அறத்துபால் | துறவறவியல்|அவாவறுத்தல்-37
குறள்:361
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்று கூறுவர்.
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
குறள்:362
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்
ஒருவன் ஒன்றை விரும்புவதானால், பிறவா நிலைமையை விரும்பவேண்டும்; அது, அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
குறள்:363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்
அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை; வேறு எங்கும் அதற்கு நிகரான ஒன்று இல்லை.
குறள்:364
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்
தூயநிலை என்று கூறப்படுவது அவா இல்லாதிருத்தலே யாகும்; அவா அற்ற அத்தன்மை, மெய்ப் பொருளை விரும்புவதால் உண்டாகும்.
குறள்:365
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்
பற்றற்றவர் என்று கூறப்படுவோர் அவா அற்றவரே; அவா அறாத மற்றவர், அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.
குறள்:366
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா
ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம்; ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டு கெடுத்து வஞ்சிப்பது அவாவே.
குறள்:367
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்
ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.
குறள்:368
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்
அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும்; அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும்மேலும் ஒழியாமல் வரும்.
குறள்:369
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்
அவா என்றுசொல்லப் படுகின்ற துன்பங்களுள் பொல்லாத துன்பம் கெடுமானால் இவ்வுலகிலும் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.
குறள்:370
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்
ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.