Skip to content
Home » செய்ந்நன்றி அறிதல்-11

செய்ந்நன்றி அறிதல்-11

திருக்குறள்

Thank you for reading this post, don't forget to subscribe!

அறத்துபால் -இல்லறவியல்செய்ந்நன்றி அறிதல்-11

குறள்-101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

தான்‌ ஓர்‌ உதவியும்‌ முன்‌ செய்யாதிருக்கப்‌ பிறர்‌ தனக்குச்‌ செய்த உதவிக்கு மண்ணுலகையும்‌ விண்ணுலகையும்‌ கைம்மாறாகக்‌ கொடுத்தாலும்‌ ஈடு ஆக முடியாது.

குறள்-102

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

உற்ற காலத்தில்‌ ஒருவன்‌ செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும்‌, அதன்‌ தன்மையை ஆராய்ந்தால்‌ உலகத்தைவிட மிகப்‌ பெரிதாகும்‌.

குறள்-103

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது

இன்ன பயன்‌ கிடைக்கும்‌ என்று ஆராயாமல்‌ ஒருவன்‌ செய்த உதவியின்‌ அன்புடைமையை ஆராய்ந்தால்‌ அதன்‌ நன்மை கடலைவிடப்‌ பெரிதாகும்‌.

குறள்-104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

ஒருவன்‌ தினையளவாகிய உதவியைச்‌ செய்த போதிலும்‌ அதன்‌ பயனை ஆராய்கின்றவர்‌, அதனையே பனையளவாகக்‌ கொண்டு போற்றுவர்‌.

குறள்-105

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து

கைம்மாறாகச்‌ செய்யும்‌ உதவி முன்செய்த உதவியின்‌ அளவை உடையது அன்று; உதவி செய்யப்பட்டவரின்‌ பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்‌.

குறள்-106

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு

குற்றமற்றவரின்‌ உறவை எப்போதும்‌ மறத்தலாகாது, துன்பம்‌ வந்த காலத்தில்‌ உறுதுணையாய்‌ உதவியவர்களின்‌ நட்பை எப்போதும்‌ விடலாகாது.

குறள்-107

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு

தம்முடைய துன்பத்தைப்‌ போக்கி உதவியவரின்‌ நட்பைப்‌ பல்வேறு வகையான பிறவியிலும்‌ மறவாமல்‌ போற்றுவர்‌ பெரியோர்‌.

குறள்-108

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

ஒருவர்‌ முன்செய்த நன்மையை மறப்பது அறம்‌ அன்று; அவர்‌ செய்த தீமையைச்‌ செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம்‌ ஆகும்‌.

குறள்-109

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்

முன்‌ செய்த உதவி செய்தவர்‌ பின்பு கொன்றாற்‌ போன்ற துன்பத்தைச்‌ செய்தாரானாலும்‌, அவர்‌ முன்‌ செய்த ஒரு நன்மையை நினைத்தாலும்‌ அந்தத்‌ துன்பம்‌ கெடும்‌.

குறள்-110

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

எந்த அறத்தை அழித்தவர்க்கும்‌ தப்பிப்‌ பிழைக்க வழி உண்டாகும்‌; ஒருவர்‌ செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *