Skip to content
Home » அழுக்காறாமை-17

அழுக்காறாமை-17

திருக்குறள்-அறத்துப்பால் | இல்லறவியல்

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

குறள்-161

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு

ஒருவன்‌ தன்‌ நெஞ்சில்‌ பொறாமை இல்லாமல்‌ வாழும்‌ இயல்பைத்‌ தனக்கு உரிய ஒழுக்கநெறியாகக்‌ கொண்டு போற்ற வேண்டும்‌.

குறள்-162

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

யாரிடத்திலும்‌ பொறாமை இல்லாதிருக்கப்‌ பெற்றால்‌, ஒருவன்‌ பெறத்தக்க மேம்பாடான பேறுகளில்‌ அதற்கு ஒப்பானது வேறொன்றும்‌ இல்லை.

குறள்-163

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்

தனக்கு அறமும்‌ ஆக்கமும்‌ விரும்பாதவன்‌ என்று கருதத்தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக்‌ கண்டு மகிழாமல்‌ பொறாமைப்படுவான்‌.

குறள்-164

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து

பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில்‌ துன்பம்‌ ஏற்படுதலை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச்‌ செய்யார்‌ அறிவடையோர்‌.

குறள்-165

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது

பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும்‌, பகைவர்‌ தீங்குசெய்யத்‌ தவறினாலும்‌ தவறாமல்‌ கேட்டைத்‌ தருவது அது.

குறள்-166

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்

பிறர்க்கு உதவியாகக்‌ கொடுக்கப்படும்‌ பொருளைக்‌ கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம்‌, உடையும்‌ உணவும்‌ இல்லாமல்‌ கெடும்‌.

குறள்-167

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

பொறாமை உடையவனைத்‌ திருமகள்‌ கண்டு பொறாமைப்பட்டுத்‌ தன்‌ தமக்கைக்கு அவனைக்‌ காட்டி நீங்கி விடுவாள்‌.

குறள்-168

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்

பொறாமை என்று கூறப்படும்‌ ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தையும்‌ கெடுத்துத்‌ தீய வழியில்‌ அவனைச்‌ செலுத்திவிடும்‌.

குறள்-169

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும்‌, பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும்‌ ஆராயத்‌ தக்கவை.

குறள்-170

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்

பொறாமைப்பட்டுப்‌ பெருமையுற்றவரும்‌ உலகத்தில்‌ இல்லை; பொறாமை இல்லாதவராய்‌ மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும்‌ இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *