Skip to content
Home » தீரனின் தென்றல்-27

தீரனின் தென்றல்-27

ஆதீரன் தான் தென்றல் வேலை செய்யும் அலுவலகத்தின் முதலாளி என்பது தனக்கு தெரியும் என்றதோடு நேற்று அபூர்வாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது வரை அனைத்தும் தெரியும் என்று குமார் சொல்ல அனைவருமே அதிர்ந்து பார்த்தனர்…

Thank you for reading this post, don't forget to subscribe!

“என்ன குமாரு சொல்ற?” பொன்னி கேட்க

“ஆமா ம்மா… தென்றல் வேலையில சேர்ந்த மறுநாளே அவளுக்கு ஃப்ளாட் தரதா சொன்னது எனக்கு டவுட் ஆச்சு… ஃப்ளாட் இங்க வர்மா சார் ஆஃபிஸ் வொர்க்கர்ஸ் குவார்ட்டஸ் ல இருக்கிற ப்ளாக் னு சொன்னதும் நான் எங்க ஆஃபிஸ்லயே விசாரிச்சேன்… வர்மா சாருக்கு ரீசன்டா ஃப்ரண்ட் ஆனதாகவும் அவரோட கம்பெனி மூலமா தான் இந்த குவார்டஸ் கட்டினதாகவும் சொன்னாங்க…

இந்த வீட்டுக்கு வந்த ரெண்டாவது நாளே அதாவது இவனோட தென்றலை சேர்த்து வைக்க முடியுமா னு நீங்களும் ரூபாவும் என்கிட்ட கேட்டீங்களே… அதுக்கு அடுத்த நாளே எனக்கு தெரிஞ்சு போச்சு ஆதீரன் தான் ஆதீ னு…

அதோட பாப்பாக்கு உடம்பு சரியில்லை னு அம்மா ஃபோன் பண்ணி சொன்ன உடனே வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி குழந்தைக்கு என்னாச்சு னு தெரிஞ்சுக்க சிசிடிவி செக் பண்ண போனேன்… அப்போ தான் ஆதீரன் தான் குழந்தையை தூக்கிட்டு போனதை நான் பார்த்தேன்.” என்று சொல்லி முடிக்க

“அப்போ ஏன் வேலு எங்ககிட்ட சொல்லாம இருந்தீங்க?” ரூபா கேட்க

“ம்ம்… உன் அண்ணன் எத்தனை நாள் கண்ணாமூச்சி ஆடுறான் னு பார்க்க தான்.. அதோட நான் இவனைப் பத்தி சொல்லிருந்தா தென்றல் அடுத்த நிமிஷம் இங்கிருந்து கிளம்பி போயிருப்பா…” என்று குமார் சொல்ல

“குமாரு சொல்றதும் சரிதான்.. அவ இப்படி தான் செய்வா… ஆனா அதுக்காக அவ வீம்புக்காக இப்படி தனியாவே இருந்திட முடியுமா குமாரு… ஒரு பொம்பளை பிள்ளைய பெத்து வச்சிருக்கா… அதோட எதிர்காலத்துக்கு கண்டிப்பா அப்பா அம்மா ரெண்டு பேருமே வேணும் ல…” பொன்னி பேச

“ஆனா எப்படி அத்தை உன் மக பிடிவாதத்தை எப்படி விடுவா?” ரூபி வருத்தமாக கூற

“அதுக்காக இப்படியே விடவும் முடியாது ங்க… பாஸ் ரொம்ப பாவம்… தெரியாம செய்த பாவத்துக்கு ஏற்கனவே இத்தனை வருஷம் அவரு தனிமைல இருந்துட்டாரு… இதுக்கு மேலேயும் அவரை தண்டிக்க வேண்டாமே… தென்றல் கிட்ட நாம எல்லாரும் பேசலாம்….” மதன் சொல்ல

“இத்தனை வருஷம் நாங்க பேசாம இருந்திருப்போம் னு நினைச்சீங்களா மதன்? இப்போ இங்க வேலைக்கு சேரும் முன்ன ஒரு கம்பெனி ல வொர்க் பண்ணாலே… அங்க ப்ராப்ளம் வந்தப்போ கூட ஆதீரன் கூட இருக்கிறது தான் உனக்கு பாதுகாப்பு னு சொன்னதுக்கு யாரோட பாதுகாப்பும் எனக்கு தேவையில்லை… உங்களுக்கு எங்க கூட இருக்க கஷ்டமா இருந்தா நானும் என் குழந்தையும் கண்காணாத இடத்துக்கு போயிடுறோம் னு சொல்றா.. எங்களை என்ன பண்ண சொல்றீங்க?” வேதனையோடு குமார் சொல்ல

“இல்ல எனக்கு புரியலைங்க… தென்றல் இந்தளவுக்கு வெறுக்கிற அளவுக்கு பாஸ் என்ன தப்பு பண்ணாங்க… அவங்க அப்பா செய்த தப்பை யாருமே சொல்லாததால அவருக்கு தெரியலை… ஆனா அதுக்காக தென்றல் அவரை விட்டுட்டு போய்…. இவரோட அம்மா கூட கடைசி காலத்துல இவரை புரிஞ்சுக்காம கஷ்டப்படுத்தி….. பாவம் ப்ரோ பாஸ்…” ஆதீரனுக்கு ஆதரவாக மதன் ஆதங்கப்பட

“மதன் என்ன நடந்தது னு முழுசா தெரியாம எதுவும் பேசாதீங்க…” இவர்கள் குடும்ப விசயத்தில் மதன் தலையிடுவது பிடிக்காமல் சித்ரா வெளியே வந்து சொல்ல

“எனக்கு எல்லாம் தெரியும் சித்ரா.. பாஸ் அவர் செய்த தப்போட சேர்த்து என்கிட்ட சொல்லிட்டாரு. தென்றல் மேல தப்பு இருக்கு னு சொல்லலை..‌ அதே சமயம் பாஸூம் எல்லாத்தையும் வேணும் னு செய்யலை.. தென்றல் இவரை வெறுக்கிறது கூட பரவாயில்லை… இவரை பெத்து வளர்த்த இவரோட அம்மா… அவங்க கூட ஏன் அவ்வளவு பெரிய தண்டனை தரனும்?” ஆதங்கமாக மதன் கேட்க

“போதும் மதன்… இவனுக்கு யாரும் தண்டனை தர நினைக்கல.. பூரணி அம்மா மனசளவுல ரொம்ப நொந்து போய்ட்டாங்க…. இவனுக்கு சமுதாயத்து மேல நம்பிக்கை போய்ட கூடாது னு தான் ரங்கநாதன் அப்பா இவனோட அப்பா பத்தி சொல்ல விடலை… அது அவங்களுக்கே திரும்பிடுச்சே னு ரொம்ப வருத்ததுல இருந்தாங்க. ரங்கநாதன் அப்பா இறந்ததுக்கு கூட தான் தான் காரணம் னு வருத்தத்துல தான் அவங்களுக்கு உடம்பு முடியாம போச்சு…

தென்றலை பார்த்து பேசினா குணமாக வாய்ப்பு இருக்கு னு ஆதீரன் தென்றலை தேடி போனான். இவனை நம்பி வரமுடியாது னு சொன்னாலும் அவளுக்கு உள்ளுக்குள்ள அத்தை மேல இருந்த பாசம் ஃபோன் பண்ணி பேச வச்சது. தென்றல் அடிக்கடி ஃபோன் பண்ணி பேசிட்டு தான் இருந்தா… இருந்தாலும் அம்மா உடல்நிலை ரொம்ப மோசமா மாறுச்சு… தான் இனி பிழைக்கவே மாட்டோம் னு அவங்களுக்கே தெரிஞ்சப்போ தான் என்னை வரச்சொல்லி பேசுனாங்க..” குமார் சொல்லிக் கொண்டு இருக்க

“எது? தன்னோட இறுதி காரியத்தை தன் மகன் செய்யக்கூடாதுனா?” என்று கேட்ட மதனுக்கு அனைவர் மேலும் கோபமாக வந்தது.

“புரியாம பேசாதீங்க மதன்… ஊர் பக்கம் பொதுவா ஒரு பழக்கம் இருக்கு… மனைவி கர்ப்பமா இருந்தா அந்த குழந்தையோட தகப்பன் அதாவது அந்த பொண்ணோட கணவன் இந்த மாதிரி யாரோட இறுதிக் காரியங்களையும் செய்யவோ கொள்ளி வைக்கவோ கூடாது…. பெத்த அம்மாவா அப்பாவா இருந்தாலும் சரி.. அவங்களோட அந்த மகன் கொள்ளி வைக்காம வேற யாராவது தான் கொள்ளி வைப்பாங்க…

தென்றல் கர்ப்பமா இருந்ததால தான் பூரணி அம்மா ஆதீரனை ஒதுக்கி வைச்சாங்க…” என்று குமார் கூறி முடிக்க இத்தனை ஆண்டுகள் தாய் தன்னை ஒதுக்கியதற்காக நொந்து கொண்டு இருந்த ஆதீரன் இப்போது அந்த காயங்கள் மறைந்து நிம்மதியாக உணர்ந்தான். மதனுக்கும் மனதில் அரித்துக் கொண்டிருந்த கேள்விக்கு விடை தெரிய கோபம் தணிந்தான்.

“இதை அன்னைக்கே உன்கிட்ட சொல்ல தான் வந்தேன் ஆதீரா… ஆனா அப்போ நீ கேட்குற நிலையில இல்ல… அது மட்டும் இல்ல தென்றலும் நீயும் ஒன்னா சேந்து அந்த வீட்ல விளக்கேத்தி அவங்களுக்காக சாமி கும்பிடனும் அம்மா ஆசைப்பட்டாங்க…” என்று குமார் சொல்ல

“கண்டிப்பா டா.. குமாரு.. ஆனா தென்றலை நான் பார்த்து பேசும் போது அவ கண்டிப்பா ரொம்ப கோபப்படுவா… அவ திரும்ப என்னை விட்டு போகம இருக்க நீ தங்கச்சி அத்தை எனக்கு ஹெல்ப் பண்ணனும்..” என்று ஆதீரன் கேட்க குமார் பொன்னி அமைதியாக இருக்க

“அதெல்லாம் பண்ணலாம் அண்ணே… உன்னையும் தென்றலையும் சேர்த்து வைக்க என்ன எல்லாம் முடியுமோ கண்டிப்பா நாங்க பண்ணுவோம்.. வேலு… ஏன் அமைதியா இருக்கீங்க சொல்லுங்க…” ரூபிணி சொல்ல

“அதான் எங்களுக்கும் சேர்த்து நீயே சொல்லிட்டியே…” குமார் சொல்ல

“அப்பறம் தென்றல் இங்கிருந்து போகமுடியாத படிக்கு ஏற்கனவே அக்ரீமெண்ட் எல்லாம் போட்டாச்சு டா… இருந்தாலும் கொஞ்ச நாள் கழிச்சு தான் நான் என்னை அடையாளம் காட்டிக்கப் போறேன்…” என்று ஆதீரன் சொல்ல

“சரிடா மச்சான்… நேரம் ஆகுது வாங்க சீக்கிரம் சாப்பிட்டு நான் திரும்ப சைட்டுக்கு போகனும்…” என்று குமார் அழைக்க மதன் வேகமாக எழப்போனான்.

“இல்ல குமாரு… தென்றல் என்னை ஏத்துக்கட்டும்… அப்பறம் நான் சாப்பிடுறேன்..” ஆதீரன் சொல்ல மதன் பாவமாக பார்க்க

“டேய் ஆதீரா ஓவரா நடிக்காதே.. வா” என்று உரிமையாக அழைத்த குமார் “வாங்க மதன் ரூபி… எல்லாருக்கும் சாப்பிட எடுத்து வை…” என்று சொல்ல நண்பர்கள் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தங்கள் நட்பு புதுப்பிக்கப்பட்ட மகிழ்வில் சாப்பிட அமர பொன்னி வேகமாக சென்று சில ஆம்லேட் போட்டு வந்து பரிமாற

“பார்றா… மருமகனுக்கு என்னென்ன பிடிக்கும் னு இன்னும் மாமியாருக்கு நியாபகம் இருக்கு போலவே…” என்று ரூபிணி கேலி செய்ய அனைவரும் மகிழ்வாக சிரிக்க நீண்ட நாட்கள் கழித்து வயிறோடு மனமும் நிறைந்தது ஆதீரனுக்கு…

ஆனால் ஆதீரனை பற்றி தென்றல் அறியும் நேரம் தென்றல் ஒரு புயலாக வாய்ப்புள்ளதே… அதை எப்படி சமாளிக்க என்ற எண்ணம் அனைவரின் அடிமனதிலும் உறுத்த தான் செய்தது…

  • தொடரும்…
  • நன்றியுடன் DP ✍️

2 thoughts on “தீரனின் தென்றல்-27”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *