அத்தியாயம்-7
Thank you for reading this post, don't forget to subscribe!தனக்கொரு மகள் இருந்து மணமுடித்தால் வரப்போகும் பெண் அக்குழந்தையை வேறொரு உறவாக கருதி விலகி நிறுத்திவிடுகின்ற இந்த உலகில். தன் அண்ணன் மகளை தனக்கு வரப்போகும் பெண் நன்றாக பார்த்து கொள்வாளா என்ற மாபெரும் கேள்விக் குறியோடு தான், விருப்பமில்லாமல் ஈஸ்வரன் கமலியை பெண் பார்க்க வந்தது.
அன்று கமலி விஷ்ணுவை பற்றி உரைத்ததும், ஈஸ்வரன் அவனாக திருமணத்தை மறுக்கின்றேன் என்று வாக்கு தந்து காதலுக்கு வாழ்த்து கூறி வந்தான்.
ஈஸ்வரனுக்கு நிச்சயம் இந்த வரன் இதோடு நின்றுவிடும் என்ற முடிவோடு திரும்பினான்.
வீட்டிற்கு வந்து மணக்க முடியாதென்ற உண்மையை நாகரீகமாக உரைத்தான்.
ரங்கநாதனின் தாய் தெய்வானை ஏன் எதற்கு என்று சண்டைப் போடாத குறையாக மல்லுக்கு நின்றார்.
வயசான அவரிடம் வாதம் செய்ய பிடிக்காமல், அதே நேரம் கமலியை மாட்டி விடாமல், சுதாவிடம் காரணம் உரைப்பதாக தெரிவித்தான்.
சுதாவிற்கு கணவர் மாமியார் மாமனாரை தவிர்த்து தன்னிடம் உரைப்பதாக கூறுகின்றாரே என்று கையை பிசைந்து ஈஸ்வரன் முன் வந்தார்.
”ஏங்க உங்க தங்கை ஒரு பையனை விரும்பறா. அவனை அளவுக்கு அதிகமாக நேசிக்கறா. உங்களிடம் அதை சொல்ல வந்தாங்க. நீங்க சட்டுன்னு இப்படி என்னை வரவச்சி பொண்ணு பார்க்க வைக்கவும், எப்படி சொல்லறதுன்னு திணறுறாங்க.” என்றான் ஈஸ்வரன்.
சுதாவோ ”கமலி இதுவரை யாரையும் விரும்பலை. என் தங்கையை தப்பா பேசாதிங்க” என்று இதுவரை கையை பிசைந்து தவித்தவர் வெடித்தார்.
ஈஸ்வரனோ ”இல்லைங்க உங்க தங்கையை தப்பா பேசி எனக்கென்ன அவசியம்? அவங்களே சொன்னாங்க. உங்க மாமனார் மாமியார் கணவர் எதிர்ல சொல்லி காயப்படுத்த வேண்டாம்னு தான் உங்களை தனியா அழைச்சி, இப்ப பேசிட்டு இருக்கேன்.’ என்றதும் சுதாவுக்கு சந்தேகம் தீராமல், ”என் தங்கையிடம் கேட்கிறேன்” என்று கூற, “கேட்டுக்கோங்க ஆனா தனியா கூப்பிட்டு கேளுங்க.” என்று ஆணித்தரமாக பேசினான்.
இப்படி ஆணித்தரமாக உரைக்க அவ்விடத்திலேயே தங்கை அப்படி காதலிக்கவில்லையென்று சுதா மனம் நிரூபிக்க முரண்டியது.
அதன் காரணமாக தங்கையின் தோழி கார்த்திகாவுக்கு அழைத்து விவரம் கேட்க எண்ணினார்.
“இங்க பாருங்க ஈஸ்வரன். என் தங்கையோட பிரெண்ட் கார்த்திகா இருக்கா. சின்ன கீறல் விழுந்தாலும் அவளுக்கு தெரியாம போகாது. அந்தளவு அவங்களுக்குள் நட்பு இருக்கு.
அவளுக்கு இப்ப, உங்க கண் எதிர்ல போன் போடறேன். ஸ்பீக்கர்ல பேசறேன்” என்று கூறி அதுபோலவே ஸ்பீக்கரை ஆன் செய்து காத்திருந்தார்.
ஈஸ்வரன் கையை கட்டி வேடிக்கை பார்த்தான்.
‘ஹலோ’ என்று கார்த்திகா குரல் கேட்டதும்,
‘ஹலோ கார்த்திகா.. நான் கமலியோட அக்கா சுதா பேசறேன்’ என்றதும் ‘சொல்லுங்க அக்கா. கமலி நல்லாயிருக்காளா?’ என்று நலம் விசாரித்தாள்.
”நல்லாயிருக்காம்மா.. கார்த்திகா உன்கிட்ட ஒன்னு கேட்டா தப்பா நினைக்காத, கமலி யாரையாவது விரும்பறாளா?” என்று தயக்கமாய் கேட்டார் சுதா.
சுதாவுக்கு கேட்டு விட்டு பதட்டம் கூடியது.
கார்த்திகாவோ, ”அக்கா… கமலி ஏதாவது புலம்பினாளா?” என்றதும் சுதாவுக்கு ஈஸ்வரன் கூறியது உண்மையோ என்ற படபடப்பு.
சுதாவுக்கு தங்கை நலனுக்காக எதுவென்றாலும் அறிந்துக்கொள்ள முடிவெடுத்தார். ”இல்லைம்மா என்னிடம் எதுவும் சொல்லலை. அவளோட மாமா ஒரு வரன் பார்த்திருக்கறார். ரொம்ப நல்ல கேரக்டர். ஆனா உன் பிரெண்ட் உம்முன்னு இருக்கா. அதான் ஒரு சின்ன பயம்.” என்று ஈஸ்வரன் எதிரிலே கேட்டார்.
கார்த்திகாவோ மனதில் அடைத்து வைக்க இயலாத வலியில் ”அக்கா… நான் சொன்னேன்னு கமலியிடம் சொல்லாதிங்க. உங்க பயம் நியாயமானது.
ஆக்சுவலி கமலி ஒரு பையனை சின்சியரா விரும்பினா. அந்த பையனை உங்களிடம் காட்டி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க ஆசைப்பட்டா. ஆனா அவன் வேலைக்கு போயிட்டு உங்க அக்கா மாமா முன்ன வர்றேன்னு மறுத்திட்டார்.
கமலி அதனால சண்டைப்போட்டு கடைசியா அங்க வந்துட்டா.
உங்க வீட்டுக்கு வந்ததும் கமலி அவனுக்கு கால் பண்ணியிருப்பா போல ஆனா அவன் எடுக்கலை. என்னிடம் சொல்லி புலம்பினா.
நான் அவன் பிரெண்ட் எங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் செய்த வருஷம் வச்சி டீட்டெயில்ல நம்பர் எடுத்து ஆனந்த்திடம் கேட்டேன்.
ஆனந்த்… ஆனந்த் என்ன சொன்னார்னா, விஷ்ணு வந்த பைக் கார்ல மோதி ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. கோமால வேற போயிட்டார். இதுல உயிர் பிழைக்க வாய்ப்பில்லைன்னு ஆனந்த் சொல்றார்.
இதெல்லாம் நான் கமலியிடம் சொல்ல முடியாது.
அவ சண்டைப்போட்டு பிரிந்ததா இருக்கட்டும். விஷ்ணு பத்தி எதுவும் சொல்லாதிங்க. அவன் உயிர் பிழைக்காம இறந்துட்டா இவளும் செத்துடுவா அக்கா.” என்று உரைக்கவும் சுதா அதிர்ந்தாள். அடுத்த நிமிடம் மூச்சு விடவும் முடியாது தவித்தாள்.
பேயறைந்தது போல போனை நழுவவிட, ஈஸ்வரனோ நழுவிய போனை சரியாக பிடித்து, “மிஸ் கார்த்திகா, நான் கமலியை பொண்ணு பார்த்த ஈஸ்வரன். கமலி நேத்து அவ விரும்பறதை என்னிடம் ஓபன்னா சொன்னாங்க. இப்ப நீங்க சொன்னது, இதெல்லாம் அவங்களுக்கு தெரியாதுன்னு புரியுது.
நாங்களும் கமலியிடம் சொல்ல மாட்டோம். நீங்களும் சொல்ல வேண்டாம். கமலிக்கு அவகாசம் தந்து அவ காதலன் போன் பண்ணலை என்பதும் அக்கா பார்த்த வரனை முடிச்சிடலாம்னு நினைக்க வைக்கலாம்.
நீங்க உங்க தோழிக்கு உதவ நினைச்சா, அவங்களிடம் என்னை மணக்க சொல்லி பாருங்க.” என்று கூற, கார்த்திகாவோ ‘அண்ணா… அவ லைப் நல்லா இருக்க நான் கண்டிப்பா சொல்வேன். அவளை தப்பா நினைச்சிடாதிங்க. காதலிச்சதை தவிர அவ வேற எந்த தப்பும் பண்ணலை” என்று கோரிக்கை வைத்தாள் கார்த்திகா.
மேலும் “சுதா அக்கா கமலியிடம் தயவு செய்து அவ காதலிப்பது தெரிந்ததா காட்டிக்காதிங்க” என்றுரைத்தாள் கார்த்திகா.
”நான் ஏன்டிம்மா என் தங்கைக்கு கஷ்டம் தரப்போறேன். அவ நல்லா வாழ்ந்தா சந்தோஷப்படுவேன்.” என்று கண்ணீர் மல்க கார்த்திகாவிடம் நிறைய பேசி அணைத்தனர்.
சுதா, ஈஸ்வரன் இருவரும் அதற்கு பின் கமலியை உடனடியாக திருமணம் செய்ய வற்புறுத்தவில்லை. அவளது பாதிப்பை வைத்தே முடிவெடுத்தனர்.
ஈஸ்வரனோ ”தனது பணிக்காக உடனடியாக வெளியூர் செல்வதாகவும், திரும்பி வந்தப்பின் திருமணம் செய்வதாக மற்றவரிடம் உரைத்தான்.
அதுவரை நந்தினியை ‘கேர்டேக்கர்’ பணி போல பார்த்து கொள்ள கமலியிடம் கோரிக்கை வைத்திடலாமென்று திட்டம் வகுத்தனர்.
இந்த இடைப்பட்ட காலத்தில் விஷ்ணு அவராக கால் செய்து பேசினால், கமலி அவள் காதலை அக்காவிடம் பேசிக்கொள்ளட்டும், என்று கமலியிடம் பரஸ்பர ஒப்புதல் போட்டான்.
கமலிக்கும் கார்த்திகா அக்காவிடமும் ஈஸ்வரனிடமும் பேசியது தெரியாமல் சம்மதித்தாள்.
கமலிக்கு நந்தினி மீது சிறு பரிவும் பிறக்க சம்மதித்ததாள்
சுதாவிடம் ஈஸ்வரனோ ‘கமலியோட காதலன் போன் பண்ணாம போகவும், ஒரு கட்டத்துல துவண்டுடுவா. அப்ப கமலியிடம் நான் மறுபடியும் கல்யாண விஷயம் பேசறேன்.
கமலிக்கும் இந்த இடைப்பட்ட நாளில் மனமாற்றம் கிடைக்குமென்று பேசி முடிவு செய்தான். அதற்கு சுதாவும் மனபூர்வமாய் சம்மதித்தார்.
நந்தினியை பார்த்துக்கொள்ள கமலியிடம் கேட்க, அவளுமே சம்மதிக்க, இதோ இந்த இடைப்பட்ட மாதங்களில் சுமூகமாக கடத்தினாள்.
விஷ்ணு தன்னை மறந்ததாக கமலி நினைக்க, விஷ்ணு இறந்துவிட்டதாக ஈஸ்வரன் எண்ணினான்.
இதில் நந்தினியை கமலி நன்றாக பார்ப்பதை தாய் கூறி தினம்தினம் கமலியை பற்றி பரிந்து பேச, ஈஸ்வரன் கமலியை மணக்கும் முடிவோடு, கமலியிடம் விருப்பத்தை தெரிவிக்க வந்துவிட்டான்.
ஈஸ்வரன் பல கனவில் உலாவ, விஷ்ணுவோ, கமலி என்ற பெயரில் அவளது வதனத்தில் தன்னை தொலைத்தான்.
சில நாளில் பார்த்த பெண் என்ற ஈர்ப்பை தாண்டி தனக்குள் தேவபந்தத்தை கலந்தவளாக மனம் எடுத்துரைக்க, கமலியை பற்றி அறிந்திடும் முடிவோடு தள்ளாடி எழுந்தான்.
அவளது விவரத்தை பற்றி நினைவாற்றல் தப்பிக்கும் முன் கேட்டால், ஆதிமுதல் அந்தம் வரை நொடியில் அறிந்து வைத்திருப்பவன். நினைவை மறந்திருக்க, எம்.பி.ஏ. தோழன் என்று அறிமுகமான ஆனந்த் அவனிடம் கேட்க எண்ணினான்.
அன்னை வசுந்தராவிடம் ஆனந்த் நம்பரை கேட்க, அவரும் கொடுத்தார். இளங்கோ மட்டும் ஏன் எதற்கென்று கேட்க, ‘ஜஸ்ட் என் கடந்தகாலத்தை தெரிந்துக்கறேன் அப்பா” என்று முடித்து கொண்டான்.
இளங்கோ தன் மகன், அவன் தோழன் ஆனந்தனிடம் என்ன பேசுவான்? அதனால் என்ன நேரும் என்று யோசனை வயப்பட்டவராய் இருந்தார்.
இரண்டு இதயத்தில் சிம்மாசனமிட்ட தாமரை பெண்ணவள் கமலியோ ‘விஷ்ணு என்னை மறந்துட்டாரா? அவருக்கு என் நினைவு இல்லையா? அய்யோ அவர் தலைவலின்னு துடிக்கறாரே.’ என்று பரிதவித்தாள்.
நான் உன்னை விரும்பிய பெண் கமலி என்று கூறி முன்னே சென்றால் என்னை நினைவுப்படுத்தி பழையபடி நேசிப்பாரா? என்று துடித்தாள்.
இத்தனை நாள் ஏன் தேடவில்லை என்றால்… சண்டையிட்டதை விவரிக்க வேண்டுமோ? என்னால் தான் இந்த விபத்து என்று வசுந்தரா ஆன்ட்டி திட்டிவிட்டால்…
இதில் ஈஸ்வரன் இங்கு வந்து விட்டதால், அக்கா வீட்டிற்கு சென்றுவிடலாமா? அவரை தான் மணக்க அக்கா வீட்டு ஆட்கள் போராட, ஏதேதோ பணி மாற்றலென காரணம் தவிர்த்தோம். இனியும் அக்கா எப்படி தன்னை இங்கே இருக்க விடுவார். வயசு பெண் வயசு பையன் என்று கூறி என்னை அக்கா வீட்டில் திரும்ப போக வைப்பாரே.
நந்தினியை பார்த்துக் கொள்கின்றேன் என்ற அடிப்படை அன்பை வைத்திருக்கும் என்னை விரட்டி விடுவாரோ?
அப்படி இங்கிருந்து சென்றால் தினமும் விஷ்ணுவை காணும் பாக்கியம் தடைப்படுமே.’ இதே மனப்போராட்டத்தில் கிடக்க நந்தினி விளையாட்டு பொருட்களை கையில் வைத்து “சித்தி சித்தி இங்க பாருங்க, சித்தப்பா வாங்கி தந்த கிட்சன் செட். நானும் உங்களை போல சமைக்க போறேன்.” என்று குதித்தாள்.
கமலி ஏதேதோ சிந்தனையில் இருக்க நந்தினி பேச்சை கவனிக்கவில்லை. ஆனால் அடுத்து பேசியதை அரை மனதாக கவனித்தாலும் நந்தினியை பிடித்து நிறுத்தினாள்.
நந்தினி குதித்து மகிழ்ந்து பேசியது இது தான். ”சித்தி நீங்க சித்தப்பாவை கல்யாணம் செய்தப் பின்னும் என்னை அன்பா பார்த்துப்பிங்களா?” என்று தாடை பிடித்து கொஞ்சும் மழலை பேச்சில் சித்தியை கொஞ்சியபடி கேட்டாள் நந்தினி.
குழந்தை தாடை பிடித்து கேட்க கேள்வியை கவனித்து, ”நந்து ஏன் இப்படி பேசற? யார் சொன்னது உங்க சித்தப்பாவை கல்யாணம் செய்துக்க போறதா?” என்று கேட்டாள்.
“பாட்டி சித்தப்பா பேசினாங்க. ஏன் சித்தி என்னை பார்த்துக்க, எங்க சித்தப்பாவை கல்யாணம் செய்துக்க மாட்டிங்களா? உங்களை எங்க சித்தப்பாவுக்கு ரொம்ப பிடிக்குமாம். கல்யாணமே வேண்டாம்னு சொன்னவர் உங்களை கல்யாணம் செய்ய ஆசைப்படறார். இப்ப சொல்லுங்க சித்தி. எங்க சித்தப்பா பிடிக்குமா? என்னை இதே போல பார்த்துப்பிங்களா? ” என்று குழந்தை அம்மா என்ற உறவை எதிர்பார்ப்போடு கேட்க நெஞ்சில் கைவைத்து அதிர்ந்து நின்றாள் கமலி.
அவளை பொறுத்தவரை அவளின் விச்சு தவிர யாரும் அவள் மனதை அசைக்க முடியாது. அப்படியிருக்க தன் நினைவின்றி இருப்பவனிடம் தன் காதலை மீண்டும் பெறும் பாக்கியம் அமையுமா அமையாதா? என்று வருந்தினாள்.
தொடரும்
பிரவீணா தங்கராஜ்.
Interesting