Skip to content
Home » கூடாவொழுக்கம்-28

கூடாவொழுக்கம்-28

அறத்துபால் | துறவறவியல்| கூடாவொழுக்கம்-28

குறள்:271

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

வஞ்சமனம்‌ உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில்‌ கலந்து நிற்கும்‌ ஐந்து பூதங்களும்‌ கண்டு தம்முள்‌ சிரிக்கும்‌.

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  
குறள்:272

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்

தன்‌ மனம்‌ தான்‌ அறிந்த குற்றத்தில்‌ தங்குமானால்‌ வானத்தைப்போல்‌ உயர்ந்துள்ள தவக்கோலம்‌, ஒருவனுக்கு என்ன பயன்‌ செய்யும்‌?

குறள்:273

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

மனத்தை அடக்கும்‌ வல்லமை இல்லாதவன்‌ மேற்கொண்ட வலிய தவக்கோலம்‌, பசு புலியின்‌ தோலைப்‌ போர்த்திக்‌ கொண்டு பயிரை மேய்ந்தாற்‌ போன்றது.

குறள்:274

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

தவக்கோலத்தில்‌ மறைந்துகொண்டு தவம்‌ அல்லாத தீய செயல்களைச்‌ செய்தல்‌, புதரில்‌ மறைந்து வேடன்‌ பறவைகளை வலைவிசிப்‌ பிடித்தலைப்‌ போன்றது.

குறள்:275

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்

‘பற்றுக்களைத்‌ துறந்தோம்‌’ என்று சொல்கின்றவரின்‌ பொய்யொழுக்கம்‌, என்ன செய்தோம்‌ என்ன செய்தோம்‌’ என்று வருந்தும்படியான துன்பம்‌ பலவும்‌ தரும்‌.

குறள்:276

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்

மனத்தில்‌ பற்றுக்களைத்‌ துறக்காமல்‌, துறந்தவரைப்‌ போல்‌ வஞ்சனை செய்து வாழ்கின்றவர்‌ போல்‌ இரக்கமற்றவர்‌ வேறு எவரும்‌ இல்லை.

குறள்:277

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து

புறத்தில்‌ குன்றிமணிபோல்‌ செம்மையானவராய்க்‌ காணப்பட்டாராயினும்‌, அகத்தில்‌ குன்றிமணியின்‌ மூக்குப்போல்‌ கருத்திருப்பவர்‌ உலகில்‌ உண்டு.

குறள்:278

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்

மனத்தில்‌ மாசு இருக்கத்‌ தவத்தால்‌ மாண்பு பெற்றவரைப்‌ போல நீரில்‌ மூழ்கி மறைந்து நடக்கும்‌ வஞ்சனை உடைய மாந்தர்‌ உலகில்‌ பலர்‌ உள்ளனர்‌.

குறள்:279

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்

நேராகத்‌ தோன்றினும்‌ அம்பு கொடியது; வளைவுடன்‌ தோன்றினாலும்‌ யாழின்‌ கொம்பு நன்மையானது; மக்களின்‌ பண்புகளையும்‌ செயல்‌ வகையால்‌ உணர்ந்து கொள்ள வேண்டும்‌.

குறள்:280

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்

உலகம்‌ பழிக்கும்‌ தியொழுக்கத்தை விட்டுவிட்டால்‌, மொட்டை அடித்தலும்‌ சடைவளர்த்தலுமாகிய புறக்‌ கோலங்களும்‌ வேண்டா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *