அத்தியாயம்-4
திவாகர் போன் சப்தத்ததை கூட்டியது. பிரதீப் அவனருகே வந்து, “என் பையன் லைப்புக்கு ஒளியேற்ற கூட வாடானு கூப்பிட்டேன். மொத்தமா முடிச்சி விட்டுட்டியே?” என்றவர் பேண்ட் பேக்கெட்டில் கையை விட்டு, “நீ உன் வீட்டுக்கு போ” என்று கட்டளையிட, “சாரிடா” என்று திவாகர் சென்றார்.
பிரசன்னாவிடம், “சாரி பிரசன்னா.” என்று திவாகர் தோளைத்தட்டி சென்றார்.
பிரசன்னா பிரதீப்பை கடவுளாய் காண, பிரதீப்போ தனிமையாக அறைக்குள் முடங்கிடும் முடிவில் சென்றார்.
பிரசன்னாவோ கண்ணீரை துடைத்து வெளியேறினான்.
நண்பர்கள் இவனை போனில் கூட தொடர்பு கொள்ளவில்லை. இவன் தந்தைக்கு பெண் பார்க்க செல்வதாக, சொல்லும் போதே கிறுக்குதனமாக வாயை விட, ஆளாளுக்கு வர தவிர்க்க, போன் போட்டால் ஏதேனும் பிரதீப் அங்கிள் திட்டலாம் என்று தவிர்த்தனர்.
பிரசன்னாவோ தந்தை அறையை வேடிக்கை பார்த்தவன் அகிலை தேடி அவன் வீட்டிற்கு சென்றான்.
அகிலோ களையிழந்த பிரசன்னாவின் முகம் பார்த்து உள்ளே அழைத்து அவனது அறையில் கதவை தாழிட்டு என்னவென கேட்டான்.
பதில் சொல்லாமல் பிரசன்னா கலங்கியவனாக நிற்க, “பொண்ணு பார்க்க போனது என்னாச்சு. டேய்… அங்கிளிடம் திட்டு வாங்கினியா? என்ன நடந்தது?” என்று கேட்க, தேம்பி தேம்பி குழந்தை போல அழுதான்.
“டேய் பிரசன்னா… என்னாச்சு.” என்று கேட்க கேட்க அழுவதை மட்டும் தொடர்ந்தான்.
“என்னனு கேட்டா சொல்ல மாட்டேங்கற?” என்று நண்பன் சலீம், வருணுக்கு அழைத்தான். அவர்களும் அரை மணி நேரத்தில் வந்து சேர, “என்னடா… ஏன் அழுவறான்.” என்று கேட்டனர்.
“தெரியலைடா…. எது கேட்டாலும் அழுவறான். அங்கிளுக்கு போன் போடலாம்னாலும் வேண்டாம்னு சொல்லறான்.” என்று கூற, சலீமோ “பொண்ணு பார்க்க போனானாடா?” என்று கேட்க, “போனதா தான் பிரதீப் அங்கிள் சொன்னார். பொண்ணு வீட்டுக்கு வந்துட்டோம் முடிவானதும் வீட்டுக்கு வாங்கடா ட்ரீட் வைக்கறேன்னு சொன்னார்.” என்றான்.
“அப்பறம் ஏன் இவன் அழுவறான்.” என்று கேட்க “பொண்ணு இவனை பிடிக்கலைன்னு சொல்லிடுச்சு போலடா” என்று சலீம் கேலி செய்ய, வருணோ பிரசன்னா கன்னத்தை திருப்பி, “டேய்… யாரு அடிச்சா? கன்னம் சிவந்திருக்கு. கைரேகை பதிந்திருக்கு” என்றதும் அகில் முகத்தை நிமிட்ட, முகத்தில் கண்ணீர் தீண்டியது.
“யார் அடிச்சா பிரசன்னா?” என்று கேட்க எந்த பதிலும் இல்லை.
“இப்படி தான்டா.. வந்ததிலருந்து அழறான். ஒரு வார்த்தை வரமாட்டேங்குது. கன்னம் ரெட்டிஷா இருந்ததே இப்ப தான் பார்க்கறேன்.” என்றான் அகில்.
வருணோ “அங்கிளுக்கு போன் போடுடா” என்றான்.
அகில் எடுக்க முனைய, “அவர் என் அப்பா இல்லையாம்.” என்றான் பிரசன்னா.
சலீமோ “ஆங்” என்று விழிக்க, வருணோ, “அகில் ஒரு நிமிஷம். போன் போடாத” என்று அடக்கினான்.
“இப்ப அழறதை நிறுத்திட்டு விஷயத்தை சொல்லலை. அப்பறம் அங்கிளிடம் போன் பண்ணுவோம்” என்று மிரட்டவும், அதற்கு வாய் திறக்கவில்லை.
அவனுக்கு தன் நண்பர்களிடம் பகிர்ந்தாலாவது வலி குறைகின்றதா என்று கூறத் தயாரானான்.
“பொண்ணு பார்க்க போனோம்டா. ஆல்ரெடி அப்பாவுக்கு தான் அந்த பொண்ணை பேசி முடிக்கலாம்னு அங்க போனது. ஒன்னு தெரியுமா? அங்க அந்த பொண்ணு வீட்ல கூட அப்பா தான் மாப்பிள்ளை பையன்னு நினைச்சி காபி ஸ்வீட் எல்லாம் தந்தாங்க. ஆனா அப்பா பேச ஆரம்பிக்கவும் தான், என்னை மாப்பிள்ளைனு சொல்லிட்டார்” என்று சுஹாசினி வீட்டில் நடந்ததை விவரித்தான்.
“ஏன்டா… அப்பாவுக்கு தான் மேரேஜ் பண்ணற ஐடியா இல்லாதப்ப, நீயா பிரச்சனையை இழுத்து வச்சிட்ட” என்று சலீம் திட்டினான்.
வருணோ, “டேய் அவன் பேசட்டும். அவன் ஆரம்பிக்கும் போது, அவர் என் அப்பா இல்லைனு சொன்னான். என்னனு சொல்லட்டும்” என்று தடுத்தான்.
“திவாகர் அங்கிள் தான் வார்த்தை விட்டார்டா. அப்பா மறுக்கலை. திவாகர் அங்கிளை பார்த்து ஏன்டா சொன்னனு திட்டினார்.” என்று அழுதான்.
“ஒன்னும் பாதியுமா சொல்லற?” என்றதும், “நான் சுனாமில கிடைச்ச குழந்தையாம்டா. எனக்கு அப்பா அவரில்லையாம்.” என்று தேம்பினான்.
“இப்ப அங்கிள் எங்க?” என்று கேட்க, “அவர் ரூம்ல போய் கதவை லாக் பண்ணிட்டார்.” என்றான்.
“சரி… என்ன ஏதுனு அப்பறம் கேட்போம். சாப்பிடு.” என்றிட, “அப்பா சாப்பிட்டிருக்க மாட்டார்.” என்று மறுத்தான்.
மணி ஒன்பதாக அதேநேரம் பிரதீப் போன் போட்டார் அகிலுக்கு.
“அங்கிள் தான்டா” என்று ஏற்றான்.
“அங்கிள்” என்று வருண் உச்சரிக்கும் அந்த அமைதியான குரலில், “அவன் உன் வீட்ல இருக்கானா அகில் வீட்ல இருக்கானா? இல்லை… சலீம் வீட்ல இருக்கானா?” என்று கேட்டார்.
“வருண் வீட்ல இருக்கோம் அங்கிள்” என்றான்அகில்.
“என்னப்பா குரலே உள்ள போகுது. அவன் ஏதாவது சொன்னானா?” என்று கேட்க, “அங்கிள் அழுதுட்டே இருந்தான். கேட்டோம்.. பொண்ணு பார்த்ததும், திவாகர் அங்கிள் பேசியதை சொன்னான்.” என்றதும் பிரதீப் இடைவெளியிட்டு, “எல்லாத்தையும் சொன்னானா? சரிப்பா.. அழுதழுது சாப்பிடாம இருக்க போறான். வற்புறுத்தி சாப்பிட வையுங்க. நான் வேற அடிச்சிட்டேன் அவன் இன்னிக்கு அங்க இருக்கறதா சொன்னா இருக்கட்டும்.” என்றார்.
“அவர் முதல்ல சாப்பிட சொல்லுடா.” என்றான் பிரசன்னா
”நான் சாப்பிட போறேன்” என்றார் பிரதீப்.
“நம்ப மாட்டேன். வீடியோ காலில் சாப்பிட சொல்லு” என்று சிறுப்பிள்ளையாக கூற, உடனே போனை கத்தரித்து வீடியோ காலில் வந்தவர், ஒரு ஆளுக்குனு சட்னி தோசை சுட பிடிக்கலை. பிரட் ஜாம் தடவி சாப்பிட போறேன். பால் குடிச்சிப்பேன்.” என்று கண் எதிரே வீடியோ காலில் தடவி அவசரமாய் விழுங்கினார்.
பிரசன்னாவை போலவே பிரதீப்பும் கண்ணீரை துடைத்தபடி, சாப்பிட்டார். அதுவோ அருவியாக வழிந்ததை துடைத்தபடி சாப்பிட்டு தண்ணீர் அருந்திவிட்டு, “பிரசன்னாவை சாப்பிட வச்சி தூங்க வையுங்கப்பா. உங்களை நம்பி தான் அங்க இருக்கட்டும்னு சொல்லறேன்” என்றதும், தட்டில் உணவை கொண்டு வந்து அகில் ஊட்டிட, பிரதீப் பிரசன்னா இருவரும் வீடியோவில் அசராமல் பார்வையிட்டனர்.
பிரதீப் தான் பிரசன்னா கன்னத்தில் இருந்த சிவப்பை கண்டு, “தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை அடிக்கக்கூடாதுன்னு சொல்வாங்க. சாரிடா பிரசன்னா.” என்று மன்னிப்பு கேட்டு வீடியோ காலை துண்டித்தார்.
சலீம் மட்டும் வீட்டுக்கு செல்வதாக கிளம்பினான். நாளை வந்து சந்திப்பதாக உரைத்தான். அகிலோ “நான் வீட்டுக்கு போன்ல வரலைன்னு சொல்லிட்டேன். இன்னிக்கு இங்க ஸ்டே பண்ணிடறேன்” என்றான்.
அகில் வருண் பிரசன்னாவுக்கு ஆறுதலாக அங்கே இருக்க, “நான் சுனாமி அப்ப கிடைச்சேன்னா.. என் இரத்த சொந்தத்தில் இருக்க வேண்டிய அப்பா அம்மா யாருடா? என் அப்பாவிடம் எப்படி கிடைச்சேன். எனக்காக வாழ்க்கையை தொலைச்சிட்டாரா? ஒன்னுமே புரியலைடா.’ என்று புலம்பி தவித்து எப்படியோ உறங்கினான்.
பிரதீப்போ பொட்டு உறக்கமின்றி, “நான் சாகற வரை பிரசன்னா என் மகன் இல்லைன்னு யாருக்கும் தெரியாமலே பார்த்துக்கணும்னு இருந்தேன். ஆனா விதி இப்படி வந்து மாட்டிவிட்டு அப்பா மகன் உறவுக்கு விரிசலை ஏற்படுத்திடுச்சே. அங்க என் பையன் பிரசன்னா என்ன மனநிலையில் தவிச்சு துடிச்சு தூங்கியிருப்பானா?’ என்று நள்ளிரவில் தான் அவரும் உறங்கினார்.
அதிகாலை எப்பவும் போல எழுந்து வேலையை கவனித்தவர், மகனிடம் அனைத்தும் சொல்லி விடலாமென்ற முடிவுக்கு வந்தார்.
ஆனால் சொன்னால் மகன் தன்னை விட்டு செல்வானா? என்று பயந்தார். ஆனால் பிரசன்னா அப்படிப்பட்டவன் இல்லையென்று அவருக்கே தெரியும். இது தேவையற்ற பயமும் கூட.
இந்த தெளிவு வந்தப்பின், வெளியே செல்ல உடை உடுத்தினார்.
அகிலுக்கு அழைத்து “பத்து மணிக்கு மெரீனா பீச்சுக்கு அவனை அழைச்சிட்டு வாங்க. எல்லாம் பேசிட்டு, அப்படியே ஹோட்டல்ல சாப்பிடுவோம்” என்று இயல்பாக பேசினார்.
“அவன் இன்னும் தூங்கறான் அங்கிள். வந்ததிலருந்து அழுதான். நைட்டும் என்னென்னவோ பேசினான். அப்பறம் லேட்டா தான் தூங்கினான். இப்ப எழுப்பவா வேண்டாமானு இருந்தேன். பத்துமணிக்கு அழைச்சிட்டு வர்றோம் அங்கிள்” என்றான் அகில்.
பிரதீப் பேசிவிட்டு, மூச்சு பயிற்சியை தொடர்ந்தார்.
இந்த 40 வயதிலும் மாப்பிள்ளை என்ற தோற்றத்தில் காட்சியளிக்க, சில மனப்பயிற்சியும் உடற்பயிற்சியும் தேவை. அது பிரதீப்பிடம் இருந்தது.
வலியும் வேதனையையும் விழுங்கி தெளிந்த, பாதையில் நடந்ததில் இந்த முதிர்ச்சி தோன்றியிருக்கலாம்.
இங்கே நண்பன் வீட்டில் எழுந்தவன் “பத்து மணிக்கு மெரீனா பீச்சிலயா?” என்று கேட்டவன் மணியை பார்த்தான்.
எட்டு முப்பது என்றதும் வேகமாய் எழுந்து குளித்தான்.
நண்பர்கள் எல்லாம் ஒன்று போல வாங்கிய சட்டையில் வருண் டீஷர்ட் ஜீன் ஒன்றை எடுத்து அணிந்தான்.
ஓரளவு சரியாக அமைய, அவசரமாய் கிளம்பினான்.
சாப்பிட்டு பிரசன்னா பைக்கில் அவனும் அகிலும் இருக்க, வருண் பைக்கில் சலீம் வந்து சேர்ந்துக் கொண்டான்.
“மெரீனா பீச்ல… எந்த சிலை பக்கம் வரணும்னு கேளுடா” என்றான் பிரசன்னா.
“ஏன்.. உங்கப்பாவிடம் நீ கேளு?” என்றான் அகில்.
“வருண் நீ கேட்டு சொல்லு” என்று கட்டளையிட, கண்ணகி சிலை பக்கம் வந்திட சொல்லி பைக்ல வர்றப்ப சொன்னார்டா” என்றான்.
முன்பெல்லாம் கடலை காணும் போது, ஒரு உற்சாகம் துள்ளல், வழிந்தோடும். நேற்றிலிருந்து ஏனோ கடல் என்றாலே கதிகலங்கி நிற்கின்றான் பிரசன்னா.
சீறிபாயும் கடலை கண்டு, டிசம்பர்-26ல் வந்த சுனாமி செய்தியை கேள்விப்பட்டு கடலை வெறித்தான்.
தூரத்தில் கரையை தொட்டு தொட்டு விளையாடி சென்ற அலை மீது கோபம் அழுகை பெருகியது.
அதே வலியுடன் திரும்ப, அங்கே பிரதீப் கையை கட்டியபடி பிரசன்னாவையையே கலக்கத்துடன் கண்டார்.
“இங்க பேசலாமா? இல்லை… உன்னை என்னிடம் ஒப்படைச்ச.. அந்த கடலலை பக்கத்துல போய் பேசலாமா?” என்று பீடிகை போட்டார். பிரசன்னா அமைதியில் கழிய, “அங்க போய் பேசலாம்” என்று தோளை தட்டி செல்ல கூறினார் பிரதீப்.
அகில், வருண், சலீம் கூட நண்பனை பின் தொடர்ந்தார்கள்.
பிரதீப் பிரசன்னா மீது கொண்டுள்ள பாசத்தை நேரில் அடிக்கடி பார்த்தவர்கள். அதனால் இந்த நொடி கூட பிரதீப் பிரசன்னா அப்பா மகன் இல்லையென்றதை ஜீரணிக்க இயலாது பார்வையிட்டனர்.
“என்னடா... ஆளாளுக்கு ஒரு மார்க்கமா என்னை தியாகி ரேஞ்சுக்கு லுக்கு விடறிங்க. நான் அதே பிரதீப் அங்கிள்தான்டா” என்று சூழ்நிலையை கலகலப்பாக மாற்ற முயன்றார்.
பிரசன்னா தான் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் நடந்து வந்தான்.
மணற்பரப்பில் கடற்கரையை ஒட்டி வந்ததும், சிலையை போல நின்றார்கள். அகில் வருண் சலீம் எல்லாம் மணலில் அமர்ந்து விட்டார்கள். அவர்களோடு பிரதீப்பும் அமர்ந்துக்கொண்டார்.
பிரசன்னாவோ கடலை ஆவேசமாக முறைத்த படி, வேடிக்கை காண, “ஏன்டா வீட்டை விட்டு போன? நீ வீட்ல இருப்பன்னு நினைச்சேன். அந்தளவு கோபமா?” என்றார்.
பிரசன்னா முறைக்க, “இல்லைடா… இதுவரை உன்னை விளையாட்டுக்கு கூட அடிச்சதில்லை. கன்னத்துல சிவப்பு தடம் தெரியற அளவுக்கு அடிச்சிட்டேனே. அதனால கோபமோனு கேட்டேன்.” என்றதும், “நான் அனாதையா? உங்களிடம் எப்படி கிடைச்சேன். என்னை ஏன் வளர்த்திங்க. ஏதாவது ஆசிரமத்தில் விட்டுட்டு, நீங்க கல்யாணம் குடும்பம்னு வாழ்ந்திருக்கலாமே! ஏன் தனிமரமா நிற்கறிங்க” என்றான்.
“உங்களுக்கு கல்யாணமே ஆகலைன்னு திவாகர் அங்கிள் சொன்னார். அப்படின்னா என்னிடம் அம்மா இறந்துட்டதா சொன்னிங்க. வீட்ல கல்பனா என்ற அம்மா போட்டோ இருக்கு” என்று கேள்விக் கேட்டான்.
பிரதீப் பெருமூச்சை வெளியிட்டு மகனை கண்டு புன்னகை அரும்பி, “என்னென்ன டவுட் கேட்கணுமோ கேளு. மொத்தமா கொசுவர்த்தி சுருளா.. என் பிளாஸ்பேக்கை சொல்லறேன்.” என்று விளையாட்டாய், அதே தந்தை பிரதீப்பாக பேசினார்.
-தொடரும்

Pradeep excellent dad. He is so matured. We too waiting for the flashback sis. Intresting sis.
Super sis nice epi 👌😍 paavam romba varuthama erukum la thaan oru anadhai nu nenacha erundhalum avana evlo varusham parthuta appa va avan kandipa vida koodadhu pa enna flashback nu therinjikka eagerly waiting sis ❤️