Skip to content
Home » முகப்பு இல்லா பனுவல் – 15

முகப்பு இல்லா பனுவல் – 15

கீழே விழப்போன மாதவியை அவள் விழாதபடிக்கு இடையில் கைதாங்கி பிடித்து நிறுத்தினான். அவளின் இடையை தன்னுடன் நெருக்கி அவள் கழுத்தில் முகம் புதைக்க முனைந்தான் தேவராஜன். 

Thank you for reading this post, don't forget to subscribe!

ஒரு நொடி இருவரும் தன்னிலை இழந்தனர். சற்றென்று சுயம் வந்த மாதவி, தேவராஜனை வேகமாக தள்ளி விட்டு அவனை விட்டு விலகினாள். 

அவள் தள்ளியதும் சுயம் வந்த தேவராஜன், தன் இடது கையால் பிடரி முடியை அழுத்தி கோதி தன்னை சமன் செய்தான். 

இருவரும் எதிரெதிர் புறம் திரும்பி நின்று ஆழ்ந்து மூச்சு எடுத்து விட்டு கொண்டனர்.

ஒரு நிமிடம் கழித்து இருவரும் ஒன்றுபோல் திரும்பி, “சாரி” என்றனர். ஒன்றுபோல் கூறியதில் இருவரும் மென்மையாக சிரித்துக்கொண்டு “பரவாயில்லை” என்றும் ஒரே நேரத்தில் சொல்லி விலகினார். 

வாசல் வரை சென்ற தேவராஜன் திரும்பி மாதவியை பார்த்து, “ஒழுங்கா இருப்பதை எல்லாம் சாப்பிட்டு விடு” என்று சொல்லிவிட்டு “கதவை சாற்றிக் கொள். நானோ அம்மாவோ அப்பாவோ வந்து தட்டினால் மட்டும்தான் திறக்க வேண்டும். மற்றபடி எக்காரணம் கொண்டும் கதவை நீ திறக்காதே” என்று கட்டளை போல் கூறினான். 

அவளோ சந்தேகமாக அவனைப் பார்க்க, 

“எல்லாம் ஒரு பாதுகாப்புக்காக தான். கதிர் இப்பொழுது அடிபட்டு இருக்கிறான் அல்லவா?” என்று கூறினான். 

அவளும் ஆமாம் என்றும் சரி என்றும் தலையை ஆட்ட, அவனும் தலையசைத்து விடை பெற்றுக் கொண்டான். 

நேராக அவர்கள் அப்பார்ட்மெண்ட்டின் சிசிடிவி கண்காணிப்பு அறைக்கு வந்து  பதிவை பார்க்க ஆரம்பித்தான். நேற்று கதிர் வந்த நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே கட்டிடத்தின் வாயிலில் ஒரு கார் நின்று கொண்டு இருந்திருக்கிறது. பின்னர் மெதுவாக அதிலிருந்து ஒருவன் இறங்கி, உட்கார்ந்து இருக்கும் வாட்ச்மேன் பின்புறம் வந்து, அவன் முகத்தில் எதையோ வைத்து அழுத்த, சற்று நேரத்தில் அவன் மயங்கி விட்டான். 

காவலாளி மயங்கியதும் காரில் இருந்து கதிரை தூக்கிக்கொண்டு முகமுடி அணிந்த இருவர் உள்ளே வந்து, மின்தோக்கியின் வழியாக கதிரின் வீட்டில்,  வாசலில் அழைப்பு மணியில் அவன் தலையை வைத்து அழுத்திவிட்டு சென்றுவிட்டார்கள். முகமூடி அணிந்திருந்ததால் அவர்களின் முகமும் தெரியவில்லை. ஓரமாக நின்று இருந்ததால் அவர்கள் வந்திருந்த காரின் நம்பரும் தெரியவில்லை. 

அதன் பிறகு தன் வேலையை ஆரம்பித்து விட்டான் தேவராஜன். அவனின் தீவிர தேடுதல் வேட்டையில் மறுநாள் மதியத்திற்குள்ளேயே கதிரை கடத்தியவர்கள் யார் என்று கண்டுபிடித்து விட்டான. 

கண்டுபிடித்த மறு நொடியே அவனது போலீஸ் வண்டி ***** கட்சியின் தலைமை அலுவலகத்தை நோக்கி பறந்தது. தங்களின் கட்சி அலுவலக வாசலில் போலீஸ் வண்டியை கண்டதும் வேகமாக வந்து பார்த்த தொண்டர்கள், கமிஷனரே வந்திருப்பதை கண்டு வேகமாக உள்ளே சென்று தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். 

கார் அலுவலக வாசலுக்குள் நுழைந்த நொடியில் இருந்தே அவனது கழுகு பார்வை கூர்மையாக நடக்கும் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து கொண்டே, தடுப்பவர்களை ஒரு பார்வையால் எட்ட நிக்க வைத்து விட்டு வேகமாக உள்ளே சென்றான். 

அதற்குள் தலைவரின் எடுபிடிகள் அவனின் எதிரில் வந்து “சார், என்ன விஷயமாக தலைவரை பார்க்க வேண்டும்” என்று அவனை மறைத்தபடி நிற்க, தலையை சாய்த்து உள்ளே எட்டிப் பார்த்தான். 

தலைவரின் முகத்தில் சிறிது பதட்டம் இருந்தாலும், எதையும் வெளிக்காட்டாமல் “டேய், அவரை உள்ளே விடுங்கடா” என்று உள்ளே இருந்து குரல் கொடுத்தார். 

நேராக உள்ளே வந்த தேவராஜன், அவரின் அறையை சுற்றிப் பார்த்துக் கொண்டே, அவரின் எதிரில் இருந்த நாற்காலியை இழுத்து,  கால் மேல் கால் போட்டு அமர்ந்தான். 

தலைவர் நின்று கொண்டிருக்கும் பொழுது தேவராஜன் அமர்ந்ததில், தலைவரின் தொண்டர்கள், “ஏய்” என்று ஒரு அடி முன் வைக்க, தலைவர் கைகளால் அவர்களை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, அவரும் அமர்ந்து “என்ன விஷயமாக என்னை பார்க்க வந்திருக்கீங்க கமிஷனர்?” என்றார். 

“வெல்.. நேரடியாகவே விஷயத்திற்கு வந்து விடுகிறேன். கதிரை எதற்காக கடத்தி வைத்து அடித்தீர்கள்?” என்று ஒவ்வொரு வார்த்தையும் நிறுத்தி நிதானமாக அவரைப் பார்த்து கேட்டான். 

அவனின் பார்வையிலும், வார்த்தையிலும் இருந்து அழுத்தத்தில் அதிர்ந்த தலைவர், தன் பயத்தை மறைத்துக் கொண்டு “அதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? நான்தான் கடத்தினேன் என்று உங்களுக்கு தெரியுமா? அவன் என்ன கொஞ்சம் நஞ்சம் எதிரியயா சம்பாரித்து வைத்திருக்கிறான்? எந்த ஊர் போனாலும் அங்கெல்லாம் அவனுக்கு எதிரிகள் தானே சம்பாதித்து இருக்கிறான். அவர்களில் யாராவது கடத்திருக்கலாம்” என்று அலட்சியமாக கூறினார். 

“ஓஹோ..” என்று சொல்லிவிட்டு “சரி முதன் முதலில் உங்கள் கட்சி அலுவலகத்திற்கு வந்திருக்கிறேன்” என்று சுற்று முற்றும் பார்த்துவிட்டு, “ஒரு காபி, டீ கிடையாதா?” என்று லாவாக பின்னால் சாய்ந்து அமர்ந்தான். 

தலைவரும் அங்கிருந்தவர்களுக்கு கண்காட்ட சற்று நேரத்தில் ஒருவன் வந்து டீ கொடுத்தான். 

டீயை வாங்காமல், ஒரு கையை தூக்கி அவன் உட்கார்ந்து இருந்த நாற்காலியின் பின்னால் வைத்து சாய்ந்து கொண்டு, அவனை மேலிருந்து கீழ் பார்த்தான். மேஜையை கண்களால் காட்ட, டீ கப்பை மேஜையில் வைத்தது தான், அவன் மட்டுமல்ல, அங்கு இருந்தவர்கள் அனைவருமே பார்த்தனர். அடுத்த நொடி கழுத்தைப் பிடித்துக் கொண்டு அவன் தரையில் விழுந்து கிடந்தான். எப்படி என்று அங்கிருந்த ஒருவருக்குமே புரியவில்லை. தேவராஜனும் அதே போல் அமர்ந்து மெதுவாக டீயை எடுத்து குடிக்க ஆரம்பித்தான். 

சுற்றி நின்றவர்கள் அரண்டு விழித்தபடி இருக்க, தலைவரோ தேவராஜனிடம் “இப்ப எதற்கு நீங்கள் இவனை அடித்தீர்கள்?” என்று பயந்த வாரே கேட்டார். 

குடித்து முடித்து கப்பை மேஜை மீது வைத்துவிட்டு, “நேற்று இவனும்..” என்று நிறுத்தினான். 

அதிலேயே பயந்துவிட்ட கட்சித் தலைவர் அதிர்ந்து தேவராஜனை பார்க்க, 

“இப்ப சொல்லு, எதற்கு கதிரை கடத்தி அடித்து சித்தரவதை செய்தீர்கள்?” என்று கேட்டான். 

“ஒரு விபச்சாரியை வீட்டில் வைத்துக் கொண்டிருக்கிறானே!” என்றார் அலட்சியமாக. 

தேவராஜன் அவரை அழுத்தமாகப் பார்க்க, 

“எங்க தலைவருக்கு அவள் வேண்டுமாம். ஆனால் அவன் அவளை அனுப்ப மறுக்கிறான்” என்றார். 

அதில் அவரை அடிக்க கை ஓங்கியவன், அதில் பயந்து பின்னால் அவர் நகர, “உன் அக்கா தங்கச்சியை உன் தலைவருக்கு கேட்டால் உடனே அனுப்பிவிடுவியா?” என்றான் கோபமாக.

அவரோ கோபமாக “ஏய்!” என்று கத்திவிட்டு, “அவள் என்ன குடும்பப் பெண்ணா? விபச்சாரி தானே? இவ்வளவு காலமும் அப்படித்தானே இருந்தாள். இனிமேலும் அப்படியே இருந்துவிட்டு போனால் என்ன?” என்றார். 

அவர் வாயிலேயே ஓங்கி குத்திய தேவராஜன், “இன்னும் ஒரு தடவை அவளை அவ்வாறு நீ சொன்னாய் என்றால், உன் உடலில் உயிர் இருக்காது” என்று கோபமாக சொல்லிவிட்டு, “அவள் யார் என்று நினைத்தாய். கதரின் அக்கா” என்றான் அழுத்தமாக.

அந்த இடமே அமைதியாக இருக்க “இன்னும் ஒரு தடவை அவளைத் தேடி அந்தப் பக்கம் யாராவது வந்தீர்கள் என்றால், அவ்வளவுதான். இதுவரை அவள் கதிருக்கு அக்காவாக இருந்திருக்கலாம். இன்றிலிருந்து அவள் எனது மனைவி. இந்த தேவராஜனின் மனைவி. ஒருத்தரும் அவளை நிமிர்ந்து கூட பார்க்க கூடாது. ஜாக்கிரதை!!” என்று கர்ஜித்தான். 

அவனின் கோபத்தையும் அவனின் கர்ஜனையிலும் பயந்த கட்சிக்காரர்கள் ஓரடி பின்னே நகன்றனர். அங்கிருந்த தலைவனை பார்த்து “உன் மேல் இடத்தில் சொல்லி வை. இனிமேல் யாராவது அவளைத் தேடி வந்தீர்களே என்றால், அவ்வளவுதான்” என்று ஆள்காட்டி விரலை காட்டி மிரட்டி விட்டு அனைவரையும் அழுத்தமாக பார்த்து முறைத்து வெளியேறினான். 

கதிருக்கு நேரத்திற்கு உணவையும் மருந்தையும் கொடுத்து நன்கு கவனித்துக் கொண்டாள் மாதவி. நேற்று அவளை கதவை பூட்டி பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு சென்றவன் தான் தேவராஜன். அதன் பிறகு வரவே இல்லை. ஏனோ அவளுடைய மனம் அவனை தேடியது. 

என்ன ஆயிற்று இவருக்கு பத்திரமாக இருக்க சொல்லிவிட்டு சென்றார். ஆனால் அதன் பிறகு வரவே இல்லையே என்று நினைத்துக் கொண்டு தம்பிக்கு சூப் தயாரித்துக் கொண்டு கொடுத்தாள். 

“அக்கா கொஞ்ச நேரமாவது எனக்கு ரெஸ்ட் கொடுக்கா. ஏதாவது ஒன்று கொடுத்துக் கொண்டே இருந்தால், இந்த வயிறு எண்ணத்திற்கு ஆவது” என்று சலித்துக் கொண்டான் கதிர். 

“டேய்.. சூப் குடித்தால் தான் உடல் வலி நன்றாக குறைந்து விடும். பேசாமல் குடி” என்று அவனை கண்டித்தாள். 

“சரி சரி நான் குடிக்கிறேன். ஆமாம், உன் முகம் ஏன் இப்படி சோர்ந்து கிடக்கு?” என்றான். 

“எனக்கென்ன? நன்றாக தானே இருக்கிறேன்?” என்று கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்து கூறினாள்.

“என்னமோ, உன் முகத்தில் சிறு கவலைகளை ஓடுவது போல் தெரிகிறது” என்று சொல்லியபடியே சூப்பை குடிக்க ஆரம்பித்தான். அப்பொழுது காலிங் பெல் சத்தம் கேட்க “யாரோ வந்திருக்காங்க. நான் போய் பார்க்கிறேன்” என்று வேகமாக ஓடினாள். 

அவள் நினைத்தது போலவே தேவராஜன் இருக்க அவள் முகம் பிரகாசம் ஆகியது. “வாங்க” என்று வரவேற்று “இப்பொழுதுதான் கதிர் எழுந்தான்” என்று சொல்லிவிட்டு அவனது அறையை காண்பித்தாள். அவனும் தலையாட்டிக் கொண்டே கதிரின் அறைக்குச் சென்று கதிரிடம் பேச ஆரம்பித்தான். 

அதற்குள் தேவராஜனுக்கும் ஒரு கிண்ணத்தில் சூப் கொண்டு வந்து கொடுத்தாள். 

“இப்பதான் டீ குடித்தேன்” என்று அவன் சொல்ல, சற்றென்று அவள் முகம் வாடியது. அவள் முக வாட்டத்தைக் கண்டு பரவாயில்லை என்று வாங்கி பருக ஆரம்பித்தான். 

அவன் வாங்கி குடிக்க ஆரம்பித்ததும் மாதவியின் முகம் மலர்ந்தது. தன் தமக்கையின் முக பாவத்தை பார்த்துக் கொண்டே இருந்த கதிருக்கு மாதவியின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை புரிந்து கொள்வது கடினமாக இருந்தது.  

“சார். இன்னும் ரெண்டு நாள்ல நான் டியூட்டி  ஜாயின் பண்ணி விடுறேன்” என்றான் கதிர்.

“ஒன்றும் அவசரம் இல்லை. நன்றாக ஓய்வெடுத்து விட்டு, அடுத்த வாரம் கூட ஜாயின் பண்ணு” என்று சொல்லி சாய்ந்து அமர்ந்தான். 

தேவராஜனின் செயலில் கதிர் தன்னை கடத்தியது யார் என்பதை கண்டுபிடித்து விட்டான் என்பதை உணர்ந்த கதிர், “யார் சார்? ***** கட்சி ஆட்களா?” என்றான். 

தேவராஜனும் மெச்சுதலாக அவனைப் பார்த்து, ஆமாம் என்று தலையாட்டி விட்டு மாதவியை பார்த்தான். 

கதிருக்கும் காரணம் ஓரளவு யூகித்திருக்க, அமைதியாகவே தேவராஜன் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தான். 

மாதவியை பார்த்த தேவராஜன் “குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் வேண்டும்” என்றான். 

அவர்கள் ஏதோ தனியாக பேச நினைக்கின்றார்கள் என்று புரிந்து கொண்ட மாதவி, சரி என்று தலையாட்டி விட்டு வெளியே வந்து கதவை சாற்றி விட்டாள். 

அவள் கதவை சாற்றியதும் கதவை தாழ்போட்டு விட்டு, இன்று நடந்த அனைத்தையும் கதிரிடம் கூறி, “நீ என்ன சொல்ற? நான் உன் அக்காவை கல்யாணம் செய்து கொள்ளவா? என்று கேட்டான்.

தேவராஜனின் அதிரடி கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அதிர்ந்தான் கதிர்.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

7 thoughts on “முகப்பு இல்லா பனுவல் – 15”

  1. செம… தேவா அதிரடி செம… தேவா முதல மாதவியை கல்யாணத்துக்கு சரி சொல்லவாளான்னு பாருடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *