Skip to content
Home » ஒப்புரவறிதல்-22

ஒப்புரவறிதல்-22

திருக்குறள்| இல்லறவியல்| ஒப்புரவறிதல்

குறள்:211

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு

இந்த உலகத்தார்‌ தமக்கு உதவும்‌ மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர்‌? மழை போன்றவர்‌ செய்யும்‌ உதவிகளும்‌ கைம்மாறு வேண்டாதவை.

  • Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  
குறள்:212

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு

ஒப்புரவாளன்‌ தன்னால்‌ இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள்‌ எல்லாம்‌ தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்‌.

குறள்:213

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற

பிறர்க்கு உதவி செய்து வாழும்‌ ஒப்புரவைப்போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத்‌ தேவருலகத்திலும்‌ இவ்வுலகத்திலும்‌ பெறுதல்‌ இயலாது.

குறள்:214

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

ஒப்புரவை அறிந்து போற்றிப்‌ பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன்‌ உயிர்வாழ்கின்றவன்‌ ஆவான்‌; மற்றவன்‌ செத்தவருள்‌ சேர்த்துக்‌ கருதப்படுவான்‌.

குறள்:215

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு

ஒப்புரவினால்‌ உலகம்‌ வாழுமாறு விரும்பும்‌ பேரறிவாளியின்‌ செல்வம்‌, ஊரார்‌ நீருண்ணும்‌ குளம்‌, நீரால்‌ நிறைந்தாற்‌ போன்றது.

குறள்:216

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்

ஒப்புரவாகிய நற்பண்பு உடையவனிடம்‌ செல்வம்‌ சோந்தால்‌, அஃது ஊரின்‌ நடுவே உள்ள பயன்‌ மிகுந்த மரம்‌ பழங்கள்‌ பழுத்தாற்‌ போன்றது.

குறள்:217

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்

ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடம்‌ செல்வம்‌ சேர்ந்தால்‌, அஃது எல்லா உறுப்புக்களும்‌ மருந்தாகிப்‌ பயன்படத்‌ தவறாத மரம்‌ போன்றது.

குறள்:218

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்

ஒப்புரவு அறிந்து ஒழுகுதலாகிய தம்‌ கடமை அறிந்த அறிவை உடையவர்‌, சொல்வளம்‌ இல்லாத காலத்திலும்‌ ஒப்புரவுக்குத்‌ தளர மாட்டார்‌.

குறள்:219

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு

ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன்‌ வறுமை உடையவனாதல்‌, செய்யத்தக்க உதவிகளைச்‌ செய்யாமல்‌ வருந்துகின்ற தன்மையாகும்‌.

குறள்:220

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து

ஒப்புரவால்‌ கேடு வரும்‌ என்றால்‌, அக்கேடு ஒருவன்‌ தன்னை விற்றாவது வாங்கிக்‌ கொள்ளும்‌ தகுதி உடையதாகும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *