காலைக் காற்று சுகமாக வீசிற்று. மஞ்சளும் சிவப்புமாய் கீழ்வானம் மென்மையாய் வெல்வெட்
கம்பளம் விரித்திருந்தது. இதையெல்லாம் ரசித்துக் கொண்டு சுஜாதா நிதானமாக காரோட்டிக்
கொண்டிருந்தாள். மதியத்திற்குள் மதுரை அடைந்து விடலாம் என்று நம்பிக்கை
கொண்டிருந்தாள். கார் ஸ்டீரியோவிலிருந்து தேனினும் இனியக் குரலில் பி. சுசீலா. டி. எம்.
எஸ் பாட்டு ஒழித்துக் கொண்டிருந்தது.
“அல்லி என்றால் சந்திரனோடு
தாமரை என்றால் சூரியனோடு
வள்ளி என்றால் வேலவனோடு
மன்னவனே நான் என்றும் உன்னோடு.”
பழைய பாடல்கள் கருத்தாழம் மிக்கவை. அவள் மன்னன்—ரமேஷ். அவனைக் கணவனாக
அடைய அவள் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்! ரமேஷ் என்றும் அதிகாரம்
செய்கிறவனல்ல. அவன் குரல் எப்பொழுதும் மிருதுவாக இருக்கும். அவன் சுருக்கமாக
பேசுபவன். ஆழமாக நேசிப்பவன். கவனமாக மனைவியின் மனம் அறிந்து நடப்பவன். இதை
விட வேறு என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு? அவள் முகம் வட அவன் சம்மதிக்க மாட்டான்.
“சுஜா என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?” என்று வீட்டில் இருந்தாலும். அல்லது ஏதோ
இரு விசேஷம் நடக்கும் கூட்டத்தில் இருந்தாலும் அருகில் போய் வாஞ்சையுடன் கேட்பான்.
“ஒன்னுமில்லே……ஜஸ்ட் லைக் தட்..” என்று அவள் மறைத்தாலும் விட மாட்டான்.
“சின்ன அத்தை எல்லோர் முன்னும் என்னை கேலி செய்கிறார்கள். நான் மார்டன் கேர்ளாம்.
கோலம் போடாத தெரியலையாம். மதுரையில் வசிக்க லாயக்கில்லாதவளாம்.” சின்ன சின்ன
நீர் துளிகள் திரள சொல்வாள்.
“பார், என் புறங்கையில் உன் கண்ணீர்த் துளிகள் போட்டிருக்கும் கோலங்கள். உனக்கா
கோலம் போடத் தெரியவில்லை.? சுஜா சீர் அப். என் சித்தி எப்பவும் இப்படித்தான்.
வெடுக்கென்று இங்கிதமில்லாமல் பேசிவிடுவார்கள். நாம் தனிக்
குடித்தனம் தானே இருக்கோம். எப்போதாவது வந்து போகிறவர்கள் தானே? விடு…….நான்
இருக்கேன்லே.?”
அவன் சமாதானமாக பேசும் போது மனசு லேசாக்கும் சுஜாவுக்கு. அவன் தோளில் சாய்ந்து
அழுதிருக்கிறாள். மடியில் படித்து விம்மியிருக்கிறாள்.
“என் அம்மா லெட்டர் போடலை.”
“என் அண்ணன் ஈமெயில் பண்ணலை..”
தங்கை சுதா பிளஸ் டூவில் பெயிலாகி விட்டாள்.”
இப்படி ஒரு வரிக் கவலைகளை கொட்டி விடுவாள் அவனிடம்.
“எதுக்குத் தான் அழுவது என்றில்லையா?” என்று அவன் ஒரு நாளும் அவன் எறிந்து
விழுந்ததில்லை.
“சுஜா…. டேக் இட் ஈஸி. அவர்களுக்கு என்ன பிரச்சனையோ.? பதில் வரும். உன்
தங்கையிடம் நான் பேசறேன். அடுத்த முறை நல்ல மார்க் வாங்குவாள். அது என் பொறுப்பு. ஓ.
கே யா?…. சரி இப்ப கொஞ்சம் சிரியேன்.” என்பான். அவன் சொன்னபடியே நடக்கும்.
அதனாலே சுஜா எப்பொழுதும் அவனை வழக்கு தீர்க்கும் நீதிபதி போல் நினைத்து, அவனுடய
சொல்லுக்கு மரியாதை கொடுப்பாள். ஆர்த்தி பிறந்த போது அவன் அடைந்த சந்தோஷத்தால்,
அவன் கண்களில் அன்பு நீர் கட்டியது கண்டு அவளுக்கு பெருமிதமாக இருந்தது. தன்னையும்
தன் குழந்தையையும் நேசிக்கும் அன்பான கணவன் என்ற கர்வமும் வந்தது.
“சுஜா…. தேங்க்ஸ். லவ்லி பேபி. நீ கொடுத்த பரிசு. நான் அப்பான்னு பிரமோஷன் கிடைச்ச
பெருமையில் இருக்கேன். லவ்லி.. லவ்லி” அவன் பெருமிதப்பட்டது ஸ்பஷ்டமாக தெரிந்தது.
குட்டி விழிகளில் மினுமினுப்பு தெரிய, குழந்தை இதழ் பிரித்து முறுவலித்து, அவர்களைப்
பெற்றோர்களாக அடைய கொடுத்து வைத்திருப்பதை அறிவுறுத்தியது. எல்லாமே இனிமை
என்றால், அப்புறம் வெறுமை என்ற சொல் அகராதியில் இருக்குமா?
இப்பொழுது கார் வேகமெடுத்து ஓடிற்று. வெறுமை படர்ந்த அந்த நாள், அவள் நியாபகத்துக்கு
வந்தது. ஆர்த்திக்கு மூன்று வயதான போது, அந்த வெறுமை ஊர்ந்து வந்து, அந்த வீட்டில்
டெண்ட அடித்தது. கலக்கத்துடன் கேட்டாள் சுஜா. “நிஜமாகத்தான் சொல்றீங்களா?”
“ம்ம்ம்……”
“வேறு வழியே இல்லையா?”
“இது என் ப்ரெஸ்டிஜ் இஷ்யூ சுஜா. என்னுடய ஜூனியரை பிரமோட் பண்ணிட்டாங்க.”
என்றான் வருத்தமாக. சுஜாவுக்கு தாங்கவில்லை. “அதுக்காக நான் பிரியணுமா?”
“பிரிவு என்பது மனசுக்கு இல்லை சுஜா.”
சோர்வு தாக்க அவள் பதில் பேசாதிருந்தாள்.
“நான் செட்டில் ஆனதும் உன்னையும் ஆர்த்தியையும் அழைத்துக் கொள்வேன். சரியா.?”
தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அவள் வழக்காட ஒன்றுமில்லை. மனதை திடப்படுத்துவது
அத்தனை சுலபமான விஷமாக இருக்கவில்லை. முணுக்கென்றால் அவன் தோள் சாய்ந்து
பலம் தேடுகிற சுலப வாழ்க்கை வாழ்ந்தவள், இனி தனக்குத் தானே பலமாக வாழக் கற்றுக்
கொள்கிற புதிய திருப்பத்தை வாழ்க்கை கொடுக்கும் என்று அவள் நினைக்கவே இல்லை.
அவளால் முடியுமா? திக்கென்று உணர்ந்தாள்.
அவனை விமான நிலையத்தில் வந்து வழி அனுப்பிய போது அவள் அழவில்லை. புற அழுகை
நின்றுவிட்டிருந்தது. ஆனால் மனதின் அழுகை நிசப்த வலியாக மாறி இதயத்தை சுட்டது.
அவன் துபாய் சென்றுவிட்டான். அதற்கு பிறகு ஒரு வெறுமை கருநிழலாக மனதில் படிந்தது.
லேசாக தூற ஆரம்பித்திருந்தது. சுஜா வைப்பரை இயக்கினாள். அது மழைத் துளிகளைத்
துடைத்து வழி காட்டியது. தொலைபேசி என்கிற வைப்பர் மூலமாக சுஜா தன் பிரிவுத் துயரை
துடைக்க கற்றுக் கொண்டாள். லேசான வெளிச்சத்தில் நடக்க துவங்கும் அனுபவம் போல.
“துபையில் இப்பொழுது வெயில் சுட்டெறிக்கிறது. அடுப்பில் இருப்பது போல் சூடு. ஆனாள்
கார், வீடு எல்லாம் ஏ. சி குளிர்ச்சியில் இருப்பதால் வெயிலின் சூடு தணிக்க பழகி விட்டோம்.”
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு புதுச் செய்தியோடு ரசனையும் காதலுமாக
பேசுவான் ரமேஷ். சுஜா அந்த வெள்ளிக்கிழைமைகளில் தான் உயிர் வாழ்ந்தாள்.
முதலில் அப்பா ஊருக்குப் போனதும் ஆர்த்தி கேட்டாள்…..மூன்று வயது மழலைக் குரலில்
“அப்பா எங்கம்மா போறாங்க? வானத்தில் சின்னதா தெரியுது விமானம்.”
“ஆர்த்தி ஜாக் அண்ட் த பீன் ஸ்டாக் கதை படிச்சே இல்லே.? அதிலே பீன் ஸ்டாக்கிலே ஏறி
ஜாக் வானத்திலே உள்ள ஜயண்ட் வீட்டுக்கு போனா மாதிரி.. அப்பா ஒரு அட்வென்சர்
போயிருக்கா.”
“அய்யய்யோ…. ஜயண்ட் வீட்டுக்கா?”
“இல்லே. அது ஒரு தேவதையோட உலகம். அழகான ரோஜாத் தோட்டம் இருக்கும். மயில்கள்
பேசும். கிளிகள் கொஞ்சும்….” என்று உடான்ஸ் விட்டாள் குழந்தையின் பயம் போக்க.
“ஐ……நாமும் போலாமா?”
“ம்….. கட்டாயம் போலாம். நீ சமத்தா பள்ளிக்குப் போணும். அம்மா சொல் பேச்சு கேக்கணும்.
அப்ப தான் அப்பா வந்து கூட்டிப் போவார்.”
“சமத்தா இருக்கேன்மா….”
குழந்தை கைதட்டி சிரித்தது. முகமே வானவில்ல ஆயிற்று. இந்தப் பிரிவும் வானவில் போல்
மறைந்துவிடாதா என்று ஏங்கினாள். மனம் மறுபடியும் நிகழ் காலத்துக்கு வந்தது.
தூறல் நின்று விட்டது. அது செல்லத் தூறல். கோயம்பத்தூர் மண்ணுக்கே உரித்தானது.
உடுமலைபேட்டை வழியாக கார் வழுக்கி கொண்டு போனது.
“சுஜா மேடம்……கோயம்பத்தூரில் ஆரம்பித்திருக்கும் நம் புதிய கிளைக்கு நீங்க நேரில் சென்று
செக் பண்ணிவிட்டு வரணும். பல்காக வந்திருக்கும் புதிய ரக செல்போன்களின் விலைப்
பட்டியலை நிர்ணயித்து, அங்கு சேல்ஸ் ஆவதற்கு டிப்ஸ் கொடுத்துவிட்டு, வரவு செலவு
கணக்கு எழுத்திட்டு வரணும்.” என்று சீப் எக்ஸிகியூடிவ் கட்டளையிட்டவுடன், கார் எடுத்துக்
கொண்டு கிளம்பிவிட்டாள். சுஜாவிற்கு இந்த வேலையை ஏற்பாடு செய்ததே ரமேஷ் தான்.
“சுஜா.. நானில்லாமல் நீ வாடிப் போயிடுவே. அதை ஓரளவு மறக்க நீ வேலைக்குப் போவது
நல்லது.” என்றான். ஒரு வெளிக்கிழமை அவன் நண்பன் வேணு வந்தான்.
“சுஜா மேடம்…. சார் சொன்னார், நீங்க எப்பன்னு சொன்னா அழைச்சிட்டுப் போறேன். என்
தம்பியோட கம்பனி தான் அது.”
கண்ணியம் காட்டி கேட்டு நின்றான். நண்பன் என்று சொல்லிக் கொண்டு சார் என்கிறானே
என்று ஆச்சரியம் ஏற்பட்டது. அவள் எம். எஸ். சி படித்திருந்தாள். வீட்டில் கம்ப்யூட்டர்
இயக்கத் தெரிந்திருந்தாள். வேலைக்குப் போக வேண்டும் என்று அவள் கணக்கு போட்டு
படித்ததில்லை. இபொழுது இது புது அனுபவமாகத் தான் இருக்கப் போகிறது. அவள்
வேலையில் சேர்ந்து விட்டாள். அலுவலகம் செல்ல ஆரம்பித்ததும் ஏதோ புது உலகத்திற்குள்
அடி எடுத்து வைத்த மாதிரி இருந்தது. பிரிவுத் துயர் மறக்க மறந்தாயிற்று. ரமேஷ் சென்று
இரெண்டு வருடம் ஆகிவிட்டது.
ஒரு நாள் பேசுகையில் “எப்போ அழச்சிட்டுப் போகப் போறீங்க ரமேஷ்.?” என்று கேட்டாள்.
“இப்போ கம்பனி நிலைமை சரயில்லை சுஜா. சற்று பொறு வேறொரு ஷேக் சார்ஜ் எடுத்துக்
கொள்ள இருக்கார்…..அவர் பார்த்து சீர் பண்ண வேண்டும். பிறகு தான் எதுவும் சொல்ல
முடியும்.” என்றான்.
“எப்ப சரியாகும்.?”
“ஆறு மாசமாக்கலாம். வேலை போயிட்டா கஷ்டம் சுஜா. அங்கு அற்பது லட்சத்துக்கு வீடு
வாங்கியாச்சு. கடன் அடைக்க வேண்டாமா.?” இந்த பதில் அவளைக் கட்டிப் போட்டது.
மதுரையில் கூடல்நகரில் தனி வீடு. வாங்கியிருந்தார்கள். அவள் பேரில் தான் வீடு
பதிவாகியிருந்தது. அவள் தான் லோன் போட்டு முன் பணமாக அஞ்சு லட்சம் கட்டியிருந்தாள்.
அபாபடி இப்படி என்று எழுபகு லட்சத்தை தொட்டு நின்றது. மீதி பணத்துக்கு ரமேஷ்
ரொக்கமாக அனுப்பிவிட்டான்.
“பர்சனல் லோன் எடுத்து இங்குள்ள வங்கியில் கட்டி வருகிறேன். இப்போ வேலை
போய்விட்டால் வீட்டை விற்க வேண்டிவரும்.”
உண்மை தான் ஏ. சி செய்யப்பட்ட இரெண்டு அறைகள். பின்னால் அழகான தோட்டம். முன்
பக்கமும் விரிந்திருந்த தோட்டத்தில், போர்டிகோ உடைய அழகான வீடு. இக்கட்டான
சூழ்நிலையில் பொறுமையுடன் இருப்பது தான் ஒரே வழி. அவள் வேலைக்குப் போவதால்
குழந்தையை பார்த்துக் கொள்ள ஒரு ஆயாவை அமர்த்தியிருந்தாள்.
“புரிகிறது.” என்றாள் சோர்வுடன்.
“என் செலவிற்கும், வீட்டுக் கடன் அடைப்பதற்கும் என் சம்பளம் சரியாகப் போகிறது….
அதனால்….” என்று இழுத்தான்.
“கவலைப்படாதேங்க. நான் தான் நாற்பதாயிரம் சம்பளம் வாங்கறேனே. வேறு பெரிய செலவு
இல்லை.. நானே வீட்டுச் செலவை பார்த்துக்கறேன். கம்பனி கார் கொடுத்திருக்கு. ஒண்ணும்
பிரச்சனை இல்லே. நீங்க பணம் அனுப்ப வேண்டாம்.” என்று சொன்னாள்.
“தேங்க்ஸ் சுஜா. இருந்தாலும் சங்கடமா இருக்கு. உன் தலையில் எல்லாம் கட்டுகிறேனோ
என்று.”
“அதெல்லாமில்லை. நீங்க வேறு நான் வேறா?”
ஆறு மாசம் என்றது ஒரு வருடமாக நீண்டு விட்டது. கடைசியில் போன வாரம் தான் “நான்
அடுத்த மாசம் வருகிறேன் சுஜா. நேரில் பேசுவோம்.” என்று சொல்லியிருந்தான். அவள் மனசு
ரெக்கை கட்டி பறந்தது. ஒரு மாசம் ஒரு யுகம் போல் நீள்கிறது.
கார் திண்டுக்கல்லை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த சமயம் செல் அடித்தது. காரை ஓரம்
கட்டிவிட்டுப் பட்டனை அழுத்தினாள்.
“அம்மா.. அம்மா எங்கம்மா இருக்கீங்க? சீக்கிரம் வாங்கம்மா.” செல்லம்மா ஆயா
படபடப்புடன் பேசினாள்.
“ஆயா என்னாச்சு? ஏன் பதற்றமா பேசறீங்க.?”
“உடம்பெல்லாம் பதறுதும்மா. பாப்பா ஒரு கண்டத்திலிருந்து தப்பியிருக்கு.”
“அய்யோ…. அழாம விவரம் சொல்லுங்க ஆயா. பயமாயிருக்கு. ஆர்த்தி எப்படி இருக்கா?”
“பயப்படாதீங்கம்மா. பாப்பாவுக்கு ஒண்ணுமில்லே. ஆனா பாப்பா ஸ்கூலில் தீ விபத்து.
பாப்பா கிளாஸ் புள்ளைங்க அத்தனை பேரும் ஆஸ்பத்திரியிலே. பாப்பாவை ஒரு அய்யா
மின்னல் வேகத்தில் காப்பாத்தலேன்னா நம்ம பாப்பாவும்……” மேலே சொல்ல முடியாமல்
ஆயா துக்கித்து ஆழ ஆரம்பித்தாள். சுஜா துல்லியமாக அதிர்ந்தாள். மனசை யாரோ பிசைந்து
புரட்டி போட்டாற் போல் ஆயாசமாக இருந்தது.
ஆர்த்திக்கி ஒன்றுமில்லை என்று மனசு துயரிலிருந்து விடுபட்டாலும், மற்ற குழந்தைகளின் கதி
நினைத்து படபடப்பாக இருந்தது. உயர் ராகமான பள்ளியாச்சே. எப்படி விபத்து நேர்ந்ததோ?
“சரி ஆயா. ஆரத்தியை பத்திரமாக பார்த்துக்கோங்க. நான் இன்னும் ஒரு மணி நேரத்தில்
வந்துவிடுவேன்.” சுஜா செல்லை அமர்த்தினாள். காரை விரட்டிக் கொண்டு முக்கால் மணி
நேரத்தில் வீடு வந்து சேர்ந்தாள்.
“ஆர்த்தி….” இவள் கூப்பிட அம்மா என்று கூவி ஓடி வந்தாள். சிறுமி. உயிரே வந்தது போல்
இருந்தது. மகளை தொட்டுத் தொட்டுப் பார்த்தாள். தலை முதல் கால வரை தடவிக்
கொடுத்தாள். அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தால்? அவள் உயிரோடு இருந்து என்ன
பயன்? வாடிய முகத்துடன் ஆர்த்தி சோர்ந்து இருந்தாள்.
“அம்மா….நான் என் பிரெண்ட்ஸ் ஜான்வி, வித்யா….உமா எல்லோரையும்
பார்க்கணும்மா…..பிளீஸ்மா. ஆஸ்பத்திரிக்கு போகலாம்.”
எந்த மருத்துவ மனை என்று தெரிந்துகொண்டு சுஜா மகளுடன் கிளம்பினாள்.
மருத்துவமனையில் பெற்றோர் கூட்டம் அழுகையும் கதறலுமாக இருந்தது. எந்தக்
குழந்தையையும் யாரும் பார்க்க அனுமதி இல்லை. அவளுக்கு தெரிந்த பெற்றோரிடம் சென்று
ஆறுதல் கூறினாள்.
“ஜான்வி அம்மா….தைரியமா இருங்க. ஜான்விக்கு ஒன்னுமாகாது…” இவள் தோளில் சாயிந்து
கதறினாள் ஜான்வியின் அம்மா. முப்பது குழந்தைகளில் ரெண்டு குழந்தைகள்
கவலைக்கிடம்…எட்டுக் குழந்தைகள் பலமான தீக்காயங்களுடன் போராடுகின்றன. மீதி
குழந்தைகள் லேசான தீக்காயங்களுடன் தப்பின. தீ விபத்து ஏற்பட்ட விதம் சொன்னார்கள்.
ஒரு புதிய வகுப்பறை கட்டி முடிக்காத நிலையில் இருந்தது. அதில் பத்து நிமிடம் நின்று,
குழந்தைகளுக்கு தைத்து முடிக்கபட்ட ஸ்போர்ட்ஸ் யூனிபாரம் கொடுத்துக் கொண்டிருந்தாள்
வினயா டீச்சர்.
ரெண்டு நிமிடத்தில் எல்லோரும் அகலப் போகிற நேரம், மடமடவென்று கட்டிட கட்டைகளில்
பரவிய தீ, கூரையுடன் தரையில் சரியும் அபாயத்தில் இருந்தது. தீயின் முதல் ஸ்பார்க்
கண்டவுடன் “ஓடிடுங்க……தீ….தீ..” என்று அலறியபடி வந்த ஒரு வாலிபன், ஆரத்தியை
தூக்கிக் கொண்டு வெளியே ஓடி விட்டானாம். அவன் மட்டும் எச்சரிக்காவிட்டால் மொத்தக்
குழந்தைகளும் தீயில் கருகி இருப்பார்கள். ஆரத்தியை இறக்கி விட்டு விட்டு பயர் சரவீசுக்கு
ஃபோன் செய்ததோடு, மற்ற குழந்தைகளையும் காப்பாற்ற உதவினானாம்.
மத்தாப்பு கொளுத்திய நான்கு வயது, கொத்தனாரின் மகன், கொடியில் காயிந்து
கொண்டிருந்த, தன் எட்டு மாத தம்பியின் அலசி காயப் போட்டிருந்த துணிகளில்
விளையாட்டாக கம்பி மத்தாப்பை, அதன் விபரீதம் புரியாமல் வைத்திருக்கிறான். மேலே
ஓலை வேயிந்திருந்த புதிய கட்டிட வகுப்பில் உடனே தீ பற்றிக் கொண்டிருக்கிறது.
இரவு பத்து மணிக்கு மனகிலேசமும் சோர்வுமாக வீடு வந்து சேர்ந்தாள் சுஜா. ரெண்டு
குழந்தைகள் இறந்துவிட்டன. அந்த பெற்றோர் கதறிய கதறல் தாங்க முடியாததாக இருந்தது.
ஆர்த்தி தன் தோழிகள் இருவர் இறந்தது தாங்காமல் இன்னமும் விம்முகிறாள். அவளை
சமாதானப்படுத்தி தூங்க வைத்த போது மணி பன்னிரெண்டை தாண்டிவிட்டது. அவள்
தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள். எத்தனை கோரமான இரவு அது! அருகில்
கணவன் இல்லாதது பெரும் தவிப்பாக இருந்தது. இதை அவள் தனியாக தாங்கிக் கொள்ளத்
தான் வேண்டும்.
மறுநாள் விடுப்பு சொல்லிவிட்டு ஆர்த்திக்கு ஆறுதலாக வீட்டிலிருந்தாள் சுஜா. பால் காய்ச்சி
காப்பி போட்டுக் கொண்டு வந்த ஆயா “சுஜாம்மா….அந்த தம்பிக்கு நன்றி சொல்ல
வேண்டாமா?” என்று நினைவு படுத்தினாள். ஆஸ்பத்திரியில் நடந்த களேபரத்தில் ஃபோன்
செய்து நன்றி சொல்ல வேண்டும் என்பது மறந்து போனது. ஆயா அவனுடைய பெயர்,
ஃபோன் நம்பர் எழுதி வைத்திருந்தாள். ஸ்ரீதரன்…தெய்வம் போல் வந்து காப்பாற்றியவன்.
சுஜா ஃபோன் செய்தாள்.
“ஹலோ….” ஆணின் கரகர குரல்.
“சார்….நான் ஆர்த்தியின் அம்மா சுஜா பேசறேன்.” என்றாள்.
“எந்த ஆர்த்தி?”
“நீங்க தீ விபத்திலிருந்து காப்பாத்தி கொடுத்தீங்களே.”
“நன்றி சொல்லணும்னு இப்ப தான் தோணுச்சா.?”
“ஸாரி சார்….வந்து….”
“என் விலாசம் நோட் பண்ணிக்குங்க. நேரில் வந்து நன்றி சொல்லுங்க…..மிஸஸ் சுஜா ரமேஷ்.
அது தான் நன்றி சொல்லும் விதம்.” ஃபோன் துன்டிக்கப்பட்டது. ஏன் வில்லன் மாதிரி
பேசறான்? புதிராக இருந்தது. சுஜா ரமேஷ் என்று தெளிவாக சொல்கிறான்.. எப்படி
தெரிந்தது?
வானம் அந்தி சிவப்பிலிருந்த நேரம் சுஜா அவன் பங்களா வாசல் முன் காரை நிறுத்தினாள்.
காவலாளி கதவு திறக்க காரை உள்ளே செலுத்தினாள்.
“வாங்க மேடம்……யு ஆர் வெல்கம்.” நின்று வரவேற்றவன் ஆறடிக்கு
குறையாமல் இருந்தான். வயது முப்பதை தாண்டி ஒன்று இரண்டு வருடம் இருக்கலாம். நல்ல
நிறமுடன், கம்பீரமாக இருந்தான்.
“நான் ஆரத்தியோட அம்மா.”
“மிஸஸ் சுஜா ரமேஷ். தெரியும். எத்தனை தடவை பார்த்திருக்கேன்..”
“சார்….ஸாரி. எனக்கு பார்த்த நியாபகம் இல்லயே.” என்றாள் குழப்பத்துடன்.
“அதுக்காக பார்த்த நியாபகம் இல்லையோ என்றா பாட முடியும்.? உக்காருங்க.”
“பரவாயில்லை. என் மகளை காப்பாத்தினதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.” கண்களில் நீருடன்
கைகூப்பினாள். “என்ன கைமாறு செய்யப் போறேன்…? கோடி தேங்க்ஸ்.” என்றாள் நன்றி
குரலில் மிதக்க.
அவன் சிரித்தான். அதில் கேலி இருந்தது.
“நான் கேட்கிற கைமாறு செய்வீங்களா.?”
“கண்டிப்பா….சொல்லுங்க நான் என்ன செய்யணும்.?”
“அப்ப ரொம்ப சிம்பிள். உங்க கணவரை டிவோர்ஸ் பண்ணிட்டு மிஸஸ் சுஜா ஸ்ரீதர் ஆகணும்.
செய்வீங்களா.?”
அதிர்ச்சியில் பேச்சே வரமால் விக்கித்து நின்றாள் சுஜா.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Happpppaaaaaaaa oru episode ye meratti vittutinga ponga… Super… Waiting for ur update… All the best for the upcoming stories, sis…..
Thankyou
Wow start itself Sema speed and Sema twist. Very intresting sis.