1. நள்ளிரவு ரயில் வண்டி
கன்னங்கரிய இருள் சூழ்ந்த இரவு. திட்டுத் திட்டான கருமேகங்கள் வானத்தை மூடிக்கொண்டிருந்தன. அந்த மேகக் கூட்டங்களுக்கு இடை இடையே விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியில் வரலாமோ கூடாதோ என்ற சந்தேகத்துடன் எட்டிப் பார்த்தன.
கீழே பூமியில் அந்தக் காரிருளைக் காட்டிலும் கரியதான ஒரு மொட்டைப் பாறை பயங்கரமான கரும் பூதத்தைப்போல் எழுந்து நின்றது.
பாறையின் ஓரமாக இரண்டு கரிய கோடுகளைப் போல் ரயில் பாதையின் தண்டவாளங்கள் ஊர்ந்து செல்வதை, ஓரளவு இருளுக்குக் கண்கள் பழக்கப்பட்ட பிறகு உற்றுப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
ரயில் பாதையின் ஒரு பக்கத்தில் மனிதர்கள் அடிக்கடி நடந்து சென்றதனால் ஏற்பட்ட ஒற்றையடிப் பாதையில் ஒரு மனிதன் அந்த நள்ளிரவு வேளையில் நடந்து கொண்டிருந்தான். பாதையைக் கண்ணால் பார்த்துக் கொண்டு அவன் நடக்கவில்லை. காலின் உணர்ச்சியைக் கொண்டே நடந்தான். ரயில் தண்டவாளத்தின் ஓரமாகக் குவிந்திருந்த கருங்கள் சல்லிகளில் அவனுடைய கால்கள் சில சமயம் தடுக்கின. ஒற்றையடிப் பாதையின் மற்றொரு பக்கத்தில் வேலியைப் போல் வளர்ந்திருந்த கற்றாழைச் செடிகளின் முட்கள் சில சமயம் அவனுடைய கால்களில் குத்தின. அவற்றையெல்லாம் அந்த மனிதன் சற்றும் பொருட்படுத்தவில்லை. அவனுடைய நடை சிறிதேனும் தளரவில்லை. தடுக்கல்களையும் தடங்கல்களையும் பொருட்படுத்தாமல் விரைவாக நடந்தான்.
ரயில் பாதை ஓரிடத்தில் மொட்டைப் பாறையை வளைத்துக் கொண்டு சென்றது. வளைவு திரும்பியவுடனே இரத்தச் சிவப்பு நிறமான பெரிய நட்சத்திரம் ஒன்று தோன்றி அந்த நள்ளிரவுப் பிரயாணியின் கண்ணைப் பறித்தது. அங்கே சிறிது நின்று நிதானித்து பார்த்து, ‘அது நட்சத்திரமில்லை’ கைகாட்டி மரத்தின் உச்சியில் வைத்துள்ள சிவப்பு விளக்கு என்றும், ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் தான் வந்திருக்க வேண்டுமென்றும் தெரிந்து கொண்டான். மேலும் ரயில் பாதையைத் தொடர்ந்து போவதா? அல்லது ரயில் பாதையை அங்கே விட்டுவிட்டு வேறு வழியில் திரும்புவதா என்று அம்மனிதன் எண்ணமிட்டான். அந்த வேளையில் வேறு வழி கண்டுபிடித்துச் செல்லுவது என்பது சுலபமான காரியமில்லைதான். ரயில் பாதையின் ஒரு பக்கத்தில் கரிய பாறை செங்குத்தான சுவரைப் போல் நின்றது. மற்றொரு பக்கத்தை உற்றுப் பார்த்தான். கல்லும் முள்ளும் கள்ளியும் கருவேல மரமும் நிறைந்த காட்டுப் பிரதேசமுமாகக் காணப்பட்டது. ஆயினும் அந்தக் காட்டுப் பிரதேசத்தின் வழியாகச் சென்றுதான் வேறு நல்ல பாதை கண்டுபிடித்தான வேண்டும். ரயில்வே ஸ்டேஷனுக்குப் போவது ஆபத்தாக முடியலாம்.
இவ்விதம் அந்தப் பிரயாணி யோசித்துக் கொண்டிருந்த போது அவனுக்கெதிரே தெரிந்த கை காட்டியின் விளக்கில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. சிவப்பு வெளிச்சம் பளிச்சென்று பச்சை வெளிச்சமாக மாறியது.
அந்த மாறுதல் ஏன் ஏற்பட்டதென்பதை அம் மனிதன் உடனே ஊகித்து உணர்ந்தான். தான் வந்த வழியே திரும்பிச் சில அடி தூரம் நடந்தான். வளைவு நன்றாய்த் திரும்பியதும் நின்று, தான் வந்த திசையை நோக்கிக் கவனமாக உற்றுப் பார்த்தான். வெகு தூரத்தில் மின் மினிப் பூச்சியைப் போன்ற ஓர் ஒளித் திவலை பெரிதாகிக் கொண்டு வந்தது. ‘கிஜுகிஜு கிஜுகிஜு’ என்ற சத்தமும் அந்தத் திசையிலிருந்து கேட்கத் தொடங்கியது. ரயில் ஒன்று நெருங்கி வருகிறது என்று தெரிந்து கொண்டான்.
நம் கதாநாயகனுடைய உள்ளம் ஒரு கணம் துடித்தது. அவனுடைய கைகளும் துடித்தன. மறுகணம் அவன் மிக விந்தையான காரியம் ஒன்று செய்தான். தன்னுடைய அரைச் சட்டையின் பையிலிருந்து ஏதோ ஓர் ஆயுதத்தையும் ஒரு சிறு ‘டார்ச் லைட்’டையும் எடுத்தான். டார்ச் லைட்டின் விசையை அமுக்கித் தண்ட வாளத்தின் மீது விழும்படிச் செய்தான். ஒரு விநாடி நேரந்தான் விளக்கு எரிந்தது. அந்த ஒரு விநாடியில் அவன் பார்க்க வேண்டியதைப் பார்த்துக் கொண்டான். ஒரே பாய்ச்சலில் தாவிச் சென்று தண்டவாளத்தில் ஓரிடத்தில் போய் உட்கார்ந்தான். ஆயுதத்தைக் கொண்டு ஏதோ செய்தான். திருகைச் சுழற்றுவது போன்ற சத்தம் கேட்டது. பின்னர் முழுவதையும் உபயோகித்துத் தண்டவாளத்தைப் பெயர்த்து நகர்த்தினான்.
அவ்வளவுதான்; அடுத்த நிமிஷம் ஆயுதத்தை வீசி எறிந்துவிட்டுக் கற்றாழை வேலியை ஒரே தாண்டலாகத் தாண்டிக் குதித்து வேலிக்கு அப்பாலிருந்த காட்டு நிலத்தில் அதிவேகமாக ஓட ஆர்மபித்தான். இரண்டு மூன்று தடவை தடுமாறிக் கீழே விழுந்து மறுபடியும் எழுந்து ஓடினான். சுமார் அரை பர்லாங்கு தூரம் ஓடிய பிறகு சற்றே நின்று திரும்பிப் பார்த்தான்.
ரயில் வண்டி, பாறையின் வளைவை நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. என்ஜின் முகப்பில் பொருத்தியிருந்த ‘ஸர்ச் லைட்’டின், வெளிச்சமானது பாறையையும் ரயில் பாதையையும், அந்தப் பிரதேசம் முழுவதையுமே பிரகாசப் படுத்தியது. தண்டவாளத்தைப் பெயர்த்துவிட்டு ஓடிப்போய் நின்ற மனிதன் சட்டென்று பக்கத்திலிருந்த புதர் ஒன்றின் மறைவில் ஒளிந்து கொண்டான். ரயில் வண்டி, பாதையின் வளைவை நெருங்கி வருவதை ஆவலுடன் கண் கொட்டாமல் பார்க்கலானான். அவனுடைய நெஞ்சு ‘தடக் தடக்’கென்று அடித்துக் கொண்டது. உடம்பெல்லாம் ‘குபீ’ரென்று வியர்த்தது.
பாறையின் முடுக்கை நெருங்கியபோது ரயிலின் வேகம் திடீரென்று குறைந்தது. சட்டென்று ‘பிரேக்’ போட்டு ரயிலை நிறுத்தும்போது உண்டாகும் ‘கடபுட’ சத்தங்களும் ரயிலில் சக்கரங்கள் வீலிடும் சத்தங்களும் கலந்து கேட்டன. ரயில் நின்றது.
நின்ற ரயிலிலிருந்து ‘சடசட’வென்று சில மனிதர்கள் இறங்கினார்கள். அவர்களில் ஒருவன் கையில் லாந்தர் விளக்குடன் இறங்கி வந்தான். எல்லாரும் கும்பலாக ரயில் என்ஜினுக்கு முன்னால் வந்து தண்டவாளத்தை உற்று நோக்கினார்கள். ஏக காலத்தில் காரசாரமான வசை மொழிகள் அவர்களுடைய வாயிலிருந்து வெளியாயின. இரண்டொருவர் குனிந்து, பெயர்த்து நகர்த்தப்பட்டிருந்த தண்டவாளத்தைச் சரிப்படுத்தினார்கள். தலையில் தொப்பியணிந்திருந்த ஒருவர் தம் சட்டைப் பையிலிருந்து கைத் துப்பாக்கியை எடுத்துக் காட்டுப் பிரதேசத்தை நோக்கிச் சுட்டார். ரயில் பாதையின் ஓரத்துப் புதர்களிலிருந்து இரண்டு நரிகள் விழுந்தடித்து ஓடின. அதைப் பார்த்துக் கும்பலிலிருந்தவர்களில் இரண்டொருவர் ‘கலகல’வென்று சிரித்த சத்தம் காற்றிலே மிதந்து வந்தது. புதரில் மறைந்திருந்த மனிதனுடைய உடம்பு நடுங்கிற்று. குளிர்ந்த காற்றினாலா, துப்பாக்கி வேட்டினாலா, சிரிப்புச் சத்தத்தினாலா என்று சொல்ல முடியாது.
மேலும் சில நிமிஷ நேரம் அங்கேயே நின்று அந்த மனிதர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். எப்பேர்ப்பட்ட அபாயத்திலிருந்து ரயில் தப்பியது என்பதைப் பற்றித்தான் அவர்கள் பேசியிருக்க வேண்டும். பிறகு எல்லாரும் திரும்பிச் சென்று அவரவர்களுடைய வண்டியில் ஏறிக் கொண்டார்கள். அவர்கள் திரும்பிய போது ரயிலின் ஒவ்வொரு வண்டியிலிருந்தும் சிலர் தலையை நீட்டி, “என்ன சமாசாரம்?” என்று விசாரத்ததும் புதரில் ஒளிந்திருந்த நம் கதாநாயகனுக்குத் தெரிந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் ‘பப்பப்’ ‘பப்பப்’ என்ற சத்தத்துடன் ரயில் புறப்பட்டது.
இருள் சூழ்ந்த இரவில் நீண்ட ரயில் வண்டித் தொடர் போகும் காட்சி ஓர் அழகான காட்சிதான். நின்ற இடத்தில் நிலையாக நிற்கும் தீப வரிசையே பார்ப்பதற்கு எவ்வளவோ ரம்மியமாக இருக்கும். அத்தகைய தீப வரிசையானது இடம் பெயர்ந்து நகர்ந்து போய்க் கொண்டிருக்குமானால், அந்த அபூர்வமான காட்சியின் அழகைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா?
அந்த அழகையெல்லாம் நம் நள்ளிரவுப் பிரயாணி சிறிதும் விடாமல் அநுபவித்தான். ரயில் வண்டித் தொடரில் கடைசி வண்டியும், தீப வரிசையில் கடைசித் தீபமும் மலை முடுக்கில் திரும்பி மறையும் வரையில் அவன் அந்தக் காட்சியை அடங்காத ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு தான் அவனுக்குத் தன் சுயநினைவு வந்தது. அவனுடைய மனத்தில் அதற்குமுன் என்றும் அநுபவித்தறியாத அமைதி அச்சமயம் குடி கொண்டிருந்தது. தான் செய்த காரியத்தினால் அந்த ரயில் வண்டித் தொடருக்கும் அதிலிருந்த நூற்றுக்கணக்கான ஆண் பெண் குழந்தைகளுக்கும் நல்ல வேளையாக அபாயம் எதுவும் ஏற்படாமல் போனதில் அவனுக்கு அளவில்லாத திருப்தி உண்டாகியிருந்தது.
‘சரித்திரப் புகழ் பெற்ற வருஷம்’ என்று பண்டித ஜவஹர்லால் நேரு முதலிய மாபெருந் தலைவர்களால் கொண்டாடப் பெற்ற 1942-ஆம் வருஷத்து ஆகஸ்டு மாதத்தில் மேற்கூறிய சம்பவம் நடந்தது.
சில காலமாகவே இந்திய மக்களின் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்த கோபாக்கினி மலை மேற்படி 1942 ஆகஸ்டில் படீரென்று வெடித்தது. புரட்சித் தீ தேசமெங்கும் அதிவேகமாகப் பரவியது. அந்தப் புரட்சித் தீயை நாடெங்கும் பரப்புவதற்குக் கருவியாக ஏற்பட்ட தேசபக்த வீரத் தியாகிகளில் நம் கதாநாயகன் குமாரலிங்கமும் ஒருவன்.
அந்த அதிசயமான 1942 ஆகஸ்டில், அதுவரையில் தேசத்தைப் பற்றியோ தேச விடுதலையைப் பற்றியோ அதிகமாகக் கவலைப்பட்டறியாத அநேகம் பேரைத் திடீரென்று தேசபக்தி வேகமும் சுதந்திர ஆவேசமும் புரட்சி வெறியும் பிடித்துக் கொண்டன. ஆனால் குமாரலிங்கமோ வெகுகாலமாகவே தேசபக்தியும் தேச சுதந்திரத்தில் ஆர்வமும் கொண்டிருந்தவன். அந்த ஆர்வத்தைக் காரியத்திலே காட்டுவதற்கு ஒரு தக்க சந்தர்ப்பத்தைத்தான் எதிர் நோக்கிக் கொண்டிருந்தான். அந்தச் சந்தர்ப்பம் இப்போது வந்துவிட்டதென்றும், பாரதத் தாயின் அடிமை விலங்கை முறித்தெறிவதற்கு இதுவே சரியான தருணம் என்றும் அவன் பரிபூரணமாக நம்பினான்.
காந்தி மகாத்மாவையும் மற்றும் தேசத்தின் ஒப்பற்ற மாபெருந் தலைவர்களையும் அந்நிய அதிகாரவர்க்க சர்க்கார் இரவுக்கிரவே சிறைப்படுத்தி, யாரும் அறியாத இரகசிய இடத்துக்குக் கொண்டு போனார்கள் என்ற செய்தி அவனுடைய உள்ளத்தில் மூண்டிருந்த ஆத்திரத் தீயில் எண்ணெயை ஊற்றிப் பொங்கி எழச் செய்தது. ஸ்ரீ சுபாஷ் சந்திர போஸ், பெரிலின் ரேடியோ மூலமாகச் செய்த வீராவேசப் பிரசங்கங்கள், தேச விடுதலைக்காக எத்தகைய தியாகத்துக்கும் அவன் ஆயத்தமாகும்படி, செய்திருந்தன. உலகமெங்கும் அந்தச் சமயம் நடந்துகொண்டிருந்த சம்பவங்களும், தேசத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த காரியங்களும் அவனுடைய நவயௌவன தேகத்தில் ஓடிக் கொண்டிருந்த சுத்த இரத்தத்தைக் கொதிக்கும்படி செய்திருந்தன. தேச விடுதலைக்காக ஏதேனும் செய்தேயாக வேண்டும் என்று அவனுடைய நரம்புகள் துடித்துக் கொண்டிருந்தன. அவனுடைய உடம்பின் ஒவ்வோர் அணுவும் குமுறி மோதி அல்லோல கல்லோலம் செய்து கொண்டிருந்தது. பாரத நாட்டின் இறுதியான சுதந்திரப் போரில் அவசியமானால் தன்னுடைய உயிரையே அர்ப்பணம் செய்துவிடுவதென்று அவன் திடசங்கல்பம் செய்து கொண்டான்.
இந்த நிலையில் அவனுடைய மனோ திடத்தையும் தீவிரத்தையும் உபயோகப்படுத்துவதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் வாய்த்தது. வடநாட்டிலிருந்து புரட்சித் தலைவர் ஒருவர் சென்னைக்கு வந்தார். புரட்சித் திட்டத்தை மாகாணமெங்கும் அதி விரைவாகப் பரப்புவதற்கு அவர் தக்க ஆசாமிகளைத் தேடிக் கொண்டிருந்தார். மேற்படித் தொண்டில் ஈடுபடுவதற்குக் குமாரலிங்கம் முன் வந்தான். அவனுடன் பேசிப் பார்த்துத் தகுந்த ஆசாமிதான் என்று தெரிந்த கொண்ட தலைவர், தெற்கே பாண்டிய நாட்டுக்குப் போகும்படி அவனைப் பணித்தார். குமாரலிங்கம் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன் என்பதோடு அந்த நாட்டில் பிரயாணம் செய்து பழக்கம் உள்ளவன். எனவே மேற்படி தொண்டை மேற்கொள்ள அவன் உற்சாகத்துடன் முன் வந்தான்.
‘சைக்ளோ ஸ்டைல்’ இயந்திரத்தில் அச்சடித்த துண்டுப் பிரசுரங்களுடன் குமாரலிங்கம் பாண்டிய நாட்டுக்குச் சென்றான். அந்த நாட்டில் ஒவ்வோர் ஊரிலும் முக்கியமான தேசபக்த வீரர்களின் ஜாபிதா அவனிடம் இருந்தது. அவர்களைக் கண்டுபிடித்துத் துண்டுப் பிரசுரங்களை அவர்களிடம் கொடுத்தான். தேச சுதந்திரத்தில் அவன் அச்சமயம் கொண்டிருந்த ஆவேச வெறியில், துண்டுப் பிரசுரத்தில் கண்டிருந்ததைக் காட்டிலும் சில அதிகப்படியான காரியங்களையும் சொன்னான். தந்தி அறுத்தல், தண்டவாளம் பெயர்த்தல் முதலிய திட்டங்களோடு, ரயில்வே ஸ்டேஷன்களையும் கோர்ட்டுகளையும் தீ வைத்துக் கொளுத்துதல், சிறைகளைத் திறந்து கைதிகளை விடுதலை செய்தல், சர்க்கார் கஜானாக்களைக் கைப்பற்றுதல் முதலிய புரட்சித் திட்டங்களையும் அவன் சொல்லிக் கொண்டு போனான். இவ்வளவும் சொல்லிவிட்டு மகாத்மாவின் அஹிம்சா தர்மத்துக்கு மாறாக எந்தக் காரியமும் செய்யக் கூடாதென்று எச்சரித்துக் கொண்டும் சென்றான்.
இப்படி அவன் புயல் காற்றின் வேகத்தில் ஊர் ஊராகப் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது ஓர் ஊரில் அவனைக் கைது செய்யும்படி போலீஸ் உத்தியோகஸ்தர்களுக்குச் சென்னையிலிருந்து உத்தரவு வந்திருந்தது என்பதைத் தெரிந்து கொண்டான். கைதியாவதற்கு முன்னால் தேச விடுதலைக்காகப் பிரமாதமான காரியம் ஒன்று செய்ய வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தான். அந்தக் கூட்டத்தில் தேசபக்தி ஆவேசமும் சுதந்திர வெறியும் ததும்பிய பிரசங்கம் ஒன்று செய்தான்: “பாரத் தாயின் அடிமை விலங்கைத் தகர்க்கும் காலம் வந்துவிட்டது. இதுதான் சமயம்! ஆறிலும் சாவு நூறிலும் சாவு. கிளம்புங்கள் உடனே! இந்த ஊர்ச் சிறையில் சில தேசபக்தர்கள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். சிறைக் கதவை உடைத்து அவர்களை விடுதலை செய்யுங்கள்! தாலுகாக் கச்சேரியையும் கஜானாவையும் கைப்பற்றுங்கள். வெளியூர்களிலிருந்து போலீஸார் வராதபடி தந்திக் கம்பிகளை அறுத்துவிடுங்கள்! பூரண சுதந்திரக் கொடியை வானளாவ உயர்த்துங்கள்! நமதே ராஜ்யம்! அடைந்தே தீருவோம்!” என்று வீர கர்ஜனை புரிந்தான்.
அவனுடைய ஆவேசப் பிரசங்கத்தைக் கேட்ட ஜனங்கள் அந்த க்ஷணமே, “வந்தே மாதரம்! மகாத்மா காந்திக்கு ஜே! புரட்சி வாழ்க!” என்ற கோஷங்களை இட்டுக்கொண்டு தாலுகாக் கச்சேரியை நோக்கிக் கிளம்பினார்கள். போகப் போக ஜனக்கூட்டம் பெருகியது. அந்தப் பெருங்கூட்டத்தின் மத்தியில் குமாரலிங்கம் ஆண் சிங்கத்தைப் போல கர்ஜித்துக் கொண்டு நடந்தான்.
இதற்குள்ளாக அதிகாரிகளுக்கு விஷயம் எட்டி விட்டது. பொதுக் கூட்டத்திலேயே குமாரலிங்கத்தைக் கைது செய்யும் நோக்கத்துடன் புறப்பட்டு வந்த போலீஸ் ஸப்-இன்ஸ்பெக்டரும் சேவகர்களும் பாதி வழியிலேயே எதிரிலே வந்த ஜனக் கூட்டத்தைப் பார்த்துவிட்டு வேகமாகத் திரும்பிச் சென்றார்கள். ஜனங்கள் அவர்களைத் துரத்திக் கொண்டு ஓடினார்கள். போலீஸ்காரர்கள் விரைந்தோடித் தாலுகாக் கச்சேரிக்குள் போய் ஒளிந்து கொண்டார்கள்.
ஆவேச வெறியில் மூழ்கியிருந்த ஜனங்கள் தாலுகாக் கச்சேரியை வளைத்துக் கொண்டார்கள். கச்சேரியின் காம்பவுண்டுக்குள் இருந்த ஸப்ஜெயிலின் கதவுகளை உடைத்துத் திருடர்கள், குறவர்கள் உள்பட எல்லாரையும் விடுதலை செய்தார்கள். சரமாரியாகக் கற்கள் தாலுகாக் கச்சேரியின் மேல் விழுந்தன. உள்ளேயிருந்த போலீஸார் துப்பாக்கியை எடுத்து வெளியே குருட்டாம் போக்காகச் சுட்டார்கள். இரண்டொருவர் காயமடைந்து விழவும் ஜனங்களின் கோபாவேச வெறி அதிகமாயிற்று. தாலுகாக் கச்சேரிக் கட்டிடத்தில் தீ வைப்பதற்கு முயன்றார்கள். மண்ணெண்ணெய், பெட்ரோல், வைக்கோல், நெருப்புப் பெட்டி முதலியவை எல்லாம் அதி சீக்கிரத்தில் வந்து சேர்ந்தன.
இந்த ஏற்பாடுகளைப் பார்த்ததும் உள்ளேயிருந்த போலீஸார் வெளியேறிச் செல்ல முயன்றார்கள். துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே வெளியில் வந்தார்கள். துரதிருஷ்டவசமாக அவர்களிடம் துப்பாக்கிகள் இரண்டே இரண்டுதான் இருந்தன. தோட்டாக்களும் குறைவாக இருந்தன. இரண்டு மூன்று தடவை சுட்டதும் தோட்டாக்கள் தீர்ந்து போயின. சுட ஆரம்பித்ததும் சற்று விலகிப்போன ஜனக்கூட்டம், தோட்டா தீர்ந்து விட்டது என்பதை அறிந்ததும் திரும்பி வந்து போலீஸாரைச் சூழ்ந்து கொண்டு தாக்கியது. இன்னது செய்கிறோம், அதனுடைய பலன் இன்னது என்று தெரியாமல் ஜனக்கூட்டம் மூர்க்கமாகத் தாக்கியதன் பலனாக இரண்டு போலீஸார் உயிரிழந்து விழுந்தனர்.
இதற்குள்ளே பெரிய உத்தியோகஸ்தர்களுக்குத் தகவல் கிடைத்தது. போலீஸ் டெபுடி சூபரின்டெண்டெண்டும் பல போலீஸ் ஜவான்களும் பயங்கரமான ஹுங்கார சத்தங்களை இட்டுக் கொண்டு விரைந்து வந்தார்கள். அவ்வளவுதான்! “ஓடு, ஓடு!” என்று ஒரு குரல் கேட்டது. ஜனங்கள் நாலா பக்கமும் விழுந்தடித்து ஓடினார்கள். புதிதாக வந்த போலீஸார் அவர்களைத் துரத்தி அடித்தார்கள். ஒரே அல்லோல கல்லோலமாய்ப் போய்விட்டது.
வெகு துரிதமாக நடந்த இவ்வளவு காரியங்களையும் குமாரலிங்கம் பார்த்துக் கொண்டிருந்தான். போலீஸ்காரர் இருவர் உயிர் இழந்து விழுவதையும் பார்த்தான். தூரத்திலே பெரிய போலீஸ் படை வருவதையும் ஜனங்கள் சிதறி ஓடுவதையும் கவனித்தான். சற்று நேரம் திகைத்து நின்றான். பிறகு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு மற்ற எல்லாரையும் போல் அவனும் ஓட்டம் பிடித்தான். தான் அங்கு நின்றால் கட்டாயம் தன்னைக் கைது செய்துவிடுவார்கள்; போலீஸார் இருவர் இறந்ததற்காகத் தன் மீது கொலைக் குற்றம் சாட்டினாலும் சாட்டுவார்கள். ஸப் ஜெயிலில் வைத்துக் கொடுமை செய்வார்கள். போலீஸாரிடம் சிக்கிக் கொள்ளுவதற்கு முன்னால் தேசத்துக்காக எவ்வளவு காரியம் செய்யலாமோ அவ்வளவும் செய்துவிட வேண்டும். இன்னும் சில நாள் தலைமறைவாக இருந்து வேலை செய்தால் ஒரு வேளை தேசமெல்லாம் நடக்கும் மகத்தான புரட்சி இயக்கம் வெற்றி பெற்றுத் தேசம் சுதந்திரம் அடைந்தாலும் அடைந்துவிடும். அதைக் கண்ணால் பார்க்காமல் அவசரப்பட்டுத் தூக்கு மேடைக்குப் போவதால் என்ன லாபம்? எப்படியும் இந்தச் சமயம் ஓடித் தப்பித்துக் கொள்வதுதான் சரி.
மின்னல் மின்னுகிற நேரத்தில் இவ்வளவு யோசனைகளும் குமாரலிங்கத்தின் மனத்தில் தோன்றி மறைந்தன. முடிவாக அவன் உள்ளம் செய்த தீர்மானத்தைக் கால்கள் உடனே நிறைவேற்றி வைக்க ஆரம்பித்தன. சந்து பொந்துகளில் புகுந்து விரைந்து ஓடினான். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அந்தப் பட்டணத்தின் எல்லையைக் கடந்து பட்டணத்தைச் சுற்றியிருந்த புன்செய்க் காடுகளில் புகுந்தான்.
பொழுது விடிவதற்குள்ளே ஒரு பத்திரமான இடத்தை அடைந்துவிட வேண்டுமென்று தீர்மானித்து விரைவாகச் சென்றான். இரவு வேளையில் வழி கண்டு பிடிக்க முடியாமலும் திக்கு திசை தெரியாமலும் போய்க் கொண்டிருந்தபோது அதிர்ஷ்டவசமாக ரயில் பாதை அகப்பட்டது. ரயில் பாதையோடு அவன் கொஞ்ச தூரம் நடந்து சென்ற பிறகு நாம் ஆரம்பத்தில் பார்த்தபடி மொட்டைப் பாறையின் வளைவை அடைந்தான். அச்சமயம் ரயில் வருவதைப் பார்த்ததும், தேசத்தின் சுதந்திரத்துக்காக இன்னும் ஒரு பிரமாதமான காரியம் ஏன் செய்யக்கூடாது என்ற எண்ணம் மின்னலைப் போல் உதித்தது. உடனே அதை நிறைவேற்ற ஆரம்பித்தான். ஆனால் அவனுடைய வேலை வெற்றி அடையாமல் போனதையும் அதன் பலனாக அவன் உள்ளத்தில் ஏற்பட்ட அதிருப்தியையும் மேலே பார்த்தோம்.
இரவில் செல்லும் ரயிலின் அழகிய தீப அலங்காரக் காட்சி மறைந்ததும் மறுபடியும் நாலாபுறமும் காரிருள் வந்து மூடிக் கொண்டது. குமாரலிங்கம் அப்போது நின்ற இடத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் தெரியாதபடி கரிய பாறை மறைத்துக் கொண்டிருந்தது. எனவே, நாலாபக்கமும் ஒரே அந்தகாரந்தான். வெளியில் இருந்தது போலவே குமாரலிங்கத்தின் உள்ளத்தையும் இருள் மூடியிருந்தது. திக்குத்திசை தெரியாத இருட்டிலே என்ன செய்வது, எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் அவன் மிகவும் திகைத்தது. அவனுடைய வருங்கால வாழ்க்கை அப்படி இருள் சூழ்ந்ததாயிருக்குமோ என்ற எண்ணம் ஒரு கணம் அவன் மனத்தில் தோன்றியபோது, அதுவரையில் எத்தனையோ ஆபத்தான நிலைமைகளிலும் அவன் உணர்ந்தறியாத ஒரு விதத் திகில் அவன் நெஞ்சில் உண்டாயிற்று. இருதயம் ‘படபட’வென்று அடித்துக் கொண்டது. நின்று கொண்டிருக்கும் போதே அவன் கால்கள் ‘வெடவெட’ வென்று நடுங்கின.
அடுத்த கணத்தில் அடியோடு பலமிழந்து நினைவிழந்து அவன் கீழே விழுந்திருப்பான். நல்ல வேளையாக அச்சமயம் குபீரென்று வீசிய குளிர்ந்த காற்றினால் அவன் உடம்பெல்லாம் சிலிர்த்தது. ஒரு பெரும் பிரயத்தனம் செய்து ‘இம் மாதிரிக் கோழைத்தனத்துக்குச் சற்றும் இடங் கொடுக்கக் கூடாது’ என்று மனத்தில் திடசங்கல்பம் செய்து கொண்டான். இருதயத்தின் படபடப்பும், கால்களின் நடுக்கமும் ஏக காலத்தில் நின்றன. மறுபடியும் ஒரு தடவை நாலாபக்கமும் கூர்ந்து கவனமாக பார்த்தான். எந்தப் பக்கம் போகலாம் என்ற எண்ணத்துடனேதான். சிறிது நேரம் அப்படி உற்றுப் பார்த்த பிறகு, மேற்கே வெகு தூரத்தில், அடிவானத்துக்கருகில், ஒரு சின்னஞ்சிறு நட்சத்திரம் அவன் கண்ணுக்குத் தெரிந்தது. மினுக்கு மினுக்கு என்று மின்னிய அந்த நட்சத்திரத்தில் ஏதோ கவர்ச்சி இருந்தது. அதையே வெகு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். சற்று முன்னால் ரயில்வே ஸ்டேஷன் கைகாட்டி விளக்கை நட்சத்திரமோ என்று எண்ணி ஏமாந்தது அவன் நினைவுக்கு வந்தது. இதுவும் அம்மாதிரி ஏமாற்றந்தானா? இல்லை, இல்லை! அந்தக் கை காட்டியின் சிவப்பு விளக்கு அவனைப் பயமுறுத்தித் தடுத்து நிறுத்தியது. இந்தக் கோமேதக வர்ண நட்சத்திரமோ அவனைக் கைகாட்டி அழைத்தது.
ஆம்; இதுவும் உண்மையில் நட்சத்திரமில்லைதான் சோலைமலை மீதுள்ள முருகன் கோயிலில் ஏற்றி வைத்து இரவு பகல் அணையாமல் காப்பாற்றப்படும் தீபம் அது! அந்த அமர தீபந்தான் தன்னைப் பரிவுடன் அழைக்கிறது என்று அறிந்து கொண்டான்.
சோலைமலைக்கும் அந்த மலைமீதிருக்கும் முருகன் கோயிலுக்கும் ஏற்கெனவே குமாரலிங்கம் போயிருக்கிறான். அந்த மலையின் அடிவாரத்திலுள்ள பாழடைந்த கோட்டையையும் பார்த்திருக்கிறான். சோலைமலைக் காட்டிலும் அதன் அடிவாரத்துக் கோட்டையிலும் மலைக்கு அப்பாலுள்ள பள்ளத்தாக்கிலும் ஒளிந்து கொண்டிருக்க வசதியான பல இடங்கள் இருக்கின்றன. இன்னும் சில காலத்துக்கு அந்த மலைப் பிரதேசந்தான். தனக்குச் சரியான இடம். முருகப் பெருமானுக்குத் தன்னிடமுள்ள கருணைதான் அந்த அமரதீபமாக ஒளிர்ந்து தன்னை அவ்விடம் வரும்படி அழைக்கிறது! தேச விடுதலைத் தொண்டில் ஈடுபட்ட தன்னைப் பிரிட்டிஷ் போலீஸாரிடம் காட்டிக் கொடுப்பதற்குக் கடவுளே இஷ்டப்படவில்லை போலும்! அதனாலேதான் உள்ளம் சோர்ந்து உடல் தளர்ந்து போய் நின்ற தன் கண் முன்னால் அந்தச் சோலைமலை முருகன் கோயில் தீபம் தெரிந்திருக்கிறது. தான் வேறு வழியாக, அந்தக் கரிய செங்குத்தான பாறைக்குப் பின்புறமாகச் சென்றிருந்தால், அந்தச் சோலைமலைத் தீபத்தைப் பார்த்திருக்க முடியாதல்லவா? சிலகாலம் அந்த மலைப் பிரதேசத்தில் நாம் மறைந்திருக்க வேண்டுமென்பது முருகனுடைய சித்தமாக இருக்க வேண்டும்!
இவ்விதம் முடிவு கட்டிய குமாரலிங்கம், சோலை மலை அமர தீபத்தைக் குறியாக வைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான். அவனுடைய நெஞ்சிலே ஏற்பட்ட உறுதியும் திடமும் அவனுடைய கால்களுக்கு அதிசயமான பலத்தை அளித்தன.
3. சேவல் கூவிற்று!
குமாரலிங்கம் சோலைமலையின் அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தபோது, மலைமேலே ஒளிர்ந்து அவனை அவ்விடத்துக்கு கவர்ந்து இழுத்த முருகன் கோயிலின் அமர தீபம் பார்வைக்கு மறைந்துவிட்டது. அதற்குப் பதிலாக, கீழ்த்திசையில் உதித்து மேலே சிறிது தூரம் பிரயாணம் செய்து வந்திருந்த விடிவெள்ளியானது உதய கன்னியின் நெற்றிச் சுட்டியில் பதித்த கோஹினூர் வைரத்தைப் போல் டால் வீசிற்று. அதுமட்டுமல்லாமல் வானத்தை மறைத்திருந்த மேகத் திட்டுகள் விலகிவிட்டபடியால், ஆகாச வெளியெங்கும் கோடானுகோடி வைரச் சுடர்கள் வாரி இறைத்தாற் போன்று காட்சி தோன்றியது.
கிழக்கு நன்றாய் வெளுத்து, சுக்கிரனுடைய பிரகாசமும் மங்கத் தொடங்கிய சமயத்தில் குமாரலிங்கம் சோலைமலையை அடுத்திருந்த பாழடைந்த கோட்டையை அடைந்தான். களைப்பினால் அவனுடைய கால்கள் கெஞ்சின. தன்னை மீறி வந்த தூக்கத்தினால் கண்களும் தலையும் சுழன்றன. ‘இனிமேல் சிறிது தூரமும் நடக்க முடியாது; இந்தப் பாழடைந்த கோட்டைக்குள்ளே புகுந்து எங்கேயாவது ஓர் இடிந்த மண்டபத்தைப் பார்த்துப் படுத்துக் கொள்ள வேண்டியதுதான். ஜனசஞ்சாரம் இல்லாத இடம். பத்திரத்துக்குக் குறைவு ஒன்றுமில்லை!’ என்று மனத்தில் எண்ணினான். மதில்சுவர் இடிந்ததனால் ஏற்பட்டிருந்த வழி மூலமாகக் கோட்டைக்குள்ளே புகுந்து சென்றான். மிக வியப்பான எண்ணம் ஒன்று அப்போது அவன் மனத்திலே தோன்றிற்று. அந்த கோட்டைக்குள்ளே முன் எப்போதோ ஒரு சமயம் ஏறக்குறைய இதே மாதிரிச் சந்தர்ப்பத்தில் ஒளிந்து கொள்வதற்காகப் பிரவேசித்தது ஞாபகத்துக்கு வந்தது. எப்போது, எதற்காக அவ்விதம் நிகழ்ந்தது என்பதெல்லாம் ஒன்றும் தெரியவில்லை.
மூன்று வருஷத்துக்கு முன்னால் அவன் இந்த மலை மேலுள்ள முருகன் கோயில் திருவிழாவுக்கு வந்திருந்த போது அந்தப் பாழடைந்த கோட்டையை மேலேயிருந்து பார்த்தானே தவிர, அதற்குள்ளே பிரவேசிக்கவில்லை. பின் எப்போது அங்கே தான் வந்திருக்கக்கூடும். இது என்ன பைத்தியக்கார எண்ணம்? கோட்டைக்குள்ளே மேலும் போகப் போக, அந்த எண்ணம் உறுதிப்பட்டு வந்தது. மேட்டிலும் பள்ளத்திலும் கல்லிலும் காரையிலும் அவன் ஏறி இறங்கி நடந்து சென்ற போது, நிச்சயமாக இங்கே முன்னொரு தடவை நாம் வந்திருக்கிறோம். ஆனால், அச்சமயம் இந்த இடங்கள் எல்லாம் இவ்விதமாக இல்லை என்று தோன்றியது.
இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் காடாக மண்டிக் கிடந்த மரம் செடிகளுக்கு மத்தியில் ஒரு சிறு மண்டபம் இருப்பது தெரிய வந்தது. அதற்குச் சற்றுத் தூரத்தில் மேல் மச்சுக்களெல்லாம் தகர்ந்து விழுந்து கீழ்த்தளம் மட்டும் அதிகம் சிதையாமலிருந்த ஒரு கட்டிடம் காணப்பட்டது. மேற்படி மண்டபமும் அப்பாலிருந்த கட்டிடமும் அவனுக்கு நன்றாய்ப் பழக்கப்பட்டவையாகத் தோன்றின. எப்பொழுது, எந்த முறையில் என்பது மட்டும் தெளிவாகவில்லை. தூக்க மயக்கத்தினால் நன்றாக யோசித்து ஞாபகப் படுத்திக் கொள்ள முடியவில்லை. ‘எல்லாவற்றுக்கும் இந்த மண்டபத்தில் சிறிது நேரம் படுத்து உறங்கலாம். உறங்கி எழுந்த பிறகு மனத்தெளிவுடன் யோசிக்கலாம்’ என்று தீர்மானித்தான். அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக மண்டபத்தின் விளிம்பில் ஒரு தூண் ஓரமாக உட்கார்ந்தான். கீழ் தளம் அவ்வளவு சுகமாக இல்லை. குண்டும் குழியும் கல்லும் கட்டியுமாகத்தான் இருந்தது. தலைக்கு வைத்துக் கொள்ளவும் ஒன்றுமில்லை. ஆனாலும் இனி ஒரு நிமிஷமும் தூக்கத்தைச் சமாளிக்க முடியாது; கையை மடித்துத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துக் கொள்ள வேண்டியது தான் என்று குமாரலிங்கம் எண்ணினான். அப்போது எங்கேயோ பக்கத்திலிருந்த கிராமத்திலிருந்து ‘கொக்கரக்கோ!’ என்று சேவல் கூவும் சத்தம் கேட்டது. ‘கொக்கரக்கோ! கொக்கரக்கோ! கொக்கரக்கோ!’
மூன்றாவது தடவை சேவல் கோழி ‘கொக்கரக்கோ’ என்று கூவியபோது, குமாரலிங்கத்தின் கண்ணெதிரே இந்திர ஜாலமோ, மகேந்திர ஜாலமோ என்று சொல்லும்படியாக ஒரு பெரிய அதிசயம் நிகழ்ந்தது. அவன் உட்கார்ந்த மண்டபம் புத்தம் புதிய அழகான வஸந்த மண்டபமாக மாறியது. மண்டபத்தைச் சுற்றியிருந்த காடு ஒரு நொடியில் மலர்கள் பூத்துக் குலுங்கிய செடிகளும் மரங்களும் உள்ள உத்தியான வனம் ஆயிற்று. அதற்கப்பாலிருந்த இடிந்த கட்டிடம் மூன்றடுக்கு மெத்தையுள்ள அழகிய வேலைப்பாடுகள் அமைந்த அரண்மனை ஆயிற்று. இன்னும் அதற்கப்பால் இரு புறங்களிலும் வேறு அழகிய கட்டிடங்கள், சுவர்களில் பூசிய முத்துச் சுண்ணாம்பினால் வைகறையின் மங்கிய வெளிச்சத்தில் தாவள்யமாகப் பிரகாசித்த கட்டிடங்கள் காணப்பட்டன. சேதம் சிறிதுமில்லாத கோட்டைச் சுவர்கள், கோட்டை வாசல்களின் மேல் விமானங்கள் ஆகியவை மங்கலாகவும் ஆனால் முழு வடிவத்துடனும் கண்முன்னே தோன்றின.
இந்த மாயாஜால மாறுதல் எல்லாம் சில விநாடி நேரத்துக்குள்ளேயே ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்து குமாரலிங்கத்தைத் திக்குமுக்காடச் செய்தன. அதே சமயத்தில் அரண்மனை ஆசார வாசலில் நாதஸ்வரம் வாசிக்கும் இனிய ஓசையும் கோட்டை வாசலில் நகரா முழங்கும் சத்தமும் கேட்டன.
நல்ல அந்தகாரத்தில் பளிச்சென்று மின்னும் மின்னலில் விஸ்தாரமான பூப்பிரதேசத்தின் தோற்றம் கண்ணுக்குப் புலனாவது போல், அந்தப் பழைய கோட்டையின் அதிசயமான வரலாறு முழுவதும் குமாரலிங்கத்துக்கு ஞாபகம் வந்தது. ஏறக்குறைய இதே மாதிரி சந்தர்ப்பத்தில் முன்னொரு தடவை இந்தக் கோட்டைக்குள்ளே தான் பிரவேசித்தது முற்றிலும் உண்மை; அதில் சிறிதும் சந்தேகமேயில்லை.
இன்றைக்கு ஏறக்குறைய நூறு வருஷத்துக்கு முன்னால் தென் பாண்டி நாட்டில் மேற்கு மலைத் தொடருக்கருகில் இரண்டு பெரிய பாளையப்பட்டு வம்சங்கள் பிரசித்தி பெற்று விளங்கின. ஒவ்வொரு வம்சத்தின் ஆளுகையிலும் சுமார் 300 கிராமங்கள் உண்டு. மறவர் வகுப்பைச் சேர்ந்தவர்களாகிய பழந்தமிழ்க் குடிகளாகிய இரண்டு பாளையக்காரர்களும் பூரண சுதந்திரத்துடன் சிற்றரசர்களாக ஆட்சி செலுத்தி வந்தார்கள். கீழே குடிபடைகள் அவர்களுக்கு அடங்கி நடந்தார்கள். மேலே அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கோ, கப்பம் கேட்பதற்கோ உரிய பெரிய அரசாங்கம் எதுவும் கிடையாது. அப்படி யாராவது கப்பம் கேட்க வந்தால் அவர்களை எதிர்த்துப் போரிடும் வீரமும், போர் வீரர்களும் அவர்களிடம் இருந்தார்கள். சோலை மலையிலும், மாறனேந்தலிலும் நீடித்த முற்றுகையைச் சமாளிக்கக் கூடிய பெரிய கோட்டை கொத்தளங்கள் இருந்தன.
அக்காலத்திலே தான் ‘கும்பெனி’யாரின் ஆட்சி பாரத நாடெங்கும் பரவிக்கொண்டு வந்தது. பண்டம் விற்கவும், பண்டம் வாங்கவும் வந்த வெள்ளைக்கார வியாபாரிகள் முதலில் தங்கள் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வீரர்களைச் சேர்த்துப் படை திரட்டினார்கள். பிறகு அந்தப் படைகளைக் கொண்டு நாடு பிடித்து அரசாளத் தொடங்கினார்கள். அரசாட்சியெல்லாம் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் பெயரிலேயே நடந்தது. வியாபாரத்துக்காக வந்தவர்கள் அரசாங்கம் நடத்தத் தொடங்கினால் அதன் இலட்சணம் எப்படியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. எந்தெந்த முறையில் பொருள் திரட்டலாமோ, எவ்வளவு சீக்கிரத்தில் திரட்டலாமோ, அதுதான் கும்பெனி அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாயிருந்தது. நாட்டின் அரசாட்சி கையிலே இருந்தால், வியாபாரம் நன்றாய் நடக்கிறது என்றும், லாபம் ஒன்றுக்கு நாலு மடங்காகக் கிடைக்கிறது என்றும் கண்ட பிறகு மேலும் மேலும் இராஜ்யத்தை விஸ்தரிக்கத் தொடங்கினார்கள். சண்டையும் உயிர்ச்சேதமும் இல்லாமல் சமாதான பேத உபாயங்களினால் சில பிரதேசங்களைத் தங்கள் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தார்கள். உடுத்திக் கொள்ள ஸுட்டும் பூட்ஸும் வேட்டையாடத் துப்பாக்கியும் அழகு பார்க்க நிலைக் கண்ணாடியும் க்ஷவரக் கத்தியும் கொடுத்துச் சில மகாராஜாக்களைத் தங்கள் வசத்தில் கொண்டு வந்தார்கள். அந்தந்தப் பாளையக்காரர்களுக்கு விரோதி யார் என்று தெரிந்து கொண்டு, விரோதிகளைப் பூண்டோ டு அழித்து விடுவதாக வாக்குறுதி கொடுத்துச் சிலரைத் தங்கள் மேலதிகாரத்தை ஒப்புக் கொள்ளச் செய்தார்கள். இந்தியர்களின் பரம்பரைக் குலதர்மமான விருந்தோம்பல் குணத்தை உபயோகப்படுத்திக் கொண்டு சில சிற்றரசர்களையும் ஜமீந்தார்களையும் பிரிட்டிஷ் கும்பெனி ஆட்சியின் அத்தியந்த சிநேகிதர்களாக்கிக் கொண்டார்கள். இந்த வருஷம் சிநேகிதர்களாயிருந்தவர்களை அடுத்த வருஷம் அடிமைகளாக்கிக் கொண்டார்கள்.
இப்படியெல்லாம் நடந்து கொண்டிருந்த காலத்தில், சோலைமலைக் கோட்டையின் புராதன சிங்காதனத்தில் வீற்றிருந்த செங்கோல் செலுத்தி வந்த மகாராஜாதி ராஜ வீர ராமலிங்க குலோத்துங்க ருத்திரத் தேவர் பிரிட்டிஷ் கும்பெனியாரின் அத்தியந்த சிநேகிதர் ஆனார். கப்பல் ஏறிக் கடல் கடந்து வியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரச் சாதியாரின் அதி அற்புத சாமர்த்தியங்களைப் பற்றி ஏற்கெனவே சோலைமலை மகாராஜா ரொம்பவும் கேளிப்பட்டிருந்தார். எனவே ஆங்கிலேயன் ஒருவன் துப்பாக்கிகள் தோட்டாக்கள் சகிதமாகச் சோலைமலைக்கு வந்து, மகாராஜாவுக்குப் பெரிய ஸலாம் ஒன்று போட்டுச் சோலைமலைக் கோட்டையை அடுத்த காடுகளில் வேட்டையாட விரும்புவதாகத் தெரிவித்ததும், மகாராஜாவின் ஆனந்தம் அளவு கடந்ததாயிற்று. வேட்டைக்குக் கிளம்பிப் போனார். ஆங்கிலேயன் அவருக்குத் துப்பாக்கியை உபயோகிக்கக் கற்றுக் கொடுத்தான். இம்மாதிரி ஆரம்பமான சிநேகிதம் சீக்கிரத்தில் நெருங்கிய அத்தியந்த நட்பாக முதிர்ந்தது. சீமையிலிருந்து மேற்படி ஆங்கிலேயன் கொண்டு வந்திருந்த இனிப்பும் போதையும் கொண்ட சாராய வகைகள் அவர்களுடைய நட்பு முதிர்வதற்கு ரொம்பவும் துணை செய்தன. சில நாளைக்குள்ளே அந்த ஆங்கிலேயனுடைய சிநேகிதர்கள் சிலரும் சோலைமலைக் காடுகளில் வேட்டையாடுவதற்கு வந்து சேர்ந்தார்கள்.
சோலைமலை சமஸ்தானத்துக்கு ஆங்கிலேயர்கள் வந்து சேர்ந்த சமயம், சோலைமலை மகாராஜாவுக்கும் அந்தச் சமஸ்தானத்தை அடுத்திருந்த மாறனேந்தல் மகாராஜாவுக்கும் கொஞ்சம் மனத்தாங்கள் ஏற்பட்டிருந்தது. எல்லைத் தகராறு காரணமாக ஏற்பட்ட மனத் தாங்கல்தான். மேற்படி தகராறில் இரண்டு மூன்று தடவை சோலைமலை வீரர்களை மாறனேந்தல் வீரர்கள் முறியடித்துத் துரத்தியடித்து விட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் மாறேனந்தல் மகாராஜாவின் மூத்த புதல்வனான யுவமகாராஜா உலகநாத சுந்தரபாண்டியத் தேவனின் துடுக்கும் அகம்பாவமுந்தான் என்று தெரிய வந்தது.
சோலைமலை மகாராஜா தம்முடைய ஏக புதல்வியான பரிமள மாணிக்கவல்லி தேவியை மாறனேந்தல் இளவரசனுக்குக் கல்யாணம் செய்விக்கலாம் என்று ஒரு காலத்தில் எண்ணியிருந்ததுண்டு. மாறனேந்தல் வம்சம் அந்தஸ்திலும் பூர்வீகத்திலும் சோலைமலை வம்சத்துக்குக் கொஞ்சம் தாழ்ந்ததாயிருந்தபோதிலும், பக்கத்துச் சமஸ்தானமாயிருப்பதால் தம் உயிருக்குயிரான அருமைப் புதல்வியை அடிக்கடி பார்ப்பதற்கு வசதியாயிருக்கும் என்ற அந்தரங்க ஆசையினால் மேற்கண்ட யோசனை அவர் மனத்தில் உதித்தது. ஆனால் அந்த எண்ணமெல்லாம் இப்போது அடியோடு மாறிவிட்டது. தன் அருமை மகள் வாழ்நாள் எல்லாம் கன்னிகையாகவே இருக்க நேர்ந்து, சோலைமலை சமஸ்தானம் சந்ததியின்றி அழிந்து போனாலும் சரி, மாறனேந்தல் இளவரசனுக்கு அவளை மணம் செய்து கொடுப்பதில்லையென்று தீர்மானித்தார். தம்மை அவமதித்த மாறனேந்தல் மகாராஜாவையும் அவருடைய மகனையும் பழிக்குப் பழி வாங்கி அந்த வம்சத்தையே பூண்டோ டு அழித்துவிட வேண்டும் என்ற வன்மம் அவர் மனத்தில் தோன்றி வைரம் பாய்ந்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது.
மாறனேந்தல் சமஸ்தானத்தைப் பற்றிச் சோலை மலை மகாராஜாவின் மனோ நிலையைத் தெரிந்து கொண்ட அவருடைய வெள்ளைக்காரச் சிநேகிதர்கள் கொஞ்சங் கொஞ்சமாக அந்த வன்மத்துக்குத் தூபம் போட்டு வளர்த்தார்கள். மாறனேந்தலைப் பழி தீர்க்கத் தங்களுடைய உதவியை அளிக்கவும் முன் வந்தார்கள். இதன்பேரில் சோலைமலை மகாராஜாவுக்கும் கும்பெனியாருக்கும் சிநேக உடன்படிக்கை ஏற்பட்டது. ஒருவருடைய சிநேகிதர்களும் பகைவர்களும் மற்றவருக்கும் சிநேகிதர்கள் – பகைவர்கள் என்றும், யுத்தம் நேர்ந்தால் ஒருவருக்கொருவர் சகாயம் செய்து கொள்ள வேண்டும் என்றும், முக்கியமாக மாறனேந்தல் வம்சத்தின் கொட்டத்தை அடக்கச் சோலைமலை மகாராஜாவுக்குக் கும்பெனியார் உதவி செய்வார்கள் என்றும் உடன்படிக்கையில் கண்டிருந்தது. அதற்குப் பதிலாகச் சோலைமலை சமஸ்தானத்தில் கும்பெனியாருக்குச் சிற்சில விசேஷ உரிமைகளும் சலுகைகளும் அளிக்கப்பட்டன.
இந்தச் செய்திகள் எல்லாம் மாறனேந்தல் யுவராஜ உலகநாதத் தேவனுக்குத் தெரிய வந்தபோது, அந்த இளங் காளையின் அகம்பாவமும் வாய்த்துடுக்கும் பன்மடங்கு அதிகமாயின. சோலைமலை ராஜாவைப் பற்றி அவன் நாலுபேர் முன்னிலையில் பகிரங்கமாக அவதூறு சொல்லவும் பரிகாசமாய்ப் பேசவும் ஆரம்பித்தான். சோலைமலை ராஜாவின் மூளை கலங்கிவிட்டது என்றும், அரண்மனைக் கோயிலில் இருந்த அம்மன் விக்கிரகத்தை அப்புறப்படுத்திவிட்டு அங்கே விக்டோ ரியா மகாராணியின் படத்தை வைத்துத் தினம் மூன்று தடவை பூசை செய்கிறார் என்றும், வெள்ளைக்காரனைக் கண்டால் உடனே விழுந்து கும்பிடுகிறார் என்றும் வெள்ளைக்காரனைப் பார்த்துக் குரைத்த குற்றத்துக்காக அவருடைய அரண்மனையில் இருந்த வேட்டை நாய்கள் எல்லாவற்றையும் சுட்டுக் கொன்றுவிட்டார் என்றும், லண்டனில் தெருக்கூட்டிக் கொண்டிருந்த வெள்ளைக்காரத் தோட்டியின் மகனுக்குச் சோலைமலை இளவரசியைக் கலியாணம் செய்து கொடுக்கப் போகிறார் என்றும், அர்த்த ராத்திரியில் திடீரென்று தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்து மேற்குத் திசையை நோக்கிப் ‘பளீர் பளீர்’ என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிறார் என்றும் – இப்படியெல்லாம் மாறனேந்தல் இளவரசன் நாலுபேர் முன்னிலையில் பரிகாசமாகப் பேசிச் சிரித்த செய்திகள் காற்றிலே மிதந்து வந்து சோலைமலை மகாராஜாவின் காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல் பாய்ந்தன.
மேற்படி செய்திகளினால் எல்லாம் மகாராஜா வீரராமலிங்கத் தேவருக்குத் தம்முடைய புதிய சிநேகிதர்களான வெள்ளைக்காரத் துரைகள் மீதோ கும்பெனி சர்க்கார் மீதோ கோபம் வரவில்லை. மாறனேந்தல் மகாராஜாவிடமும் யுவராஜாவிடமுந்தான் அளவில்லாத கோபம் பொங்கிப் பெருகிற்று. அவர்களை நினைக்கும்போதெல்லாம் அவர் இரணியகசிபு, இராவணன், சூரபத்மன் முதலான இராட்சஸர்களுடைய சுபாவத்தை அடைந்து அவர்களைக் கண்ட துண்டமாக வெட்டிக் கொன்று தின்றுவிட வேண்டும் என்பதாக அளவு கடந்த வெறிகொள்ளத் தொடங்கினார்.
உரிய காலத்தில் சோலைமலை மகாராஜாவுக்குத் தமது மனோதத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. ஏதோ ஒரு வியாஜத்தை வைத்துக் கொண்டு கும்பெனியாரின் படைகள் மாறனேந்தல் கோட்டையைத் தாக்கின. அந்தப் படைகளில் சோலைமலை மகாராஜாவின் வீரர்களும் சேர்ந்து கொண்டிருந்தார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. மாறனேந்தல் வீரர்கள் கோட்டைக்குள்ளேயிருந்து ஒப்பற்ற வீரத்துடனே போர் புரிந்தார்கள். ஆனாலும் கும்பெனிக்காரர்கள் கொண்டு வந்த நெருப்பைக் கக்கும் பீரங்கிகளுக்கு முன்னால் எந்தக் கோட்டைதான் அதிக காலம் தாக்குப் பிடித்து நிற்க முடியும்? எத்தகைய வீரர்கள்தான் எதிர்த்து நிற்க முடியும்?
கோட்டை விழுந்தது! விழுவதற்கு முன்னால் மாறனேந்தல் மகாராஜா தம் முத்த புதல்வனான இளவரசனைக் கூப்பிட்டு, “குழந்தாய்! இனிமேல் நம்பிக்கைக்கு இடமில்லை. மாறனேந்தல் வம்சம் விளங்குவதற்கு நீ ஒருவனாது பிழைத்திருக்க வேண்டும். கோட்டையின் இரகசிய வழியின் மூலமாகத் தப்பி ஓடிச் சிலகாலம் தலைமறைவாக இருந்துகொள். தக்க சந்தர்ப்பம் பார்த்து அந்தச் சோலைமலை ராட்சதனையும், அவனுக்குத் துணையாக வந்த வெள்ளை மூஞ்சிக் குரங்குகளையும் பழி வாங்கு!” என்று சொல்லி, அவ்விதமே அவனிடம் வாக்குறுதி பெற்று கொண்டார். பதிலுக்கு இளவரசன், “அப்பா! நீங்களும் எனக்கு ஒரு வாக்குறுதி தரவேண்டும். நான் கோட்டையிலிருந்து வெளியேறிய பிறகு சண்டையை நிறுத்தி விடுங்கள். வீரப்போர் புரிந்து தோல்வியடைவதில் அவமானம் ஒன்றும் இல்லை. சோலைமலை மகாராஜா எப்படியும் இந்த நாட்டிலே பிறந்து வளர்ந்தவர். பழைய மறவர் பெருங்குடியைச் சேர்ந்தவர். தங்களையும் நம் குடும்பத்தாரியும் அந்நியர்களாகிய வெள்ளைக்காரர்கள் அவமதிப்பாக நடத்துவதற்கு அவர் சம்மதிக்க மாட்டார். நமக்கும் ஒரு காலம் கூடிய சீக்கிரத்தில் வந்தே தீரும். வட தேசத்திலே இந்த வெள்ளை மூஞ்சிகளை நாட்டை விட்டுத் துரத்துவதற்காக அநேக பெரிய பெரிய மகாராஜாக்களும் நவாப்புகளும் சேர்ந்து யோசனை செய்து வருகிறார்களாம். அவர்களிடம் போய் நானும் சேர்ந்து கொள்ளுகிறேன். பெரிய படை சேர்த்துக் கொண்டு திரும்பி வருகிறேன். அதுவரையில் தாங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டான்.
தந்தை அதற்குச் சரியான பதில் சொல்லாமல், “சமயோசிதம் போல் பார்த்துக் கொள்கிறேன். எங்களைப் பற்றிக் கவலைப்படாதே! நீ உடனே புறப்படு!” என்றார். வெளி நாட்டிலிருந்து வந்த பகைவர்களாவது தயவு தாட்சண்யம் காட்டுவார்கள். உள்ளூர்ப் பகைவர்களிடம் சிறிதும் கருணையை எதிர்பார்க்க முடியாது என்னும் உண்மையை வயது முதிர்ந்த மாறனேந்தல் மகாராஜா அறிந்திருந்தார். ஆனால் அந்தச் சமயம் அதைப்பற்றித் தம் குமாரனிடம் வாக்குவாதம் செய்ய அவர் விரும்பவில்லை.
மாறனேந்தல் இளவரசன் கோட்டையின் இரகசிய வழியாக அன்றிரவே வெளியேறினான். கோட்டையிலிருந்து இரண்டு காத தூரத்தில் இருந்த மேற்கு மலைத் தொடரை அடைந்து அங்குள்ள காடுகளில் சில காலம் ஒளிந்திருக்கலாம் என்ற எண்ணத்துடன் விரைந்து சென்றான். ஆனால் பொழுது புலரும் சமயத்தில் எதிர்ப்புறத்திலிருந்து மாறனேந்தல் முற்றுகையில் சேர்ந்து கொள்வதற்காக வந்த கும்பெனிப் படை வீரர்களில் ஒருவன் சாலை ஓரமாக ஒளிந்து சென்ற இளவரசனைப் பார்த்து விட்டான். யுத்தகால தர்மப்படை, “யாரடா அங்கே போகிறவன்?” என்று கேட்டான். அவனுக்கு மறுமொழி சொல்லாமல் இளவரசன் காட்டிலே புகுந்து ஓடினான். கும்பெனி வீரர்களின் சந்தேகம் அதிகமாயிற்று. படைத் தலைவன் அவனைத் துரத்திப் பிடித்துக் கொண்டு வரும்படி ஆறு வீரர்களை நிறுத்திவிட்டு மற்றவர்களுடன் மேலே சென்றன.
தன்னைத் தொடர்ந்து ஆறு வீரர்கள் தான் வருகிறார்கள் என்பது இளவரசனுக்குத் தெரியாது. தான் மாறனேந்தல் இளவரசன் என்பதாகத் தெரிந்து கொண்டு ஒரு பெரிய படை தன்னைத் தொடர்ந்து வருவதாகவே நினைத்தான். அவர்களிடம் எப்படியும் அகப்படக் கூடாது என்று மனத்தை உறுதி செய்து கொண்டு அடர்ந்த காடுகளில் புகுந்து ஓடினான். கடைசியாக, சோலைமலையின் அடிவாரத்தை அடைந்தான். சற்றுத் தூரத்தில் சோலைமலைக்கோட்டை தென்பட்டது. அதன் சமீபத்தில் போவதற்கே அவனுக்கு இஷ்டமில்லாமலிருந்தாலும், வேறு வழி ஒன்றும் காணவில்லை. அந்தக் கோட்டை மதிலின் ஓரமாகச் சென்று கோட்டையைக் கடந்து போனால் தான் அப்பால் மலை மேல் ஏறுவதற்குச் சௌகரியமான சரிந்த பாறை இருந்தது. இளவரசன் அப்போது வந்து சேர்ந்திருந்த இடத்தில் பாறை செங்குத்தாகக் கிளம்பியது. சற்று நின்று யோசித்த பிறகு, பின்னால் சமீபத்தில் கேட்ட காலடிச் சத்தத்தினால் உந்தப்பட்டவனாய், இளவரசன் மேலும் விரைந்தான். அவனுடைய கால்கள் கெஞ்சின; தலை சுழன்றது; கண்கள் இருண்டு வந்தன. கோட்டை மதிலை அடுத்திருந்த குறுகலான வழியில் அவன் போய்க் கொண்டிருந்தான். பின்னால் காலடிச் சத்தம் விநாடிக்கு விநாடி நெருங்கி வந்து கொண்டிருந்தது. மேலே ஓர் அடி கூட இனிமேல் நடக்க முடியாது என்று தோன்றியது. ஒரு பக்கம் கோட்டைச் சுவரும் மற்றொரு பக்கம் ‘கிடுகிடு’ பள்ளமுமாக இருந்த அந்தக் குறுகிய பாதையில் அப்பால் இப்பால் நகர்ந்து தப்புவதற்கு வழியே இல்லை. வேட்டை நாய்களைப் போல் தன்னைத் துரத்திக்கொண்டு வரும் எதிரி வீரர்களிடம் அகப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
5. அந்தப்புர அடைக்கலம்!
மாறனேந்தல் இளவரசன் அப்போது தான் அடைந்திருந்த நெருக்கடியான நிலைமையை நன்கு உணர்ந்தான். தன்னைத் துரத்திக் கொண்டு வந்த எதிரிகளிடம் அவ்வளவு எளிதாக அகப்பட்டுக் கொள்வதைக் காட்டிலும் அந்தக் குறுகிய பாதையில் அவர்களை எதிர்த்து நின்று, ஒருவனுக்கொருவனாகப் போரிட்டு, தேசத் துரோகிகளில் எவ்வளவு பேரைக் கொல்ல முடியுமோ அவ்வளவு பேரையும் கொன்று விட்டுத் தானும் உயிரை விடுவது மேல் அல்லவா?
இவ்விதம் சிந்தித்துக் கொண்டே பாதையின் ஒரு முடுக்கில் திரும்பிய போது, எதிரில் அவன் கண்ட தோற்றம் அதிசயமான எண்ணம் ஒன்றை அவனுக்கு அளித்தது. பாதைக்கு அருகில் நெடிதோங்கி வளர்ந்திருந்த ஒரு மரம் எந்தக் காரணத்தினாலோ அடிவேர் பெயர்ந்து கோட்டை மதிலின் பக்கமாகச் சாய்ந்திருந்தது. இரண்டொரு தினங்களுக்குள்ளேதான் அந்தப் பெரிய மரம் அப்படிச் சாய்ந்திருக்க வேண்டும். அந்த மரத்திலே ஏறி உச்சாணிக் கிளையை அடைந்தால், அங்கிருந்து சுலபமாக மதில் சுவரின் மேல் குதிக்கலாம். பிறகு மதில் சுவரிலிருந்து கோட்டைக்குள்ளே குதிப்பதில் கஷ்டம் ஒன்றுமிராது. ஏன் அப்படிச் செய்யக்கூடாது? தன்னைத் துரத்தி வந்தவர்களிடமிருந்து தப்புவதற்காக ஏன் சோலைமலைக் கோட்டைக்குள்ளேயே பிரவேசித்து அபாயம் நீங்கும் வரையில் அங்கு ஒளிந்திருக்கக் கூடாது! சோலைமலை மகாராஜா அச்சமயம் மாறனேந்தல் கோட்டை வாசலில் எப்போது கோட்டை விழும் என்று காத்துக் கிடக்கிறார். ஆகையால் இங்கே கட்டுக் காவல் அதிகமாக இருக்க முடியாது. தற்சமயம் பத்திரமாக ஒளிந்து கொண்டிருப்பதற்கு இதுதான் சரியான இடம். கோட்டைக்குள்ளே யாரும் தேடமாட்டார்கள். கோட்டைக்குள் புகுவதற்கு வேண்டிய துணிச்சல் தன்னைத் தொடர்ந்து வரும் எதிரி வீரர்களுக்கு ஒரு நாளும் இராது. இன்றைக்கு ஒரு பகல் அங்கே ஒளிந்திருந்து இளைப்பாறினால் இரவு இருட்டியதும் வந்த வழி மூலமாகவே வெளியேறி மலையைக் கடந்து அப்பாலுள்ள பள்ளத்தாக்கை அடைந்து விடலாம்.
இப்படி எண்ணியபோது, பக்கத்துக் கிராமத்திலிருந்து, ‘கொக்கரக்கோ’ என்று கோழி கூவும் சத்தம் கேட்டது. தன் மனத்தில் தோன்றிய யோசனையை ஆமோதிக்கும் நல்ல சகுனமாகவே இளவரசன் அதைக் கருதினான்.
தட்சணமே, சாய்ந்திருந்த மரத்தின் மேல் ‘சரசர’வென்று ஏறினான். மரத்திலிருந்த பட்சிகள் ஏதோ மர நாயோ வேறு கொடிய மிருகமோ ஏறுகிறது என்று எண்ணிக் கொண்டு சிறகுகளை அடித்துக் கொண்டும் ‘கீச்சுக் கீச்சு’ என்று கத்திக் கொண்டு பறந்தும் ஓடின. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இளவரசன் மரத்தின் உச்சியை அடைந்து மதிலின் மேல் குதித்தான். மதில் மேலிருந்து அவன் கோட்டைக்குள்ளே இறங்குவதற்கு அதிக நேரம் ஆகவில்லை.
கோட்டைக்குள் இளவரசன் குதித்து இறங்கிய இடம் அழகான உத்தியான வனமாயிருந்தது. உதய நேரத்தில் இதழ் விரிந்து மலரும் பலவகைப் புஷ்பங்களின் நறுமணம் ‘கம்’மென்று வந்து கொண்டிருந்தது. ஆனால் அதையெல்லாம் அநுபவிக்ககூடிய மனநிலை அச்சமயம் உலகநாதத்தேவனுக்கு இருக்கவில்லை. உடனே எங்கேயாவது சிறிது நேரம் படுத்தால் போதும் என்று தோன்றியது. உத்தியான வனத்துக்கு நடுவில் வஸந்த மண்டபமும் அதற்குச் சிறிது தூரத்திற்கப்பால் அரண்மனையின் ஒரு பகுதியும் தெரிந்தன. ஜன மாட்டமே இல்லாமல் எங்கும் நிசப்தமாக இருந்தது. இளவரசனுடைய களைப்புற்ற கால்கள் அவனை வஸந்த மண்டபத்தை நோக்கி இழுத்துச் சென்றன.
மண்டபத்தை நெருங்கியதும் அவனுக்கு எதிரே தோன்றிய காட்சியினால் இளவரசனுடைய மூச்சு சிறிது நேரம் நின்று போயிற்று. மண்டபத்தின் பின்புறத்து முனையிலே பெண் ஒருத்தி மெதுவாக வந்து கொண்டிருந்தாள். கையில் அவள் புஷ்பக் கூடை வைத்திருந்தாள். ஸ்திரீ சௌந்திரையத்தைப் பற்றி மாறனேந்தல் இளவரசன் எத்தனையோ கவிகளிலும் காவியங்களிலும் படித்திருந்தான். ஆனால் இந்த மாதிரி அற்புத அழகை அதுவரையில் அவன் கற்பனையும் செய்ததில்லை. சௌந்தரிய தேவதையே மானிடப் பெண் உருவம் கொண்டு அவன் முன்னால் வருவதுபோல் தோன்றியது. அந்தப் பெண்ணோ தன்னுடைய அகன்ற விசாலமான நயனங்களை இன்னும் அகலமாக விரியச் செய்துகொண்டு அளவில்லா அதிசயத்துடன் மாறனேந்தல் இளவரசனைப் பார்த்தாள்.
சிறிது நேரம் இப்படி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு ஊமைகளாக நின்ற பிறகு இளவரசன் துணிச்சலை வருவித்துக் கொண்டு, “நீ யார்?” என்றான்.
வீர மறவர் குலத்திலே பிறந்த மாணிக்கவல்லிக்கு அப்போது ரோஷம் பிறந்தது. பேசும் தைரியமும் வந்தது. “நீ யார் என்றா கேட்கிறாய்? அந்தக் கேள்வியை நானல்லவா கேட்க வேண்டும். நீ யார்? கோட்டைக்குள் எப்படிப் புகுந்தாய்? அந்தப்புரத்து நந்தவனத்துக்குள் என்ன தைரியத்தினால் வந்தாய்?” என்று இராமபாணங்களைப் போன்ற கேள்விகளைத் தொகுத்தாள்.
உலகநாதத்தேவன் அசந்து போய்விட்டான். அவள் சோலைமலை இளவரசியாகத்தான் இருக்க வேண்டும்! வேறு யாரும் இவ்வளவு அதிகாரத் தோரணையுடன் பேசமுடியாதென்று எண்ணினான். அவளுடைய கேள்விகளுக்கு மறுமொழியாக ஏதாவது சொல்ல வேண்டுமென்று ஆன மட்டும் முயன்றும் ஒரு வார்த்தை கூட அவனால் சொல்ல முடியவில்லை.
“ஏன் இப்படி விழித்துக் கொண்டு நிற்கிறாய்? அரண்மனையில் மகாராஜா இல்லாத சமயம் பார்த்து எதையாவது திருடிக் கொண்டு போகலாம் என்று வந்தாயா? இதோ காவற்காரர்களை கூப்பிடுகிறேன் பார். வேட்டை நாயையும் கொண்டு வரச் சொல்லுகிறேன்…”
இவ்வாறு இளவரசி சொல்லிக் கொண்டிருந்த போது, கோட்டை மதிலுக்கு அப்பால் சிலர் இரைந்து பேசிக் கொண்டு விரைவாக நடந்து செல்லும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தை மாணிக்கவல்லி காது கொடுத்துக் கவனமாகக் கேட்டாள். பின்னர், தனக்கு எதிரில் நின்ற வாலிபனை உற்றுப் பார்த்தாள். அவன் முகத்திலே தோன்றிய பீதியின் அறிகுறியையும் கவனித்தாள். அவளுடைய பெண் உள்ளம் சிறிது இரக்கம் அடைந்தது.
கோட்டை மதிலுக்கு வெளியில் பேச்சுச் சத்தம் கேட்டவரையில் அதையே கவனித்துக் கொண்டிருந்த மாறனேந்தல் இளவரசன், அந்தச் சத்தம் ஒடுங்கி மறைந்ததும் மாணிக்கவல்லியைப் பார்த்து, “அம்மணீ! ஏதோ தெரியாத்தனமாகத் தான் இங்கே வந்துவிட்டேன். ஆனால் திருடுவதற்கு வரவில்லை. உங்கள் வீட்டில் திருடி எனக்கு ஒன்றும் ஆகவேண்டியதில்லை!” என்றான்.
மீண்டும் மாணிக்கவல்லியின் ஆங்காரம் அதிகமாயிற்று. “ஓகோ! திருடுவதற்கு வரவில்லையா? அப்படியானால் எதற்காக வந்தாயாம்? இதோ பார்!…” என்று சொல்லிவிட்டு மறுபக்கம் திரும்பி, “சங்கிலித் தேவா!” என்று கூப்பிட்டாள்.
அப்போது இளவரசன் ஒரு நொடியில் அவள் அருகில் பாய்ந்து வந்து பலவந்தமாக அவளுடைய வாயைத் தன் கைகளினால் மூடினான். எதிர்பாராத இந்தக் காரியத்தினால் திகைத்துச் சிறிது நேரம் செயலற்று நின்ற இளவரசி சுய நினைவு வந்ததும் சட்டென்று அவனுடைய கைகளை அப்புறப்படுத்திவிட்டுக் கொஞ்ச தூரம் அப்பால் போய் நின்றாள். அவனைப் பார்வையினாலேயே எரித்து விடுபவள் போல் ஏறிட்டுப் பார்த்து, “என்ன துணிச்சல் உனக்கு?” என்று கேட்டாள். கோபத்தினாலும் ஆங்காரத்தினாலும் அவளுடைய உடல் நடுங்கியதுபோல் குரலும் நடுங்கியது.
உலகநாதத்தேவன் தான் பதற்றப்பட்டுச் செய்த காரியம் எவ்வளவு அடாதது என்பதை உணர்ந்திருந்தான். எனவே, முன்னைக் காட்டிலும் பணிவுடன் இரக்கம் ததும்பிய குரலில், “அம்மணி! உன்னை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். மன்னிக்க வேண்டும். என்னைத் தொடர்ந்து வரும் எதிரிகளிடம் அகப்படாமல் தப்புவதற்காக இங்கே வந்தேன். என்னை அவர்களிடம் காட்டிக் கொடுத்துவிடாதே! அடைக்கலம் என்று வந்தவர்களைக் காட்டிக் கொடுப்பது தர்மமா? சோலைமலை இராஜகுமாரிக்கு அழகாகுமா?” என்றான்.
இந்த வார்த்தைகள் மாணிக்கவல்லியின் உள்ளக் கடலில் பெருங்க் கொந்தளிப்பை உண்டாக்கின. ஒரு பக்கம் ஆங்காரமும் இன்னொரு பக்கம் ஆனந்தமும் பொங்கி வந்தன.
“ஆகா? என்னை இன்னார் என்று தெரிந்துமா இப்படிச் செய்தாய்? உன்னை என்ன செய்கிறேன், பார்!” என்று அவள் கொதிப்புடன் கூறினாள் என்றாலும், குரலில் முன்னைப் போல் அவ்வளவு கடுமை தொனிக்கவில்லை.
“நீ என்னை என்ன செய்தாலும் சரிதான், உன் கையால் பெறுகிற தண்டனையைப் பெரிய பாக்கியமாகக் கருதுவேன்! ஆனால் என் பகைவர்களிடம் மட்டும் என்னைக் காட்டிக் கொடுக்க வேண்டாம். அப்படிச் செய்தால் அப்புறம் என் ஆயுள் உள்ளவரைக்கும் வருத்தப்படுவாய்!” என்றான் இளவரசன்.
மாணிக்கவல்லி மேலும் சாந்தமடைந்து, “இவ்வளவெல்லாம் கருப்பங் கட்டியைப் போல் இனிக்க இனிக்கப் பேசுகிறாய்; ஆனால் நீ யார் என்று மட்டும் இன்னும் சொல்லவில்லை, பார்!” என்றாள்.
“நான் யாராயிருந்தால் என்ன? தற்சமயம் ஓர் அநாதை; திக்கற்றவன்; சேலை உடுத்திய பெண்ணிடம் வந்து அடைக்கலம் கேட்பவன். இச்சமயம் எனக்கு அடைக்கலம் கொடுத்தால் என்றென்றைக்கும் நன்றி மறவாமல் உன்னை நினைத்துக் கொண்டிருப்பேன்.”
“மாறனேந்தல் மகாராஜாவின் மகனாகப் பிறந்து விட்டு இப்படியெல்லாம் கெஞ்சுவதற்கு வெட்கமாயில்லையா?” என்று மாணிக்கவல்லி கேட்டபோது மாறனேந்தல் இளவரசனுக்குத் தூக்கிவாரிப் போட்டது என்றால், அது மிகவும் குறைத்துச் சொன்னதேயாகும்.
சிறிது நேரம் திறந்த வாய் மூடாமல் நின்ற பிறகு பெரு முயற்சி செய்து, “என்னை எப்படி உனக்குத் தெரியும்?” என்று கேட்டான்.
“ஏன் தெரியாது? நன்றாகத் தெரியும். உன்னைப் போன்ற படம் ஒன்று எங்கள் அரண்மனையில் இருந்தது.”
“இருந்தது என்றால், இப்போது இல்லையா?”
“இப்போது இல்லை. ஆறு மாதத்துக்கு முன் ஒருநாள் அதை அப்பா சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டுக் காலால் மிதி மிதி என்று மிதித்தார். ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று நான் கேட்டேன். அதற்குப் பதிலாக, மாறனேந்தல் இளவரசனாகிய நீ ஒருநாள் அவர் கையில் சிக்கிக் கொள்வாய் என்றும், அப்போது பன்னிரண்டு வேட்டை நாய்களை உன் மேல் சேர்ந்தாற்போல் ஏவிவிடப் போவதாகவும் அவர் சொன்னார்.”
இதைக் கேட்ட இளவரசனுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. “அம்மம்மா! எவ்வளவு கொடுமையான மனிதர்!” என்றான்.
“அப்பா ஒன்றும் கொடுமையான மனிதர் அல்ல. நீ மட்டும் அவரைப் பற்றி அப்படியெல்லாம் பரிகாசம் செய்து பேசலாமா? அதை நினைத்துப் பார்த்தால் எனக்கே உன் பேரில் பன்னிரண்டு வேட்டை நாய்களை ஏவி விடலாம் என்று தோன்றுகிறது!”
“அம்மணி! உன் தகப்பனாரைப் பற்றி நான் சில சமயம் பரிகாசமாகப் பேசியது உண்மைதான். ஆனால், அதெல்லாம் அவர் அந்நியர்களாகிய வெள்ளைக்காரர்களுக்கு இடங்கொடுத்துத் தேசத்தைக் காட்டிக் கொடுக்கிறாரே என்ற வருத்தத்தினாலேதான். அவர் மட்டும் வெள்ளைக்காரர்களை சோலைமலை சமஸ்தானத்திலிருந்து விரட்டி அடித்து விட்டு முன்போல் சுதந்திரமாய் இருக்கட்டும், நான் அவருடைய காலில் விழுந்து அவரைப் பற்றிக் கேலி பேசியதற்கெல்லாம் ஆயிரந்தடவை மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.”
“வெள்ளைக் காரர்கள் மீது உனக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம்? உன்னை என்ன செய்தார்கள்? வெள்ளைக்காரச் சாதியார் எவ்வளவு நல்லவர்கள் என்றும், கெட்டிக்காரர்கள் என்றும் அப்பா சொல்லுகிறார்! நான் கூட அவர்களை நாலைந்து தடவை பார்த்திருக்கிறேன். ரொம்ப நல்லவர்களாய்த்தான் தோன்றினார்கள்.”
“எவ்வளவுதான் நல்லவர்களாயிருக்கட்டுமே? அதற்காக நம் தேசத்தையும் ஜனங்களையும் அந்நியர்களிடம் ஒப்படைத்து அவர்களுக்கு அடிமையாகிவிடுவதா? வெள்ளைகாரர்கள் நல்லவர்களாக இருப்பதெல்லாம் வெறும் நடிப்பு. இந்தத் தேசம் முழுவதையும் கைப்பற்றி அரசாண்டு இங்கேயுள்ள பணத்தையெல்லாம் கொண்டு போக வேண்டும் என்பதுதான் அவர்களுடைய எண்ணம். அதற்காக முதலில் நல்லவர்கள் போல நடிக்கிறார்கள். போகப் போக அவர்களுடைய உண்மைச் சொரூபத்தைக் காட்டுவார்கள். நீ வேண்டுமானால் பார்த்துக் கொண்டே இரு. மாறனேந்தல் இராஜ்யத்தைக் கைப்பற்றியதும் கொஞ்ச நாளைக்கெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு சோலைமலை இராஜ்யத்தையும் கைப்பற்றுகிறார்களா இல்லையா என்று நீயே பார்!”
“இவ்வளவெல்லாம் பேசுகிறாயே, மாறனேந்தல் கோட்டையில் பெரிய சண்டை நடக்கும் போது நீ ஏன் இங்கே வந்து ஒளிந்து கொண்டிருக்கிறாய்! சண்டைக்குப் பயந்து கொண்டுதானே? மறவர் குலத்தில் பிறந்த வீரன் இப்படிச் சண்டைக்குப் பயந்துகொண்டு ஓடலாமா?”
“அம்மணி! நீ சொல்வது உண்மைதான். ஆனால் என்னுடைய சொந்த விருப்பத்தினால் நான் ஓடி வரவில்லை. சண்டைக்குப் பயந்துகொண்டும் ஓடி வரவில்லை. என் தந்தையின் விருப்பத்தைத் தட்ட முடியாமல் வெளியேறி வந்தேன். உனக்கும் எனக்கும், உன்னுடைய வம்சத்துக்கும், என்னுடைய வம்சத்துக்கும், இந்தப் பாரத தேசத்துக்குமே விரோதிகளான அந்நியர்களை எப்படியாவது விரட்டுவதற்கே வழி தேடுவதற்காகவே வந்தேன். அதற்காகத்தான் உன்னிடம் அடைக்கலம் கேட்கிறேன். அதற்காகவே எதிரிகளிடம் என்னைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்!” என்று மாறனேந்தல் இளவரசன் உணர்ச்சி ததும்பப் பேசினான்.
அவனுடைய வார்த்தைகள் மாணிக்கவல்லியின் மனத்தைப் பெரிதும் கனியச் செய்து அவளுடைய கண்களில் கண்ணீர்த் துளிகளையும் வருவித்தன. ஆயினும் அதை அவள் ஒப்புக் கொள்ள விரும்பவில்லை.
“உங்களுடைய விவகாரம் எல்லாம் எனக்குத் தெரியாது. பார்க்கப் போனால் நான் அந்தப்புரத்தில் அடைபட்டுக் கிடக்கும் பெண்தானே? இந்தக் கோட்டையின் மதிலுக்கு அப்பால் நான் சென்றதே இல்லை. அரண்மனை உப்பரிகையிலிருந்து பார்த்தால் தெரியும் மலையையும் காடுகளையும் தவிர வேறு எதையும் நான் பார்த்ததே இல்லை. தேசம், இராஜ்யம், சுதந்திரம், அடிமைத்தனம் என்பதையெல்லாம் நான் என்ன கண்டேன்? உன் தகப்பனாருடைய வார்த்தை உனக்கு எப்படிப் பெரிதோ அப்படியே என் தகப்பனாரின் விருப்பம் எனக்குப் பெரிது. நியாயமாகப் பார்த்தால் என் தகப்பனாரின் ஜன்ம விரோதியான உன்னை நான் உடனே காவற்காரர்களிடம் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டும். அதிலும் அந்தப்புரத்து நந்தவனத்துக்குள் வரத் துணிந்த உன்னிடம் துளிக்கூட தாட்சிண்யம் பாராட்டக் கூடாது. ஆனாலும் நீ ‘அடைக்கலம்’ என்றும் ‘காப்பாற்ற வேண்டும்’ என்றும் சொல்லுகிறபடியால் உன்னைக் காட்டிக் கொடுக்க எனக்கு மனம் வரவில்லை. உன்னிடம் மேலும் பேசிக் கொண்டு நிற்கவும் எனக்கு இஷ்டம் இல்லை. வந்தவழியாக நீ உடனே புறப்பட்டுப் போய்விடு!”
இவ்விதம் இளவரசி மிகக் கடுமையான குரலில் அதிகாரத் தொனியில் கூறினாள். அவள் அந்தப்புரத்துக்குள் அடைந்து கிடக்கும் உலகம் அறியாத இளம் பெண்ணான போதிலும், அவளுடைய அறிவையும் பேச்சுத் திறமையையும் கண்டு உலகநாதத் தேவன் அதிசயித்தான். முன்னே பேச்சு நடந்தபடி இத்தகைய பெண்ணரசியை மணந்து கொள்ளும் பாக்கியம் தனக்கு இல்லாமற் போயிற்றே என்ற ஏக்கம் அப்படிப்பட்ட ஆபத்தான சமயத்தில் அவன் மனத்தில் தோன்றியது.
அவன் ஒன்றும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்திருப்பதைப் பார்த்த இளவரசி, “இப்படியே நின்று கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? நீயாகப் போகப் போகிறாயா! இல்லாவிட்டால் காவற்காரர்களையும் வேட்டை நாய்களையும் கூப்பிட்டுத்தான் ஆக வேண்டுமா?” என்று கேட்டாள்.
அவள் சொல்கிறபடி உடனே போய்விடலாம் என்று முதலில் இளவரசன் நினைத்தான். ஆனால் அவனுடைய உடம்பின் களைப்பும் கால்களின் சலிப்பும் தலையின் கிறுகிறுப்பும் அதற்குக் குறுக்கே நின்றன. முன் எப்போதையும் விட அதிக இரக்கமான குரலில், “அம்மணி! இராத்திரி முழுவதும் கண்விழித்தும் வழி நடந்தும் சொல்ல முடியாத களைப்பை அடைந்திருக்கிறேன். இந்த நிலையில் ஓர் அடிகூட என்னால் எடுத்து வைக்க முடியாது. இச்சமயம் நீ என்னை வெளியே அனுப்புவதும் எதிரிகளிடம் என்னைப் பிடித்துக் கொடுப்பதும் ஒன்றுதான். இந்த நந்தவனத்தில் எங்கேயாவது ஓர் இருண்ட மூலையில் சிறிது நேரம் படுத்துத் தூங்கிவிட்டுப் போகிறேன். என்னால் உனக்கு ஒருவிதத் தொந்தரவும் நேராது. சத்தியமாகச் சொல்லுகிறேன். ஒருவேளை நான் அகப்பட்டுக் கொண்டால் அதன் பலனை அநுபவிக்கிறேன். என்னை நீ பார்த்ததாகவோ பேசியதாகவோ காட்டிக் கொள்ள வேண்டாம். நானும் சொல்ல மாட்டேன். உண்மையில், இவ்வளவு அதிகாலை நேரத்தில் நந்தவனத்தில் பூப்பறிக்க நீ வருவாய் என்று யார் நினைக்க முடியும்?”
இளவரசி மாணிக்கவல்லி சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்து நின்றாள். பரிதாபமான முகத்துடன் கனிந்த குரலில் பேசிய அந்த ராஜகுமாரன் விஷயத்தில் அவள் மனம் பெரிதும் இரக்கமடைந்திருந்தது. விதியை வெல்லுவதென்பது யாருக்கும் இயலாத காரியமல்லவா?
“அப்படியானால் நான் சொல்கிறபடி கேள். இந்த வஸந்த மண்டபத்திலேயே படுத்துக் கொண்டு தூங்கு இன்றைக்கு இங்கே யாரும் வரமாட்டார்கள். வந்தால் என்னுடைய வேலைக்காரிதான் வருவாள். அவள் வராதபடி நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் தூக்கம் விழித்து எழுந்ததும் நீ பாட்டுக்குப் போய்விடக்கூடாது. என்னிடம் சொல்லிக் கொண்டுதான் போக வேண்டும். அபாயம் ஒன்றும் இல்லாத தக்க சமயம் பார்த்து உன்னை நான் அனுப்பி வைக்கிறேன். நான் மறுபடி வரும் வரையில் நீ இங்கேயே இருக்க வேண்டும்” என்று மாணிக்கவல்லி கண்டிப்பான அதிகாரத் தோரணையில் கூறினாள்.
“அப்படியே ஆகட்டும், அம்மணி! ரொம்ப வந்தனம்” என்றான் இளவரசன். அவ்விடத்தை விட்டு மாணிக்கவல்லி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு சென்று மறைந்ததும், உலகநாதத் தேவன் வஸந்த மண்டபத்தின் ஓரத்தில் கையைத் தலையணையாக வைத்துக் கொண்டு படுத்தான். சிறிது நேரத்துக்கெல்லாம் ஆழ்ந்த நித்திரையின் வசமானான்.
-கல்கி