Skip to content
Home » தெரிந்துதெளிதல்-51

தெரிந்துதெளிதல்-51

பொருட்பால் | அரசியல் |தெரிந்துதெளிதல்

குறள்:501

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்

அறம்‌, பொருள்‌, இன்பம்‌, உயிர்க்காக அஞ்சும்‌ அச்சம்‌ ஆகிய நான்கு வகையாலும்‌ ஆராயப்பட்ட பிறகே ஒருவன்‌ (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்‌) தெளியப்படுவான்‌.

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

குறள்:502

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு

நல்ல குடியில்‌ பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப்‌ பழியான செயல்களைச்‌ செய்ய அஞ்சுகின்ற நாணம்‌ உடையவனையே நம்பித்‌ தெளிய வேண்டும்‌.

குறள்:503

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு

அரிய நூல்களைக்‌ கற்றுத்‌ தேர்ந்து குற்றம்‌ அற்றவரிடத்திலும்‌ ஆராய்ந்து பார்க்குமிடத்தில்‌ அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்‌.

குறள்:504

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும்‌ ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால்‌ தெளிந்து கொள்ள வேண்டும்‌.

குறள்:505

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

(மக்களுடைய குணங்களாலாகிய பெருமைக்கும்‌ (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும்‌ தேர்ந்தறியும்‌ உரை கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்‌.

குறள்:506

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி

சுற்றத்தாரின்‌ தொடர்பு அற்றவரை நம்பித்‌ தெளியக்‌ கூடாது; அவர்‌ உலகத்தில்‌ பற்று இல்லாதவராகையால்‌ பழிக்கு நாணமாட்டார்‌.

குறள்:507

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்

அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்‌ தெளிதல்‌, (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையையும்‌ கொடுக்கும்‌.

குறள்:508

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்

மற்றவனைப்‌ பற்றி ஒன்றும்‌ ஆராயாமல்‌ தெளிந்தால்‌ அஃது (அவனுக்கு மட்டும்‌ அல்லாமல்‌) அவனுடைய வழிமுறையில்‌ தோன்றியவர்க்கும்‌ தீராத துன்பத்தைக்‌ கொடுக்கும்‌.

குறள்:509

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்

யாரையும்‌ ஆராயமல்‌ தெளியக்கூடாது; நன்றாக ஆராய்ந்த பிறகு, அவரிடம்‌ தெளிவாகக்‌ கொள்ளத்தக்க பொருள்களைத்‌ தெளிந்து நம்ப வேண்டும்‌.

குறள்:510

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

ஒருவனை ஆராயாமல்‌ தெளிவடைதலும்‌, ஆராய்ந்து தெளிந்த ஒருவனிடம்‌ ஐயப்படுதலும்‌ ஆகிய இவை நீங்காத துன்பத்தைக்‌ கொடுக்கும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!