பொருட்பால் | அரசியல் | குற்றங்கடிதல்-44
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
குறள்:431
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவருடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.
குறள்:432
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு
பொருள் கொடாத தன்மையும், மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பவனுக்குக் குற்றங்களாகும்.
குறள்:433
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும், அதைப் பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக்கொள்வர்.
குறள்:434
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும். ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ளவேண்டும்.
குறள்:435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின்முன் நின்ற வைக்கோல்போர்போல் அழிந்துவிடும்.
குறள்:436
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு
முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கிப் பிறகு பிறருடைய குற்றத்தை ஆராயவல்லவனானால் தலைவனுக்கு என்ன குற்றமாகும்?
குறள்:437
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்
செய்யத்தக்க நன்மைகளைச்செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம் உய்யுந்தன்மை இல்லாமல் அழியும்.
குறள்:438
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று
பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்த்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.
குறள்:439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை
எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக்கூடாது; நன்மை தராத செயலைத் தான் விரும்பவும் கூடாது.
குறள்:440
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்
தன் விருப்பம் பிறர்க்குத் தெரியாதபடி விருப்பமானவற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.