Skip to content
Home » தென்றல் நீ தானே-12

தென்றல் நீ தானே-12

அத்தியாயம்-12

Thank you for reading this post, don't forget to subscribe!

   விளையாட்டை ஓரம் கட்டிய துஷாரா, “மாமா சென்னையில் தானே இருந்தவர். பேசாம நீங்க திரும்ப சென்னைக்கே வந்துடறிங்களா.” என்று கேட்டாள். அவளுக்கு தந்தையை விட்டு பிரிய மனமில்லாது, அவனையும் அவன் குடும்பத்தையும் அழைத்திடும் முடிவில் இருந்தாள்.

  ஹர்ஷாவோ, “அதெப்படி துஷாரா? அங்க தான் வீடு, வாசல், சொத்து எல்லாம் இருக்கு. என்னோட பிஸினஸை நான் அங்க தான் துவங்கியது. எப்படி விட்டு வருவேன்? நமக்கு இங்க கல்யாணம் நடக்கும். அங்க ரிஸப்ஷன் நடக்கும். நீ அங்க தான் வாழ வரணும். மாமா அத்தை பிறந்ததிலருந்து இங்க தானே இருந்தாங்க. ஆப்டர் ரிட்டேயர்மெண்ட்ல ஆஸ்திரேலியாவுல தங்கட்டுமே.

ஏன் சொந்த மண்ணுல தான் இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லையே. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ தானே.?!

    நமக்கு கல்யாணமானா நீ என்னோட இருக்கணும்னு நான் ஆதிக்க மனோபாவத்துல வற்புறுத்தலை. ஆனா அங்கயும் தமிழ் பேசறாங்க, தமிழர்கள் வாழறாங்க. எந்த நாட்லயும் தமிழர்கள் வாழறது தப்பில்லையே.
  சொந்த நாட்டை விட்டு, வேற நாட்டில் குடிப்போகறது அப்படியொன்னும் குற்றமில்லையே துஷாரா.

  எங்க வாழ்ந்தாலும் நல்லவங்களா, நம்மளோட பண்பாடு பாரம்பரியம், இதை விட்டுக்கொடுக்காம வாழணும்.
  என்னை பாரு…. நான் பார்க்க வெளிநாட்டுக்காரன் என்று யாராயிருந்தலும் சொல்லிடுவாங்க. ஆனா எங்கப்பா, எனக்கு தமிழ் கற்றுத்தந்து சரளமா பேச வச்சியிருக்கார்.

காரணம் அவரோட மண்ணையும் தமிழையும் அவர் அடுத்த சந்ததிக்கு கடத்தறார். நீயே பார்த்திருப்ப, எங்கம்மா நான்சியும் அழகா தமிழ் பேசறாங்களா?” என்று கூறவும், துஷாராவுக்கு அவன் பேச பேச மூளை சலவை செய்யப்பட்டாள்.

  உண்மையில் அவன் கூறியதிலும் உண்மை ஒளிந்துள்ளதே.

  நம் கலாச்சாரம் பண்பாடு என்று, நாம மறக்காமல் இருக்கும் போது நம் சந்ததி அழியுமா என்ன?

  “சரி…. ரொம்ப யோசிக்காத, இங்க பட்டுபுடவை அங்க வெட்டிங் கவுன், அப்பறம் ஹனிமூன் எங்க போகலாம்?” என்று கையை பிடிக்க, “ஆஸ்திரேலியாவுக்கு நான் வர்றதே புதுசு. எனக்கு அந்த இடமே ஹனிமூன் பிளேஸ் தான்” என்று சுரத்தையின்றி கூறினாள்.

  “ஜாலியா பேசும் போது சோகம் ஆகறியே‌. துஷாரா” என்று பேசவும், “லேம்போஸ்ட்… தக்காளி…ன்னு தெரியாம சொல்லிட்டு உன் காலை மிதிச்சிட்டேன். அதுக்கு.. என்னை இந்தியாவுல இருந்தே நாடு கடத்தறியே டா.” என்று சோகமானாள்.

“நீ வேண்டுமின்னா, தக்காளியான, என்னை கடிச்சி உன் கோபத்தை தீர்த்துக்கோ. கம் ஆன்” என்று கன்னத்தை காட்ட, “பப்ளிக் பிளேஸ்… என்ன பண்ற? இது சரிப்பட்டு வராது. வாங்க உங்க பிரெண்ட் ராம்கிக்கு கிப்ட் கொடுத்து, போட்டோ எடுத்துட்டு கிளம்பலாம். எனக்கு வீட்டுக்கு போகணும்.” என்று சுற்றியிருந்தவர்களை பார்த்து, விழித்து, உரைத்தாள்.

  அவளுக்கும் இங்கே ராம்கியை தவிர்த்து யாரையும் தெரியாதென்று அழைத்து சென்றான்.
  ராம்கியிடம் சொல்லிவிட்டு போட்டோ எடுத்து கேப் புக் செய்தார்கள்.

  நாங்க தனியா வீட்டுக்கு போயிடுவோம்” என்று துஷாரா கூற “நோநோ அங்கிள் என்னிடம் உன்னை ஒப்படைச்சிட்டார். நான் உன்னை ப்ராப்பரா வீட்ல விட்டுட்டு தான் ஹோட்டலுக்கு திரும்புவேன்” என்று அடம்பிடித்து நான்சி தாமோதரனை மட்டும் தனியாக வேறு கேப் புக் செய்து அனுப்பி வைத்தான்.

  வள்ளியிடம் விடைப்பெற்று அவர்கள் ஒரு காரில் ஹோட்டலை நோக்கி செல்ல, துஷாரா அவள் அம்மாவோடு செல்ல,  ஹர்ஷாவும் வந்தான்.

  “அத்தை… எங்க அம்மா அப்பாவை பிடிச்சிருக்கா? பயமில்லாம துஷாராவை கட்டிக் கொடுப்பிங்க தானே?” என்று கேட்டதும் வள்ளி நெஞ்சைடைத்து, “குறை சொல்ல முடியாத உறவுகள். எங்களுக்கு தான் துஷாராவை பார்க்க வரணும்னா தூரம்.” என்று கலங்கினார்.

  “தூரம் எல்லாம் தூரமில்லை அத்தை. இப்ப எல்லாமே பக்கம் தான்.” என்று கூற, “நீங்க ஆயிரம் காரணம் சொல்லலாம்‌. நாளைக்கே என்‌ மக கல்யாணமாகி மசக்கை வாந்தி எடுத்தா, அவங்க அப்பாவை எதிர்பார்க்காம நானே பலகாரம் செய்து அங்க வரமுடியுமா?

  உள்ளூரா இருந்தா, நானே ஆட்டோ பஸ், பிடிச்சு வருவேன்.” என்று தழுதழுத்தார்.

  “வாந்தி எடுத்தா ஏன் வரணும் அத்தை?” என்று ‘மசக்கை’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாது கேட்டவனிடம், “அய்யோ… அம்மா.. நீ சும்மாயிருக்க மாட்டியா. அப்பறம் அதென்னனு அர்த்தத்தை விளக்கணுமா நானு. வீடு வந்துடுச்சு இறங்குங்க” என்று துஷாரா கடுகடுப்பாய் கூற, வள்ளியோ சங்கடமாய் நகர்ந்தார்.

  “அத்தை என்னனு சொல்லுங்க” என்று கேட்க, ‘கேப் டிரைவர் மசக்கை என்ற அர்த்தம் புரியும் என்பதால் துஷாரா திணறுவதை கண்டு சிரித்துவிட்டார்.

“அய்யா சாமி.. கல்யாணமான பிறகு சொல்லறேன். இதே கேப்ல ஹோட்டலுக்கு கிளம்பு.” என்று வழியனுப்பினாள்.

  “ஓகே… லீவ் இட்… பொறுமையா தெரிந்துக்கறேன்.” என்றவன் காரில் மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பினான்.

  கேப் டிரைவருக்கு தமிழிலிருந்து ஆங்கிலத்தில் தமிழாக்கம் செய்தபடி, ”சார்… மசக்கைன்னா பிரகனென்ட்னு அர்த்தம். பிரகனென்ட் ஆனா மயக்கம், வாந்தி வரும்ல அப்ப சட்டுனு வரமுடியாதுனு பீல் பண்ணறாங்க” என்று கூற, ஹர்ஷாவோ, வள்ளி காரிலிருந்து இறங்கிய தருணம் துஷாரா அதட்ட திருதிருவென சென்றதற்கு இப்பொழுது அர்த்தம் புரிந்துக்கொண்டான்.

அடுத்த நாள் ஹர்ஷா குடும்பம் காலையிலேயே ரூமை காலி செய்து விட்டு துஷாரா வீட்டுக்கு வந்து வள்ளியின் நளபாகத்தை சுவைத்து, இங்கிருந்து விமானநிலையத்திற்கு புறப்பட்டனர்.

  இதற்கு முன் வெளிநாட்டிற்கு செல்ல பாஸ்போர்ட் எடுத்ததில்லை அண்ணாமலை. அதனால் அதற்குண்டான வேலையில் அண்ணாமலை பார்த்து, எல்லாம் அமையும் போது திருமணத்தை நிகழ்த்தலாம் என்று கூறினார்.

  அதன் காரணமாக மூன்று மாதம் கடந்தது.

  இடைப்பட்ட நாட்களில் ஹர்ஷா தினமும் கணிணி மூலமாகவும், வாட்சப் வீடியோ மூலமாகவும், போன் பேசி தூரம் என்ற சொல்லை துரத்தி அடித்தார்கள்.‌

   காதலியுடன் மட்டும் கதைப்பானா அவன்.
  அண்ணாமலையுடன் பேசி இன்னொரு மகனாகவே மாறிப்போனான்.

  அதன் சாட்சி தான், திருவான்மியூர் கோவிலில் தன் திருமணத்தில் வேஷ்டி கட்ட தெரியாமல் விழித்து நின்றவனுக்கு தாமோதரன் கட்டி முடித்தாலும் அவிழ்ந்திட, “ரொம்ப வருஷம் ஆச்சு டா அப்பா வேஷ்டி கட்டி. எனக்கே கட்ட வரலை.” என்று தடுமாறி நன்றாக இடுப்பில் கட்ட இயலாது கூறினார்.

  “அட மாப்பிள்ளைக்கு வேஷ்டி அவிழுதா?” என்று வந்த அண்ணாமலை‌, மருமகனுக்கு அவிழாத அளவிற்கு கட்டி முடித்தார்.

      “மாமா… தமிழ் பையன் மாதிரி இருக்கேனா.” என்று கேட்டதற்கு, “சாரி மாப்பிள்ளை‌ வெளிநாட்டுகாரன்னு முகத்தை பார்த்தாலே தெரியுது. நீங்க நான்சி தங்கச்சி ஜாடை. பொய் சொல்ல முடியாது. ஆனாலும் நீங்க தனி அழகு” என்று கூறி அவன் கையை பிடித்து அழைத்து சென்றார்.

  கோவில் சிலையருகே நேர்த்தியாக சேலை கட்டி, சிற்பமாய் துஷாரா நின்றிருந்தாள்.

  பட்டுபுடவையும் நகையுமாக சிம்பிளாகவே அணிந்திருந்தாள். எப்படியும் கல்யாண சேலை எல்லாம் அதிகமாக உபயோகப்படுத்துவது அரிது என்றதால் அதிக விலை கொடுத்து வாங்கவில்லை.

  அப்படியிருந்தும் அழகு பெட்டகமாக இருந்தவளை அள்ளிக்கொள்ளும் ஆவலுடன் ஹர்ஷா பார்வை இருந்தது.
 
  அங்கிருந்த ஐயர் ஏதேதோ கூற, கடைசியாக தாலியை வாங்கி பெண்ணவள் கழுத்தில் கட்டி முடித்தான்.

துஷாராவின் தோழி நளினியோ, “உன் ஆளுக்கு மூன்று முடிச்சு போடத் தெரியுமா? தாலியையே இப்ப தான் பார்க்கறார்.” என்று கேலி செய்ய, “நளினி சும்மாயிருக்க மாட்ட” என்று அதட்டினாள்.

     “என்ன அன்னைக்கும் சும்மாயிருடின்னு கத்தின. ஆனா இப்ப பாரு… இது காதல்ல தள்ளிவிட்டு கல்யாணத்துல நிறுத்தியிருக்கு” என்று நளினி கூற, “நான் கூட ஹர்ஷாவிடம் துஷாராவோட ஒரு வேவ்லென்த் இருப்பதா சொன்னேங்க” என்றான் ராம்கி. மணப்பொண்ணோ வெட்கத்தில் நாணினாள். ஹர்ஷா ஆனந்தமாக “கல்யணத்துல முடிந்தது நல்லது தானேடா” என்றான்.

ராம்கியுமே அவன் குடும்பத்தோடு ஹர்ஷா திருமணத்திற்கு வந்திருந்தான்.
  
   சுற்றமும் உறவும் ஒரளவு திருமணத்தை கண்டுகளித்து வாழ்த்தினார்கள்.

  கோவிலிலிருந்து நேராக வரவேற்பிற்கென மண்டபம் பார்த்திருந்தனர். அங்கே உணவு பந்தி ஆரம்பமானது.

  மெல்லிசையை ஒலிப்பெருக்கியில் இசைக்க விட்டு, புகைப்படம் எடுக்கவே நேரம் கழிந்தது.

  மதியம் வரை மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். இரவு ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் முதலிரவிற்கான அலங்காரம் செய்ய சொன்னான்.‌

துஷாராவோ “ப்ளீஸ் நான் எங்கப்பா அம்மா கூட இருக்கேனே. இங்கயிருக்கற ஒரு வாரம் அவங்களோட நேரம் செலவழிக்கறேன்னே ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கேட்டதும் ஹர்ஷாவோ ஆசைகளை எல்லாம் மூட்டைக்கட்டி வைத்து, மனைவிக்காக சம்மதித்து விட்டான்.
 
   ஹர்ஷாவோ காதலியாக இருந்து மனைவியாக மாறிய துஷாராவுக்காக முதலிரவுக்காக காத்திருந்தான். அவள் தான் அவன் வாயாலே, ”துஷாரா இங்க ஒரு வாரம் உங்களோடவே இருக்கட்டும்.” என்று முதலிரவை தள்ளி வைத்தான்.

     அதன் பின் அந்த குட்டி வீட்டில் இரு குடும்பமும் ஒரு குடும்பமாக பேசி சிரித்தனர்.
 
  துஷாராவுக்கு இத்தனை நாள் தந்தை அன்பு பெரிது. இன்று தன் கணவன் அன்பும் பெரிதாக உணர்ந்தாள். தனக்காக ஆசைஆசையாக எதிர்பார்த்த முதலிரவை கூட தள்ளி வைத்தவனை பெருமையாக பார்த்தாள்.

தாமோதரன் இந்தளவு ஒரு வாரம் இருக்கவும் அவரது குலதெய்வ கோவிலுக்கு போக எண்ணினார். அவர் சென்னை வந்தே இருபது வருடம் ஆனதால், குலதெய்வ கோவிலுக்கு கூட வழியறியாது இருந்தார். அண்ணாமலை தான் ஊர் விவரம் கேட்டு அழைத்துச் சென்றார்.

  அங்கு சென்று நான்சிக்கு ஸ்தலபுராணம் கூறி, பொங்கல் வைக்கப்பட்டது.

தாமோதரனோ “இருபது வருஷம் கழிச்சு குலதெய்வத்துக்கு என் மகன், மருமகளோட வந்து பொங்கல் வைக்கறேன்’ என்று தழுதழுத்தார்.

  “டேட்…. இனி வருஷத்துக்கு ஒரு முறையாவது இந்த கடவுளை பார்க்க வரலாம். அப்பறம் இந்த ஸ்வீட் பொங்கலை வைக்கலாம்.” என்று தேற்றினான் ஹர்ஷா.

நான்சியோ தாமோதரனிடம் ‘தாமு… நீங்க இந்தியாவை மிஸ் பண்ணினிங்களா?” என்று கேட்டார்.

உறவுன்னு யாருமில்லாதப்ப இங்க வரணுமானு விட்டுட்டேன் நான்சி. ஆனா மிஸ் பண்ணிருக்கேன்.” என்று கூறவும் நான்சி தட்டி கொடுத்தார்.

  ஹர்ஷா மூலமாக துஷாரா மருமகளாக கிடைத்து, மீண்டும் இந்த மண்ணில் பந்தம் தொடர வைத்த கடவுளை மனதார வேண்டினார். இத்தனை நாள் இங்கு வராததற்கு மன்னிப்பும், இனி வருவதாக வாக்கும் கொடுத்து சவகாசமாக கிளம்பினார்கள்.

   அடுத்தடுத்து விமானம் நிலையம் சென்று ஆஸ்திரேலியா செல்ல வேண்டும்.
  அங்கு இருக்கும் மக்களுக்காக வரவேற்பு நிகழ்த்த ஹர்ஷா ஏற்பாடு செய்ய வேண்டுமே.

  விமானத்தில் அருகருகே அமரவும் துஷாரா கைகளை பின்னி பிணைத்து கொண்டு, அவளது தோளில் சாய்ந்தான்.

  “உங்களை நம்பி தான் பறந்து வர்றேன்” என்று பேசியவளுக்கு நெற்றியில் முத்தமிட்டான்.
 
  “என்ன பண்ணற நீ” என்று விலக முயன்றாள்.

  “ஹலோ… கிஸ் ஹக் எல்லாம் இனி சாதாரணமா வரும். சும்மா தள்ளி போகாத. மிரளாத” என்றான் ஹர்ஷா.

   “ஹலோ தக்காளி எங்கப்பா அம்மா முன்ன எப்பவும் இரண்டு அடி தள்ளி நின்று பேசணும். ஓவரா ஒட்டக்கூடாது” என்று விதிமுறை தரவும், “ரிஸப்ஷன்ல லிப் கிஸ் தரணும் துஷாரா. அங்க எத்தனை பேர் வந்தாலும் நான் தராம நழுவ மாட்டேன்.” என்று கூற துஷாராவுக்கு தூக்கிவாறி போட்டது.

  ஹர்ஷா கள்ளத்தனமாய் சிரித்து இமை மூடினான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
 

Comments are closed.