Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-16

ஐயங்காரு வீட்டு அழகே-16

அத்தியாயம்-16

Thank you for reading this post, don't forget to subscribe!

   பாட்டி கதவை தட்டவும், முகமலம்பியவள், “வர்றேன் பாட்டி” என்று அவர் தான் அழைப்பதென்று யூகித்தவளாக பதில் தந்தாள்.

  “நாழியாகுது… இன்னும் என்ன பண்ணற” என்றதும், கதவை திறந்து கோபமாய் நின்றாள்.

  பாட்டி அமைதியாக, கதவை திறந்தபடி டவலால் முகம் துடைத்து பவுடர் பொட்டு வைத்தாள். நெற்றியில் வைக்கும் நேரம் ராவணன் வந்து பெட்டியை பூட்டிவிட்டு எடுத்து சென்றான்.
  அவன் வந்து செல்லும் நேரம் லேசாய் கைகள் உதறியது.
  ரோகிணி நீட்டிய மல்லிச்சரத்தை வாங்கி தலையில் சூடிக்கொண்டாள்.

  “நாங்களும் கூட வர்றோம்னு சொன்னா இந்த ராவணா வேண்டாம்னு சொல்லிட்டான்” என்று குறைப்பட்டார் ரோகிணி.
 
  இன்று காலையில் கூட அமிர்தம் பாட்டி, “கல்யாணம் ஆனவா, பொண்ணு வீட்ல கூட போய் விட்டுட்டு வந்தா சீனிவாசனுக்கும் நேக்கும் இதமாயிருக்கும்.” என்று ஆரம்பித்தார்.

  “பாட்டி பேட்சுலர் பார்ட்டி கொடுத்துட்டு, அடுத்த நாளே கால்ல சுடத்தண்ணி ஊத்தியதா கிளம்பி வந்துட்டேன். ரூம் எப்படியிருக்குமோ. நீங்க ரொம்ப ஆச்சாரமா இருப்பிங்க. சடனா வந்து சங்கடமா உட்கார கூடாது. நாங்களே போயிடுவோம்.
  அதான் காருவை இங்க வந்து விட்டாச்சே. இதானே என் வீடு.” என்று முடித்துவிட்டான். அமிர்தத்திற்கு வீட்டை குப்பைக் காடாக போட்டு வைத்திருப்பான். எந்த நிலையில் இருக்குமோ? என்ற அச்சத்தில் கூட வந்து சென்னையில் விடும் திட்டத்தை கைவிட்டார்.

  ரோகிணி சிவராமன் வருவதை கூட தவிர்த்துவிட்டான்.‌

  “எனக்கு என்னை பார்த்துக்க தெரியும். அவளுக்கும் அவளை பார்த்துக்க தெரியும். நாங்க குழந்தைகள் இல்லை” என்று வரவேண்டாமென உறுதியாய் கூறிவிட்டான்.

  அதனால் இன்று இந்த நேரம் ராவணன், காருண்யா மட்டுமே பேருந்து பயணம் செய்ய கிளம்பினார்கள்.

  “காலையில் பகல்ல போயிருந்தா கூட நல்லாயிருக்கும். இப்ப கிளம்பறேள். எப்படியும் அங்க போய் சேர ராத்திரி ஆகிடும்.” என்று வார்த்தையை விட, ராவணன் பெட்டியோடு திரும்பவும், “ஆரம் ஒட்டியாணம், அட்டிகை, இரட்டவடை சங்கிலி எடுத்துக்கிட்டியா?” என்று காருண்யாவிடம் கேட்க, அதெல்லாம் பெட்டில வச்சாச்சு பாட்டி. சத்தாம சொல்லாதேள்” என்று பாட்டியை அடக்க பார்த்தாள்.

  ஏதோ சீர் எல்லாம் நிறைவாக தந்துவிட்டதாக அடிக்கடி பெருமை பேசியவளை ராவணன் இரண்டு மூன்று முறை முறைத்து தள்ளினான்.
  அவன் பார்வையே ‘இன்னுமா இந்த அமிர்தா கிழவி பெருமை பேசறதை விடலை’ என்ற ரீதியில் இருந்தது.

   “பஸ் டிப்போ வரை போக கேப் புக் பண்ணிட்டேன். கார் இரண்டு நிமிஷத்துல வந்துடும்” என்று கூற, எல்லோரும் வாசலுக்கு லக்கேஜை தூக்கி சுமந்து வந்தார்கள்.
காருண்யா பாட்டியை கட்டிப்பிடிக்க, சீனிவாசனோ, மகளின் சிரத்தில் கையை வைத்து கலங்கினார்.

  பொண்ணை கட்டி வைத்தது என்னவோ பக்கத்து வீட்டில் என்றாலும், அவள் சென்னைக்கு செல்லவும் ஏதோ பிரிந்து செல்லும் உணர்வு.
  ரோகிணியும் சிவராமனும், “அங்க போய் இறங்கியதும் போன் பண்ணு ராவணா. நீயும் தான்மா.” என்று மருமகளிடமும் உரைத்திட, மூக்குறிந்து சரியென்றாள். 
  புதிதாக குத்தப்பட்ட சிவப்பு கல் மூக்குத்தி வேறு அவளை அழுது கரைய கூட விடாமல் சுருக்கென வலியை கொடுத்தது.

  கேப் வரவும் ராவணன் லக்கேஜை எடுத்து வைக்க, பின்னால் சீனிவாசன் ஸ்னாக்ஸும், காருண்யாவுக்கென வாங்கிய இன்னப்பிற உடையை தாங்கிய லக்கேஜும் வைத்தார்.

  “நாளைக்கு காத்தால பர்னிச்சர் திங்க்ஸ் வந்துடும் மாப்பிள்ளை.” என்று சீனிவாசன் ராவணனிடம் பேசினார்.

“வொர்க் ப்ரம் ஹோம்ல தான் போட்டிருக்கேன் மாமா. திங்க்ஸ் வர்றப்ப வீட்ல தான் இருப்போம்” என்று பதில் தந்தான். ஏதோ சில பொருட்களை அங்கே வருவதில் தடை பிறக்கவில்லை‌.

  “அம்மாடி… ஹாஸ்டலில் இருந்து பொறுமையா மற்றதை எடுத்துக்கோ” என்றதற்கு காருண்யா தலையாட்டிக் கொண்டாள்.

  “வீடெல்லாம் நீட்டா இருக்குமா?” என்று சிவராமன் மகனின் காதை கடிக்க, “போனவுடன் உங்க மருமக வாந்தியெடுப்பா” என்றான் வீம்பாக. அந்தளவு அழுக்கும் கெட்டவாடையும் இருக்குமென்ற அர்த்தத்தில்…

  சிவராமனோ “வாந்தியெடுக்க வச்சிடுவ.. பேரன் பேத்தி யாரை டா எதிர்பார்க்க?” என்று மெதுவாக கேட்டார்.

கார் கதவை பட்டென்று சாற்றி, “போங்க… கல்யாண வீடுன்னு இன்னமும் வாழை மரத்தை கூட எடுக்காம சுத்தறிங்க. அந்த வேலையெல்லாம் பாருங்க. அம்மா பை பை. போயிட்டு வர்றேன் மாமா. பாட்டி பை” என்று கண் சிமிட்டினான்.

“ராமா.” என்று பாட்டி உச்சரிக்க, “ராமா இல்லை பாட்டி ராவணா…” என்று விளையாடினான்.

   காருண்யாவோ, “போயிட்டு வர்றேன் அப்பா. பாட்டி அப்பாவை பார்த்துக்கோங்க. மாமி பாட்டியை அடிக்கடி பார்த்துக்கோங்க. போயிட்டு வர்றேன் மாமா” என்றாள். அந்த கார் முக்கு திரும்பும் வரை கையாட்டி தலையை திருப்பி தங்கள் வீட்டு பக்கமே கண் பதித்தாள்.

  ராவணனோ ஷர்டின் முதல் பட்டனை கழட்டி விட்டு முழுசட்டையை புஜம் வரை மடித்து ஏற்றி விட்டான். பேருந்து வந்ததும் லக்கேஜ் எல்லாம் இறக்கி விட்டு, பணத்தை கொடுக்க, காருண்யாவோ, மூக்குத்தியை தொட்டு பார்த்து வலியில் சுணங்கினாள்.

  அவர்கள் ஏறவேண்டிய பேருந்தை பார்த்து முதுகுபையை அணிந்து, தள்ளும் சூட்கேஸை இழுத்தான்.

  அவளுமே இரண்டு பையை சுமந்து மெதுவாக நடந்தாள். தங்களது உடைமைகள் தங்கள் தலைக்கு மேலே வைத்து, முதுகுபையை மட்டும் மடியில் வைத்து அமர்ந்தான்.

  காருண்யா அவளது பைகளை எப்பொழுதும் போல காலுக்கு கீழே வைத்து விட்டு கைப்பையை மட்டும் மடியில் வைத்து அமர்ந்தாள்.

      மூக்குத்தி தொட்டு மீண்டும் பார்த்தாள். திருமணமானதால் மூக்குத்தி அணிந்திருக்க, புதிதாக அணிந்ததால் கொஞ்சம் உறுத்திக் கொண்டேயிருந்தது.

    ஏசி பஸ் புறப்படும் முன், கர்ச்சீப்பை எடுக்க, பேண்டில் கையை விட, ராவணன் கைகள் தானாக காருண்யாவின் வெற்றிடையில் உரசியது.
விலுக்கென்று அவள் நகர, ராவணனும் கைகள் எதில் உரசியது என்ற கவனத்தில் திரும்பினான்.

  காருண்யா திருதிருவென விழிக்க, அவள் வெற்றிடையை தீண்டியதை அறிந்து “நீ ஜன்னல் சீட்ல உட்கார்ந்துக்கோ” என்று எழுந்துக்கொண்டான் ராவணன்.
  அவளுமே விட்டால் போதும் என்று, அமர்ந்துக் கொண்டாள். ‘நேக்கு இந்த சேலை வேண்டாம்னு எத்தனை முறை சொன்னேன். இந்த பாட்டி இருக்காளே. என்னை சிக்கல்ல தள்ளி விட்டுட்டா’ என்று குமைய, ராவணனோ ‘சம்சாரத்தை தொட்டா மின்சாரம் பாயுது, இதை தான் சம்சாரம் அது மின்சாரம்னு சொல்லறாங்களோ?’ என்று நினைத்தவன் அவள் பக்கம் திரும்பவே யோசித்தான்.

    புதுமண தம்பதிகள் பேசுவதற்கு ஆயிரம் விஷயங்கள் உண்டு. அதை தாண்டி மனைவியை சில்மிஷங்கள் செய்யலாம். ஆனால் இருவருமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதை கூட தவிர்த்தனர்.‌

   ராவணனாவது திரும்பி பேருந்து புறப்பட்டு எவ்விடம் தாண்டியது என்று பார்வையிட காருண்யா பக்கம் திரும்பினான். அப்பொழுது புதுமஞ்சள் கலந்த தாலி கயிறும், நெற்றி வகிட்டில் குங்குமமும், ஜவ்வாது மணம் தாண்டி மல்லிப்பூ வாசம் வேறு அவனை ஈர்த்தது. இதில் சேலை அணிந்து அமர்ந்தவளின், வெற்றிடை தீண்டிய நினைவு வந்தது.
காருண்யாவோ ராவணன் புறம் திரும்பாமல், இருந்ததால் அவன் தன் கண், காது மூக்கு உதடு, கழுத்து என்று பார்வையிட்டதை அறியவில்லை.

  ராவணனோ, ‘என்னோட லாஸ்ட் டைம் வந்தப்ப, என் பார்வை இவளை இப்படி பார்க்கவேயில்லை. ஆனா இப்ப என்னை ஏன்டா கெட்டவனா ஆக்கறிங்க. என்னோட பிரெண்ட் தாண்டி என்னைக்காவது தப்பா பார்த்ததில்லை. இன்னிக்கு தெரியாம ஒரு உரசு உரசியதுக்கு இப்படி இருக்கு. குயிக்கா சென்னை போய் சேரணும். இந்த வாசம் வேற,’ என்று மல்லிப்பூவின் மணத்தை நாசியில் நுகர்ந்தான்.

     ஐ-மாஸ்க் எடுத்து மாட்டிக் கொண்டான். இது பழக்கமென்பதால் கையை கட்டிக்கொண்டு இமை மூடிட, இரவு ஒன்பது மணிக்கு சென்னை வந்து சேர்ந்தார்கள்.

   சோம்பல் முறித்து கையை முறுக்க காருண்யா உறங்கியவள், அவளுமே கண்ணை கசக்கினாள்.

   ராவணன் தன் சூட்கேஸை பொறுமையாக எடுத்து கிளம்ப, அவளும் இறங்கினாள்.

  இதுவரை ராவணன் தங்கியிருக்கும் வீட்டுக்கு காருண்யா சென்றதில்லை. இடைப்பட்ட நாளில் ரோஸ்லின் பார்த்துட்டு வருவோம் என்று அழைத்தப்போது கூட, “ஏற்கனவே பிரச்சனை இதுல வீட்டுக்கு போய் வேறபார்க்கணுமா? அங்க தான் வாழப்போறதா இருக்கும் பொழுது பொறாப்பவே காலடி வச்சிக்குறேன்” என்று மறுத்துவிட்டாள். ராவணனும் அவளை அழைத்ததில்லை.

  எல்லா லக்கேஜும் வந்ததில் கேப் புக் செய்ய ஆயத்தமானான். வீட்டிலிருந்து பாட்டி சப்பாத்தி ரோல் செய்து கொடுத்திருக்க வீட்டிற்கு சென்று சாப்பிடலாமென பஸ்ஸில் பிரிக்கவில்லை‌. வீடு எப்படியிருக்குமோ? பேட்சுலர் பார்ட்டி கொண்டாட்டம் முடித்து அப்படியே வந்ததாகவும் வீடு ஒழுங்குப்படுத்தவில்லை என்று கூறியதால், திக்திக் பேய் பங்களாவுக்கு செல்லும் நினைப்போடு வந்தாள். 

   ஒன்பது நாற்பதுக்கு வீட்டை வந்தடைந்தார்கள்.
  லக்கேஜ் எடுத்துவிட்டு எப்பவும் போல் பணத்தை தந்துவிட்டு, நடந்தான். ராவணனை பின் தொடர்ந்த காருண்யா, அரை தூக்கத்தில் இடத்தை ஆராய்ந்து நடந்தாள். தனி வீட்டில் வாடகைக்கு இருப்பதால் வீடு இருளாக வரவேற்றது.

சின்ன வெளிச்சத்தில் வெளி லைட்டை போட்டுவிட்டு கதவை திறந்தான்.

  பூட்டியிருக்கும் வீட்டுக்குள்‌ குப்பென்ற வாடை வீசுமென சேலையால் முகத்தை மூடி வந்தாள்.
 
  ஹாலுக்கு வந்தவன் பட்டனை தட்டி விட, அங்கேயிருந்த ஆட்டோமெடிக் ரூம் பிரஷ்னர் வேறு நறுமணத்தை பரப்பியது. கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் வந்ததும் இடத்தை கண்டவள் கெட்ட வாடை இல்லாது போக சேலையை மூக்கிலிருந்து எடுக்க, நறுமணம் கமழ்ந்தது.

  “இது ஹால்..‌. அந்த ரூம் அப்பா அம்மா வந்தா தங்க வசதியா இருக்கும். கிச்சன் ஒட்டியும் ஒரு பால்கனி இருக்கு. நம்ம ரூம் பக்கமும் ஒரு பால்கனி இருக்கும். அப்பறம்.. இந்த பக்கம் ரூம் அட்டாச் பண்ணி தரமுடியுமானு கேட்டிருக்கேன். உங்க பாட்டி அப்பா வந்தா தங்கறதுக்கு.” என்று பேசியவன், அட்டாச் பாத்ரூம் ரெப்பிரஷ் பண்ணனும்னாலும் பண்ணு. இல்லை குளிச்சிட்டு வரணும்னாலும் வா. நான் அதுக்குள்ள சாப்பாத்தியை ஒவனில் வச்சி எடுத்துடறேன். அப்படியே அப்பாவுக்கு கால் பண்ணிடறேன். ஆஹ்.. மறக்காம உங்க அப்பாவிடம் கால் பண்ணி பேசிடு.” என்றான்.

  வேலையில் எந்தளவு திட்டமிடல் இருக்குமோ அதே பாணியில் வீட்டிலும் என்ன செய்ய வேண்டுமென தெளிவாக யோசிப்பவனிடம் தலையாட்டி குளிக்க சென்றாள்.

  ‘பரவாயில்லை… மாமிசம் வாடை வரலை” என்று குளித்து முடித்து போன் போட்டு பாட்டியிடம் வந்துவிட்டதை தெரிவித்து அறையெல்லாம் நல்ல வசதியாக உள்ளதை தெரிவித்திருந்தாள். பேசிக்கொண்டே சூடாக சாப்பிட வர, ராவணனும் “ஓகே ஓகே மம்மி குட் நைட்.” என்று துண்டித்தான்.

“வீடெல்லாம் நன்னா வாசமா இருக்கு. ஆனா 
பாட்டியிடம் கெட்ட வாடை வரும், கூட வராதேள்னு பயமுறுத்தினேள். எதுக்கு?” என்று கேட்க, “அவங்க வந்துட்டு நாளைக்கு சாந்தி முகூர்த்தம் வைக்கணும், எந்த ரூம் ரெடி செய்யணும், அலங்காரம், அதுயிதுன்னு பேசினா இரிட்டேட்டா இருக்கும். அதனால் அவங்களை அவாய்ட் பண்ண அப்படி பொய் சொன்னேன்.” என்றான்.

  எப்படியும் பாட்டி செய்ய கூடியவரே என்பதால் அவன் பேச்சுக்கு வாதாடவில்லை.
“நாளைக்கு என்ன ஐடியால இருக்க?” என்று கேட்டான் ராவணன்.

  “எ..எ..என்ன ஐடியான்னா? புரியல’ என்று பம்ம, “நம்ம விஷயம்.” என்றான். அவளுக்கு என்ன சொல்ல வருகின்றான் என்று விழித்தாள்.

-தெடரும்.
பிரவீணா தங்கராஜ்.

9 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-16”

  1. Dharshini

    Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 pakkathula utkarndhutu eppdi yaaro pola vara pudhu couples evangalathan erukum 😂 ennum ennalam panna porangalo parpom 🤔🧐

  2. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 16)

    அய்யய்யோ..! இவன் இப்ப எதை பத்தி கேட்கறான்னு தெரியலையே..? ஏதாவது வில்லங்கமா இருக்குமோ ?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *