Skip to content
Home » அருளுடைமை-25

அருளுடைமை-25

அறத்துபால் | துறவறவியல்| அருளுடைமை-25

குறள்-241

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள

பொருள்களாகிய செல்வங்கள்‌ இழிந்தவரிடத்திலும்‌ உள்ளன; (உயர்ந்தவரிடத்தில்‌ மட்டும்‌ உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில்‌ சிறந்த செல்வமாகும்‌.

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  
குறள்-242

நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை

நல்ல வழியால்‌ ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்‌. பல வழிகளால்‌ ஆராய்ந்து கண்டாலும்‌ அருளே வாழ்க்கைக்குத்‌ துணையாக உள்ளது.

குறள்-243

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்

அறியாமையாகிய இருள்‌ பொருந்திய துன்ப உலகில்‌ இருந்து வாழும்‌ வாழ்க்கை, அருள்‌ பொருந்திய நெஞ்சம்‌ உடையவர்களுக்கு இல்லை.

குறள்-244

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை

தன்‌ உயிரின்‌ பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில்‌ நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப்‌ போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.

குறள்-245

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி

அருளுடையவராக வாழ்கின்றவர்க்குத்‌ துன்பம்‌ இல்லை: காற்று இயங்குகின்ற வளம்‌ பொருந்திய பெரிய உலகத்தில்‌ வாழ்வோரே இதற்குச்‌ சான்று ஆவர்‌.

குறள்-246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்

அருள்‌ இல்லாதவராய்‌ அறமல்லாதவைகளைச்‌ செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித்‌ தம்‌ வாழ்க்கையின்‌ குறிக்கோளை மறந்தவர்‌ என்பர்‌.

குறள்-247

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

பொருள்‌ இலாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறுபோல, உயிர்களிடத்தில்‌ அருள்‌ இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்‌.

குறள்-248

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது

பொருள்‌ இல்லாதவர்‌ ஒரு காலத்தில்‌ வளம்‌ பெற்று விளங்குவர்‌; அருள்‌ இல்லாதவர்‌ வாழ்க்கையின்‌ பயன்‌ அற்றவரே; அவர்‌ ஒரு காலத்திலும்‌ சிறந்து விளங்குதல்‌ இல்லை.

குறள்-249

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்

அருள்‌ மேற்கொள்ளாதவன்‌ செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால்‌, அஃது அறிவு தெளியாதவன்‌ ஒரு நூலின்‌ உண்மைப்‌ பொருளைக்‌ கண்டாற்‌ போன்றது.

குறள்-250

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து

(அருள்‌ இல்லாதவன்‌) தன்னைவிட மெலிந்தவர்மேல்‌ துன்புறுத்தச்‌ செல்லும்போது, தன்னைவிட வலியவரின்‌ முன்‌ தான்‌ அஞ்சி நிற்கும்‌ நிலைமையை நினைக்க வேண்டும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *