருக்கின்றோம். அப்பொழுது எல்லாம் காருண்யா நினைவு வரவில்லை. இன்று அவளை சந்தித்து வந்தப்பின் அவளது நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக தன் மனதிலிருந்து வருவதை எண்ணி சிரித்தான்.
என்னயிருந்தாலும் காருண்யா இன்று கூடுதலாக உரிமையாக பேசியிருக்கலாம். ஏன் இப்படி மொத்தமாய் ஒதுங்கி பேசுகின்றாளோ என்று தோளை குலுக்கிக் கொண்டான்.
இங்கே காருண்யாவோ, “எத்தனை முறை அதிகாலை எழுந்து, சுத்தபத்தமா ஸ்னாம் செய்து, உன் சந்நிதிக்கு வந்து நெய்வேத்தியம் பண்ணியிருக்கேன். என்னைக்காவது கோவிலுக்கு வராம உன்னை தரிசிக்காம விட்டுயிருக்கேனா. அப்படியிருந்தும் என்னை ஏன் சோதித்த? என் பூஜையெல்லாம் அப்ப நீங்க ஏத்துக்காம என்னை வம்பு பண்ணறேள்.” என்று குமைய, ரூம் மேட் ராகவி வந்து, “என்னடி தனியா பேசற” என்று வேலை செய்யும் அலுவலக நுழைவு கார்டை அதன் இருப்பிடத்தில் வைத்து கேட்டாள்.
“நான் சொல்லிருந்தேனோ இல்லையோ. எங்க ஆபீஸ்ல புதுசா இரண்டு பேர் வர்றானு.
அவா வந்துட்டா.” என்றாள்.
“பின்ன வராம இருப்பாங்களா? ஆமா அதனால என்ன? நீ தான் காலையில் மஞ்சள் சொக்காலாம் போட்டுட்டு சாமிக்கு ஐஸ் எல்லாம் வச்சி, நல்லா கும்பிட்டுட்டு போனியே.” என்று ராகவி அவளுக்கான மெத்தையில் அமர்ந்து கேட்டாள்.
“நான் பகவானை சேவிச்சது நோக்கு தெரியுது. ஆனா பகவான் என் வேண்டுதலுக்கு செவி சாய்க்கலையே. என் பக்கத்துல ராவணாவை எல்லாம் வரவச்சிட்டார்.” என்று அலுத்துக்கொண்டாள்.
“யார்டி ராவணன். எனக்கு தெரிந்து ஒரே ராவணன் சீதையை கிட்னாப் பண்ணிட்டு போனவர் தான்.
ஆமா இந்த ராவணன் உன்னை கிட்னாப் பண்ண வந்துட்டானா?” என்று நகைச்சுவையாக தான் கூறினாள்.
“அபச்சாரம் அபச்சாரம். ஏன் இப்படி பேசி தொலைக்கறேள். இந்த ராவணன் காஞ்சிப்புரத்துல இருக்கற எங்காத்துக்கு பக்கத்து வீட்டாள்.
என்கூட பிஃப்த் வரை ஸ்கூல் முடிச்சவா. அமிர்தம் பாட்டிக்கு கூட தெரியும்.” என்றாள் காருண்யா.
“அப்பறம் என்ன? தெரிந்த பையன் தானே?” என்று ராகவி கேட்க, “அதான் பிரச்சனையே. அவாளை யாரு இங்க வரச்சொன்னா? என் ஃப்ரீடம் மொத்தமா போச்சு. இனி உத்தியோகத்துல இருக்கறச்ச, மனசுவிட்டு சிரிக்க கூட முடியாது. என்னையே குறுகுறுன்னு பார்ப்பான்.” என்று அப்பாவியாக முகம் வைத்து நொந்தாள்.
“ஓவரா பண்ணாத காருண்யா. தெரிந்த பையன் என்றால் நல்லது தானே. சும்மா பதறாதே. யார் சுதந்திரத்தையும் யாரும் பறிக்க முடியாது. உன் விருப்பு வெறுப்பையே நீ யாருக்காகவும் மாத்திக்க மாட்ட. சுதந்திரத்தை பறிக்கறாங்களா?” என்று அயர்ச்சியாக இருக்கவும் முகம் கழுவ சென்றாள்.
‘உண்மை தான்… ஆனா ராவணனை பார்த்தா நட்பா பேசி பழக முடியலையே. சின்ன வயசுல எப்படில்லாம் பழகினோம். ஏஜ் அட்டன் பண்ணின நேரம், மொட்டைமாடியில் அவன் முகத்தை பார்க்க முடியாம சங்கடமா போச்சு. அன்னைக்கு அவ்ளோ கஷ்டப்பட்டேன். இப்பவரை அவனை கண்டா நேக்கு அந்த இன்சிடெண்ட் தான் முன்ன வந்து மனசுல நிற்கு. அதனால் ஒருமாதிரி அன்கம்பர்டபிளா இருக்கு. அந்த உறுத்தலோட பேச பழக முடியுமா? ஆனா அவன் ஈஸியா தான் பழகறான். ரோஸ்லின் கூட எல்லாம் எதார்த்தமா பேசறான். என்னை பத்தி என்ன நினைச்சிருப்பான். நல்லா பழகினவா, நேர்ல பார்த்தும் சரியா பேசாம போறாளேனு கண்டிப்பா நினைச்சிருப்பான். மாமியிடம் கூட சொல்லிருப்பானோ. அய்யோ மாமி கள்ளம் கபடமில்லாம பேசுவா.
அவாளிடம் என்னை பத்தி கெட்ட அபிப்பிராயம் விதைச்சிட்டா? பச் இந்த யோசனை எல்லாம் முன்ன ஏன் தோணலை. ராவணா…’ என்று அமர, “ஹலோ ஐயர் பொண்ணே சாப்பிட வர்றியா இல்லையா? பிறவு டின்னர் சூடாயில்லைனு அதுக்கும் பகவானிடம் புலம்பிட்டு இருக்க போற” என்று ராகவி சிரிக்க, அவளோடு சாப்பிட சென்றாள் காருண்யா.
சாப்பிடும் பொழுது தான் பாட்டி அமிர்தத்திடம் ராவணனை இங்கே தன் அலுவலகத்தில் சந்தித்ததையும், இனி அவனும் அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பதையும் அறிவிக்காதது நினைவு வந்தது.
போனை எடுத்து அமிர்தம் பாட்டிக்கு அழைத்தாள்.
முதல் ரிங்கிலேயே போன் எடுக்கப்பட்டது. “இப்ப தான் உன்னை நெனைச்சிண்டு இருந்தேன். நீயே நேக்கு கால் பண்ணிட்டடிம்மா.
இன்னிக்கு எப்படி நாள் சேமமா இருந்ததா?” என்று விசாரித்தார்.
“ம்ம் நீங்க சாப்பிட்டிங்களா பாட்டி?” என்று கேட்டாள்.
“ஆச்சுடிம்மா… நெய்ல செய்த ரவை உப்புமாவும் தேங்காய் சட்னியும் இப்ப தான் உன் தோப்பனாருக்கு பரிமாறிட்டு நானும் வயித்துக்கு தள்ளினேன்.
நீ சாப்பிட்டியோனோ?” என்று கேட்க, “மெஸ்ல சாப்பிட்டுட்டு இருக்கேன் பாட்டி” என்றாள்.
“ஆங்… உன்னிடம் ஒரு சந்தோஷமான சேதி சொல்ல வந்தேன். நம்மாத்துல நோக்கு கல்யாண யோகம் வந்துடுச்சுடிம்மா. உன் தோப்பனார் உனக்காக ஒரு வரன் பார்த்திருக்கார். பேரு ஹரிஹரன். கண்ணுக்கு லட்சணமா நன்னா இருக்கான்.
உனக்கு பொருத்தம் எல்லாம் பார்த்துட்டா, பையன் போட்டோ கொடுக்கறேன்.” என்றார்.
“பாட்டி நேக்கு எதுக்கு இப்ப கல்யாணம்?” என்றாள்.
“என்னடி இப்படி பேசுற. நம்மாத்துல நானெல்லாம் இப்பவோ அப்பவோ இருக்கேன். உங்கப்பாவுக்கும் வயசாகுது. ஒன்டி மனுஷன் பயப்படறான். நோக்கு பெத்தவா இருந்தாளாவது இன்னமும் காத்திருக்கலாம். புண்ணியவதி தைராய்டு வந்து சரியா மருந்து எடுத்துக்காம போயிட்டா.
சரி படிப்பும் உத்தியோகம் எங்களுக்கு பின்ன உனக்கு ஒதவும்னு தான் உத்தியோகத்துக்கே அனுப்பியது.
உன்னால தனியா உன்னை பார்த்துக்க முடியும்னு தைரியம் வந்திடுச்சோனோ. இனி ஏன் நல்லதை தள்ளி போடணும்.
ஹரிஹரனோட பொருத்தம் பாந்தமா பொருந்தினா, நல்ல நாள் பார்த்து விவாஹம் பண்ணிடறதுல என்னடி தப்பு.
உன் தோப்பனாருக்கு கடமை முடியுமோனோ.
காலாகாலத்துக்கு கல்யாணம் செய்து பிள்ளை பெத்துட்டா, உசுரோட இருக்கறச்சவே உன் பிள்ளையையும் பார்த்துட்டு சேமமா சொர்க்கத்துக்கு போவேன்.” என்று பேசவும் காருண்யாவுக்கு நெஞ்சு பிசைந்தது.
“பாட்டி கல்யாணம் தானே… பண்ணிக்கறேன். அதுக்காக ஏன் இப்படி பேசறேள். பொருத்தம் சரியா இருக்கானு பார்த்துட்டு போட்டோ அனுப்புங்கோ. கல்யாணத்தன்னைக்கு சமத்தா வந்து பண்ணிக்கறேன்.” என்றாள்.
“என் தங்கம்… சரி இன்னிக்கு வேலை எப்படி போச்சு?” என்றார்.
“பாட்டி… இங்க புதுசா வேலைக்கு இரண்டு பேர் வர்றாங்கன்னு சொன்னேன்ல. அதுக்கு யார் வந்திருக்கா தெரியுமோ? நம்ம ரோகிணி மாமியோட பையன் ராவணா வந்திருக்கான். எனக்கு முதல்ல அவாளை சரியா அடையாளம் தெரியலை. அப்பறம் பேசினோம்.” என்றாள்.
“அட.. ரோகிணி பையன் ராவணேஸ்வரனா? நல்லதா போச்சு. சின்ன வயசுல உன் சிநேகிதன் தானே.” என்றார்.
“ஆமா பாட்டி” என்றாள்.
“அப்பறம் என்னடிம்மா. புது பிராஜக்ட் வேலை டென்ஷன் எதுக்கும் பயப்பட வேண்டாம். சின்னதுலயே நீங்க நல்ல சிநேகிதர்கள்.” என்றதும் காருண்யாவுக்கு சங்கடமாய் போனது.
தங்கள் நட்பை பற்றி பாட்டி கூட அறிந்து புரிந்து வைத்திருக்க, ராவணனை கண்டு சரியாக பேசாமல் வந்த மடத்தனத்தை எண்ணினாள்.
சரி இனியாவது அவனிடம் நட்புடன் பேசி பழகலாம்’ என்ற தெளிவு பிறக்க, பாட்டியிடம் உறக்கம் வருவதாக சொல்லி அணைத்து அறைக்கு வந்துப் படுத்தாள். ராகவியும் இந்துவும் ஏதோ படத்தை பற்றி கதை அளந்தவாறு இருக்க, காருண்யாவோ தன் பால்ய நண்பனான ராவணானை பற்றி நினைத்து பார்த்தாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
👌👌👌👌👌💕💕💕💕💕💕
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 endha samathu ponna endha paiyan enna Panna porano parpom 🧐
Nice
ஐயங்காரு வீட்டு அழகே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 4)
அட.. யார் அந்த ஹரிஹரன்…?
ஒருவேளை, அவன் தான் ஐயங்கார் வீட்டு அழகனோ…?
ஆனா, எங்களுக்கு அந்த ஹரிஹரனை பிடிக்கலையே.
எங்களுக்கு ராவணாவைத் தானே பிடிச்சிருக்கு. அப்ப அவன் இல்லையா நம்ம காருண்யோவோட கண்ணாளன்…? இது ரொம்பவே அநியாயம், ராவணான்னு பேர் இருக்கிறதால அவனை தள்ளி வைச்சிடுவிங்களா..? திஸ் இஸ் நாட் ஃபேர்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Wow Sema twist. Havana is not hero? Who is Hari? Intresting sis.
Enna da ithu mami ku athukula getti melam kotta pora gala ah appo karu ku jodi raavanan illa ya ah yaru indha hariharan puthusa entry kudukirathu
Summaa erukkura mami ya sorinji vittutteenhaley..apporom unga sowgrayaththukku pesaathennu sollappadaathu 😝😝😝
ena pa ithu nadula puthu mappilaiya kondu varinga apo ravanan illaya namma karu ku jodi illa antha ravanan mariye ivala thukitu poga porana intha ravanaa
எப்படியோ, இனியாவது நல்லா பேசுவாளா??… மாப்பிள்ளை வேற வந்தாச்சு!!.. அடுத்து என்னன்னு ஆவலா இருக்கு கா!!..