Skip to content
Home » தீரனின் தென்றல்-42

தீரனின் தென்றல்-42

தீரனின் தென்றல் – 42

Thank you for reading this post, don't forget to subscribe!

“எனக்கு அப்பா வேணும்…” என்று அழுது அரற்றிய அபூர்வா மயங்கிட மதன் மற்றும் சித்ரா உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தனர் தென்றலும் பொன்னியும்..‌.

பொன்னி குமாருக்கு அழைத்துச் சொல்ல சக்திக்கு துணையாக ரூபியை விட்டு விட்டு குமாரும் ஓடி வந்தான். மதன் தீரனுக்கு தகவல் சொல்ல ஃபோன் போட்டு பார்க்க ஃபோன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. கமலம் அம்மாவிற்கு அழைத்து அவர் மூலம் பேசலாம் என்று நினைத்தால் அவரும் தீரன் வெளியூர் செல்வதால் ஊருக்கு திரும்பி அனுப்பப்பட்டு விட்டார் ஆதீரனால். இப்போது  எப்படி ஆதீரனிடம் பேச அபூர்வா பற்றி தகவல் தெரிவிக்க என்று குழம்பிய மதன் நேரடியாக சென்று பார்க்கலாம் என்றாலும் குழந்தைக்கு என்ன என்று தெரியாமல் இங்கிருந்து செல்லவும் மனமில்லை…

காலையில் ஃப்ளைட் என்ற நிலையில் தேவையான அனைத்தையும் பேக் செய்து விட்டு ஏர்போர்ட் கிளம்பினான் ஆதீரன். ஊருக்கு செல்லும் வரை யாரிடமும் பேச வேண்டாம் என்று தான் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்தான்…

அபூர்வாவை பரிசோதித்த மருத்துவர் வெளியே வந்து “குழந்தைக்கு ஆபத்து ஒன்னும் இல்ல… இப்போ ரெஸ்ட் எடுக்கட்டும் கொஞ்சம் நேரம் கழிச்சு நீங்க போய் பாருங்க..” என்றவர் “ஆமா, பாப்பாவோட அப்பா எங்கே?” என்று திடீரென்று மருத்துவர் கேட்க

“ஏன் டாக்டர்… எதுக்கு?” என்று தென்றல் கேட்க

“குழந்தை அடிக்கடி அப்பா அப்பா னு முணுமுணுத்துட்டே இருக்கா அதான்…” என்றதும் தென்றல் தலை குனிந்து அமைதி காக்க

“டாக்டர்… என் தங்கச்சிக்கும் மச்சானுக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் அவங்க பிரிஞ்சிருக்காங்க…” குமார் சொல்ல

“ஓ… உங்களுக்குள்ள என்ன பர்சனல் ப்ராப்ளம் இருந்தாலும் சரி கொஞ்சம் அதை ஓரம் கட்டிட்டு குழந்தைக்காக அவங்க அப்பாவை வரவைக்க பாருங்க.. ஏன்னா குழந்தை உடம்பு குணமாக நாங்க என்ன மருந்து கொடுத்தாலும் மனரீதியான ஆரோக்கியம் குழந்தைக்கு ரொம்ப முக்கியம்… நான் சொல்றதை சொல்லிட்டேன்…” என்று மருத்துவர் கிளம்பிட

“குமாரு.. மாப்ளைக்கு ஃபோன் போடு ப்பா.. இவ பிடிவாதத்துக்கு என்னால என் பேத்தி உயிரை பணயம் வைக்க முடியாது..” பொன்னி சொல்ல மீண்டும் ஒரு முறை அழைப்போம் என்று குமாரும் மதனும் மாறி மாறி அழைக்க ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று தான் வந்தது.

“ஐயோ! ஃப்ளைட்டுக்கு இன்னும் நேரம் இருக்கு… மதன் நீங்க நேர்லயே போய் பாருங்களேன்..” என்று சித்ரா சொல்ல

“இப்போ கூட உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது தென்றல்…” என்று குமார் வேதனையாக கூறிவிட்டு குமாரும் மதனும் ஏர்போர்ட் செல்ல கிளம்ப

“அண்ணா ஒரு நிமிஷம்…” என்று நிறுத்தினாள் அவர்களை…

“நான் வந்து கூப்பிடாம அவன் திரும்பி வர மாட்டான். அதனால நானே போய் அவனை கூப்பிடுறேன்… என் பொண்ணுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்… குமார் அண்ணா நீ இங்கே இருந்து பார்த்துக்கோ நான் மதன் அண்ணா கூட போய் நானே ஆதீரனை கூட்டிட்டு வரேன்…” என்று கிளம்பிய தென்றலை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

காலை போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லாமல் இருக்க எளிதாக ஏர்போர்ட் வந்து சேர்ந்துமே போர்டிங் ஏரியா சென்று விட்டான் ஆதீரன். ‘இப்போ என்ன செய்ய?’ என்று புரியாத நிலையில் மதன் குழம்ப தென்றலுக்கு தன் அவசர புத்தியை நினைத்து கோபம் வந்து அழுத் தொடங்கினாள்.

ஒரு ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்து அபூர்வா வயதில் இருக்கும் ஒரு குழந்தையின் சேட்டைகளை பார்த்து ரசித்து கொண்டு இருந்த ஆதீரனுக்கு தன் மகளின் நினைவுகள் நெஞ்சில் அலைமோத தன் மகளுக்கு ஏதோ தவறாக நடப்பது போலவே தான் தோன்றியது தீரனுக்கு…

என்னவோ ஏதோ என்று மனம் உறுத்திக் கொண்டே இருக்க எப்படி மனதை திசை திருப்ப நினைத்தாலும் மகளின் மீதே எண்ணம் வந்து நிற்க எதற்கும் அவளின் நலம் பற்றி விசாரிக்கலாம் என்று தீரன் ஃபோனை ஆன் செய்ய வரிசையாக மதன் மற்றும் குமாரின் தவறிய அழைப்புகளை கண்டு மனம் மேலும் பதட்டமடைய குமாருக்கு ஆதீரன் அழைக்க அவன் சொன்னதை கேட்டு தன் பயணத்தை ரத்து செய்து விட்டு வெளியே வந்த ஆதீரன் தென்றல் அழுது கொண்டும் மதன் அவளை தேற்ற முயன்று கொண்டும் இருப்பதை பார்த்து

“மதன்… என்னாச்சு பாப்பா எப்படி இருக்கா?” என்று ஆதீரனின் குரல் கேட்டு “பாஸ்…” என்று கட்டிக் கொண்டான் மதன்.

அவன் குரல் கேட்டு நிமிர்ந்த தென்றல் கையெடுத்து கும்பிட்டு “ப்ளீஸ்… என் பொண்ணு… என் பொண்ணு எனக்கு வேணும்… ப்ளீஸ் அவளை காப்பாத்து” என்று கையெடுத்து கும்பிட்டு கேட்க

“ச்ச்… கையை இறக்கு ஃபர்ஸ்ட்.. மதன் சீக்கிரம் காரை எடு வா போகலாம்.” என்று அவசரப்படுத்தி அழைத்து வந்தான் ஆதீரன்.

இவர்கள் மருத்துவமனை வந்த நேரம் அபூர்வா கண் விழித்து இருக்க அருகில் பொன்னியும் சித்ராவும் இருக்க ஆதீரன் வந்தவன் தன் மகளை வாரி அணைத்துக் கொண்டான்.

“தங்கம்… பூர்வி குட்டி என்னடா ஆச்சு உங்களுக்கு?” என்று ஆதூரமாக கேட்க

“போப்பா.. இனி என்கூட தினம் வெளாட வரே சொல்லிட்டு என்னை விட்டு ஊருக்கு போட்ட (போய்ட்ட) நானு உங்கூட டூ…” என்று தன் கோபத்தை அபூர்வா கூறிட கீற்று புன்னகை ஆதீரன் முகத்தில்…

“உன்னை விட்டுட்டு நான் எங்கடா போயிடுவேன்..‌ சின்ன வேலை இருந்துச்சு முடிச்சிட்டு பாப்பாக்கு பிடிச்ச ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கிட்டு ஓடி வந்திருப்பேன்…” என்று சிரித்த முகத்துடன் ஆதீரன் சொல்ல

“இல்ல… மதனு குமாரு மாமா அம்மம்மா எல்லா நீ ஊரு போற… வத மாத்த ( வரமாட்ட) சொன்னாங்க… எனக்கு அப்பா அம்மா அம்மம்மா எல்லா ஒரே வீட்டுல இருக்காம் ப்பா ப்பிளீச் அப்பா…” என்று கெஞ்சல் குரலில் மழலை தன் ஆசையை சொல்ல பொன்னி குற்றம் சாட்டும் பார்வை தென்றலை பார்க்க அழுதபடி தலை குனிந்து நின்றாள் தென்றல்.

“குட்டிமா… அதெல்லாம் சும்மா டா நான் என் குட்டிமாவை விட்டு எங்க போகப் போறேன். எப்பவும் என் பூர்வி குட்டி கூட தான் இருப்பேன்…” ஆதீரன் சொல்ல

“அப்போ பிராமிச் (ப்ராமிஸ்) பண்ணு…” என்று தன் கையை நீட்டினாள் அபூர்வா.

தென்றலை அழுத்தமாக பார்த்த ஆதீரன் “இனிமே எப்போவும் எதுக்காகவும் என் செல்லத்தை விட்டு போக மாட்டேன்… இது ப்ராமிஸ்…” என்று தன் மகள் கையில் தன் கை வைத்து கூறிய ஆதீரன் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

அபூர்வா வீட்டிற்கு அழைத்து வந்த பிறகும் ஆதீரனை விட்டு பிரியாமல் தான் இருந்தாள்.

சனி ஞாயிறு விடுமுறை என்று சக்தியையும் அபூர்வாவையும் பார்க் ஏரியாவில் விளையாட அழைத்துச் சென்றான் ஆதீரன். குழந்தைகளோடு குழந்தையாக விளையாடும் ஆதீரனை அதிசயமாக பார்த்தனர் அனைவரும்…

ஆதீரன் தங்கள் முதலாளி மதனுக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு அதனால் அடிக்கடி இங்கு வந்து செல்கிறார் என்று அனைவரும் அறிந்தாலும் புதிதாக வேலைக்கு சேர்ந்த தென்றலின் மகள் மீது ஆதீரன் எடுத்துக் கொள்ளும் உரிமை அதிகம் பேசு பொருளாக இருந்தாலும் தங்கள் வீட்டு பிள்ளைகள் வெளியே விளையாடினாலும் அவர்களோடு கலகலப்பாக பேசும் ஆதீரனின் குணத்தை வேறாக நினைக்க தோன்றவில்லை யாருக்கும்.

ஆனால் சமீப காலங்களில் தென்றல் குடும்பத்தோடு மிகவும் உரிமை எடுத்து ஒன்றாக பழகி வருவது அபூர்வா ஆதீரனை அப்பா என்று அழைப்பது எல்லாம் பேசுபொருளாக ஆனது அங்கே…

அப்படி இப்படி என்று அந்த பேச்சு பொன்னி காதுக்கும் எட்டியது. அடிக்கடி பொன்னியோடு கோவிலுக்கு சென்று வரும் வசந்தி பேச்சு வாக்கில் “உங்களுக்கும் ஆதீரன் சாருக்கும் எதாவது உறவா பொன்னி அக்கா? உங்க பேத்தி அவரை அப்பா னு கூப்பிடுதே…” என்று கேட்க

“அது… ஆதீரன் தம்பி என் வீட்டுக்காரரோட தங்கச்சி பையன் தான் மா… என் பொண்ணு பிறந்த அன்னைக்கே அவளுக்கும் இந்த தம்பிக்கும் தான் கல்யாணம் பண்ணி வைக்கனும் னு நாங்க பேசிக்கிட்டோம். என் பொண்ணும் அவரும் விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணியும் கொஞ்சம் மனஸ்தாபம் அதான் குடும்பம் பிரிஞ்சு பேச்சு வார்த்தை இல்லாம இருந்துச்சு..‌ இப்போ தான் எல்லாம் கொஞ்சம் சரியாகி வருது.” என்று பூசி மொழுகி ஒருவாறு தன் மகளை யாரும் தவறாக பேச இயலாதபடிக்கு கூற

“ஏன் க்கா… என்ன தான் கோபம் இருந்தாலும் கோபத்துல தாலியை கழட்டி வைக்குமா தென்றல் பொண்ணு…. சுமங்கலி பொண்ணு அவளுக்கு இப்போ ஒரு குழந்தையும் இருக்கு… தாலி இல்லாம இருக்கலாமா?” பொன்னி சொன்னதில் தானாக புரிந்து கொண்டு அவர் பேச பொன்னிக்கும் “இப்போ இருக்கிற நிலையை பயன்படுத்தி இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைச்சிடனும்… அப்போ தான் எல்லாம் சீக்கிரம் சரியாகும்…” என்று மனதுக்குள் முடிவு செய்து கொண்டார் பொன்னி.

  • தொடரும்…
  • நன்றியுடன் DP ✍️

1 thought on “தீரனின் தென்றல்-42”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *