துணியை எடுக்க கால்களை தரையில் ஊன்றாமல் பாதத்தை தூக்கி கொண்டு கொலுசு சத்தம் வராமல் நடந்து வந்தவள் உள்ளே வந்து கதவை தாழிட்டு பூட்டாமல் வெறுமனே சாத்தி விட்டு ஆதீரன் அருகில் படுத்துக் கொள்ள அவனோ உறக்கத்தில் புரண்டு படுத்து அவள் மீது கை போட்டு கட்டிக் கொண்டான் ஆதீரன்….
Thank you for reading this post, don't forget to subscribe!ஆதீரன் நல்ல உறக்கத்தில் இருந்தாலும் ஏதோ ஒரு உறுத்தல் தோன்ற விழிப்பு வந்து கண் திறந்து பார்க்க அவன் அருகில் நெருக்கத்தில் தென்றலின் முகம்… கண்ணை கசக்கி கொண்டு மீண்டும் பார்த்தவன் அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தான்.
“ஏய்.. என்னடி பண்ற? என் ரூம்ல.. என் பக்கத்துல இப்படி படுத்திருக்க?” கோபமாக கேட்க
“ஏன் தீரா… நான் உன் பக்கத்துல படுக்க கூடாதா? வேற யாருக்கு அந்த உரிமை இருக்கு?” பாவமாக துவங்கி சட்டமாக முடிக்க காலங்காத்தால சுர்ரென்று கோபம் ஏறியது தீரனுக்கு…
“ஏய்… காலையில வந்து இப்படி கடுப்பை கிளப்பாதே டி.. அடிச்சிடுவேன்” என்று கை ஓங்க போக இவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தார் பூரணி அம்மா…
“டேய் ஆதீரா… என்னடா பழக்கம் இது? பொம்பளை பிள்ளைய கை ஓங்குற?” என்று அதட்ட கண்ணீர் வராத கண்ணை கசக்கி சிவக்க வைத்து அழுவது போல் முகத்தை வைத்துக் கொண்டு அவர் அருகில் ஓடி இருந்தாள் தென்றல்.
அவன் சொல்ல தொடங்கும் முன்பே “பாரு அத்தை… நீ சொன்னதால தானே அழுக்கு துணியை எடுக்க இங்க வந்தேன் நானு… தெரியாம கால் கொலுசுல பாவாடை சிக்கி தடுக்கி கட்டில்ல விழுந்துட்டேன்… அப்போ உன் புள்ளை தான் அத்தை என்னை இறுக்கமா கட்டிப் பிடிச்சுக்கிட்டாரு.. நான் எழுந்திருக்க முயற்சி பண்ணினதும் கண்ணை தொறந்து பார்த்து ஏதோ நான் ஏதோ ஆசையில வந்து உன் புள்ளை பக்கத்துல படுத்த மாதிரி என்னை திட்டி அடிக்க வராரு…” வராத கண்ணீரை துடைத்து கொண்டு நீட்டி முழக்கி தென்றல் கதை கூறி முடிக்க அடிப்பாவி என்று தீரனே வாயில் விரலை வைத்திருந்தான்.
“ஐயையையயோ அம்மா பாரு ம்மா… உன் அண்ணன் மக எப்படி புளுகுறா ஏன்டி புளுகு மூட்டை… நான் உன்னை வந்து கட்டிப்பிடிச்சேனா?” என்று கேட்டபடி அவள் தலையில் கொட்டு வைக்கப் போக தடுத்தார் பூரணி.
“டேய் போதும் விடு… அதான் அவ சொல்றா இல்ல.. விடு நீ போய் காலேஜ் கிளம்பு…” என்று அவனை அனுப்பி விட்டு
“அடியே உனக்கு இன்னிக்கி ஸ்கூல் இல்லையா டி?” என்று அன்னபூரணி தென்றலை கேட்க
“ஐயோ அத்தை… எனக்கு எக்ஸாம் எல்லாம் முடிஞ்சு போச்சு… இனி காலேஜ் சேரனும்.. நாளைக்கு தான் ஸ்கூல் ரிசல்ட் வருது… அப்பறம் தான் காலேஜ் பத்தி யோசிக்கனும்” என்று தென்றல் சொல்ல
“ஆமா… நீ படிச்சு எழுதி கிழிச்ச லட்சணத்துக்கு ஸ்டேட் ஃபர்ஸ்ட் மார்க்கா வரப்போகுது? இல்ல டாக்டர் இன்ஞினீயரிங் னு எதாவது லட்சியத்தை மனசுல வச்சு தான் படிச்சு எழுதினியா?” தீரன் தென்றலை கேலி செய்ய
“நான் ஒன்னும் ஸ்டேட் ஃபர்ஸ்ட் மார்க் வாங்குவேன் னு சபதம் போடலையே தீரா? என்ன படிச்சா என்ன? உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்ல என் அத்தைக்கு மருமகளா இருக்கப் போறேன்… இதுக்கு காலேஜ் போய் படிச்சு பணத்தை வேஸ்ட் பண்ணனுமா னு அப்பாகிட்ட கேட்டா பொம்பளை பிள்ளைக்கு படிப்பு முக்கியம் டி னு அம்மா பருப்பு மத்தை தூக்கிட்டு அடிக்க துரத்துது…
சரி நீ படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு போகுற வரைக்கும் எனக்கு பொழுது போகனுமே… அதான் எதாவது ஒரு கோர்ஸ் ல சேர வேண்டியது தான்” என்று தீரனின் கேள்விக்கு தென்றல் பதிலளிக்க
“உனக்கு கிடைக்கிற சீட் நல்லா படிக்கிற வேற பொண்ணுக்கு கிடைச்சா அந்த பொண்ணோட குடும்பம் எதிர்காலம் எல்லாமே நல்லா இருக்கும்..” தீரன் சொல்ல தென்றல் முகத்தை சுருக்க இதற்கு மேலும் விட்டால் இரண்டும் சரிக்கு சரியாக பேசி மல்லுக்கு நிற்கும் என்று உணர்ந்த அன்னபூரணி
“ஆதீரா… நீ போய் குளி.. தென்றல் உனக்கு அடுப்படியில கொஞ்சம் வேலை இருக்கு வா…” என்று இழுத்துச் சென்றார் பூரணி அம்மா.
தீரன் குளித்து கிளம்பும் வரை அன்னபூரணியோடு சேர்ந்து சமையலை கவனித்த தென்றல் அவசரமாக அறைக்குச் வந்து ஆதீரனுக்கு உடை எடுத்து வைத்து விட்டு செல்ல அவனோ வேண்டுமென்றே அதை தவிர்த்து வேறொரு உடையை அணிந்து வந்திருக்க கோணலாக சிரித்த தென்றல்
“பார்த்தியா அத்தை… உன் புள்ளைக்கு நான் ஆசையா எடுத்து வச்ச ட்ரெஸ் பிடிக்கலை னு அதை விட்டுவிட்டு வேற ட்ரெஸ் போட்டு வந்திருக்கிறத…” என்று தோளில் தாடையை இடித்துக் கொள்ள
“ம்கூம் பார்த்து கழுத்து சுளுக்கிக்க போகுது…” கேலியாக சொல்லியபடி சாப்பிட அமர்ந்தான் ஆதீரன்.
“ஆனா பாரு அத்தை… உன் புள்ளை இப்படி பண்ணும் னு எனக்கு ஏற்கனவே தெரியும்… அதான் அதோட ட்ரெஸ் ல எனக்கு பிடிக்காததை கட்டில் மேலேயும் எனக்கு பிடிச்ச ட்ரெஸை வேணும்னே ப்ரோ ல அதோட துணி இருந்த அடுக்குல மேலாகவும் வைச்சேன்… நான் நினைச்ச மாதிரி உன் புள்ளை கட்டில் மேல வைச்ச எனக்கு பிடிக்காத சட்டையை போடலை…” என்று தென்றல் கூறிட ஆதீரன் தீயாக முறைத்தான்.
‘எப்படி என்னோட சமயோசித புத்தி’ என்பது போல இரண்டு புருவத்தையும் உயர்த்த அவனோ உடையை மாற்ற எழப்போக வாசலில் பைக் சத்தம் கேட்டது.
“டேய்… சீக்கிரம் உட்கார்ந்து சாப்பிடு டா.. குமாரு வந்துட்டான்..” என்று அன்னபூரணி கூற மீண்டும் சாப்பிட அமர்ந்த தீரனுக்கு பூரணி தட்டில் இட்லி எடுத்து வைக்க குமார் உள்ளே வந்தான்.
“வாண்ணே… தென்றலும் “வா குமாரு..” பூரணியும் வரவேற்க கேட்காமலேயே தட்டில் இட்லி வைத்து பரிமாறினாள் தென்றல்.
“ஆஹா… இட்லி சாம்பார் வாசம் ஆளை இழுக்குதே..” என்று புகழ்ச்சி பாடியபடியே குமார் இட்லியை சாம்பாரில் தோய்த்து வாயில் திணிக்க
“சாம்பார் அத்தை வச்சுச்சு அண்ணே…” தென்றல் சொல்ல
“நல்ல வேளை ம்மா நீ வைக்கல…” என்று அவன் பங்கிற்கு தென்றலை கேலி செய்ய சத்தமாக சிரித்தான் ஆதீரன்.
“டேய் மூடிட்டு திண்ணுட்டு எழுந்து போ… இல்ல மதியத்துக்கு கட்டி வைச்சுருக்க சாப்பாட்டுல என் கை வரிசையை காட்டிடுவேன்…” கண்ணை சுருக்கி தென்றல் மிரட்டல் விட சாப்பிட்ட இட்லி தொண்டையில் அடைத்துக் கொண்டது குமாருக்கு…
அதன் பின்னர் அமைதியாக சாப்பிட்டு எழுந்த இருவரும் ஆதீரன் அன்னபூரணியிடம் மட்டும் சொல்லி விட்டு கிளம்ப குமார் இருவரிடமும் விடை பெற்றான்.
- தொடரும்…
Niceee
INTERESTING