Skip to content
Home » கொல்லாமை-33

கொல்லாமை-33

 அறத்துபால் | துறவறவியல்|கொல்லாமை

குறள்:321

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்

அறமாகிய செயல்‌ எது என்றால்‌ ஓர்‌ உயிரையும்‌ கொல்லாமையாகும்‌; கொல்லுதல்‌ அறமல்லாத செயல்கள்‌ எல்லாவற்றையும்‌ விளைக்கும்‌.

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

குறள்:322

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

கிடைத்ததைப்‌ பகுத்துக்‌ கொடுத்துத்‌ தானும்‌ உண்டு பல உயிர்களையும்‌ காப்பாற்றுதல்‌, அறநூலார்‌ தொகுத்த அறங்கள்‌ எல்லாவற்றிலும்‌ தலையான அறமாகும்‌.

குறள்:323

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று

இணையில்லாத ஓர்‌ அறமாகக்‌ கொல்லாமை நல்லது; அதற்கு அடுத்த நிலையில்‌ வைத்துக்‌ கூறத்தக்கதாகப்‌ பொய்யாமை நல்லது.

குறள்:324

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி

நல்ல வழி என்று அறநூல்களால்‌ சொல்லப்படுவது எது என்றால்‌, எந்த உயிரையும்‌ கொல்லாத அறத்தைப்‌ போற்றும்‌ நெறியாகும்‌.

குறள்:325

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை

வாழ்க்கையின்‌ தன்மையைக்‌ கண்டு அஞ்சித்‌ துறந்தவர்கள்‌ எல்லாரிலும்‌, கொலை செய்வதற்கு அஞ்சிக்‌ கொல்லாத அறத்தைப்‌ போற்றுகின்றவன்‌ உயர்ந்தவன்‌.

குறள்:326

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று

கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின்மேல்‌, உயிரைக்‌ கொண்டு செல்லும்‌ கூற்றுவனும்‌ செல்லமாட்டான்‌.

குறள்:327

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை

தன்‌ உயிர்‌ உடம்பிலிருந்து நீங்கிப்‌ போவதாக நேர்ந்தாலும்‌, அதைத்‌ தடுப்பதற்காகத்‌ தான்‌ வேறோர்‌ உயிரை நீக்கும்‌ செயலைச்‌ செய்யக்கூடாது.

குறள்:328

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை

கொலையால்‌ நன்மையாக விளையும்‌ ஆக்கம்‌ பெரிதாக இருந்தாலும்‌, சான்றோர்க்குக்‌ கொலையால்‌ வரும்‌ ஆக்கம்‌ மிக இழிவானதாகும்‌.

குறள்:329

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து

கொலைத்தொழிலினராகிய மக்கள்‌ அதன்‌ இழிவை ஆராய்ந்தவரிடத்தில்‌ புலைத்தொழிலுடையவராய்த்‌ தாழ்ந்து தோன்றுவர்‌.

குறள்:330

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்

நோய்‌ மிகுந்த உடம்புடன்‌ வறுமையான தீய வாழ்க்கை உடையவர்‌, முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளிலிருந்து நீக்கினவர்‌ என்று அறிஞர்‌ கூறுவர்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!