Skip to content
Home » தீரனின் தென்றல்-22

தீரனின் தென்றல்-22

தீரனின் தென்றல். – 22

Thank you for reading this post, don't forget to subscribe!

தென்றலை பற்றி பூரணி கூறியதை சொல்லி “என்னடா பண்ணி வச்சிருக்க என் தங்கச்சி வாழ்க்கையை…. ஏன்டா சின்ன வயசுல இருந்து ரங்கநாதன் அப்பாவை பார்க்குற… அவர் தானே உன்னை வளர்த்தாரு. ஆனா நீ அவரோட அன்பை சரியா புரிஞ்சுக்காம பண்ண தப்பு என் தங்கச்சி இன்னைக்கு கல்யாணம் ஆகாம வயித்துல குழந்தையோட… பாவம் டா அவ… கையில வச்சு தாங்குன அப்பாவும் இல்லாம அவ உயிரா நினைச்சு வாழ்ந்த நீயும் ஏமாத்திட்ட ன்ற நினைப்புல வயித்துல குழந்தையோட… எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பா…” என்று குமார் கோபமாக தீரனின் சட்டையை பிடித்து உலுக்க

ஆதீரனோ தென்றல் கருவுற்றிருக்கிறாள் என்று தெரிந்த போதே ஸ்தம்பித்து நின்றிருந்தான். பூரணியை சோதித்து கொண்டு இருக்கும் அறையில் இருந்து வெளியே வந்த செவிலியர் “ஹலோ இது ஹாஸ்பிடல்.. இங்க இப்படி எல்லாம் கத்தக் கூடாது” என்று அதட்ட

“நர்ஸ்… அம்மா எப்படி இருக்காங்க?” குமார் தான் கேட்க

“டாக்டர் வந்து சொல்வாங்க சார்… கொஞ்சம் அமைதியா இருங்க…” என்று கூறிவிட்டு செல்ல மருத்துவர்கள் வெளியே வர காத்திருந்தனர் குமாரும் ஆதீரனும்.

வெளியே வந்த மருத்துவரிடம் இருவரும் வேகமாக அருகில் வந்து கேட்க

“அவங்களுக்கு  பீபீ ரொம்ப அதிகமா ஆகிருக்கு… அது மட்டும் இல்ல ரொம்ப ஸ்ட்ரெஸ் ல இருக்காங்க அதனால அவங்க இடது பக்கம் கையும் காலும் செயலிழந்து போயிடுச்சு…” என்று மருத்துவர் சொல்ல குமாரும் ஆதீரனும் அதிர்ந்து போயினர்.

“டாக்டர் அப்போ அம்மா…?” குமார் கவலையாக கேட்க

“இனி அவங்க எழுந்து நடக்க வாய்ப்பு ரொம்ப கம்மி.. பட் முடிஞ்ச அளவுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணி ட்ரை பண்ணலாம்… அவங்களுக்கு நோய் உடம்புல மட்டும் இல்ல மனசுலயும் தான்…” என்று சொல்லி விட்டு மருத்துவர் அகன்று விட நொறுங்கி போய் அங்கிருந்த இருக்கையில் பொத்தென்று விழுந்தான் ஆதீரன்.

“ஆதீரா…” என்று குமார் அவன் தோள் தொட

“என்னால தான் இல்லையா குமாரு… மாமா குடும்பத்தோட ஊரை விட்டு போகவும் தென்றலும் அத்தையும் இன்னைக்கு யாரும் இல்லாம நிக்கவும் இதோ..‌ இப்போ அம்மா முடியாம படுத்திருக்கவும் நான் தான் காரணம் இல்லையா குமாரு…” என்று ஆதீரன் உடைந்து அழ அவனை தேற்ற தெரியாமல் உடன் சேர்ந்து கண்ணீர் விட்டான் குமார்.

“டேய்… குமாரு… அம்மா தென்றலை எங்க பார்த்தாங்க னு உனக்கு சொன்னாங்களா டா.. தென்றல் வந்தா அம்மா கண்டிப்பா குணமாகிடுவாங்க…” என்று ஆதீரன் ஏதோ ஒரு ஆர்வத்தோடு கேட்க குமாரும் “எதாவது நல்லது நடந்தா சரி தான்” என்று நம்பிக்கையில் தந்து விட்டான் முகவரியை…

அன்று இரவே பஸ் ஏறிய ஆதீரன் காலையில் தென்றல் கதவை திறக்கும் போது அவள் வீட்டு வாசலில் நிற்க ஏகத்திற்கும் கடுப்பானாள்.

பல மாதங்கள் கழித்து தன் தென்றல்… கருவுற்றிருக்கும் பெண்ணிற்கு உண்டான பொலிவு முகத்தில் இல்லாமல் வாடிய கொடி போல இருந்தவளை கண்டு மனம் வெம்பினான் தீரன்.

அதுவரை இயல்பாக இருந்த தென்றலுக்கு எங்கிருந்து தான் வந்ததோ கோபமும் வெறுப்பும்… அப்பட்டமாக அவள் முகத்தில் பிரதிபலித்தது.

“தென்றல்… தென்னூ…” ஆசையாக அழைத்த படி முன் செல்ல

“நில்லு அங்கேயே…” என்றாள் வெறுப்பை முகத்தில் காட்டி…

“எதுக்கு வந்த இங்க..‌ அங்க ஊர்ல போகாத மானத்தை வாங்க இங்க தேடி வந்தியா?” என்று கோபமாக கேட்க நொந்து போய் நின்றிருந்தான் ஆதீரன்.

“தென்றல் ஏன்டி இப்படி பேசுற? கொஞ்சம் அமைதியா பேசு….” என்று பொன்னி அவளை அமைதி படுத்த முயல

“அமைதியா வா.. இவன்கிட்டயா? அம்மா இவனோட அப்பா இறந்ததுக்கு நம்ம அப்பா காரணம் னு அவரை பழிவாங்க என் காதலை பயன்படுத்தி இருக்கான் மா… இவனை நம்புன பாவத்துக்கு என் அப்பா சாவுக்கு நானே காரணமா மாறிட்டேன்…” உணர்ச்சி வேகத்தில் அவளுக்கு மூச்சு வாங்க ஆதீரன் பதறினான்.

“ஏய்… இதுக்கு தான் சொல்றேன் அமைதியா இரு தென்றல்…” என்று அவளை அடக்கிய “தம்பி… அதான் எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சே இவளை உணர்ச்சி வசப்படக்கூடாது னு டாக்டர் சொல்லிருக்காங்க மதினி கிட்ட கூட சொன்னேனே… அப்பறம் ஏன் தம்பி வந்து அவளை கஷ்டப்படுத்துறீங்க… “

இப்போதைக்கு தென்றலின் உடல்நிலை மட்டுமே முக்கியம் என்று கருதி பொன்னி பேச

“ஐயோ அத்தை… தென்றலை நானும் கஷ்டப்படுத்த நினைக்கவே இல்ல அத்தை… ஆனா, அம்மா… அம்மா ரொம்ப முடியாம ஹாஸ்பிடல்ல இருக்காங்க அத்தை… தென்றல் வந்தா அவங்க குணமாக வாய்ப்பு இருக்கு. ப்ளீஸ் அத்தை… எனக்காக இல்ல அம்மாக்காக…” என்று கையெடுத்து கும்பிட்டு மன்றாடினான் ஆதீரன்.

பூரணிக்கு உடம்பு சரியில்லை என்று ஆதீரன் சொன்னதும் திண்ணையில் உட்கார்ந்து இருந்த தென்றல் துணுக்குற்று நிமிர்ந்து பார்த்தாள். ஆனால், இதை காரணமாக வைத்து தீரனோடு ஊருக்கு செல்ல விருப்பம் இல்லை அவளுக்கு…

“மதினிக்கு என்னாச்சு ப்பா? இரண்டு நாள் முன்னாடி தானே வந்தாங்க… என்னாச்சு இப்போ எப்படி இருக்காங்க?” பொன்னி கேட்க

“அம்மாக்கு இடது பக்க கையும் காலும் செயலிழந்து போச்சு அத்தை… ஹாஸ்பிடல் ல இருக்காங்க…” கண்ணீரோடு சொல்ல அத்தையை பற்றி கவலை வரத்தான் செய்தது தென்றலுக்கு… ஆனால் என்ன ஆனாலும் தீரனை மன்னிக்க மட்டும் தயாராக இல்லை தென்றல்.

“என்ன? அத்தையை காரணம் காட்டி என் மனசை மாத்திட ப்ளானா மிஸ்டர் ஆதீரன்?” எழுந்து நின்று மார்பின் குறுக்கே கை கட்டி தென்றல் கேட்க அதிர்ந்து போனான் ஆதீரன்.

“ஏய்… என்னடி பேசுற?” அதிர்ந்து போய் கேட்க கை உயர்த்தி ‘நிறுத்து’ என்றாள்…

“இதோ பாரு அத்தை மட்டும் இல்ல… இனி எந்த சாக்கும் சொல்லி நீ என்னை தேடி வரக்கூடாது… வரவே கூடாது… என் வாழ்க்கையிலயும் என் குழந்தை வாழ்க்கையிலும் இனிமே நீ இல்ல… இனி எப்பவும் என்னையோ இல்ல குழந்தையையோ நீ தேடி வரக்கூடாது… இது என் குழந்தை மேல சத்தியம்…” என்று தென்றல் கூற பொன்னி ஆதீரன் இருவரும் அதிர்ந்தனர்.

” ஒருவேளை நீ எங்களை தேடி வந்தா அது தான் நாங்க உயிரோடு இருக்கிற கடைசி நாளா இருக்கும்” கோபமாக சூளுரைப்பது போல பேச

“தென்றல்?” அதிர்ச்சியாக இருவரும் ஒரே நேரத்தில் அழைக்க எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டாள் தென்றல்.

“தம்பி… அவ அப்பா அவளால தான் இறந்துட்டாரு னு ரொம்ப வருத்ததுல இருக்கா அதான் இப்படி ஏதேதோ பேசிட்டு போறா.. எல்லாம் ஒரு நாள் சரியாகும் தம்பி… நான் கொஞ்சம் மெதுவா அவகிட்ட பேசுறேன்… மதினியை பத்திரமா பார்த்துக்கோங்க” என்று பொன்னி கூறிக் கொண்டு இருக்க

“அம்மா கண்டவங்க கிட்ட உனக்கு என்ன பேச்சு? வா உள்ளே…” என்று தென்றல் பொன்னியை அழைக்க “நீங்க போங்க தம்பி… மதினியை பாருங்க” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார் பொன்னி.

தீரன் வேலையை விடுப்பு சொல்லிவிட்டு தாய் அருகில் இருந்து கவனித்துக் கொள்ள அதை ஏற்றுக் கொண்டாலும் எதுவும் பேசவே இல்லை தீரனோடு.

ஆனால் ஆதீரன் தென்றலை பார்த்து வந்த பிறகு அவன் ஊர் வந்து சேரும் முன்பே தென்றல் பூரணிக்கு அலைபேசியில் அழைத்து பேசி இருக்கிறாள் என்று ரூபிணி மூலம் தான் தெரிந்து கொண்டான் ஆதீரன்.

என்னதான் தன் மீது கோபம் இருந்தாலும் தாயோடு தென்றல் பேசியது மகிழ்ச்சியே… ஆனால் பூரணி உடல்நிலை மிகவும் மோசமாக ஒரே மாதத்தில் பாதி உயிராக போனவருக்கு தன் மரணம் கண் முன்னே தெரிய வேண்டுமென்றே மருந்து மாத்திரை தவிர்த்தார்.

அன்று இறுதியாக ஆதீரனை வெளியே செல்ல சொல்லி விட்டு குமாரோடு நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தவருக்கு மூச்சு அதிகமாக திணற மருத்துவர்களை அழைத்தான் குமார்.

மருத்துவர்கள் பூரணியை சோதிக்க வெளியே வந்த குமாரிடம் “அம்மா என்ன சொன்னாங்க?” என்று ஆதீரன் ஆசையாக கேட்க அவன் முகத்தை பார்க்க தயங்கிய குமார்

“அம்மா… அம்மா நீ கொள்ளி வைக்க வேண்டாம் னு சொன்னாங்க…” குமார் தலை தொங்க கூற விரக்தியாக சிரித்துக் கொண்டான் ஆதீரன்.

அதுமட்டுமே அப்போதைக்கு அவனால் முடியும்… “டேய் ஆதீரா… அம்மா ஏன் சொன்னாங்க அப்படினா…” என்று குமார் ஏதோ சொல்ல வர தீரன் அதை தடுக்க மருத்துவர்கள் வெளியே வர சரியாக இருந்தது.

வெளியே வந்த மருத்துவர்கள் முகம் அத்தனை மகிழ்வாக இல்லை… ‘தங்களால் இயன்ற அளவுக்கு போராடியும் உன் அம்மாவை மீட்க முடியவில்லை’ என்று கையை விரித்து விட்டு செல்ல நம்ப முடியாது நின்ற ஆதீரன் தாயின் உடலை தலை வரை மூடிக் கொண்டு வருவதை பார்த்து உடைந்து கதற துவங்கினான்.

குமாரும் ஆதீரனும் தேற்றுவார் இன்றி அழுது கொண்டு இருக்க உடன் இருந்த இன்னொரு உறவினர் மூலம் அனைவருக்கும் தகவல் சொல்லப்பட்டது. என்ன இருந்தாலும் தாய் கடைசியாக சொன்னது என்று தீரன் இறுதி காரியங்கள் எதுவும் செய்யவில்லை… குமார் தான் முடித்தான்.

தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள் அனைத்தும் நிகழ்ந்து முடிந்து விட மொத்தமாக உருமாறிப் போனான் ஆதீரன்.

தன்னைச் சுற்றி சுற்றி காதலித்த தென்றல் உடன் இல்லை… தாயும் இப்போது இல்லை தோழனாவது உடன் இருப்பான் என்று நினைத்தால் அவனும் தாயின் இறுதி காரியங்கள் முடிந்த உடனேயே தென்றலை பார்க்க சென்று விட்டான்… தனியாளாக விடப்பட்டான் ஆதீரன்.

  • தொடரும்…

2 thoughts on “தீரனின் தென்றல்-22”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *