Skip to content
Home » எந்தன் உயிரமுதே-11

எந்தன் உயிரமுதே-11

அத்தியாயம்-11

Thank you for reading this post, don't forget to subscribe!

   விஷ்ணு எம்.பி.ஏ எக்ஸாம் எழுதி முடித்த கையோடு ஈஸ்வரன் மூலமாக பேங்கில் லோன் எடுத்து, பெங்களூரில் ‘வசுந்தரா மெஸ்’ ‘வசுந்தரா காபி கஃப்பே’ ஆரம்பித்தான். முதலில் ஈஸ்வரன் உதவியால் லோன் வாங்க வேண்டுமா என்று தவிர்க்க பார்த்தான். ஆனால் சில நேரம் சாட்சிகாரனை விட சண்டைக்காரன் தேவலை என்று தோன்றும் நிலையில் விஷ்ணு முடிவெடுத்தான்.

   விபத்து நடந்தப்பிறகு விஷ்ணுவின் ஜாதகம் பார்த்தப்பொழுது, பெரிய கண்டம் தாண்டிய நபராக, விஷ்ணுவை ஆருடம் பார்த்தவர் விவரித்தார். அதன்‌ தொடர்ச்சி தொழில் சம்பந்தமான ஆருடம் கேட்கப்பட, உணவு முறையில் பணத்தை போட்டால் அந்த தொழில் அமோகமாக லாபமீட்டும் என்று கூற, விஷ்ணுவிற்கு உதித்த ஐடியா இது.

  கல்லூரி காலத்தில் பெங்களூரில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் ஆரோக்கியமான உணவு கிடைப்பது அரிதாக இருந்தது.
  பீட்சா, பர்கர், பிரியாணி என்று பல பெரிய பெரிய கடைகள் இருந்தும் கூட்டம் அலைமோத தென்னிந்திய சுகாதார உணவை நாடிய இளைஞர்களை யோசித்து ஆரம்பித்தான்.

   பெரும்பாலும் பெங்களூர் என்றாலே மென்பொருள் நிறுவனங்கள் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இளைஞன் இளைஞிகள் அதிகரிக்க, அவர்களுக்கு சரியான ஆரோக்கியமான உணவுகள் கிடைப்பது கேள்விக்குரியான இடத்தில் தன் தொழிலை நிறுவ எண்ணினான்.

  இது சரி வருமா வராதா என்று அவன் யோசிக்கும் முன்‌ இளங்கோவோ, ‘உங்க தாத்தாவுக்கு தாத்தா எல்லாம் ‘வசந்தபவன்’ மாதிரி ஹோட்டல் வச்சிருந்தவங்க. காலம் போன போக்குல நான் வேற பிசினஸ் பார்த்தது. நீ திரும்ப இங்க புட் பிசினஸ் ஆரம்பிக்கறதும் நல்லது’ என்றார். தன் வீட்டில் பணிப்புரியும் ஆட்கள் வேறு தங்களை சுற்றி வந்து சம்பளம் அதிகம் வேண்டாம். உங்களுக்கு வேலை செய்கின்றோம் என்று வேறு வந்து வந்து விஸ்வாசமாய் நிற்க அவர்களை பணிக்கு நிரப்பினான்.

   பெங்களூர் தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் கமலியை காதலித்த இடத்திலேயே கைப்பிடித்து வாழ வேண்டும் என்ற ஆசை. அதோடு தன் வீட்டை, மருத்துவத்திற்கு செலவு செய்ய விற்றதால், ஈஸ்வரன் வீட்டில் வாடகைக்கு இருப்பதும் உறுத்தியது.

   விரைவில் அந்த இடத்திலிருந்து கமலியை இங்கு வரவழைப்பது போல தாய் தந்தையரையும் கூடவே அழைத்துக் கொள்ளும் திட்டம் உண்டு.

   தொழிலை ஆரம்பித்த அன்று எல்லோரையும் திறப்பு விழாவிற்கு  அழைத்தான்.

      கமலி வீட்டிலிருந்து ரங்கநாதன் சுதா அவர்கள் குழந்தை ஐஸ்வர்யா மட்டும் வந்திருந்தனர். ரங்கநாதனின் தாய் தெய்வானை மற்றும் தந்தை சிதம்பரம் முகம் திருப்பி கொண்டார்கள்.

   விஷ்ணுவின் நண்பன் ஆனந்த்  கமலி தோழி கார்த்திகா வந்தார்கள்.

   ஈஸ்வரன் தாய் திவ்யபாரதி, அண்ணன் மகள் நந்தினி இருவரும் விஷ்ணுவின் பெற்றோரான வசுந்தரா காரிலேயே வந்து சேர்ந்தார்கள்.

     மகனின் மருத்துவத்தில் இளங்கோவிற்கு மிஞ்சியது இந்த கார் மட்டுமே.

   தன் அன்னை வசுந்தரா கையால் திறப்பு விழாவை நடத்தி முடிக்க, அன்று முழுக்க குதுகலமாய் மாறினான்.

  ஈஸ்வரன் நடுவே போனில் மட்டும் விஷ்ணுவுக்கு வாழ்த்தினான். திறப்பு விழாவுக்கு வந்து கமலியை தன்னை மறந்து ரசித்து, இருக்கும் நற்பெயரை கெடுத்துக்க வேண்டாமென்ற முடிவு. அவனுக்கு நாட்கள் தேவைப்பட்டது கமலியை இயல்பாய் பார்த்து பேசி நடமாட. 

    கார்த்திகா கமலியோடு ஒட்டி பேசி கொண்டிருக்க, மூக்கு வேர்த்திட விஷ்ணு வத்தான்.

   “லோட்டஸ் பேபி இவளிடம் பேசக்கூடாது என்று எத்தனை முறை சொல்லறது கேட்க மாட்டியா?” என்று சிடுசிடுத்தான்.

  “விச்சு… ஏன் இப்படி பேசற. என்னோட பெஸ்ட் பிரெண்ட் கார்த்திகா. நீ இப்படி காரணமேயில்லாம அவளை இன்சல்ட் பண்ணிட்டே இருக்க” என்று கவலைக்கொள்ள, விஷ்ணுவோ, “காரணமேயில்லாமல? ஏய் அவ எனக்கு ரூட் விட்டா. அது ஒர்க்-அவுட் ஆகலை‌. நான் உன்னை விரும்பியதும், மேடம் என்‌மேல காண்டுல சுத்தினா.
   இதெல்லாம் தெரியாம அவளுக்கு  சப்போர்ட் பண்ணாத. என்னை பார்க்க நீ வர்றப்ப எல்லாம், இவளை கூட்டிட்டு வருவ. அப்ப என்னை குறுகுறுன்னு பார்ப்பா. அதனால் தான் நான் அவாய்ட் பண்ணியது.

இதுல நான் செத்துடுவேன்னு ஈஸ்வரனை கட்டிக்க சொல்லி உன்னை பிரையின் வாஷ் பண்ணிருக்கா. இவ ஒரு நீலாம்பரி” என்று கூறவும் கார்த்திகா மௌவுனமாய் தலைகவிழ்ந்தாள்.

   “விச்சு… அவ உன்னை ரசிப்பது எனக்கு தெரியும். ஏன் அவ உன்னை விரும்பியது கூட தெரியும். ஆனா நீ சொன்ன மாதிரி நீலாம்பரியா அவ என்னைக்கும் நடக்கலை.

   சொல்லப்போன நீ இறந்ததா கூட எனக்கு சொல்லி என்னை காயப்படுத்தலை‌. உனக்காக அவ தான்டா அழுதது.” என்று தோளை தீண்ட, கார்த்திகா கமலி கையை பிடித்து தேம்பினாள்.

    “உண்மை கமலி. பிடிச்சவன் இறந்துட்டான்னு கேட்டு அதை தோழியான உன்னிடம் சொல்ல தைரியமில்லை.

  நானே என்னை தேற்றிக்கிட்டேன். ஆனந்த் தான் போன் பண்ணி ‘கமலிக்கு கல்யாணமாகலை. விஷ்ணு உயிரோட இருக்கான். அவன்‌ வீட்டுக்கு கீழ் போர்ஷனில் கமலி இருக்கா’னு என்னை திட்டவும் பைத்தியம் மாதிரி சிரிச்சேன். அப்பாடா விஷ்ணு உயிரோட இருக்கான் அது போதும் கடவுளேனு மனசு சந்தோஷப்பட்டுச்சு.” என்று பேசவும் கண்கள் தானாக கண்ணீரில் பளபளத்தது.

  விஷ்ணுவோ நைசாக நழுவியிருந்தான்.

   இந்த நீலாம்பரி கூட உண்மையாக அன்பு வைத்திருக்குமென்று கனவா கண்டான்.

   அதென்னவோ கமலி விஷ்ணு இருவரால் மற்றயிரு இதயங்கள், காதலில் விழுந்து கண்ணீரில் கரைந்து, கரை சேர்ந்திருகின்றார்கள்.

    விஷ்ணுவோ சிந்தனை வந்தவனாக “நீ வேணும்மின்னா ஈஸ்வரனை கல்யாணம் பண்ணிக்கோ‌. அவரும் உன்னை மாதிரி கமலியை விரும்பிட்டு கஷ்டப்படறார்” என்றான்.

  அடுத்த நொடி கார்த்திகாவோ, “அடச்சீ… அவர் எனக்கு அண்ணா முறையா பார்க்கறேன். உன் யோசனையில தீயை வைக்க, போடா அங்குட்டு” என்று எப்பவும் போல கத்த, “இவகூட இனியும் வச்சிக்காத பேபி. டேஞ்சரஸ் கேர்ள்” என்று ஓடினான்‌.

    கமலி அப்படி நினைக்காமல் இயல்பாய் கதைக்க ஆரம்பித்தாள். கார்த்திகாவோ ‘இவனை பத்திரமா பார்த்துக்கோ கமலி. சரியான இம்சை பிடிச்சவனா இருக்கான். இவனால் நம்ம பிரெண்ட்ஷிப் உடைஞ்சிட கூடாது.” என்று கட்டியணைத்து புறப்படுவதாக கூறினாள்.

  கமலியும் புன்னகையோடு தலையாட்டினாள்.

   ஒருவழியாக விஷ்ணு உரிமையாளராக அமர, வசுந்தரா மனம் நெகிழ்ந்தது.
   
  இனி விஷ்ணுவுக்கு திருமணம் பேசி கல்யாணம் நல்லபடியாக முடிந்துவிட்டால் கடமை முடிந்தது என்று எண்ணினார்.‌

   விஷ்ணு தான் மூன்று மாதம் தவணை கேட்டிருந்தான். அவன் ஆரம்பித்த இந்த ‘மெஸ், மற்றும் கஃப்பே’ நல்லபடியாக முன்னேற்றம் அடைந்தால் திருமணத்தை பேசுவோமென தடைப்படுத்தி இருந்தான்.

   இதற்கிடையே திவ்யபாரதியிடம் நந்தினி கனிவாக பழக விட்டு, பாட்டி ஆச்சி கூட்டணியை வலு சேர்த்தாள் கமலி.

   முன்பு ‘கமலி சித்தி அது வேணும் இது வேணும், இன்னிக்கு ஸ்கூல்ல என்ன நடந்துச்சு தெரியுமா?’ என்று இப்படி ஆரம்பித்து பெரிய கதையை கூறி முடிப்பாள்.

  இன்று பாட்டியிடம் தன் விருப்பு வெறுப்பை பகிர ஆரம்பித்து விட்டாள் நந்தினி.

  சின்ன பெண்ணும் வளருகின்றாளே. இந்த காலத்தில் குழந்தைகளுக்கு ஓரளவு சொல்லாமல் புரிகின்றது. கேர்டேக்கராக வந்த பெண்ணாக கமலியே உரைத்திட வேற்றுமை லேசாக எட்டி பார்த்தது. முன்பு அந்த வேற்றுமை இல்லை தன் சித்தப்பாவை மணக்கும் பெண் என்ற எண்ணம். பாட்டியும் வார்த்தைக்கு வார்த்தை சித்தி என்று விளிப்பாரே.

விஷ்ணு திருமணத்தை தள்ளி வைத்ததும் வசதியாக போனது.

இல்லையென்றால் நந்தினி மனம் என்ன பாடுபடுமோயென கமலியும் குழந்தையை எண்ணி தினமும் வருந்தப்படும் மனமுடையவளே. இன்று அதெல்லாம் நீங்கியது.

    ஈஸ்வரனுக்கு கூட ஒரு பெண் முடிவாகும் நிலையில் இருந்தது. ஈஸ்வரன் தான் கமலி திருமணத்திற்கு வரும் நேரம் அந்த பெண்ணை நேரில் பார்க்கின்றேன் என உரைத்தான்.

   திவ்யபாரதி போனில் வலுக்கட்டாயமாக புகைப்படத்தை அனுப்பியும் கூட தரவிறக்கம் செய்யாமல் இருந்தான்.

    விஷ்ணு கமலி எதிர்பார்த்த திருமண நன்னாளும் வந்தது.

    ஆம். திருமண நாளை விஷ்ணு வீட்டில் குறித்து விட்டனர்.

   பள்ளி விடுமுறைக்கு குழந்தை ஐஸ்வர்யாவை அழைத்து செல்ல தெய்வானை சிதம்பரம் வந்து நிற்க, சம்பிரதாயத்திற்காக ஆவடிக்கு வந்த இளங்கோ மற்றும் வசுந்தரா இரு மூத்த தம்பதிகளும் திருமண நாளை பேசி முடித்தார்கள். விஷ்ணுவின் மெஸ் மற்றும் கஃப்பே இரண்டும் அவனை போலவே வளர்ந்தது‌.

  அதில் விஷ்ணு பெருமைப்பட்டான்‌. இந்தளவு தொழில் உக்தியை நல்லபடியாக தொடர்ந்தால் போதுமென்று கற்றுக்கொண்டான்.

   ‘மீன் குஞ்சிக்கு நீந்த கற்றுக் கொடுக்க வேண்டுமா?!’ அவன் மூதாதையர் தொழிலை அவன் நவீனமான முறையில் முன்னேற்றத்தில் கால் பதித்தான். முன்பு தன் வீட்டில் பணிப்புரிந்த ஐவரை வேலைக்கு வைத்திருந்தான்.

   இன்று கூடுதலாக சற்று பெரிய பில்டிங்கில் கஃப்பே-வை மாற்றி ஆட்களை நிறைத்தான்.

   திருமணம் சென்னையில் என்பதால் அங்கே பரபரப்புக்கு பஞ்சமின்றி கலை கட்டியது.

     ஆவடியிலிருந்து மணப்பெண் வரவேண்டும். இங்கு விஷ்ணு விரைவாகவே மண்டபத்திற்கு கோர்ட் சூட் என்று தயாராகி வந்துவிட்டான்.

     இன்று ரிசப்ஷன் நாளை திருமணம் என்றதில் கமலிக்காக வாட்சை அடிக்கடி திருப்பி பார்த்தான்‌.

   “ஆனந்த்… மணி ஆறாகுது. அவங்க வேன்ல வந்துட்டு இருக்காங்க. பதட்டம் இல்லாம உன் பிரெண்டை உட்காரு சொல்லுடா.” என்றார் இளங்கோ.

   “அடப்போங்க அங்கிள். நாம சொல்றதை என்னைக்கு கேட்டிருக்கான்.” என்று ஆனந்த் கூற “அதுவும் சரிதான் கமலியிடமாவது அடங்கறானானு பார்ப்போம்’ என்று முனங்கினார் வசுந்தரா.

     விஷ்ணுவை தவிக்க விட்டு வேனிலிருந்து அழகோவியமாக லெகங்கா அணிந்து இறங்கினாள் கமலி. அவள் கூடவே கார்த்திகாவும் இணைந்திருந்தாள்.

   விஷ்ணு‌ படிக்கட்டில் உறைந்தவனாய் அவளை அளவிட, கமலியோ படிக்கட்டில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வந்தாள்.

கார்த்திகா விஷ்ணுவை நெருங்கவும், “கமலி அவர் போன் பண்ணறார். நான் பேசிட்டு வர்றேன். உன் விச்சு கூட நீ போ” என்று நழுவினாள்.

  கார்த்திகாவின் வீட்டில் அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை போனில் அழைத்ததால் அவளுமே தோழியை பேச அனுப்பிவிட்டு விஷ்ணுவின் விழிகளில் கலந்தாள்‌.

   ஏற்கனவே இதயத்தில் சிம்மாசனமிட்டு இருந்தவள், அவனருகே வரவும், ஆனந்த் விஷ்ணுவை உலுக்க, கையை பற்றி மேடைக்கு அழைத்து சென்றான்.

  அவர்களுக்கு பின்னால் கமலி அக்கா வீட்டு ஆட்கள் வந்து சேர்ந்தார்கள்.

  ஐஸூ வந்ததும் நந்தினியோடு விளையாட ஓடினாள்‌.

‌ திவ்யபாரதி நந்தினி இதே ஏரியா என்பதால் முதலிலேயே வந்துவிடும் சூழல் ஏற்பட, ஈஸ்வரனுக்கு கமலியை பேசியதை அறிந்தவர் தெரிந்தவர் எல்லாம் ‘இந்த பொண்ணு தானே ஈஸ்வரனுக்கு பேசியிருந்திங்க’ என்று செவியில் ஓட்டை போட்டனர்.

   ஒவ்வொருத்தரிடமும் சமாளிக்க திவ்யபாரதிக்கு நெஞ்சடைத்தது.

   வாசலை வாசலை ஏறிட்டு ஈஸ்வரனுக்காக காத்திருந்தார். அவன் வருவானா? என்ற எதிர்பார்ப்போடு தாயுள்ளம் தவித்தது.

  விஷ்ணு பெற்றோரும், கமலியின் அக்கா மாமாவும் வந்தவர்களை வரவேற்கும் மும்முரத்தில் இருந்தார்கள்.

  விஷ்ணுவோ தன்னருகே சின்ன இடை பளிச்சென்று தெரிய கமலி நிற்கவும், அவளை தீண்டி தன்பக்கம் இழுக்கும் ஆசையோடு ஏக்கமாய் கைகள் பரபரக்க நின்றான்.

   கமலிக்கு ‘திருமணம்’ என்ற பேச்செடுத்து விஷ்ணுவிடம் சண்டைப்போட்டு, பிரிந்து, ஈஸ்வரன் பொண்ணு பார்த்து சென்றது, நந்தினியை கேர்டேக்கராக பார்த்துக்கொள்வதாக முடிவெடுத்து விஷ்ணுவிற்காக காத்திருந்தது.

   விஷ்ணுவிற்கு விபத்து நேர்ந்து, அவன் தான் இருக்குமிடத்தில், மாடி போர்ஷனில் வந்தது, மீண்டும் பழைய நினைவை மீட்டியடுத்தி காதலை பெற்றோரிடம் உரைத்து, அவர்களிடம் அவகாசம் வாங்கி, கடை திறப்பு செய்து, உத்தியோகம் ஓரளவு  மேம்பட்டு, இன்று யாரின் மனம் நோகாமல் விஷ்ணு கரம் பற்றுவதை எண்ணி உவகை கொள்ளும் நேரம், ஈஸ்வரன் நினைவு வந்தது.

  விஷ்ணுவிடம், “ஈஸ்வரன் கல்யாணத்துக்கு வர்றேன்னு சொன்னாரா? பாவம்ங்க திவ்யா அத்தை அவர் வருகைக்காக காத்திருக்காங்க” என்று கேட்டாள்.

‌ “வர்றேன்னு சொன்னாரு. யூ டோண்ட் வொர்ரி கண்டிப்பா வருவார்” என்று சாந்தப்படுத்தினான் விஷ்ணு.

‌தொடரும்.

1 thought on “எந்தன் உயிரமுதே-11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *