Skip to content
Home » விலகும் நானே விரும்புகிறேன்-5

விலகும் நானே விரும்புகிறேன்-5

அத்தியாயம்-5

Thank you for reading this post, don't forget to subscribe!

       அடுத்த நாள் விழித்தப் பொழுது வேண்டுமென்றே, ஸ்வீட் செய்து கொண்டு அட்சரன் வீட்டுக்கு காலையிலேயே சென்றாள்.

     அவனை தவிர அனைவரும் வரவேற்றனர்.

      “என்ன ஸ்பெஷல்” என்று பாலா கேட்க, “என்ன ஸ்பெஷல்னு எல்லாம் சொல்லமாட்டேன். ஸ்வீட் வேண்டுமா வேண்டாமா?” என்றாள் மேகா.

    “நீங்க என்ன கொடுத்தாலும் சாப்பிடுவோம்” என்று மனோஜ் வழிந்தபடி வாங்கவும், ‘பினாயில் தர்றேன் குடிக்கிறியா, முகறகட்டை’ என்று மனதில் திட்டி முகத்தில் சிரித்து பேசினாள்.

     “இல்லை… என்ன ஸ்பெஷல்னு தெரிந்துக்கிட்டா நாங்களும் செலிபிரேட் பண்ணுவோம்ல?” என்றான் கமலேஷ்.

     “டேய் தமிழ் மாதத்துல ஏதாவது நல்ல நாள் கிழமையா இருக்க போகுது. மோஸ்டா பிரதோஷம் கிருத்திகை என்றால் கூட ஏதாவது கிராமத்துல ஸ்வீட் செய்வாங்கனு கேள்விப்பட்டிருக்கேன்.” என்றான் நிஷாந்த்.

    “ஹலோ சார்… இங்கயும் அதெல்லாம் கொண்டாடுவாங்க. அதென்ன கிராமத்துல… நீங்க எந்தவூரு.” என்றாள் துடுக்காய்.

     “சேலம் பக்கத்துல கிராமம் தான்” என்றான் நிஷாந்த்.
   
     “எங்கங்கோ இருந்து இங்க வந்து படிச்சி வேலை பார்த்தா நீங்க சிட்டி நாங்க வில்லேஜூ. எப்படிப்பா இப்படி பிரிக்கறிங்க?” என்று அங்கலாய்த்தாள்.

   அவளின் சலிப்பான பதிலில் நிஷாந்த் கமலேஷ் ரசிக்க, மனோஜோ “இன்னமும் என்னனு சொல்லலை.” என்றான்.

     ‘இவன் தான் ரொம்ப நோண்டுறான் இவனா இருக்குமோ?’ என்று பார்த்தாள்.

     “சொல்லலைனா வேண்டாம். அதுக்கு எதுக்குங்க போலிஸ் மாதிரி துருதுருனு பார்க்கறிங்க” என்றான் பாலா.

     “நான் பார்க்கறது துருதுருனா இருக்கு?” என்றாள் மேகா.

     அட்சரன் மட்டும் ‘எதுக்கு ஸ்வீட் செய்திருப்பா.?’ என்று சிந்தித்தான்.

    ‘கல்யாணமாகி வருடம் ஆனாலாவது முதல் வருடம் எனலாம். இப்ப என்ன ஒரு மாசம் கூட ஆகலை’ என்றவனுக்கு தேதியை பார்த்து திருமண நாளிலிருந்து நாட்களை எண்ணினான்.

   சரியாய் ஒரு மாதம் முடிவடைந்தது.

     ‘மாதத்தை கொண்டாடுறாளாமா இவளை.’ என்று ஆள்காட்டி விரலால் நெற்றி கீறி அவளை பார்க்க, அவளோ நாக்கால் துறுத்தி யாரும் காணாத வகையில் திரும்பி கொண்டாள்.

      மற்ற நால்வரை கண்டு, “எனக்கு மறுபடியும் வரன் பார்த்தாங்க. மாப்பிள்ளை வீடு இங்க தான் மந்தவெளி பக்கம் செட்டானா அடுத்த முகூர்த்தத்துல திருமணம்.” என்றாள்.

     நால்வரும் ஒருவருக்கொருவர் பார்த்து முடிக்க, அட்சரன் எழுந்து அறைக்குள் சென்றான்.

     ‘ரூமுக்கு போயிட்டார்’ என்றதும் சோகமாக நடையை கட்டினாள்.

    அலுவலகம் செல்ல மற்றவர்களும் புறப்பட்டதால் அட்சரன் சென்றதை யாருமே கவனிக்கவில்லை.

    நால்வரிடமும் விடைப்பெற்று அவள் இருப்பிடம் வர, நிலாவோ “உங்க வீட்டுக்காரர் சாப்பிட்டாரா.” என்று கேட்க, “போங்க அண்ணி எங்க சாப்பிட்டார்? இங்க ஏன் அடிக்கடி வர்றனு கோபமா சுத்தறார்.

   கல்யாணமாகி ஒரு மாசம் முடியுது. அட்லிஸ்ட் கொஞ்சலா பேசலாம்ல. எப்ப பாரு ஒரு சிந்தனை. இது வேலைக்கு ஆகாது அண்ணி… அவரிடம் பேசி சேர்ந்து வாழணும். அம்மா வேற இப்ப போன் போட்டாலே விசனமா பேசுது.

   எனக்கும் அவரை எட்டி நின்னு பார்க்க கஷ்டமா இருக்கு. உங்களை மாதிரி வாழணும். பாருங்க அண்ணா ஆபிஸ் போனா அன்னிக்கு ஓடியாடி சமைச்சி அனுப்பறிங்க. வீட்ல இருந்தா என்னங்க வேணும் ஏதுங்க வேண்டும்னு கேட்டு கேட்டு சமைக்கிறிங்க. ஏதோ அந்த பேச்சுல கூடவேயிருக்குற பீல்ல உயிரோட்டம் இருக்கு.

    அவர் அங்க நான் இங்க. என்னவோ மாதிரி இருக்கு. எல்லா பிரெண்ட்ஸையும் கட் பண்ணிட்டு என்னோட வாழ என்னவாம்.

     இன்னிக்கு அவரை சந்தித்து கேட்டுடலாம்னு இருக்கேன். மதியத்துக்கு மேல அவர் ஆபிஸுக்கு  சொல்லாம கொள்ளாம போய் கேட்டுடணும். போன் போட்டு வரவானு கேட்டா ‘வேண்டாம்’ என்று பேசுவார்” என்று சோகமாய் கூறியவளை, “ம்ம் ஒரு தடவை பேசி பாரு” என்று நிலாவும் தடையேதும் கூறாது அகன்றாள்.

       அட்சரன் காரில் அவனின் நண்பர்கள் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான். எப்படியும் அட்சரன் அலுவலகம் செல்வதற்கு முன்பாகவே மற்றவர்கள் இறங்கி அவர்கள் அலுவலகம் செல்வதால் அட்சரன் போகும் போதே கிளம்பி தயாராகி வந்திடுவார்கள்.

  எப்பொழுதும் இது வாடிக்கை. வீட்டை மட்டும் தான் ஷேர் செய்வார்கள். என்றாவது ஒரு நாள் இரவு மட்டும் சேர்ந்து சமைப்பார்கள். மற்றபடி இரவு உணவு வழக்கமாய் ஒரு ஹோட்டலில் சாப்பிட செல்வார்கள்.

   காலை மாலை மட்டும் அவரவர் ஆபிஸ் கேண்டீனில் சாப்பிடுவதும்  வழக்கம். பெரும்பாலும் பணத்திற்கு ஏற்றவாறு உணவு தரமாய் கிடைத்துவிடும். என்ன அளவு தான் சற்று குறைவாக தோன்றும் அப்பொழுது கூடுதலாக ஆர்டர் எடுத்து உண்பார்கள்.

      அட்சரனும் அவ்வாறு தான் மதிய உணவிற்காக வெளியேறும் நேரத்திற்கு காத்திருக்க, “நான் உங்களை உடனடியா பார்க்கணும். உங்க ஆபிஸுக்கு கீழே லாபில வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.
    அட்சரன் அவசரமாய் போனில் அழைத்தான்.
  
    “விளையாடாதே எங்க இருக்க மேகா?” என்றான் அட்சரன்.

   உங்க ஆபிஸ்ல கீழே ஒரு வாட்டர் பால்ஸ் இருக்கே அதுக்கு பக்கத்துல” என்றதும் அட்சரன் தலையிலடிப்பது போனில் கேட்டது.

     “அங்கயே இரு” என்றவன் சுற்றி முற்றி பார்த்துவிட்டு, வேகயெட்டுக்கள் வைத்து வர லிப்ட் கதவு மூடிக்கொண்டது.

     லிப்ட் வர காத்திருக்க பிடிக்காமல் படியில் மடமடவென நடையிட்டான்.
  
   அவன் கால்கள் குதிரை விட வேகமாய் வந்து சேர்ந்தது.

     மேகாவை கண்டவன், “அறிவிருக்காடி உன்னை யாரு இங்க வரச்சொன்னா.?” என்று அவளின் கையை பிடித்து இழுத்து வெளியே வந்தான்.
 
      “போங்க… எப்ப பாரு கிட்ட நெருங்க விடாமா தள்ளி தள்ளிப்போனு.

    இங்க பாருங்க இந்த தாலி நீங்க தானே கட்டினிங்க” என்று சுடிதாரிலிருந்து எடுத்து காட்டினாள்.

    “என்ன உனக்கு பிரச்சனை?” என்றான் அட்சரன்.

     “நீங்க தான் பிரச்சனை. எங்கம்மா போன் போடறப்ப எல்லாம் அழுவுது. மாப்பிள்ளை கூட எப்ப போய் தங்குவ. புருஷன் பொண்டாட்டியா எப்ப வீட்டுக்கு வருவிங்கனு கேட்டு தொல்லை பண்ணறாங்க.

       நான் தான் உங்க மனைவி என்று என்னை உங்க பிரெண்டிடம் அறிமுகப்படுத்தி எல்லாரையும் வெளியே அனுப்புங்க. 

    “ஒருத்தனுக்காக மத்தவங்களை கஷ்டப்படுத்த முடியாது மேகா.” என்று அட்சரன் கூறினான்.
  
      “அப்ப நான் கஷ்டப்படணுமா. கால்யாணமாகி ஒரு மாதம் ஆகுது. என்னிடம் சிரிச்சி பேச நேரமிருக்கா. எப்ப பாரு உங்க பிரெண்ட்ஸ் கூடவே சுத்தறிங்க.

   இங்க பாருங்க நான் உங்களுக்கு வாங்கிட்டு வந்த கிப்ட். எனக்கு அப்படி ஏதாவது ஒன்னு வாங்கி தர தோனுதா. கிப்ட் வேண்டாம்… என்னிடம் முதல்ல பேசறிங்களா. போன் போட்டாலே கட் பண்ணிடறிங்க. சரி வாட்ஸப்ல பேசலாம்ல… உங்க ரூமுக்குள்ளயும் யாராவது வர்றாங்களா என்ன.” என்று கடுகடுத்தாள்.

     “தப்பு தான் தாயே. இனி தினமும் ரூமுக்கு போயிட்டு குட்மார்னிங் குட்நைட் அனுப்பறேன். கூடவே சாப்பிட்டியா தூங்கனியா என்ன பண்ணற ஏது பண்ணறனு வரிசையா எழுதி அனுப்பறேன் போதுமா. இப்ப நடையை கட்டு” என்று கடுப்படித்தான்.

     “நான் உன்னை தேடி கிப்ட் எடுத்துட்டு இவ்ளோ தூரம் வந்திருக்கேன். சென்னை பழக்கமில்லாத இடம் வேற. என்னை சாப்பிட வைக்காம போ போனு தள்ளுறிங்க. பசியோட நிலா அக்கா வீட்ல சாப்பிட சொல்லிறிங்களா. காலையில அவரோட மதியம் சாப்பிட்டுக்கறேன்னு ஆசையா சொல்லிட்டு கிளம்பினேன்.” என்றவள் அழும் நிலைக்கு வந்து நின்றாள்.

       அட்சரனோ தலையை கோதி சுற்றி முற்றி பார்த்து நிற்க, மேகாவோ நிதானமாய் அழுகையோடு நிமிர்ந்து ”உங்களுக்கும் சாப்பிடுற டைம் தானே” என்றவள் பின்னால் இருந்த பாலாவை கண்டு மிரண்டாள்.

     “அட்சரன் அட்சரன் நம்ம வாழ்க்கையை கெடுக்கறது இவனா இருப்பானோ?” என்று பாலாவை சுட்டிக் காட்டினாள்.

    “என்னடா நடக்குது இங்க?” என்று பாலா வரவும், “சே இவன் இல்லை.” என்றவன் பாலாவிடம் நானே யாரிடமாவது சொல்லணும்னு தயங்கினேன் டா. இவ என் ஓய்ப்” என்று அட்சரன் மேகாவை அறிமுகப்படுத்தினான்.
   
     “என்னங்க அவன் இவனா இருக்க போறான்.” என்று கூறி கண்ணில் பயந்து நின்றாள்.

    “அவன் இவன் இல்லை. பாலா வா சாப்பிட்டுட்டே சொல்லறேன்” என்று அழைத்து சென்றான். பாலா அதிர்ந்தவனாய் பின் தொடர்ந்தான்.

     பாலா மேகா அட்சரன் மூவரும் கேண்டீனில் சாப்பிட அமர்ந்தனர்.

    “என்னடா கல்யாணம் பண்ணிட்டனு சொல்லற. பிறகு ஏன் இவங்க நம்ம பக்கத்து வீட்ல இருக்காங்க. எப்ப கல்யாணம் பண்ணின. ஏன் பிரெண்ட்ஸ் எங்ககிட்ட கூட சொல்லலை.” என்று வினா தொடுக்கவும், அட்சரன் கூற ஆரம்பித்தான்.

      “பாலா…. இப்ப நாம பேசறது மத்த பிரெண்ட்ஸ்கு தெரிய வேண்டாம்.

  நான் இங்கயே வேலை பார்க்கறதுல அப்பாவுக்கு விரும்பமில்லைனு தெரியும்ல” என்றதும் ஆமென்று தலையசைத்தான்.

    ” அப்பா என்னிடம் பேசறது இல்லை. இதுல அப்பா எனக்கு மேகாவை பொண்ணு பார்த்து போட்டோ அனுப்பி பிடிச்சிருந்தா போன் பண்ணு. உன் மேல இருக்கற கோபத்தை மறந்து கல்யாண வேலை பார்ப்பேன்.’னு அப்பா லெட்டர் போட்டிருக்கார். பதில் வர வரை அம்மாவிடம் எனக்கு போன்ல லெட்டர் பத்தி மூச்சுவிடாதேனு சொல்லிட்டாங்க.

    அம்மாவும் அப்பாவும் பிள்ளையும் பேசி முடிவெடுத்து பிறகு பேசிக்கலாம்னு போன்ல மேகா போட்டோ பத்தியோ திருமணத்தை பற்றியோ பேசலை.

     இங்க மேகா போட்டோ வந்த கொரியரை நான் வாங்கலை. என் பெயர் போட்டு நம்ம பிரெண்ட்ஸில் யாரோ வாங்கியிருக்காங்க. வாங்கியதை என்னிடம் மறைச்சி லெட்டரை படிச்சி எனக்கு இந்த பொண்ணு பிடிக்கலை. என்னிடம் கல்யாணம் பற்றி பேசாதிங்க. அப்படி போன்ல கேட்டா இனி ஜென்மத்துக்கும் ஊருக்கு வரமாட்டேனு இமிடியட்டா பதில் கொரியர் அனுப்பியிருக்கான். அதுவும் என் கையெழுத்து மாதிரியே.

    அப்பா அம்மாவுக்கு என் மேல கோபம். அதனால அதை அப்படியே வச்சிட்டு மேகாவோட கல்யாணத்தை அவங்களா பேசி வச்சிட்டு திடுதிடுப்புனு நான் டிரைனிங் போற நேரமா கால் பண்ணி ஊருக்கு வரவழைச்சி மேகா கழுத்துல தாலி கட்ட வச்சிட்டாங்க.

    எனக்கு மேகாவை பிடிச்சிருந்தது. அதனால கல்யாணத்தை  நிறுத்தலை. ஆனா ஏன் இப்படி பண்ணினிங்கனு கேட்க, என் பெயர்ல அப்பா போட்ட லெட்டர், நான் போட்டதா வந்த லெட்டர் காட்டி திட்டினாங்க.

   அதனால தான் கமுக்கமா திருமணத்தை வச்சதா அப்பா கோபமா பேசினார்.
 
       நான் ஏன் அப்பா என் கல்யாணத்தை நிறுத்த போறேன். எனக்கு மேகாவை பிடிச்சிருக்கறப்பனு சொல்ல அப்ப யார் இந்த லெட்டர் போட்டதுனு கேட்டார்.

   எனக்கு ஷாகிங் என் கையெழுத்து. என் வாழ்க்கையோட லைப் பார்ட்னரை செலக்ட் பண்ணற விஷயத்துல யார் இப்படி செய்தா? என்ற கேள்வி.

   அதுவும் கூடவேயிருக்கற நண்பர்களில் ஒருத்தன். அவனிடம் என்ன காரணம் ஏதுனு தெரிந்து புரிந்து க்ளியர் பண்ணிட்டு கூப்பிட நினைச்சி தனியா விட்டுட்டு வந்தேன்.

    இவளை இங்க வரவேண்டாம்னு சொன்னா, என் பேச்சை கேட்க இங்க நிலாவுக்கு தூரத்து சொந்தம்னு வந்து நின்னுட்டா.” என்று அட்சரன் கூறவும் பாலா அதிர்ந்தான்.

     “என்னடா சொல்லற நம்ம பிரெண்ட்ல ஒருத்தனா. டேய் எல்லாரும் காலேஜ்ல இருந்து இப்ப வேலைக்கு போறவரை எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னா தானே மச்சான் பழகறோம். யாரா இருக்கும்?” என்றதும் “தெரியலை எப்படியும் தானா வெளியே வரட்டும்னு காத்திருக்கேன் டா.” என்றான் அட்சரன்.

   பலத்த அமைதியில் உணவை விழுங்கினார்கள். மேகா மட்டும் அட்சரனின் கையை சுரண்டி “ஏங்க இவரா இருந்தா என்னப் பண்ணறது? இவர் தான் இங்கயும் வந்துட்டார்” என்று விழித்தாள்.

      “ஏங்க… சிஸ்டர்.. அநியாயம் பண்ணாதிங்க. நானும் அவனும் ஒரே ஆபிஸ். அப்ப கூடவே தான் இருப்பேன்.” என்று அலறாத குறையாக பாலா பேசினான்.

     “சேசே பாலா இல்லை அவன் வேற” என்று கூறவும் பாலா தன் நண்பனை புருவம் சுருக்கி பார்த்தான்.

     “சரி மேகா… முதல்ல இங்கிருந்து கிளம்பு. நேரத்துக்கு போ கேப் புக் பண்ணறேன்” என்று சாப்பிட்டு வாயை துடைத்து புக் செய்தான்.

     “கை கூட துடைக்கலை. என்னை அனுப்பறதிலேயே இருங்க.” என்று கூறி கவலையாய் கையை துடைக்க செல்ல, யாருமற்ற சாலை என்றதும் அவளின் கையை பிடித்து கையில் முத்தமிட்டான். 

    “அச்சு.” என்று மகிழ, “இப்ப துடைக்க வேண்டியதில்லை.” என்று கண் சிமிட்டினான்.

     “அச்சு.” என்றவள் அவனை கட்டிக்கொண்டு, இதான் பஸ்ட் கிஸ் தெரியுமா. ஆனா ரோட்டுல ஒரு செகண்ட் தந்துட்ட” என்று ஆனந்த அதிர்வில் கண்ணிர் வழியவிட்டாள்.

    “சரி கேப் வந்துடுச்சு. போயிட்டு மெஸேஜ் பண்ணு.” என்று கூறி கையசைத்து வழியனுப்பினான்.

  பாலா நண்பனின் வருகைக்காக காத்திருந்தவன். “யார் டா அவன். உன் வீட்ல இருந்துட்டு உன் கூட தினமும் கார்ல வந்துட்டும் போயிட்டும், உன்னோடவே சுத்திட்டு நண்பனா மாறி முதுகுல குத்தறவன்? மச்சான் யாருனு தெரியலைனு மட்டும் சொல்லாதே. நீ எல்லாம் கண்டுபிடிச்சிருப்ப?” என்று கேட்டதும் அட்சரன் புன்னகை உதிர்த்தான்.
   
    “ம்ம்… அவன் யாருனு இங்க வந்து கொரியர் ஆபிஸுக்கு போன அன்னிக்கே தெரிந்துக்கிட்டேன்.” என்றவன் அலுவலகம் நோக்கி நடந்தான் அட்சரன்.

   பாலா கூடவே குழப்பமாய் வந்து ”யார் டா அவன்?” என்று வழிமறித்தான்.

2 thoughts on “விலகும் நானே விரும்புகிறேன்-5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *