Skip to content
Home » இன்னாசெய்யாமை-32

இன்னாசெய்யாமை-32

அறத்துபால் | துறவறவியல்| இன்னாசெய்யாமை

குறள்:311

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்

சிறப்பைத்‌ தருகின்ற பெருஞ்‌ செல்வத்தைப்‌ பெறுவதாக இருந்தாலும்‌, பிறர்க்குத்‌ துன்பம்‌ செய்யாதிருத்தலே மாசற்றவரின்‌ கொள்கையாம்‌.

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  
குறள்:312

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்

ஒருவன்‌ கறுவுகொண்டு துன்பம்‌ செய்த போதிலும்‌ அவனுக்குத்‌ திரும்பத்‌ துன்பம்‌ செய்யாதிருத்தலே மாசற்றவரின்‌ கொள்கையாம்‌.

குறள்:313

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்

தான்‌ ஒன்றும்‌ செய்யாதிருக்கத்‌ தனக்குத்‌ தீங்கு செய்தவர்க்கும்‌ துன்பமானவற்றைச்‌ செய்தால்‌, செய்த பிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்‌.

குறள்:314

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

இன்னா செய்தவரைத்‌ தண்டித்தல்‌, அவரே நாணும்‌ படியாக அவர்க்கு நல்லுதவி செய்து, அவருடைய தீமையையும்‌ நன்மையயும்‌ மறந்துவிடுதலாகும்‌.

குறள்:315

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை

மற்ற உயிரின்‌ துன்பத்தைத்‌ தன்‌ துன்பம்போல்‌ கருதிக்‌ காப்பாற்றாவிட்டால்‌, பெற்றுள்ள அறிவினால்‌ ஆகும்‌ பயன்‌ உண்டோ?

குறள்:316

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்

ஒருவன்‌ துன்பமானவை என்று தன்‌ வாழ்க்கையில்‌ கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில்‌ செய்யாமல்‌ தவிர்க்க வேண்டும்‌.

குறள்:317

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை

எவ்வளவு சிறியதாயினும்‌ எக்காலத்திலும்‌ எவரிடத்திலும்‌ மனத்தால்‌ எண்ணி உண்டாகின்ற துன்பச்‌ செயல்களைச்‌ செய்யாதிருத்தலே சிறந்தது.

குறள்:318

தன்னயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்

தன்‌ உயிர்க்குத்‌ துன்ப மானவை இவை என்று உணர்ந்தவன்‌, மற்ற உயிர்களுக்கு அத்துன்பங்களைச்‌ செய்தல்‌ என்ன காரணத்தாலோ?

குறள்:319

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்

முற்பகலில்‌ மற்றவர்க்குத்‌ துன்பமானவற்றைச்‌ செய்தால்‌ அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள்‌ தாமாகவே வந்து சேரும்‌.

குறள்:320

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்

துன்பம்‌ எல்லாம்‌ துன்பம்‌ செய்தவரையே சார்வன. ஆகையால்‌ துன்பம்‌ இல்லாமல்‌ வாழ்தலை விரும்புகின்றவர்‌, பிறர்க்குத்‌ துன்பம்‌ செய்யார்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *