Skip to content
Home » தீவினையச்சம்-21

தீவினையச்சம்-21

திருக்குறள் |அறத்துப்பால் | இல்லறவியல் |தீவினையச்சம்

குறள்:201

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு

தீயவை செய்தலாகிய செருக்கைத்‌ தீவினை உடைய பாவிகள்‌ அஞ்சார்‌; தீவினை இல்லாத மேலோர்‌ மட்டுமே அஞ்சுவர்‌.

  • Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  
குறள்:202

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

தீயசெயல்கள்‌ தீமையை விளைவிக்கும்‌ தன்மை உடையனவாக இருத்தலால்‌, அத்‌ தீய செயல்கள்‌ தீயைவிடக்‌ கொடியனவாகக்‌ கருதி அஞ்சப்படும்‌.

குறள்:203

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்

தம்மை வருத்துவோர்க்கும்‌ தீய செயல்களைச்‌ செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும்‌ தலையான அறிவு என்று கூறுவர்‌.

குறள்:204

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு

பிறனுக்குக்‌ கேட்டைத்‌ தரும்‌ தீய செயல்களை ஒருவன்‌ மறந்தும்‌ எண்ணக்கூடாது. எண்ணினால்‌, எண்ணியவனுக்குக்‌ கேடு விளையுமாறு அறம்‌ எண்ணும்‌.

குறள்:205

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து

“யான்‌ வறியவன்‌’ என்று நினைத்துத்‌ தீய செயல்களைச்‌ செய்யக்கூடாது; செய்தால்‌ மீண்டும்‌ வறியவன்‌ ஆகி வருந்துவான்‌.

குறள்:206

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்

துன்பம்‌ செய்யும்‌ தீவினைகள்‌ தன்னை வருத்துதலை விரும்பாதவன்‌, தீய செயல்களைத்‌ தான்‌ பிறர்க்குச்‌ செய்யாமலிருக்கவேண்டும்‌.

குறள்:207

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்

எவ்வளவு கொடிய பகை உடையவரும்‌ தப்பி வாழ முடியும்‌; ஆனால்‌ தீயவை செய்தால்‌ வரும்‌ தீவினையாகிய பகை நீங்காமல்‌ பின்சென்று வருத்தும்‌.

குறள்:208

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று

தீய செயல்களைச்‌ செய்தவர்‌ கேட்டை அடைதல்‌, ஒருவனுடைய நிழல்‌ அவனை விடாமல்‌ வந்து அடியில்‌ தங்கியிருத்தலைப்‌ போன்றது.

குறள்:209

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்

ஒருவன்‌ தன்னைத்‌ தான்‌ விரும்பி வாழ்பவனாயின்‌, தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும்‌ பொருந்தாமல்‌ நீங்க வேண்டும்‌.

குறள்:210

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்

ஒருவன்‌ தவறான நெறியில்‌ சென்று தீய செயல்‌ செய்யாதிருப்பானானால்‌ அவன்‌ கேடு இல்லாதவன்‌ என்று அறியலாம்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *