Skip to content
Home » பிறனில் விழையாமை-15

பிறனில் விழையாமை-15

அறத்துப்பால் – இல்லறவியல்

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பிறனில் விழையாமை

குறள்:141

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும்‌ அறியாமை, உலகத்தில்‌ அறமும்‌ பொருளும்‌ ஆராய்ந்து கண்டவரிடம்‌ இல்லை.

குறள்:142

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்

அறத்தை விட்டுத்‌ தீநெறியில்‌ நின்றவர்‌ எல்லாரிலும்‌ பிறன்‌ மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில்‌ சென்று நின்றவரைப்‌ போல்‌ அறிவிலிகள்‌ இல்லை.

குறள்:143

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துஒழுகு வார்

ஐயமில்லாமல்‌ தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம்‌ கொண்டு தீமையைச்‌ செய்து நடப்பவர்‌, செத்தவரைவிட வேறுபட்டவர்‌ அல்லர்‌.

குறள்:144

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்

தினையளவும்‌ ஆராய்ந்து பார்க்காமல்‌ பிறனுடைய மனைவியிடம்‌ செல்லுதல்‌, எவ்வளவு பெருமையை உடையவராயினும்‌ என்னவாக முடியும்‌?

குறள்:145

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி

இச்‌ செயல்‌ எளியது என எண்ணிப்‌ பிறனுடைய மனைவியிடம்‌ நெறிதவறிச்‌ செல்கின்றவன்‌, எப்போதும்‌ அழியாமல்‌ நிலைநிற்கும்‌ பழியை அடைவான்‌.

குறள்:146

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்

பகை பாவம்‌ அச்சம்‌ பழி என்னும்‌ இந்நான்கு குற்றங்களும்‌ பிறன்‌ மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்‌.

குறள்:147

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்

அறத்தின்‌ இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன்‌, பிறனுக்கு உரிமையானவளின்‌ பெண்‌ தன்மையை விரும்பாதவனே.

குறள்:148

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம்‌ மட்டும்‌ அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்‌.

குறள்:149

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்

கடல்‌ சூழ்ந்த உலகத்தில்‌ நன்மைக்கு உரியவர்‌ யார்‌ என்றால்‌ பிறனுக்கு உரிமையானவளின்‌ தோளைப்‌ பொருந்தாதவரே ஆவர்‌.

குறள்:150

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று

ஒருவன்‌ அறநெறியில்‌ நிற்காமல்‌ அறமில்லாதவைகளைச்‌ செய்தாலும்‌, பிறனுக்கு உரியவளின்‌ பெண்மையை விரும்பாமல்‌ வாழ்தல்‌ நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!