Skip to content
Home » தீரனின் தென்றல் – 13

தீரனின் தென்றல் – 13

டக் டக் டக்… கதவு தட்டும் சத்தத்தில் நினைவுகளில் இருந்து மீண்டான் ஆதீரன். மதன் சென்று கதவை திறக்க கமலம் தான் இருவரையும் சாப்பிட அழைக்க வந்திருந்தார்.

Thank you for reading this post, don't forget to subscribe!

“கமலா ம்மா… சாப்பாடா இப்போ முக்கியம்.. ஏன் கமலா ம்மா இப்படி இடையில வந்து டிஸ்டர்ப் பண்ணீங்க…” கடுப்பான மதன் உள்ளே ஆதீரன் பக்கம் திரும்பி

“பாஸ்… அந்த மலைக்கோயில் அவ்வளவு ஆபத்தான இடம் னு சொல்றீங்க… அங்க ஏன் பாஸ் தென்றலை தனியா வரச்சொன்னீங்க… தென்றல் வந்தாங்களா பாஸ்… அடுத்து என்ன ஆச்சு சொல்லுங்க ப்ளீஸ்…” என்று கிட்டத்தட்ட கெஞ்சுவது போல மதன் கேட்க அசையாமல் ஷோபாவில் தலையை கீழே தொங்க விட்டு தொடையில் கை முட்டியை ஊன்றி விரல்களை கோர்த்து அமர்ந்திருந்தான் ஆதீரன்.

“மதன் தம்பி… ஏன் இப்படி சீரியஸா பேசிட்டு இருக்கீங்க? வாங்கப்பா சாப்பிட போகலாம்” என்று மீண்டும் கமலம் அழைக்க

“அட போங்க ம்மா…” சலிப்பாக மதன் சொல்ல

“மதன் தம்பி… நேத்து மதியத்துல இருந்து ஆதீ தம்பியை சாப்பிட கூப்பிடுறேன்… வரவே இல்லை… கடைசியா எப்போ சாப்பிட்டது னு கூட தெரியலை… சரி நீ வந்து ஆதீ தம்பியை சாப்பிட கூப்பிட்டு வருவ னு பார்த்தா நீயும் இப்படி சலிச்சுக்கிற…” கமலம் சொல்ல

“பாஸ்… நேத்து இருந்து சாப்பிடாம இருக்கீங்களா? என்ன பாஸ் இது.. வாங்க முதல்ல சாப்பிடலாம்…” மதன் அழைக்க

“எனக்கு தென்றலை பார்த்து மன்னிப்பு கேட்கனும் மதன்…” ஆதீரன் கண்ணீரோடு சொல்ல

“பாஸ்… என்ன பிரச்சினைனு இன்னும் புரியலை.. பட் தென்றல் உங்க மேல கொலை வெறில இருக்காங்க… அவங்கள சமாளிக்க உங்களுக்கு நிறைய தெம்பு வேணும்… அதுக்காகவாவது சாப்பிடுங்க பாஸ்… கமலா ம்மா நீங்க சாப்பாடு எடுத்து வைங்க…” என்று மதன் சொல்ல அவர் கீழே செல்ல மதன் ஆதீரனை கையை பிடித்து இழுக்காத குறையாக அழைத்து சென்றான் மதன்.

கடமைக்கு என்று நான்கு வாய் சாப்பிட்ட தீரன் ஹால் ஷோபாவில் அமர்ந்தான் ஆதீரன். அருகில் வந்து அமர்ந்த மதனுக்கு அவன் நிலை பார்த்து மேலும் கேட்கவும் முடியவில்லை… ஆர்வமும் அடங்க வில்லை…

(ஆதீரன் சொல்ற மாதிரி தெரியலை… இதுக்கப்பறம் நாமளே உள்ளே போகலாம்… அவன் ஃபீல் பண்ணி முடிச்சிட்டு வந்து ஜாய்ண்ட் பண்ணிக்கட்டும்…)

எப்படியும் தீரனுக்கு தன் மீது உள்ள அன்பை தெரிந்து கொண்டே தீர வேண்டும் என்று கிளம்பி விட்டாள் தென்றல்.

“இவ்வளவு சீக்கிரம் எங்கடி கிளம்பிட்ட?” பொன்னி கேட்க “கோவிலுக்கு போறேன்” என்று சொல்ல அதிசயமாக பார்த்தார் அவளை…

ஆளில்லா இடம் என்பதால் போதை தேடி செல்லும் இளைஞர்கள் தவறான வேலைகள் செய்ய தான் இந்த கோவில் அமைந்துள்ள கரடு தான் முதலில் தேர்ந்தெடுப்பர்… அதுமட்டுமின்றி காலங்காலமாக பேய் பிடித்த ஆட்களுக்கு இந்த மலையில் உள்ள சிறு கோவிலில் தான் பேயோட்டுவது நடக்கும். அதனால் பெண்பிள்ளைகள் யாரும் இந்த பக்கம் வரவே மாட்டார்கள்…

பயந்த சுபாவம் கொண்ட ஆண்கள் கூட வரமாட்டார்கள் அதனால் தான் இங்கு வரமாட்டாள் என்ற நம்பிக்கையில் தீரன் வரச்சொல்லி சொல்லியிருக்க அவளோ தன் காதலால் பயத்தை விஞ்சி வந்துவிட்டாள் தென்றல்.

பாதையே தெரியாத அளவுக்கு புதராக வளர்ந்து நிற்க பல இடங்களில் இருந்து முட் செடிகள் அவளின் பிஞ்சு மேனியை பதம் பார்க்க அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நடந்து சென்றவளுக்கு தீரன் சொன்ன நேரத்திற்கு கோவிலை அடைய வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள்.

ஒருவழியாக மலைக்கோவிலை அடைய மணி எப்படியும் ஆறை கடந்திருக்கும்… “அச்சோ நேரமாயிடுச்சு னு தீரன் போய்ட்டானா?” என்று நினைத்த தென்றல் “எதுக்கும் இன்னும் கொஞ்ச நேரம் காத்திருப்போம்…” என்று நினைக்கும் போது தான் உடலில் இருந்த காயங்கள் வலியை தெரியப் படுத்த அந்த பூட்டப்பட்ட கோவில் வாசலில் அமர்ந்து விட்டாள் தென்றல்.

ஏறும் போது கால் வழுக்கியதில் கணுக்கால் சுளுக்கி இருக்க நேரம் ஆக ஆக கால் வீங்கிக் கொண்டே இருக்க அதுவேறு வலி பின்னி எடுத்தது.

சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்பி நேரம் ஆவதை உணர்த்த தென்றலுக்கு நெஞ்சில் பயம் சூழ்ந்தாலும் தீரன் வந்து விடுவான் என்ற நம்பிக்கை அந்த பயத்தை எல்லாம் ஓரம் கட்ட உச்சி வானில் வந்து நின்ற சூரியன் நண்பகல் ஆனதை தெரிவிக்க அதன் பின்பே

“தீரா காலையில ஆறு மணி சொன்னானா… இல்ல சாயங்காலமா?” என்று யோசிக்க துவங்கியது தென்றலின் மூளை… “ஒரு வேளை சாயங்காலமா இருக்கும்… தீரா கண்டிப்பா என்னை தேடி வருவான்…” என்று தென்றல் காத்திருக்க

சற்று பதட்டத்தோடு தீரனின் இல்லம் நுழைந்தான் குமார்.. எதுவும் பேசாமல் அங்கும் இங்கும் துளாவ “என்னாச்சு குமாரு… எதை இப்படி தேடுற?” பூரணி அம்மா கேட்க

“அம்மா… தென்றல் இங்க வந்தாளா?” என்று கேட்க

“இல்லையேப்பா… எப்பவும் லீவுனா காலையில அவ சத்தத்துல தான் பொழுது விடியும்.. இன்னைக்கு காணோமே…” பூரணி சொல்ல

“அம்மா… தென்றல்… காலையில அஞ்சு மணிக்கு கோவிலுக்கு போறேன் னு போன தென்றல் இன்னும் வீடு வந்து சேரலை… நானும் எல்லா இடங்களிலும் தேடிட்டேன்..” என்று சொல்ல பூரணிக்கும் பதட்டம் கொள்ள அறையில் படுத்தபடி இதை கேட்டுக் கொண்டு இருந்த தீரன் அதிர்ந்து போனான்.

“அப்போ உண்மையா எனக்காக இன்னும் அங்கே காத்திட்டு இருப்பாளோ…” என்று தோன்ற எழுந்து சட்டையை மாட்டிய தீரன் “குமாரு… கொஞ்சம் வெளியே போகனும் உன் பைக் வேணும்..” என்று கேட்க

“டேய் தங்கச்சியை காணோம் டா…” பதட்டமாக குமார் சொல்ல

“நீ கொஞ்சம் வெளியே வா…” என்று வீட்டை விட்டு வெளியே அழைத்து வர பூரணி பொன்னியை தேடி வீட்டிற்கு சென்றார்.

“டேய் சொல்லுடா… தங்கச்சி எங்கே னு தெரியுமா உனக்கு?” குமார் கோபமாக கேட்க தலை குனிந்த ஆதீரன்

“இல்லடா… அவளை மலைக்கோயில் வரச்சொல்லி பேச்சுக்கு சொன்னேன்…. எனக்காக அங்க காத்திட்டு இருக்கா போல…” என்று ஆதீரன் சொல்ல

“என்னடா பண்ணி வச்சுருக்க?” என்று அவனின் சட்டையை பிடிக்க

“டேய்… நான் போய் அவளை கூட்டிட்டு வந்திடுறேன் அப்பறம் என்னை அடி…” என்று ஆதீரன் சொல்ல வேறு வழியின்றி சாவியை கையில் திணித்தான் குமார்.

பைக்கை எடுத்துக் கொண்டு பறந்த ஆதீரனுக்கு அந்த கரடில் ஏறுவது அத்தனை கடினமாக இல்லை… மேலும் மதிய நேரம் என்பதால் நன்கு வெளிச்சமாக இருக்க எளிதாக இருந்தது. ஏறி வந்தவன் “தென்றல்… தென்றல்” என்று அடிக்குரலில் இருந்து கத்த கோவில் வாசலில் சிறிதாக குரல் வந்தது

“இங்க வா தீரா…” என்று… ஓடிச் சென்று பார்க்க அப்போது தான் தீரனுக்கு உயிரே வந்தது.

காலையில் இருந்து சாப்பிடாததால் மிகவும் சோர்வாக தெரிந்தாள் தென்றல். நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டு அருகில் வர

“ஏன் தீரா… காலையில வரனுமா சாயங்காலம் வரனுமா னு தெளிவா சொல்ல மாட்டியா… உனக்காக காலையில ஆறு மணில இருந்து காத்திட்டு இருக்கேன்” என்று தென்றல் கூற

“அப்படியே போட்டேனா உன்னை…” என்று கையை ஓங்கி விட்டு அவளின் பயத்தில் நிறுத்திக் கொண்டான் அவன்.

“ஏன்டி.. கொஞ்சம் கூட உனக்கு அறிவில்லை… நானே உன்னை சமாளிக்க வாய்க்கு வந்ததை சொன்னா நீயும் அப்படியே அதை செஞ்சு வைச்சுருக்க… அங்க அத்தையும் மாமாவும் உன்னை காணோம் னு பதறிப் போய் கிடக்காங்க…” என்று ஆதீரன் கோபமாக பேச

“அப்போ என்னை விலக்கி வைக்க தான் இங்க வா னு சொன்னியா தீரா…. என்னை உனக்கு பிடிக்காதா?” என்று கேட்டவளுக்கு கண்கள் கலங்கியது.

“எதுவா இருந்தாலும் அப்பறம் பேசிக்கலாம் தென்றல்… உன்னை காணோம் னு பதறிப் போய் கிடக்காங்க வா… போகலாம்..” என்று தன்மையாக அழைத்து அவளின் கை பிடித்து எழச் செய்ய தடுமாறி அவன் மீதே விழப்போக அவளை தீரன் பிடித்து நிறுத்தினான். அவன் பிடி காயத்தை அழுத்த “ஸ்ஸ்…” தென்றல் முணங்க அப்போது தான் அவளை மேலிருந்து கீழ் பார்க்க ஆடையில்லா கை பகுதிகளில் முள் குத்திய காயம் தெரிய இடுப்பு பகுதியில் அவளின் தாவணி கிழிந்து இருந்தது.

“ஏய் என்னடி இது… என்ன ஆச்சு?” என்று மீண்டும் அமர வைத்து தலை முதல் கால் வரை பரிசோதிக்க கால் வீங்கி இருந்தது.

“என்ன தென்றல்… ஏன் இப்படி பண்ணி வச்சுருக்க?” என்றவன் குரலில் அப்பட்டமாக வேதனை தெரிய “வரும் போது கால் வழுக்கி சுளுக்கிடுச்சு தீரா… வீங்கிடுச்சு… வலிக்குது…” என்றாள் குழந்தையாக…

சுற்றும் முற்றும் தேடிப்பார்த்து எதுவும் கிடைக்காத தீரன் அவனுக்கு எதிரில் இருந்த முருகன் சன்னதியை பார்க்க எப்போதோ யாரோ வைத்துச் சென்ற விளக்கு சரியாக எரியாமல் அணைந்து போயிருக்க கம்பி கதவிடையே கை விட்டு அதனை இவன் பக்கம் வெளியே இழுத்து அதில் இருந்த எண்ணெய் கையில் தொட்டு தொட்டு தென்றலின் கணுக்காலில் நீவி விட தொடங்க

தென்றல் வலியில் அழற “தென்றல்… அழாத ப்ளீஸ்…” பலமுறை சொல்லியும் அவள் அடங்கவில்லை… “தென்றல் ப்ளீஸ்… என்னைப் பாரு…” ஆழமான குரலில் தீரன் சொல்ல நிமிர்ந்த தென்றல் அவன் விழியோடு கலந்தாள்…

அவனும் அவளைத் தான் விழுங்கும் படி பார்த்துக் கொண்டு இருந்தான் அவளின் முன்பு அமர்ந்து…

அவள் கண்ணை ஆழ நோக்கிய ஆதீரன் தன் அடி மனதில் இருந்து “தென்னுக்குட்டி… எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் டி…” ஆழ்ந்த குரலில் சொல்லி இருக்க விழிகளை விரித்த தென்றல் அவனின் விழி வழியே உள்ளே நுழைந்து அவன் உயிரோடு கலந்திருக்க அவனோ அவளின் கவனத்தை திசை திருப்பி காலில் எண்ணெய் தேய்த்து நீவி சுளுக்கை முழுவதும் நீக்கி இருந்தான் ஆதீரன்.

  • தொடரும்…

1 thought on “தீரனின் தென்றல் – 13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *