Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-3

ஐயங்காரு வீட்டு அழகே-3

Thank you for reading this post, don't forget to subscribe!

அத்தியாயம்-3

  ராவணன் நொடிக்கொரு முறை தன் பக்கத்து கேபினில் இருந்த காருண்யாவை பார்த்தவனுக்கு ஆச்சரியமாக தான் இருந்தது.
 
   சென்னையில் வேலை செய்பவள் மற்றவரின் கேலி கிண்டலுக்கு பயந்தாவது ஐயர் பாஷையை மாற்றிக் கொள்வாளென நினைத்தான். ஆனால் இவளோ அப்படியே மாறாது நிற்கின்றாள்.

   தன்னை ராவணன் உற்று நோக்குவதாக தோன்ற திரும்பினாள்.
 
ராவணனோ சடுதியில் தன் கணினியில் கவனத்தை வைத்து, மாற்றிவிட்டான்.

    அடுத்தடுத்த அவரவர் வேலைகளில் மூழ்கினார்கள்.

  மதியம் சாப்பாடு நேரம் வரவும், கேண்டீன் செல்ல எழுந்தான்.
   காருண்யாவும் சாப்பிட எழுந்தாள். பெரும்பாலும் காலையில் மெஸ்ஸில் சப்பாத்தி, இட்லி, உப்புமா, பொங்கல், என்று ஏதாவது காலை உணவு சாப்பிடுவாள். சில நேரம் டிபன் பாக்ஸில் அலுவலகத்திற்கு கொண்டு வந்து ரோஸ்லினுடன் சாப்பிடுவாள்.
 
  மதியம் அலுவலகத்தில் உள்ள கேண்டீனில் சாம்பார் சாதம், தயிர்சாதம், தக்காளிசாதம், லெமன் சாதம், புளியோதரை என்று சாப்பிடுவாள். சனி ஞாயிறு என்றால் மட்டும் தங்கியிருக்கும் அறையில் இன்டெக்ஸ் ஸ்டவ்வின் உபத்தில் வத்தக்குழம்பு, சுட்ட அப்பளம் சாதம் என்று அவளே செய்வாள்.
  
   வத்தக்குழம்பு சுட்ட அப்பளம் என்றால் தன் பிராணத்தை எழுதி வைப்பாள் அந்தளவு பிடிக்கும்.
  
   ராவணனுடன் ரோஸ்லினுடன் வந்தவள் சாப்பிட டோக்கன் வாங்கி அமர்ந்தாள்.
 
  “இங்க நான் வெஜ்டேரியன் இருக்காதா? ஐ மீன் ப்ரியாணி?” என்றதும் ரோஸ்லின் சிரிக்க, காருண்யாவோ ‘உவ்வேக்’ என்று அஷ்டக்கோணலாக முகத்தை வைத்தாள்.

  ராவணனுக்கு காருண்யா இருக்கும் பொழுது கேட்டிருக்க கூடாதோ என்று சிரித்து கொண்டான்.

  ரோஸ்லினோ “அதெல்லாம் கிடைக்கும். வெஜ்டேரியனுக்கு டோக்கன் இங்க. நான்வெஜ்டேரியனுக்கு அங்க.” என்று சுட்டிக்காட்டினாள்.

  “ஓ..” என்றவன் சாம்பார் சாதம் வாங்கி வந்து அமர்ந்தான். ரோஸ்லின் வீட்டிலிருந்த உணவை கொண்டு வந்ததால் ராவணனிடம் ஷேர் செய்யவா என்று கேட்டாள்.

  “சூர்” என்று கூற பகிர்ந்தாள். காருண்யா எதையும் கண்டுக்கொள்ளாமல் உணவை விழுங்கினாள்.

  ராவணன் ரோஸ்லின் தான் பேசிக் கொண்டிருந்தார்கள். காருண்யாவின் பக்கத்து வீடு ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்ததை எல்லாம் கூறினான்.

  நாசூக்காய் சில நிகழ்வை தவிர்த்துவிட்டான். பெங்களூரில் வேலையில் இருந்ததை பற்றி பேசினான்.
   இங்கே ஒரு வருடம் இந்த பர்டிகுலர் பிராஜக்ட்டின் வேலை முடிக்க வந்ததாக உரைத்தான்‌.
  பிறகு திரும்ப பெங்களூர் சென்றிடவும் வாய்ப்புண்டு என்றுரைத்தான்.

  நெல்லுக்கு வாய்த்த நீர் புல்லுக்கும் சென்றது போல செவி வழியே காருண்யா விவரம் கேட்டுக் கொண்டாள்.

மனதிற்குள், ‘பிராஜக்ட் முடிந்து சீக்கிரமா இவா திரும்ப அங்கயே போனா சேமமா இருக்கும்’ என்று நினைத்தாள்.

என்ன தான் ரோஸ்லினுடன் பேசினாலும், அடிக்கடி காருண்யா மீது பார்வை வீச தயங்கவில்லை ராவணன்.

   ”ரோஸ்லின் நேக்கு நாழியாகுது. என் பிளேஸுக்கு போறேன்” என்று கிளம்பினாள்.

  ராவணன் தன்னிடம் சொல்லாமல் நழுவுபவளை கண்டு சிரித்து கொண்டான். நீண்ட நாளாக பேச்சு வார்த்தையின்றி இருப்பதால் தயங்குவதாக எண்ணிக்கொண்டான்.

  தன்னிருப்பிடம் வந்து, ‘நல்லா ஈசிண்டு இருக்காள். இவனும் கதை அளந்துட்டு இருக்கான். உத்தியோகத்தை நேரத்துக்கு பார்க்க வேண்டாம்.’ என்று கடுகடுத்தாள்.

     பத்து நிமிடத்தில் ராவணன் வந்து அவனது கேபினில் அமர்வதை உணர்ந்தாள்.
 
“காரு நைட்டு… மெஸ்ல சாப்பிடுவியா?” என்று கேட்டதும் ‘ம்ம்” என்றாள்.

  “ஏ.. நான் எங்க தங்கியிருக்கேன்னு விசாரிக்கலையா?” என்று கேட்டான் ராவணன்.

   “நேக்கு அது தேவையில்லாத விஷயமாச்சே. உங்காத்துல வசதியானவா. எப்படியும் தனி வீடு இல்லைன்னா பிளாட் பார்த்து வச்சிருப்பேள். நீங்க தான் எது பண்ணினாலும் பிளான் செய்து முடிப்பவராச்சே” என்றாள்.

  “வாவ்… காரு..‌ நான் கூட என்னை பத்தி விலாவரியா விசாரிக்கலையே. ஒழுங்கா பேசலைன்னு திங்க் பண்ணிட்டு இருந்தேன். இப்ப தான் புரியுது. நீ என் சைல்ட்வுட் பிரெண்டா இருந்தப்பவே என்னை நல்லா புரிஞ்சு வச்சியிருக்க. எஸ்.. நான் இங்க தான் குரோம்பேட்ல அப்பாட்மெண்ட்ல தங்கியிருக்கேன். போகும் போது நைட்டுக்கு எந்த ஹோட்டல்ல சாப்பாடு பிடிக்குமோ அங்க வாங்கிப்பேன்.” என்றான்.

  உதடு பிரிக்காமல் சன்னமாக சிரித்து தன் பணியில் தீவிரமானாள்.

  மாலை எல்லோரிடமும் விடைப்பெற்று வெளிவந்தார்கள். தன் ஸ்கூட்டி பெப்பில் கிளம்புவதாக கூறி முறுக்கி சென்றவளை விசித்திரமாக பார்த்தான்.
 
  காஞ்சிப்புரத்தில் குட்டி குட்டி சந்தில் சைக்கிள் ஓட்ட பழகினாள். ஒரு முறை சைக்கிள் ஓட்ட பழகி, பூனை குறுக்கே வந்து, கீழே விழுந்து முட்டியில் சிராய்த்திட, பாவாடையை முட்டி வரை தூக்கியபடி,  அழுதுக்கொண்டே வீட்டிற்கு வந்தாள்.

   மாடியிலிருந்து கவனித்த ராவணன், கீழே அவள் பாட்டியிடம் பேசுவதை கேட்க நேர்ந்தது.

  “பாட்டி நேக்கு சைக்கிள் எல்லாம் வேண்டாம். கீழே விழுந்து சிராய்ச்சு ரத்த வருது பாருங்கோ. நேக்கு பள்ளிக்கூடத்துக்கு ஆட்டோவே போதும். இனி ஜென்மத்துக்கும் சைக்கிள் வேண்டாம். ரோட்டுல,  ஜனநடமாட்ட மத்தில் ஓட்டவே நேக்கு பயமாயிருக்கு.” என்று அழுது தோய்ந்தாள்.

  அந்த இடத்தில் சைக்கிளே ஓட்ட மாட்டேன் என்றவள் இந்த சென்னை மாநாகரத்தில் ஸ்கூட்டியில் பவனி வருவதை காண்கையில் சில விஷயத்தில் காருண்யா மாற்றம் பெற்றதை உணர்ந்தான்.
 
  அவனுக்குள் சிறுவயது காருண்யாவின் நினைவுகள் வந்து சென்றது.
  
  தனி ஆட்டோவில் ஏறி தன் இல்லத்திற்கு செல்ல கூறிவிட்டு, நினைவுகளில் மூழ்கினான்.

    ஒருமுறை பந்து சுவரில் பந்து போட்டு பிடித்து, விளையாடியிருந்தவன் வேகமாக பந்தை சுவரில் அடிக்க, பந்து பக்கத்து வீட்டில் சென்று விழுந்தது.

  அன்னையிடம் கூறி பந்து எடுத்து தர சொன்னான். முதல் முறை பந்து வாங்க தான் காருண்யா வீட்டில் அன்னையோடு நுழைந்தான்.

  அங்கே அமிர்தம் பேத்தியிடம் “துளசியை மெல்லு” என்று கூற அஷ்டக்கோணலுடன் காருண்யா துளசியை மென்றாள்.

“பாட்டி நேக்கு துளசி வேண்டாம். மாத்திரை முழுங்கிக்கறேன்” என்றாள்.

“தொண்டைக்கு துளசி தான் நல்லது. இனிப்பு மாத்திரையே இதுல தான் தயாரிக்கறதா கவர்ல போடலை. அதனால தினமும் காத்தாலயும் சாயந்திரமும் துளசி இலையை மெல்லு. தன்னால சளி குறையும்” என்று அங்கலாய்த்தார்.

  “என்னடிம்மா வேணும்?” என்று கேட் திறந்து வந்த ரோகிணியிடமும் கேட்க, “பையன் பந்து வச்சி விளையாடினான் மாமி. தெரியாம இங்க விழுந்துடுச்சாம். எடுத்து தரச்சொல்லி ஒரே அடம்.” என்று கேட்க, “அம்மா பச்சை பந்து” என்று சுட்டி காட்டினான் ராவணன்.

   “அட நீயா போய் எடுத்துக்கோடா அம்பி. இதுக்கா அம்மாவை அழைச்சிண்டு வந்த..” என்று பரிவாய் கேட்டார் அமிர்தம்.

   ராவணன் பந்தை எடுத்ததும் வாம்மா போகலாம்” என்று அழைக்க, “என்ன ரோகிணி ஆம்படையான் ஏதோ வெளியூர் போயிருக்காரா? இரண்டு நாளா உங்காத்து பைக்கை காணோம்” என்று விசாரித்தார்.

  “வேலை விஷயமா வெளியூர் போயிருக்கார் மாமி‌” என்றார் ரோகிணி.

   “அம்மா வாம்மா போகலாம்” என்று ராவணன் இழுக்க, “செத்த இருடா அம்பி. உங்கம்மாவே உன் தோப்பனார் இருக்கறச்ச இங்க வர்றதேயில்லை. இப்பவாச்சம் இரண்டு வார்த்தை சேமமா பேசிக்கறோமே?” என்று நிப்பாட்டினார்.

  “ராவணா… பாப்பா கூட பந்து விளையாடு. அம்மா பாட்டி கூட பேசிட்டு இருக்கேன்” என்றதும் பாப்பாவை ஏறிட்டான்.

  “அம்மா… அவ பாப்பா இல்லை. என்னோட கிளாஸ் மேட்” என்று திருத்தினான்.

    ”விளையாட வர்றியா?” என்று ராவணன் கேட்க, தன் பாட்டி அமிர்தத்தை கண்டாள் காருண்யா.

  “விளையாடிட்டு இருடிம்மா. ரோகிணி மாமியோட உள்ளாற பேசறோம். ரோகிணி பில்டர் காபி குடிப்பியோனோ” என்று ரோகிணியை அழைத்து சென்றார் அமிர்தம்.

  பந்தை மாறி மாறி கேட்ச் பிடித்து நட்பை ஆரம்பித்தார்கள்.
  பள்ளிக்கூடத்தில் தனிதனி இடம் என்பதால் அதுவரை ராவணாவிடம் காருண்யா பேசியதில்லை. அவனுமே அப்படிதான்.

‘நீயேன் ஸ்கூல்ல என்கிட்ட பேச மாட்டேங்கற?’
‘வீட்டுபாடம் எழுதிட்டியா?’
‘இப்ப வச்ச டெஸ்ட்ல எத்தனை மார்க்’ என்று சிறுவனாக இருந்தவன் பேச்சை ஆரம்பித்தான்.

பாட்டி விளையாட சொன்னதால் பயப்படாமல் ராவணாவிடம் பதில் தந்து பேசினாள்.

“உன் கையில மருதாணி அழகாயிருக்கு” என்று கூறியவன், பின்னர் ‘நேக்கு அம்மா இல்லை. தோப்பனார் மட்டும் தான். பாட்டி தான் என்னை கவனிச்சிக்கறா. வீட்ல இருக்கறச்ச போரடிக்கு. தினமும் விளையாட வர்றியா?’ என்று காருண்யா கேட்கும் அளவிற்கு தோழமையுடன் பழகினார்கள்.
 
   அதன் பழக்கம் தொடர, சின்ன பிள்ளைகள் தானே, அதுவும் கண்ணுக்கு முன்னால் விளையாடுகின்றார்கள் என்று அமிர்தம் ஒன்னும் சொல்ல மாட்டார்.
 
  ராவணன் அவனாக காருண்யா வீட்டுக்கு வந்து போரடித்து, “எங்க வீட்டுக்கு வா. வீடியோ கேம் விளையாடலாம்” என்று அழைத்தான்.

  மே மாதமென்றாலே வீட்டில் எந்நேரமும் பேத்தி அமிர்தத்தின் காலை சுற்றி வந்திருக்க, ராவணன் வீட்டுக்கு செல்ல பெர்மிஷன் கேட்கவும் அனுப்பி வைத்தார்.

  ராவணன் தன் வீடியோ கேமில் தான் காருண்யாவை ஈர்த்திருக்க வேண்டும்.
  தினமும் பத்து பன்னிரெண்டுக்கு கிச்சன் செட் எல்லாம் எடுத்துக்கொண்டு வருவாள். ரோகிணியிடம் பேசி, அவர்கள் கொடுக்கும் ஸ்னாக்ஸில் கிச்சன் செட் விளையாடுவார்கள்.

மதியம் போல சாப்பிட்டு வந்து, வீடியோ கேமில், டூ பிளேயரில் விளையாடி பொழுதை கழித்தனர்.‌ மாலை வெளியே நொண்டி, கண்ணாம்பூச்சி என்று ஆடுவார்கள்.
 
  இன்டோர் கேம் விளையாட ஒரு நேரம், அவுட்டோர் விளையாட ஒரு நேரம் என்று பகுத்து கொள்வார்கள்.
 
  படத்தை பற்றி, பாட்டு பாடி, விமர்சித்து கொள்வார்கள்.
   பள்ளிக்கூடம் செல்லும் போது இருவருமே ஒரே ஆட்டோவில் வந்து இறங்குவார்கள். வகுப்பறையில் பக்கத்து பக்கத்து இருக்கையில் சேட்டைகள் தொடர்ந்தது.
 
  இவன் ‘காரு’ என்று அழைப்பதில் மற்றவர்களும் அழைக்க, அதிலும் ஒரு சிறுவன் ‘கார், பஸ், ஏரோப்ளைன்’ என்று கிண்டல் செய்ய, ராவணனிடம் அழுது கூறினாள்.

  ”நான் அப்படி தான் கூப்பிடுவேன். மத்தவங்க யாராவது கூப்பிட்டா கூப்பிடாதேள்னு சொல்லிடு” என்பான்.
  சேட்டை செய்த பையன் ‘கார் பஸ்’ என்று கிண்டலடிக்க டீச்சரிடம் மாட்டி விட்டான் ராவணன்.  இனி அவ்வாறு அழைக்க மாட்டேன் என்று அந்த பையனும்‌ கூறினான்.

   ‘இனி நான் மட்டும் தான் காருண்யாவை காரு’னு சொல்வேன்’ என்று சிரித்தான் ராவணன்.

  இரண்டாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள்.
   அதன்பின் பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு காருண்யாவை மாற்றிவிட்டார் அமிர்தம்.
   கொஞ்சம் ராவணனின் வீட்டுக்கு வந்து செல்லும் நேரமும் குறைந்தது. அப்படியே சென்றாலும் அமிர்தம் வீட்டு வேலையை ஏவினார். ஏழாவது படிக்கும் பெண் வீட்டு வேலையும் கற்று அறிய வேண்டும் என்பது பாட்டியின் எண்ணம்.

  அப்படியும் சில நேரம் விளையாட செல்வாள். அப்படி ஒரு நாள் கண்ணாம்பூச்சி ஆடினார்கள். இருவரது வீட்டில் எங்கு வேண்டுமென்றாலும் ஒளியலாம். காருண்யா ராவணன் வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் டேங்க் கீழே ஒளிந்தாள். அந்த நேரம் அடிவயிறு வலியில் பின்னியெடுக்க, வயிற்றை பிடித்து துவண்டாள்.

  ராவணன் அவளை கீழே தோட்டத்தில் வீட்டின் அறையில் கிச்சனில் தேடி களைத்து மாடிக்கு வந்தான். அங்கே விசும்பும் சத்தம் கேட்டது.
  காருண்யா வயிற்றை பிடித்து அமர்ந்து, அழுதவளை கண்டான்.
  
   ஓரளவு பாட்டி புரிந்தும் புரியாமலும் இருந்த வயதில் சொல்லி வைத்ததால், இது பூப்பெய்தி நிகழ்வு என்று அறிந்தவளால், எப்படி இவ்விடம் விட்டு, தன் வீட்டுக்கு செல்வதென்ற தவிப்பு. அதை காட்டிலும் ராவணனிடம் என்னவென்று உரைப்பது?

இவளுக்கு இருந்த அதே புரிந்தும் புரியாத உணர்வோடு ராவணன் அவளை கண்டு திகைத்தவன் படிகளில் திபுதிபுவென ஓடினான்.

   வீட்டில் ரோகிணியிடம், காருண்யா வயசுக்கு வந்துவிட்டால் என்றா கூற முடியும்?!
  “அம்மா காருண்யா மாடில கீழே விழுந்து அடிபட்டு ரத்தம் வந்து அழுவறா. என்னன்னு வந்து பாருங்க” என்றான்.

  பக்கத்து வீட்டு பெண் பிள்ளை தன் வீட்டில் வந்து அடிபட்டு விழுந்து விட்டாளோ என்று பயந்து, ரோகிணி மேல மாடிக்கு ஓடினார்.

  காருண்யா சுருண்டு அமர்ந்திருந்த கோலமே பூப்பெய்தியதை தெரிவிக்க, “அட இதை தான் கீழே விழுந்து அடிபட்டு ரத்தம் வருதுன்னு சொன்னானா” என்று வாஞ்சையாக அழைத்து வந்து அமிர்தம் பாட்டியிடம் ஒப்படைத்தார்.

அன்றிலிருந்து தான் ராவணனை காண சங்கோஜமாக மாறி, அவனை முற்றிலும் தவிர்த்தாள்.

  ராவணனும் அவளாக தன் வீட்டுக்கு வரவில்லை என்றதும் கீழே அவள் வீட்டுக்கு செல்வான். பாட்டி எனக்கு கால் வலிக்கு, வயிறு வலிக்கு நான் வரலைனு சொல்லிடுங்கோ” என்று இரண்டு மூன்று முறை பொய்யுரைக்க, ராவணன் முற்றிலும் ஒதுங்கினான். பாட்டியுமே ‘காருண்யா பெரியவா ஆயிட்டாளோனு இனி விளையாட எல்லாம் வரமாட்டா’ என்று கூறியிருந்தார்.

அவனுக்கும் பள்ளியில் ஆண் நண்பர்கள் கிடைத்திட, ஸ்போர்ட்ஸில் கோச்சிங் செல்ல ஆரம்பித்து, சைல்ட்வுட் தோழமை அப்படியே இடைவெளியானது. நடுவே நடுவே காருண்யாவை பார்ப்பான், கஷ்டப்பட்டு சிறு சிரிப்போடு கடந்திடுவாள்.

  அவளையே நினைத்து வந்தவன் ஆட்டோவிலிருந்து இறங்கி பணத்தை கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து போனில் அன்னையிடம் காருண்யாவை பார்த்ததை கூறினான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

10 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-3”

  1. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 3)

    அட.. இது தான் விஷயமா..? நான் கூட பெருசா ஏதாவது நடந்திடுச்சோன்னு நினைச்சேன். அதாவது, அறியாத வயசுல வர லவ் மாதிரி, அதை சொல்லி காருண்யா ஒரேயடியா மூஞ்சியை தூக்கி வைச்சிட்டாளோன்னு.

    அது சரி, அவ மட்டும் தான் ஐயங்கார் வீட்டு பொண்ணா ?
    ராவணா கிடையாதா ? பிரியாணி எல்லாம் கேட்குறானே…? அப்புறம் எப்படி ரெண்டு பேருக்கு நடுவில லவ் வரும்..? ஏன்னா, பிரமாணா சில விஷயத்துல எல்லாம், ஆச்சாரம்
    அனுஷ்டானம்ன்னு ரொம்ப கட்டுகோப்பா இருப்பாங்களே..
    அதான் கேட்டேன். ஏன்னா, நாங்களும் அந்த வகையைச் சேர்ந்த தெலுங்கு ஐயர் வீட்டு பொண்ணு தான்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *