Skip to content
Home » தென்றல் நீ தானே-8

தென்றல் நீ தானே-8

அத்தியாயம்-8

  அடுத்த நாள் அண்ணாமலை வள்ளி துஷாரா என்று மூவரும் வீட்டிலிருக்க, அறையிலிருந்து ஹாலுக்கு கஷ்டப்பட்டு வந்த ஹர்ஷாவோ துஷாரா முகபாவத்தை காணவே வத்தான்.

  ஆஸ்திரேலியா செல்வதாக கூறவும், துஷாரா மனம் லேசாய் துவண்டது.
  பாவம் தன்னால் இன்னலை அனுபவிக்கின்றான் என்று புரிய நெடுநேரம் ஆகவில்லை.

   அண்ணாமலையோ, முதல்ல ஹாஸ்பிடல்ல போய் கேட்போம் தம்பி அவங்க பிரயாணம் பண்ணி போகலாம்னு சொல்லிட்டா ஆக வேண்டியதை பார்க்கலாம்” என்றார்.

துஷாராவை பெண் பார்க்க வந்தவரை அழைத்து வந்த மருதமுத்து, சும்மாயில்லாமல், ‘இந்த வெளிநாட்டுக்காரனை ஏன் அண்ணாமலை வீட்ல தங்க வச்சிட்டு இருக்க? மனிதாபிமானம் இருக்கலாம், ஆனா கல்யாணம் செய்யற வயசுல பொம்பள பிள்ளை இருக்கற வீட்ல வயசு பையன் இருப்பது உறுத்தும்ல,” என்றார்.

அண்ணமலையோ, ‘நம்ம கண் எதிர்ல விபத்து நடந்து விழுந்தவன் முத்து, எப்படி விடமுடியும். அந்த தம்பி கூட ஹாஸ்பிடல்ல இருக்கேன்னு சொல்லுச்சு. நான் தான் இங்க தமிழ்நாட்டுல யாருமில்லாயேனு  ஹாஸ்பிடல்ல பார்த்துக்கறேன்னு சொன்ன வரை தடுத்து இங்க அழைச்சிட்டு வந்தேன். ஏன் மருது தப்பா?” என்று இளகிய மனம் படைத்தவராய் கேட்டார்.

மருதமுத்துவோ ”என்னத்த சொல்ல தெரியலை அண்ணாமலை. அவன் ஹாஸ்பிடல் போறதா சொல்லிட்டா அனுப்பிவை. இது ஒரு விஷமா பிரச்சனை எழுந்துடக்கூடாது. மாப்பிள்ளை அப்பா, யார் அவன் என்னனு விசாரிச்சு லேசா சலிச்சுக்கிட்டார். நீ இந்தளவு மனிதாபிமானம் எல்லாம் பார்க்க கூடாதுன்னு பேசிக்கிட்டார். அவ்ளோ தான் சொல்ல முடியும்” என்றதால் அண்ணாமலை இம்முறை மகளுக்காக தலையாட்டி விட்டார்.

பிரயாணம் செய்யலாமென்று டாக்டர் கூறினால் தவறென்ன? என்றும் நினைத்தார்.

   அன்றைய நாள் துஷாராவுக்கும் ஹர்ஷாவுக்கு கடினமாய் நகர்ந்தது. ஹர்ஷாவுக்கு வருத்தம் என்றால் துஷாரா குழப்பத்தில் தவித்தாள்‌.

  அவளுக்கு என்னவோ காதலை கூறியவனிடம் மறுத்துவிட்டதே குற்றமாக கருதினாள்.
  அதே சமயம் தந்தை மீறி காதலில் விழுவதில்லை என்ற கோட்பாட்டிலும் நிலையாக நின்றாள்.

   அடுத்த நாள் அண்ணாமலை ஹர்ஷாவை அழைத்து டாக்டரிடம் செக்கப்பிற்கு சென்றார்கள்.

   கால் நன்றாக சரியாகி கொண்டிருப்பதை கூறினார்கள்.
  மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ள எழுதியவரிடம், ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில் பயணம் செய்யலாமா? என்று சந்தேகத்தை கேட்டான்.

 “சின்ன பிராக்சர் தானே. அதெல்லாம் வீல் சேரில் உட்கார்ந்து ஜம்முனு உங்க நாட்டுக்கு போகலாம். நான் ஆப்ரேஷன் செய்த சர்டிபிகேட் எல்லாம் கொடுத்துட்டு, நீங்க டிராவல் பண்ணலாம்னு எழுதி தர்றேன்” என்று நம்பிக்கை தந்தார்.

   இது போதுமே ஹர்ஷவர்தனுக்கு, நன்றி நவிலிந்து விமானத்திற்கு டிக்கெட் பதிவு செய்தான்.

  ஏற்கனவே செல்ல வேண்டிய நாட்கள் தள்ளி போடப்பட்டு, மருத்துவம் பார்ப்பதாக காரணம் சுட்டிக்காட்டியிருக்க, அடுத்த வாரம் செல்வதற்கு டிக்கெட் பதிவானது.

  ஹர்ஷாவின் தந்தை தாமோதரன் நான்சியை கூட வரவேண்டாம் என்று தவிர்த்து தானாக வந்துவிடுவதாக கூறிவிட்டான். ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் வந்து பிக்கப் செய்துக்கொள்ளுமாறு மட்டும் சொல்லிவிட்டான்.

ஒரு வாரம் தானா? என்ற வலி எழுந்தாலும், இப்பவே போகலைன்னா அவன் மனம் உடைந்து போயிடும். இப்பவே ‘இந்த வாழ்க்கையை நான் ஏன் வாழணுமென்ற சலிப்பு’ தெரிகின்றதே.

தங்கள் நாட்டில் காதல் இந்தளவு ஆழமாய் பார்த்ததில்லை‌. தாய் தந்தை காதலை கூட, அவன் தந்தை தாயை காதலித்து கரம் பற்றியது குடியுரிமைக்காக என்று சில நேரம் எண்ணுவான். அவரும் ஒருமுறை விளையாட்டாக கூறியதே. ஆனால் இன்றளவு தாய் தந்தை பிரிவில்லாமல் சண்டையின்றி வாழ்கின்றார்கள். அது வேறு கதை.
   முதல் முறை, தனக்கு இந்த காதல் அதீத வலிதர தனக்கு நடந்தவைகளை யாராவது நினைவிலிருந்து அழிக்கமாட்டார்களா? என்ற எண்ணம்.

   இந்த வாரம் முழுக்க சாப்பிடும் சமயம் குடும்பமாக தான் உணவருந்த வந்தான். தனியாக அறையில் உணவு எடுத்துவர வேண்டாமென்று மறுத்து ஹாலில் ஸ்டிக் உதவியால் தாங்கி தாங்கி நடந்து நின்றான்.

  துஷாரா வீட்டில் டைனிங் டேபிள் இல்லை. தரையில் அப்பா அம்மாவோடு துஷாரா மூவரும் அமர்ந்து சாப்பிடுவார்கள்.
  ஹர்ஷா மட்டும் டேபிள்மேட்டில் தட்டை வைத்து சாப்பிட்டான்.

அவனுக்கு ஒரு வாரமாவது துஷாரா இருக்குமிடம் இருந்தால் என்ன? என்ற நினைப்பில் இருந்தான். ஆனால் அவளிடம் காதலிப்பதாக காயப்படுத்தவில்லை.

   ஆஸ்திரேலியா செல்லும் நாளும் வந்தது. வள்ளியிடம் விடைப்பெற அவரோ அவனுக்கு பிடித்த உணவை பேக்கிங் செய்து தந்தார். அவனுமே நன்றி கூறி வாங்கி கொண்டான்.‌

  துஷாரா முன் வந்தவன், கண்கள் கலங்கி வார்த்தை வராமல், தொண்டை அடைக்க, “வர்றேன்” என்று தலையாட்டினான்.

  துஷாரா அவன் செல்வதில் பதிலுக்கு ம்ம்” என்று கூறினாள். ஆனால் அவனை போலவே கண்கள் கலங்கி விட்டது. அம்மா அப்பா பார்த்திடுவார்களோ? ஏன் ஹர்ஷா பார்த்திடுவானோயென்று பயந்து உதட்டில் புன்னகை தழுவ சமாளித்தாள்.

  அண்ணாமலை மட்டும் நேரம் ஒதுக்கி காக்கி உடையில் விமான நிலையத்தில் வழியனுப்ப வந்தார்.

   “நல்லபடியா ரீச் ஆனதும் போன் பண்ணி சொல்லுங்க தம்பி. எனக்கு எடுக்க முடியாத சூழல் என்றால் அட்லீஸ்ட் மெஸேஜ் தட்டி விடுங்க. கண்டிப்பா பார்த்துடுவேன்” என்றார்.

  “கண்டிப்பா அங்கிள்” என்றான்.

  “ஆங்.. தம்பி உங்க பிரெண்ட்கிட்ட சொல்லிட்டிங்களா? மறக்காம உங்கப்பா அம்மா யாராவது வந்து உங்களை பிக்கப் பண்ணிப்பாங்க தானே? அப்பறம் அங்க போய் தனியா கஷ்டப்படக்கூடாது பாருங்க.” என்று அக்கறையாய் உரைத்தார்.

  “அப்பாவுக்கு போன் பண்ணிட்டேன் அங்கிள் வந்துடுவார்.‌
   ராம்கியிடமும் சொல்லிட்டேன். அங்க போய் ஒருமுறை கால் பண்ணிடுவேன்.” என்றவன் இனி விட்டால் திரும்ப கிடைக்குமா இது போன்ற தருணம் என்று யோசித்து, “அங்கிள்… உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்.” என்றான்.‌

  “அட நேரமிருக்கு தம்பி இங்க உட்காருங்க‌. எப்பவாது வந்தா வீட்டுக்கு வாங்க” என்று சென்னை வந்தால் தங்க கேட்கின்றானோ என்று கூறினார்.

  “அங்கிள்… என்னை நீங்க தப்பா நினைச்சா கூட பரவாயில்லை. ஆனா என்னால இதை சொல்லாம போக முடியலை.

  ஒருவேளை கேட்டிருந்து கிடைச்சிருந்தா? என்று பிற்காலத்துல பீல் பண்ணக்கூடாது பாருங்க.” என்றவன் அதிகமாகவே தயங்கினான்.

“என்னாச்சு தம்பி? தப்பா என்ன கேட்டுட போறிங்க” என்று அண்ணாமலை பேசுவது புரியாது விழித்தார்.

  “அங்கிள்… நீங்க ரொம்ப நல்ல மனிதர். முதல் இன்சிடென்ட்லயே… சிரிச்ச முகமா கேக் தந்து பரிச்சயமானவரா மாறினிங்க.

  இரண்டாவது இடிச்சப்ப போலீஸ் என்றதை தாண்டி மன்னிப்பு கேட்டு நகர்ந்திங்க.
 
  மூன்றாவது கட்லெட் தந்திங்க. நாலாவது எனக்கு ஆக்சிடென்ட் ஆனப்ப தெரிந்த பையன் என்ற ரீதியில் ஹாஸ்பிடல் அழைச்சுட்டு போய் உதவினிங்க.
   உங்க நல்ல மனசு என்னை வீட்டுக்கு வச்சி பார்த்துக்கிட்டிங்க. ஆன்ட்டி நல்லா சமைச்சு கொடுத்தாங்க. மனிதாபிமானம் என்றதை தான்டி நல்ல மனுஷங்களா இருந்திங்க.

  இப்ப இருக்கற உலகத்துல சிரித்த முகமும், பரிசுத்தமான அன்பும், யாரும் மூன்றாவது மனிதருக்கு காட்டுவதில்லை. அப்படி காட்டின உங்க குடும்பத்தில நான் நன்றி சொல்லிட்டு அமைதியா போறது தான் நல்லது.

  ஆனா முடியலை அங்கிள். எனக்குள்ள நெஞ்சு அடைக்கற மாதிரி இருக்கு.

  காரணம்.. துஷாரா அங்கிள்.

  நான் துஷாராவை விரும்பறேன். அவளை நேரு ஸ்டேடியம்ல முதல்ல சந்திச்சப்ப உங்களை மாதிரி சிரிச்ச முகமில்லை. அவ பிரெண்டுக்கு தான் எங்க இருக்கேன்னு அடையாளம் காட்ட என்னை லேம்போஸ்ட் மாதிரி ஒருத்தர் இருக்கார் அங்கயிருக்கேன்னு அடையாளம் சொன்னா. ஆனா அது தான் என் அடையாளத்தை தொலைச்சு வாழப்போறேன்னு தெரியாம அவ என் காலை மிதச்சதை கூட சுகமா தாங்கிட்டு அவளிடம் பேச ஆரம்பிச்சது‌. ஆன்ட்டி கூட சாரி கேட்டு அமைதியா இருக்க சென்னாங்க. துஷாரா நான் யாரிடமும் சாரி கேட்க மாட்டேன்னு வம்பு செய்தா. இப்படி பிறந்த நாள் அதுவுமா வம்பு பண்ணாதன்னு சொன்னாங்க.

  என்னை பார்த்து எரிச்சலா திரும்பிக்கிட்டா. இதுல நீங்க கட்லெட் எடுத்துட்டு வர நான் எடுத்து சாப்பிட லாவா பீடபூமி மாதிரி முகத்தை தூக்கி வச்சிக்கிட்டா. பட் கொஞ்ச நேரத்துல விஷ் பண்ணி பேசினேன். உங்களை பெருமையா பேசவும் உங்க சிரிப்பு மாதிரியே கொஞ்சமா சிரிச்சா. அவளிடம் ஜென்ரலா நடிகர் நடிகை பத்தி பேசினேன். எனக்கு பதில் தந்தா.
  ஜஸ்ட் லைக் தட், விழா முடிந்து போகறப்ப, என் மனசு அவளோட போகணும்னு அணத்த துவங்கிடுச்சு.

   அதான் அவளை பார்த்துட்டே வந்தேன்.‌ உங்களை பார்த்தப் பிறகு தான் லைட்டா.. அய்யோ இவர் நல்ல கேரக்டர். இவர் பொண்ணையே சைட் அடிக்கறோமேனு கஷ்டமாகிடுச்சு.
 
   இதுல ராம்கி கேப் புக் பண்ணி போனதும், நாம இனி பிளைட் வேற பிடிக்கணும் கடைசியா துஷாராவை கண் குளிர ரசிப்போம்னு தான் டிலே பண்ணிட்டே நடந்தேன். என் பர்ஸை யாரோ திருடியது கூட அப்ப தெரியலை. இரண்டு செகண்ட் ஆனதும் தான் பர்ஸ் மிஸ்ஸிங் என்றதும் திரும்பினேன். அவசரமா அங்கிருந்த கார்ல் மோதி இடிப்பட்டேன்.

ஆனா செத்துடுவேன்னு நினைச்சேன் அங்கிள். உங்க பொண்ணை பதட்டமா ஓடி வந்ததை பார்த்துட்டு சந்தோஷமா சாக தயாரானேன். காட் கிரேஸ் பிழைச்சிட்டேன். பிழைச்சதும் எனக்கு பெரிசா எதுவும் அடிப்படலை கால்ல பிராக்சர் என்றதும் நீங்க வந்து உதவி ஃபில்பே பண்ணி மறுபடியும் துஷாராவை சந்திக்கவும் மனசுக்குள்ள அழுத்தமா காதல் நுழைந்துடுச்சு அங்கிள்.
  சாரி.. நீங்க நல்லா பார்த்துக்கிட்டிங்க. நான் உங்க மகளை காதலிப்பது தப்பு தான். ஆனா மறக்க முடியலை அங்கிள். இந்த நிமிஷம் சொல்லா போனா நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கு.
  அவளிடம் சொன்னதுக்கு எந்த எதிர்வினையும் காட்டலை. சம்மதமும் சொல்லலை.

  என்னை தான் திட்டினா.
  ‘எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம உதவறார் எங்கப்பா. அவர் பொண்ணையே விரும்பறேன்னு சொல்லற அறிவில்லையா? நீயெல்லாம் என்ன பிறவி என்பது போல பேசிட்டா.
  அவளுக்கு நீங்க தான் உயிர். உங்களுக்காக மட்டுமே பொண்ணு பார்க்க நீங்க கூட்டிட்டு வந்தவன் முன்ன அழகா வந்து நின்றுட்டா.
  எனக்கு தான் அங்கிள் முள் மேல நிற்கற மாதிரி அன்னைக்கு இருந்தது‌.

  அதான்… ஆஸ்திரேலியா கிளம்பிட்டேன். என்னால இதுக்கு மேல காதல் வலியை தாங்க முடியலை. துஷாராவை பார்த்துட்டு, அவ எனக்கில்லைன்ற உண்மையை ஏற்க முடியலை.

நான் விரும்புவதை சொல்லாம கிளம்பலாம்னு இருந்தேன். ஆனா ஒரு நப்பாசை துஷாராவை எனக்கு கட்டி கொடுப்பிங்களா?” என்று கேட்டான்.
அண்ணாமலை அதிர்ந்து போனவராய் நின்றிருந்தார்.
‘இதென்ன காதல்? இவனுக்கு என்ன பதில் கூறுவது.

  இப்படி பொதுயிடத்தில் கலங்கிய விழியோடு என் மகளை விரும்புவதாக என்னிடமே உரைக்கின்றானே’ என்று பேச இயலாது மௌனமானார்.

  ஹர்ஷா துவண்டவனாக “என்னை மன்னிச்சு மறந்துடுங்க அங்கிள். என் ஒருத்தனை வச்சி, உதவற குணத்தை மாத்திக்காதிங்க. வர்றேன் அங்கிள்” என்று அங்கே உதவிக்கு இருந்த வீல் சேரில் அமர்ந்து, விமானத்தில் இது போல உதவுவதற்கு இருக்கும் நபரின் துணையோடு சென்றான்.
 
   அண்ணாமலையால் உள்ளே செல்ல இயலாதே. அவர் அவருக்கான வேலையை பார்க்க மெதுவாக நடந்தார்.

‘இத்தனை நடந்துள்ளது… துஷாரா தன்னிடம் எதுவும் உரைக்கவில்லையே. ஒருவேளை சொன்னால் அது பிரச்சனையை தருமென்று தவிர்த்திருக்கலாம்’ என்றவர் தன் தலையில் தொப்பியை அணிந்து பலவித சிந்தனையில் மூழ்கினார்.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
 
 

5 thoughts on “தென்றல் நீ தானே-8”

  1. Dharshini

    Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 happa eppdiyo avanga appa kita pesitu ponaney nalla vela eppo avar konjam yosiparu nu nenaikuren parpom🧐🤔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *