Skip to content
Home » பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 21-25 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 21-25 அத்தியாயங்கள்

21. பாதாளச் சிறை


     உலக வாழ்க்கையைப் போல் அறியமுடியாத விந்தை வேறொன்றுமில்லை. சுகம் எப்படி வருகிறது, துக்கம் எப்படி வருகிறது என்று யாரால் சொல்ல முடியும்? வானம் நெடுங்காலம் களங்கமற்று விளங்கி வருகிறது. திடீரென்று கருமேகங்கள் திரண்டு வந்து எட்டுத் திசைகளும் இருள் சூழ்ந்து இடி இடித்து மின்னல் மின்னி ‘கொட்டுகொட்டு’ என்று கொட்டுகிறது. உலகிலிருந்து காற்று என்பதே அற்றுப் போய்விட்டதாகச் சில சமயம் தோன்றுகிறது. மரங்களின் இலைகளும் அசையாமலிருக்கின்றன. திடீரென்று எங்கிருந்தோ ஒரு சூறைக்காற்று வந்து சுழன்று அடிக்கிறது. அதன் வேகத்தில் பெரிய பெரிய மரங்கள் வேருடன் பெயர்ந்து விழுகின்றன. சற்று முன்னால் நேத்ரானந்தமாக வானளாவி நின்று காட்சியளித்த பசுமரச் சோலைகள் இப்போது அனுமார் அழித்த அசோகவனமாக மாறி விடுகின்றன.

     குந்தவையின் வாழ்க்கையில் அத்தகைய சூறைக் காற்று இப்போது சுழன்று அடித்துக்கொண்டிருந்தது. சில காலத்துக்கு முன்பு வரையில் அவள் கவலை என்பதை அறியாதவளாயிருந்தாள். வாழ்க்கை என்பது இடைவிடாத ஓர் ஆனந்த உற்சவமாக இருந்து வந்தது. அன்பும் ஆதரவும், ஆடலும் பாடலும், காவியமும் ஓவியமும், அணிமணியும் அலங்காரமும், உத்தியானவனமும் ஒய்யார ஓடமுமே வாழ்க்கை என்று எண்ணும் படியாக நாட்கள் சென்று கொண்டிருந்தன. தந்தையும் தாய்மார்களும், அண்ணனும், தம்பியும், அமைச்சர்களும், ஆசிரியர்களும், தாதிமார்களும், தோழிமார்களும் இளைய பிராட்டியைத் தங்கள் கண்ணின் கருமணியாகப் பாவித்து நடத்திவந்தார்கள். துயரம் இன்னது என்பது காவியத்திலும் நாடகத்திலும் உள்ள கற்பனை மூலமாகவே அவளுக்குத் தெரிந்திருந்தது.

     அத்தகைய பாக்கியசாலிக்குத் துன்பம் வரத் தொடங்கிய போது ஒன்றன் மேலொன்றாகத் தொடர்ந்து வந்து மோதியது. தந்தையின் நிலை கவலைக்கிடமாயிருந்தது. இராஜ்யத்துக்குப் பெரிய சோதனை ஏற்பட்டிருந்தது. தமையனும் தம்பியும் தூர தேசங்களில் இருந்தார்கள். இன்னதென்று சொல்ல முடியாத ஒரு பெரும் விபத்து சோழர் குலத்துக்கு ஏற்படப் போவதாக சோதிடர்களும் நிமித்தக்காரர்களும் மர்மமாகச் சொல்லி வந்தார்கள். நாட்டில் இரகசியச் சதிக்கூட்டங்கள் நடந்து வந்தன. நாட்டின் மக்கள் இனந்தெரியாத பீதியில் ஆழ்ந்திருந்தார்கள்.

     வைர நெஞ்சு படைத்த வீரர்கள் வழி வழியாக வந்த குலத்தில் பிறந்த குந்தவை இவ்வளவையும் வீரத்துடன் சமாளிக்கக் கூடிய மனோதைரியம் பெற்றிருந்தாள். குலத்துக்கும் இராஜ்யத்துக்கும் ஏற்பட்டிருந்த எல்லா அபாயங்களையும் தன் கூரிய மதியின் துணையினால் போக்கிவிடலாம் என்ற திடமான நம்பிக்கை அவளுக்கு இருந்தது. ஆனால் அவளுடைய வாழ்க்கையில் ஒரு சிறிய சம்பவம். எதிர்பாராத ஒரு சந்திப்பு – அவளுடைய வைர இதயம் இளகவும் மனோதைரியம் குலையவும் காரணமாகி விட்டது. வந்தியத்தேவனை குந்தவை சந்தித்தபோது, – அது வரையில் மொட்டாக இருந்த அவளுடைய இருதய தாமரை, மடலவிழ்ந்து மலர்ந்தது.

     ஆனால், என்ன துரதிருஷ்டம் – அதே சமயத்தில் ஒரு கருவண்டு அந்த மலருக்குள் குடிபுகுந்து, தன் விஷக் கொடுக்கினால் அதன் மெல்லிய இதழ்களைக் கொட்டத் தொடங்கியது! அம்மம்மா! என்ன வேதனை! அந்த வாணர்குல வீரன் ஒரு வேளை சிறைப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் எவ்வளவு வேதனையை அளித்தது? அவன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கொடிய வார்த்தை எப்படி அவள் நெஞ்சைப் பிளந்தது? அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலிருக்க அவள் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்தது? பெற்றவர்கள், உற்றார்கள், உடன் பிறந்தவர்கள், உயிருக்குயிரான தோழிகள் எவ்வளவோ பேர் இருக்க, – எவனோ வழியோடு போகிறவனைப் பற்றி, – அகஸ்மாத்தாக இரண்டு மூன்று தடவை சந்தித்தவனைப் பற்றி – ஏன் இந்த இருதயம் இப்படித் துடிதுடிக்க வேண்டும்? இதையெல்லாவற்றையும் யோசிப்பதற்கும், காரண காரியங்களை ஆராய்ந்து முடிவு கட்டுவதற்கும், இப்போது நேரமில்லை. மீனமேஷம் பாராமல், சகுனமும் சகுனத்தடையும் பாராமல் விசாரிக்க வேண்டியதை உடனே விசாரித்து, செய்ய வேண்டியதை உடனே செய்ய வேண்டும்…

     ஆகவே அன்று பிற்பகலிலேயே இளைய பிராட்டி சின்னப் பழுவேட்டரையரின் மாளிகைக்கு வருவதாகச் சொல்லி அனுப்பிவிட்டுச் சென்றாள். அந்த மாளிகையின் அந்தப்புர மாதர்கள் இளைய பிராட்டியை ஆர்வத்தோடு வரவேற்றார்கள், அன்பைச் சொரிந்து உபசரித்தார்கள். இளவரசி அவர்களுடன் அளவளாவிச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு சித்திர மண்டபத்துக்குச் சென்றாள். அங்கே சின்னப் பழுவேட்டரையர் காத்திருந்து இளைய பிராட்டியை வரவேற்று, மண்டபத்தில் தீட்டியிருந்த சித்திரங்களை விளக்கிக் கூற முற்பட்டார். குந்தவையும் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் வந்தாள்.

     கடைசிச் சித்திரத்தண்டை வந்து நின்றதும், குந்தவை காலாந்தககண்டரை ஏறிட்டுப் பார்த்து, “ஐயா! பழுவேட்டரையர்கள் பரம்பரையாகச் சோழ குலத்துக்கு ஒப்பற்ற சேவை புரிந்து வந்திருக்கிறார்கள்!” என்றாள்.

     “அம்மையே! அது எங்கள் பாக்கியம்” என்றார் காலாந்தக கண்டர்.

     “அந்தச் சேவைக்கெல்லாம் ஈடாகக் கூடியது இந்தச் சோழ சாம்ராஜ்யந்தான் என்பதில் சந்தேகமில்லை…”

     “தாயே! இது என்ன வார்த்தை?”

     “ஆனாலும் சக்கரவர்த்தியின் ஆயுட்காலம் முடிந்து கைலாஸ பதவியை அடையும் வரையில் தாங்கள் காத்திருக்கலாம் அல்லவா? சாம்ராஜ்ய அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்கு இவ்வளவு அவசரப்பட வேண்டுமா?”

     இந்த வார்த்தைகள் காலாந்தக கண்டரின் இருதயத்தில் கூரிய அம்புகளைப் போல் பாய்ந்தன என்பதை அவருடைய முகம் காட்டியது. அவரது நெற்றியில் வியர்வைத் துளிகள் துளித்து நின்றன. மீசை துடிதுடித்தது; கை கால்கள் வெடவெடத்து ஆடின.

     காலாந்தக கண்டர் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டு குந்தவையைப் பார்த்து, “அம்மையே! இது என்ன இவ்வளவு உக்கிரம்? சொல்லம்பினாலேயே என்னை யமலோகத்துக்கு அனுப்பிவிடுவதென்று உத்தேசமா…?” என்றார்.

     “ஐயா! அத்தகைய சக்தி என்னிடம் இல்லை என்பது தங்களுக்கே தெரியும். காலாந்தகரிடம் அணுக யமனே பயப்படுவானே? என் போன்ற பேதைப் பெண்ணால் அது முடியுமா?”

     “அம்மணி! இத்தகைய கொடிய வார்த்தைகளைச் சொல்வதைக்காட்டிலும் பழுக்கக் காய்ச்சிய ஈயத்தை என் காதில் தாங்கள் ஊற்றலாம்! தேவி இவ்வளவு மறக்கருணை காட்டும்படி அடியேன் என்ன தவறு செய்தேன்?”

     “தங்கள் தவறைப் பற்றிச் சொல்ல நான் யார்? என்னுடைய தவறு இன்னது என்பதைத்தான் தாங்கள் சொல்ல வேண்டும். என் தந்தையின் நோயைத் தீர்ப்பதற்கு மூலிகை கொண்டு வருவதற்காக ஆள் அனுப்பியது என் பேரில் தவறா?”

     “இல்லை, அம்மணி, அது ஒரு நாளும் தவறாகாது.”

     “பழையாறை வைத்தியர் மகனைக் கோடிக்கரைக்கு மூலிகை கொண்டு வருவதற்காக நான் அனுப்பினேன் என்பது தங்களுக்குத் தெரியுமா?”

     “தெரியும், அம்மணி!”

     “இன்றைய தினம் அந்த வைத்தியர் மகனைக் கயிற்றால் கட்டி வீதியில் உம் குதிரை வீரர்கள் இழுத்துக்கொண்டு வந்ததைப் பார்த்தேன். கட்டளையிட்டது தாங்கள்தானே? அவனை அனுப்பியவள் நான் என்று தெரிந்துதானே இந்த ஏற்பாடு செய்தீர்?”

     “ஆம், பிராட்டி! ஆனால் அவன் ஒற்றன் என்பது தெரியாமல் தாங்கள் அனுப்பியிருக்கலாம் அல்லவா?”

     “பழையாறை வைத்தியர் மகனாவது? ஒற்றனாவது? அந்தக் கதையை என்னை நம்பச் சொல்கிறீரா?”

     “தாயே! அவனே ஒப்புக்கொண்டிருந்தால் நம்ப வேண்டியதுதானே?”

     இளவரசி சிறிது திடுக்கிட்டு, “அவனே ஒப்புக்கொண்டானா? அது எப்படி? என்னத்தை ஒப்புக்கொண்டான்?” என்று கேட்டாள்.

     “தன்னோடு வந்த இன்னொருவன் ஒற்றன் என்று இவன் ஒப்புக்கொண்டான். அந்த இன்னொருவன் மூலிகைக்காக உண்மையில் பிரயாணம் புறப்படவில்லையென்றும், இலங்கையில் யாருக்கோ கடிதம் கொண்டு சென்றதாகவும் இவன் ஒப்புக் கொண்டான்…”

     “இவன் பெரிய மூடன்; ஏதாவது உளறியிருப்பான். இவனுடன் சென்ற இன்னொரு ஆளையும் அனுப்பியவள் நான்தான். அது தங்களுக்குத் தெரியும் அல்லவா?”

     “தெரியும், தாயே! ஆனால் தங்களை அந்த மனிதன் ஏமாற்றிவிட்டான் என்பதும் தெரியும். வந்தியத்தேவன் என்னும் பெயருடைய அவ்வாலிபன் உண்மையில் ஓர் ஒற்றன்தான்…”

     “இல்லவே இல்லை, அவன் காஞ்சிபுரத்திலிருந்து என் தமையன் எழுதிய ஓலையைக் கொண்டு வந்தவன்.”

     “இளவரசி! அவன் சக்கரவர்த்திக்கும், இளவரசரிடமிருந்து ஓலை கொண்டு வந்தான் அதனால் என்ன? ஒற்றர்கள் இப்படி ஏதாவது ஓர் உபாயத்தைக் கடைப்பிடித்துத் தானே தங்கள் வேலையைச் செய்யவேண்டும்?”

     “ஐயா! வந்தியத்தேவன் ஒற்றன் என்பதற்கு ருசு என்ன?”

     “அவன் ஒற்றன் இல்லாவிட்டால் இராஜபாட்டையில் நடப்பதை விட்டுக் குறுக்கு வழியில் நடப்பானேன்? குடந்தைச் சோதிடரிடம் போய்ச் சக்கரவர்த்தியின் ஜாதகப் பலனைப் பற்றிக் கேட்பானேன்?”

     “சக்கரவர்த்தியின் ஜாதகத்தைப் பற்றி நான்கூடக் குடந்தை சோதிடரிடம் கேட்டேன். அதனால் என்ன?”

     “சக்கரவர்த்தியின் செல்வப் புதல்வியாகிய தாங்கள் கேட்பது வேறு. சம்பந்தமில்லாத யாரோ வழிப்போக்கன் கேட்பது வேறு. பகையரசரின் ஒற்றனாயிருந்தால்தான் அப்படி விசாரிக்கத் தோன்றும்.”

     “இது தங்கள் ஊகம், வேறு காரணம் உண்டா?”

     “பகிரங்கமாக என்னுடைய அனுமதி கேட்டுப் பெற்றுக் கொண்டு தஞ்சை கோட்டைக்குள் வந்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் பழுவூர் முத்திரை மோதிரத்தைக் காட்டிவிட்டு ஏன் நுழைய வேண்டும்? பெரிய பழுவேட்டரையர் கொடுத்தார் என்று ஏன் பொய் சொல்ல வேண்டும்?”

     “முத்திரை மோதிரம் பின்னே யார் கொடுத்தார்களாம்!”

     “அது இன்னும் தெரியவில்லை. கண்டுபிடிக்க வேண்டும்.”

     “அதைக் கண்டுபிடிக்க முடியாமல் உங்கள் ஆட்கள் என்ன செய்தார்கள்?”

     “அம்மணி, என்னுடைய ஆட்கள் மந்திரவாதிகள் அல்ல ஒற்றனைக் கண்டுபிடித்துக் கேட்டுத்தானே முத்திரை மோதிரம் எப்படி அவனிடம் வந்தது என்று தெரிந்து கொள்ள முடியும்?”

     “அவன் உண்மையைச் சொல்லுவான் என்பது என்ன நிச்சயம்?”

     “உண்மையைச் சொல்லும்படி செய்வதற்கு வழிகள் இருக்கின்றன. தாயே! பாதாளச் சிறை இருக்கவே இருக்கிறது. ஒற்றனுக்கு இதுவும் தெரிந்திருக்கிறது. அதனால்தான் மறுபடியும் தலைமறைவாகி இரவுக்கிரவே கோட்டையிலிருந்து தப்பி ஓடிவிட்டான். சம்புவரையர் மகனையும் முதுகில் குத்தி விட்டு ஓடிவிட்டான்!”

     “அவன் தான் குத்தியவன் என்பதற்கு என்ன அத்தாட்சி?”

     “கந்தன்மாறன் கூறியதுதான்.”

     “அது போதாது! அவன் கந்தன்மாறனைக் குத்தவில்லையென்று நான் சொல்லுகிறேன்!”

     “தாயே! தாங்கள் அருகில் இருந்து பார்த்தீர்களா?”

     “பார்க்கவில்லை. ஆனால் ஒருவன் முகத்தைப் பார்த்து அவன் குற்றவாளியா, இல்லையா என்பதை என்னால் நிர்ணயிக்க முடியும்.”

     “அந்தப் பொல்லாத ஒற்றன் பாக்கியசாலி. தங்களுடைய நல்ல அபிப்பிராயத்தை எப்படியோ கவர்ந்துவிட்டான். அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லையே?”

     “ஐயா! அவனை மறுபடியும் ஒற்றன் என்று ஏன் சொல்கிறீர்?”

     “தாயே! அவன் ஒற்றன் இல்லாவிட்டால் கூத்தாடிகளுடன் சேர்ந்து முகமூடி போட்டுக் கொண்டு ஏன் பழையாறையில் நுழைகிறான்? மாறுவேடம் போட்டுக்கொண்டு ஏன் கோடிக்கரை துறைமுகத்துக்குப் பிரயாணமாகிறான்? அவன் ஒற்றன் இல்லாவிட்டால் என் ஆட்களைக் கண்டதும் ஒருநாள் முழுதும் கோடிக்கரையில் ஒளிந்து திரிவானேன்? இரவானதும் படகில் ஏறி இலங்கைத் தீவுக்குப் போவானேன்?”

     “ஓகோ! அவன் படகில் ஏறித் தப்பித்தும் போய் விட்டானா? உங்கள் ஆட்களால் அவனைப் பிடிக்க முடியவில்லையா?”

     “ஆம், தாயே! அந்த மாயாவி ஒற்றன் என் ஆட்களை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டான். இந்த முட்டாள்கள் அவனை விட்டுவிட்டு வைத்தியர் மகனைப் பிடித்துக்கொண்டு வந்திருக்கிறார்கள்…”

     “ஐயா! ஒற்றன் எப்படியாவது போகட்டும். வைத்தியர் மகனை நான் அனுப்பிவைத்தேன். அவன் குற்றமற்றவன் என்பது நிச்சயம். அவனை உடனே விடுவித்தே ஆக வேண்டும்.”

     “அம்மணி! இவன் ஒற்றனில்லாவிட்டாலும் ஒற்றனுக்கு உடந்தையாயிருந்திருக்கிறான். ஏதேதோ கட்டுக் கதைகளைச் சொல்லி என் ஆட்களை ஏமாற்றியிருக்கிறான். ஒற்றன் ஒளிந்திருப்பதற்கும், தப்பிப் படகிலேறிச் செல்வதற்கும் இவன் உதவி செய்திருக்கிறான்…”

     “அதெல்லாம் எப்படியிருந்தாலும், வைத்தியர் மகனை விடுதலை செய்தேயாக வேண்டும்.”

     “அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ளச் சித்தமாயில்லை. நாட்டின் நாலு புறமும் அபாயங்கள் சூழ்ந்திருக்கின்றன. பகைவர்கள் படையெடுக்கக் காத்திருக்கிறார்கள். வீர பாண்டியனுடைய ஆபத்துதவிச் சேவகர்கள் சோழ குலத்தைக் கருவறுக்கச் சபதம் செய்திருக்கிறார்கள். நாடெங்கும் சதிகள் நடந்து வருகின்றன…”

     “ஐயா! சதி செய்பவர்கள் எல்லோரையும் சிறையில் போடுவதாயிருந்தால் சிறையில் இடமே இராது!”

     “இடம் இருக்கும் வரையில் போடலாம் அல்லவா?”

     “உண்மைச் சதியாளரைப் போடுவதற்குக் கொஞ்சம் இடம் மிஞ்சட்டும். ஐயா! வைத்தியர் மகனை உடனே விடுதலை செய்யுங்கள்!”

     “அந்தப் பொறுப்பை நான் ஏற்க முடியாது, தாயே!”

     “சக்கரவர்த்தியின் கட்டளை வந்தால் செய்வீரா! அதையும் புறக்கணிப்பீரா?”

     “அம்மணி, இதற்குச் சக்கரவர்த்தியின் கட்டளை தேவையில்லை. இளைய பிராட்டியின் விருப்பம் எதுவோ அதுவே சக்கரவர்த்திக்கு வேதக் கட்டளை என்பது உலகமறிந்த செய்தி. இதோ பாதாளச் சிறையின் சாவியைத் தங்கள் கையில் ஒப்புவித்து விடுகிறேன். தாங்களே சென்று கதவைத் திறந்து விடுதலை செய்யுங்கள். இன்னும் யாரையாவது விடுதலை செய்வதாயிருந்தாலும் தாராளமாய்ச் செய்யுங்கள். அதனால் வரும் லாப நஷ்டங்களுக்குப் பொறுப்புத் தங்களது!…”

     இவ்வாறு சொல்லிக் காலாந்தககண்டர் ஒரு பெரிய சாவியை எடுத்துக் கொடுத்தார். குந்தவை பொங்கி வந்த தன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, “ஆகட்டும், ஐயா! லாப நஷ்டங்களுக்குப் பொறுப்பு நானே ஏற்றுக் கொள்கிறேன்!” என்று சாவியைப் பெற்றுக் கொண்டாள்.

     “இந்தச் சோழ சாம்ராஜ்யத்துக்கு ஏதாவது பெருந்தீங்கு நேர்ந்தால், அது இரண்டு பெண்களினால்தான் வந்ததாகும்” என்றார் தஞ்சைக் கோட்டைத் தலைவர்.

     “நான் ஒருத்தி; அந்த இன்னொரு பெண்யாரோ?”

     “பழுவூர் இளைய ராணி நந்தினி தேவிதான்!”

     குந்தவை புன்னகை புரிந்து “சோழ சாம்ராஜ்யத்தின் சர்வாதிகாரியுடன் என்னைக் கொண்டு போய்ச் சேர்க்கிறீர்களே? இது காதில் விழுந்தால் பெரிய பழுவேட்டரையர் தங்களைத் தேசப் பிரஷ்டம் செய்துவிடுவார்!” என்று சொன்னாள்.

     “ரொம்ப நல்லதாய்ப் போய்விடும்! அதற்கு நான் காத்திருக்கிறேன்” என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

22. சிறையில் சேந்தன் அமுதன்

     தஞ்சைக் கோட்டைக்குள் பொற்காசுகள் வார்ப்படம் செய்யும் தங்கசாலை, மற்றொரு சிறிய கோட்டை போல அமைந்திருந்தது. தங்கச்சாலைக்கு வெளிப்புறத்தில் கட்டுக் காவல் தஞ்சைக் கோட்டை வாசலில் உள்ளது போலவே வெகு பலமாயிருந்தது. அன்று மாலை குந்தவை தேவியும் வானதியும் தங்க சாலையைப் பார்வையிடச் சென்றபோது வேலை முடிந்து பொற்கொல்லர்கள் வெளியில் புறப்படும் சமயம். வாசற் காவலர்கள் பொற்கொல்லர்களைப் பரிசோதித்து வெளியில் அனுப்ப ஆயத்தமானார்கள். பொற்கொல்லர்கள் வாசலண்டை வந்து குவிந்திருந்தார்கள். அந்த நேரத்தில் அரண்மனை ரதம் வந்து தங்கசாலையின் வாசலில் நின்றது. குந்தவையும் வானதியும் இறங்கினார்கள். அவர்களைப் பார்த்ததும் காவலர்களும் பொற்கொல்லர்களும் மெய்ம்மறந்து நின்று “வாழ்க இளைய பிராட்டி” என்று கோஷித்தார்கள். தங்கசாலையின் தலைவர் ஓடி வந்து அரசகுமாரிகளை ஆர்வத்துடன் வரவேற்றார். உள்ளே அழைத்துச் சென்று பொன்னைக் காய்ச்சும் அக்கினி குண்டம், நாணயவார்ப்படம் செய்யும் அச்சுக்கள், அச்சிட்ட நாணயங்கள் முதலியவற்றைக் காட்டினார். ‘அன்றைய தினம் வார்ப்படமான தங்க நாணயங்கள் ஒரு பக்கத்தில் கும்பலாகக் கிடந்தன. அந்தப் பசும்பொன் நாணயங்களின் ஒளி கண்களைப் பறித்தது. ஒவ்வொரு நாணயத்திலும் ஒரு பக்கத்தில் புலியின் முத்திரையும் மற்றொரு பக்கம் கப்பல் முத்திரையும் பதித்திருந்தன.

     “பார்த்தாயா, வானதி! எத்தனையோ காலமாக இந்தச் சோழ நாட்டுக்கு உலகமெங்குமிருந்து தங்கம் வந்து கொண்டிருந்தது. தரை வழியாகவும் வந்தது; கப்பல் வழியாகவும் வந்தது. இதுவரை அவ்வளவு தங்கத்தையும் சுமக்கும் பொறுப்புச் சோழ நாட்டுப் பெண்குலத்துக்கே இருந்து வந்தது. ஆபரணங்களாகச் செய்து போட்டுக் கொண்டு தூக்கமுடியாமல் தூக்கி வந்தார்கள். கொஞ்ச காலமாகச் சோழ நாட்டுப் பெண்களுக்கு அந்தப் பாரம் குறைந்து வருகிறது. நம் தனாதிகாரி பழுவேட்டரையர் இம்மாதிரி கண்ணைப் பறிக்கும் தங்க நாணயங்களை வார்ப்படம் செய்ய ஏற்பாடு பண்ணிவிட்டார்!” என்று குந்தவை சொன்னாள்.

     “அக்கா! இதனால் என்ன சௌகரியம்?” என்று வானதி கேட்டாள்.

     “என்ன சௌகரியமா? நீ ஒன்றுமே தெரியாத பெண்ணடி! இம்மாதிரி பொன்னை நாணயங்களாகச் செய்துவிட்டால், ‘இவ்வளவு பொன்’ என்று நிறுத்துப் பாராமலே மதிப்பிடச் சௌகரியம். குடிகள் அரசாங்கத்துக்கு வரி கொடுக்கச் சௌகரியம். வர்த்தகர்கள் வெளிநாட்டாரோடு வியாபாரம் செய்வதில் பண்டத்துக்குப் பண்டம் மாற்றிக்கொண்டு கஷ்டப்பட வேண்டியதில்லை. பொன் நாணயங்களைக் கொடுத்துப் பொருள்களை வாங்கலாம்; பொன் நாணயங்களைப் பெற்றுக் கொண்டு பண்டங்களை விற்கலாம். ஆகையினாலேதான் சோழ நாட்டு வர்த்தகர்கள் நம் தனாதிகாரி பழுவேட்டரையரை வாழ்த்துகிறார்கள்… இன்னும் ஒன்று சொல்கிறேன். கேள்!” என்று கூறிக் குந்தவை தேவி குரலைத் தாழ்த்திக்கொண்டு சொன்னாள்:- “சக்கரவர்த்திக்கும், சக்கரவர்த்தியின் குடும்பத்துக்கும் எதிராகச் சதி செய்பவர்களுக்கு இந்த நாணயங்களினால் அதிக சௌகரியம். எப்படிப்பட்ட உத்தமர்களையும் இந்தப் பொற்காசுகளில் மூலம் துரோகிகள் ஆக்கி விடலாம் அல்லவா?” என்றாள்.

     அருகில் நின்ற தங்கசாலைத் தலைமை அதிகாரியின் காதில் குந்தவை கடைசியில் கூறிய வார்த்தைகள் இலேசாக விழுந்தன. அந்த அதிகாரி, “ஆம் தாயே! அம்மாதிரி பயங்கரமான வதந்திகள் எல்லாம் இக்காலத்தில் கேள்விப்படுகிறோம். ஆகையினாலேதான் இப்போது கொஞ்சநாளாக இந்தத் தங்க சாலைக்குக் கட்டுக்காவல் அதிகமாயிருக்கிறது. இதன் அடியில் உள்ள பாதாளச் சிறைக்கு வருவோர் போவோரும் அதிகமாகி விட்டார்கள்!” என்று சொன்னார்.

     “வருகிறவர்கள் உண்டு; போகிறவர்கள் கூட உண்டா?” என்று குந்தவை கேட்டாள்.

     “ஏன்? அதுவும் உண்டு. இன்று காலையில் ஒருவனைக் கொண்டு வந்தார்கள். ஒரு நாழிகைக்கு முன்னால் அவனைத் திரும்பக் கொண்டு போய்விட்டார்கள்!” என்று அந்த அதிகாரி கூறினார்.

     “அது யாராயிருக்கும்?” என்று குந்தவைக்குச் சிறிது வியப்பாயிருந்தது.

     தங்கசாலைக்குள் பற்பல வேலைகள் நடக்கும் இடங்களைப் பார்த்துவிட்டுப் பின்புறமாகச் சென்றார்கள். பின் சுவரில் ஒரு சிறிய வாசல் இருந்தது. அதைத் திறந்துகொண்டு சென்றார்கள். சென்ற இடத்தில் வெளிச்சம் குறைவாக இருந்தது. கூரை தாழ்வாக இருந்தது. நாலுபுறமிருந்தும் கேட்டவர்கள் ரோமம் சிலிர்க்கும் படியான உறுமல் சத்தம் கேட்டது. ஒரு சேவகன் தீவர்த்தி பிடித்துக் கொண்டு நின்றான். அதன் வெளிச்சத்தில் நாலு புறமும் உற்றுப் பார்த்தபோது பல கூண்டுகளும் அவற்றுக்குள்ளே அடைபட்ட புலிகளும் இருப்பது தெரிந்தது. அவற்றில் சில வேங்கைப் புலிகள்; சில சிறுத்தைப் புலிகள். சில படுத்திருந்தன; சில கூண்டுக்குள் முன்னும் பின்னும் உலாவிக் கொண்டிருந்தன. அவற்றின் கண்கள் அந்த இடத்தின் மங்கலான வெளிச்சத்தில் நெருப்புத் தணல்களைப் போல் ஒளிர்ந்தன.

     குந்தவை வானதியின் கரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “அடியே! பயமாயிருக்கிறதா? இங்கே மூர்ச்சை போட்டு விழுந்து வைக்காதே!” என்றாள்.

     வானதி இலேசாகச் சிரித்துவிட்டு, “புலியைக் கண்டு என்ன பயம், அக்கா! புலி நம்முடைய குலத்தின் காவலன் அல்லவா?” என்றாள்.

     “சில சமயம் காவலர்களே எதிரிகளுடன் சேர்த்து விடுவார்கள் அல்லவா? அப்போது அபாயம் அதிகம் ஆயிற்றே?”

     “இல்லை. அக்கா! மனிதக் காவலர்கள் அப்படி ஒருவேளை துரோகம் செய்யலாம். இந்தப் புலிகள் அப்படிச் செய்யமாட்டா!”

     “சொல்வதற்கில்லை இந்தப் புலிகள் எத்தனையோ இராஜாங்கத் துரோகிகளைச் சாப்பிட்டிருக்கின்றன. அவர்களுடைய இரத்தம் இந்தப் புலிகள் உடம்பில் கலந்திருக்கும் அல்லவா?”

     “பயமேயில்லை” என்று சற்றுமுன் கூறிய வானதியின் உடம்பு இப்போது சிறிது நடுங்கத்தான் செய்தது.

     “அக்கா! என்ன சொல்கிறீர்கள் உயிருள்ள மனிதர்களை இந்தப் புலிகளுக்கு இரையாகக் கொடுப்பார்களா, என்ன?” என்று கேட்டாள்.

     “அப்படிச் செய்ய மாட்டார்கள். இந்தத் தங்கசாலைக்கு அடியில் பாதாளச் சிறை இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா? அதற்குள் போவதற்கும் வருவதற்கும் ஒரேவழிதான். அந்த வழி இந்தப் புலிமண்டபத்தில் இருக்கிறது. சிறைக் குள்ளிருந்து யாராவது தப்பித்து வரமுயன்றால் இந்த மண்டபத்துக்குள்ளேதான் வரவேண்டும். அப்போது புலிகளுக்கு இரையாவார்கள்!”

     “சிவ சிவா! என்ன கொடூரம்?”

     “இராஜாங்கம் என்றால் அப்படித்தான்! கருணையும் உண்டு; கொடூரமும் உண்டு. வானதி! ஒரு சமயத்தில் என்னையே இந்தப் பாதாளச் சிறையில் அடைத்தாலும் அடைத்து விடுவார்கள். சின்னப் பழுவேட்டரையர் இன்றைக்கு என்னுடன் பேசியதை நீ கேட்டிருந்தால்…”

     “நன்றாயிருக்கிறது அக்கா! தங்களைப் பிடித்துச் சிறையிலடைக்கும் வல்லமையுள்ளவர்கள் ஈரேழு பதினாலு உலகத்திலும் இல்லை. அப்படி யாராவது செய்ய முயன்றால் பூமி பிளந்து இந்தத் தஞ்சை நகரத்தையே விழுங்கிவிடாதா? அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நம்முடைய பழையாறை வைத்தியர் மகனைப் பற்றித்தான் கவலைப்படுகிறேன். அந்தச் சாதுப் பிள்ளை தப்ப முயன்றிருக்க மாட்டான் அல்லவா?”

     “சாதுப்பிள்ளைதான்! ஆனால் யார் எப்போது எப்படி மாறுவார்கள் என்று சொல்ல முடிவதில்லையே?”

     புலிகளின் உறுமல் கோஷம் இன்னும் அதிகமாயிற்று.

     காவலனைப் பார்த்து, “புலிகளுக்கு ரொம்பக் கோபம் போலிருக்கிறதே!” என்றாள் குந்தவை.

     “இல்லை தாயே! சக்கரவர்த்தியின் திருக்குமாரியை இவை வாழ்த்தி வரவேற்கின்றன!” என்று காவலன் சமத்காரமாய் மறுமொழி கூறினான்.

     “நல்ல வரவேற்பு!” என்றாள் குந்தவை.

     “அதோடு புலிகளுக்கு இரை போடும் சமயம் நெருங்கி விட்டது. இரையை நினைத்து உறுமுகின்றன!”

     “அப்படியானால் நாம் சீக்கிரம் போய்விடலாம். சிறையின் வாசல் எங்கேயிருக்கிறது?”

     மண்டபத்தின் ஒரு மூலைக்கு இதற்குள் அவர்கள் வந்திருந்தார்கள். அங்கிருந்த புலிக்கூண்டு ஒன்றைக் காவலர்கள் அப்பால் நகர்த்தினார்கள். அங்கே தரையில் பதித்திருந்த கதவு ஒன்று காணப்பட்டது. இரண்டு ஆட்கள் குனிந்து கதவை வெளிப்புறமாகத் திறந்தார்கள். உள்ளே சில படிக்கட்டுகள் காணப்பட்டன. அவற்றின் வழியாக ஒவ்வொருவராக இறங்கிச் சென்றார்கள். இருள் அதிகமாயிற்று. இரு சேவகர்கள் பிடித்திருந்த இரண்டு தீவர்த்திகளிலிருந்து புகையினால் மங்கிய வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற குறுகிய பாதைகளின் வழியாக அவர்கள் ஒற்றை வரிசையில் போக வேண்டியிருந்தது.

     அங்கே புலிகளின் பயங்கர உறுமல் ரோமம் சிலிர்க்கச் செய்தது என்றால், இங்கே நாலுபுறத்திலும் எழுந்த தீனமான, சோகமயமான மனிதக் குரல்கள் உள்ளம் பதறி உடல் நடுங்கச் செய்தன.

     ஆனால் அந்தத் தீனக்குரல்களுக்கு மத்தியில், – விந்தை! விந்தை! – ஓர் இனிய குரல் இசைத்ததும் கேட்டது!

     “பொன்னார் மேனியனே! புலித்தோலை அரைக்கசைத்து
     மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே!”

     அந்தப் பாதாளச் சிறையில் இருந்த அறைகள் ஒரு வரிசையாக இல்லை. முன்னும் பின்னும் கோணலும் மாணலுமாக இருந்தன. ஒவ்வொரு அறை வாசலிலும் சென்று காவலன் தீவர்த்தியை உயர்த்திப் பிடித்தான். சில அறைகளில் உள்ளே ஒருவனே இருந்தான். சிலவற்றில் இருவர் இருந்தார்கள். சில அறைகளில் இருந்தவர்களைச் சுவரில் அடித்திருந்த ஆணி வளையத்தில் சேர்த்துச் சங்கிலியால் கட்டியிருந்தது. சில அறைகளில் அவ்விதம் கட்டாமல் சுயேச்சையாக விடப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு அறையிலும் இருந்தவர்களின் முகம் தெரிந்ததும் குந்தவைதேவி தலையை அசைக்க எல்லோரும் மேலே சென்றார்கள்.

     நடுவில் ஒரு சமயம் வானதி, “இது என்ன கொடுமை? இவர்களை எதற்காக இப்படி அடைத்திருக்கிறது? நீதி விசாரணை ஒன்றும் கிடையாதா?” என்று கேட்டாள்.

     அதற்குக் குந்தவை, ‘சாதாரண குற்றங்களுக்கு நீதி விசாரணை எல்லாம் உண்டு. ஆனால் இராஜாங்கத்துக்கு எதிராகச் சதி செய்தவர்கள், வெளிநாட்டு ஒற்றர்கள், ஒற்றர்களுக்கு உதவியவர்கள் இவர்களைத்தான் இங்கே போடுவார்கள். அவர்களிடமிருந்து தெரியவேண்டிய உண்மை தெரிந்து விட்டால் வெளியே விட்டுவிடுவார்கள்! ஆனால் சிலரிடமிருந்து உண்மை ஒன்றும் தெரிவதில்லை. ஏதாவது இருந்தால்தானே சொல்லுவார்கள்? அவர்கள் பாடு கஷ்டந்தான்!” என்றாள்.

     இதற்குள்ளாக, “பொன்னார் மேனியனே!” பாட்டு மிகச் சமீபத்தில் கேட்கத் தொடங்கியிருந்தது. அந்த அறையில் சென்று தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தபோது அங்கே ஒரு சிறுபிள்ளை இருப்பது தெரிந்தது. ஏற்கெனவே நமக்குத் தெரிந்த பிள்ளைதான் அவன்; சேந்தன் அமுதன்.

     அவனுடைய குற்றமற்ற பால்வடியும் பச்சைப் பிள்ளை முகம் இளவரசிகளுடைய கவனத்தை கவர்ந்தது.

     அவனைக் குந்தவை பார்த்து, “பாடிக் கொண்டிருந்தது நீதானா!” என்று கேட்டாள்.

     “ஆம், தாயே!” என்றான்.

     “உற்சாகமாயிருக்கிறாய் போலிருக்கிறது!”

     “உற்சாகத்துக்கு என்ன குறைவு, அம்மா! எங்கும் நிறைந்த இறைவன் இங்கேயும் என்னுடன் இருக்கிறார்!”

     “பெரிய ஞானி போலப் பேசுகிறாயே? நீ யார் அப்பா? வெளியில் என்ன செய்து கொண்டிருந்தாய்?”

     “நான் பெரிய ஞானியுமில்லை; சின்ன ஞானியுமில்லை. அம்மா! வெளியில் இருக்கும் போது பூமாலை புனைந்து இறைவனுக்குச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தேன். இங்கே பாமாலை புனைந்து மனத்திருப்தியடைகிறேன்!”

     “நீ ஞானி மட்டுமல்ல; புலவன் என்றும் தெரிகிறது. இந்த ஒரு பாடல்தான் உனக்குத் தெரியுமா? இன்னும் பலவும் தெரியுமா?”

     “இன்னும் சில பாடல்களும் வரும், ஆனால் இங்கு வந்தது முதல் இதையே பாடிக்கொண்டிருக்கிறேன்.”

     “ஏன்?”

     “இங்கு வரும்போது தங்கசாலையின் வழியாக வந்தேன். இதுவரை நான் பாத்திராத பத்தரை மாற்றுப் பசும்பொன் திரளைப் பார்த்தேன். அது ‘பொன்னார் மேனியன்’ திருஉருவத்தை எனக்கு நினைவூட்டியது…”

     “அதிர்ஷ்டசாலி நீ! பொன்னைப் பார்த்தால் பலருக்குப் பலவித ஆசைகள் உண்டாகின்றன. உனக்கு இறைவனின் திருமேனியின் பேரில்நினைவு சென்றது. உனக்கு உற்றார் உறவினர் யாரும் இல்லையா, அப்பா?”

     “தாயார் மட்டும் இருக்கிறாள். தஞ்சைக் கோட்டைக்கு வெளியில் தாமரைக் குளத்தருகில் இருக்கிறாள்.”

     “அந்த அம்மாள் பெயர்?”

     “வாணி அம்மை.”

     “நான் அந்த அம்மாளைப் பார்த்து நீ இங்கே உற்சாகமாயிருக்கிறாய் என்று சொல்கிறேன்.”      “பயனில்லை, அம்மா! என் தாய்க்குக் காதும் கேளாது; பேசவும் முடியாது…”

     “ஓகோ! உன் பெயர் சேந்தன் அமுதனா?” என்று இளைய பிராட்டி வியப்புடன் கேட்டாள்.

     “ஆம், அம்மா! இந்த ஏழையின் பெயர் தங்களுக்குத் தெரிந்திருக்கிறதே?”

     “என்ன குற்றத்துக்காக உன்னை இங்கே கொண்டு வந்து சிறைப்படுத்தியிருக்கிறார்கள்?”

     “நேற்றுவரை நான் செய்த குற்றம் இன்னதென்று எனக்கும் தெரியாமலிருந்தது. இன்றைக்குத்தான் தெரிந்தது.”

     “என்னவென்று தெரிந்தது?”

     “ஒற்றன் ஒருவனுக்கு உதவி செய்த குற்றத்துக்காக என்னைப் பிடித்து வந்து சிறைப்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்தது.”

     “அது என்ன? எந்த ஒற்றனுக்கு நீ உதவி செய்தாய்?”

     “தஞ்சைக்கோட்டை வாசலில் ஒருநாள் வெளியிலிருந்து வந்த பிரயாணி ஒருவனைச் சந்தித்தேன். அவன் இரவில் தங்க இடம் வேண்டும் என்று சொன்னான். என் வீட்டுக்கு அழைத்துப் போனேன். ஆனால் அவன் ஒற்றன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை…”

     “அவன் பெயர் என்னவென்று தெரியுமா?”

     “தன் பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன் என்று அவன் சொன்னான். பழைய வாணர் குலத்தைச் சேர்ந்தவன் என்றும் கூறினான்…”

     குந்தவையும் வானதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். இருவருடைய உள்ளங்களும் ஒத்துப் பேசிக் கொண்டன.

     வானதி, சேந்தன் அமுதனைப் பார்த்து, “எல்லாம் விவரமாகச் சொல், அப்பா!” என்றாள்.

     சேந்தன் அமுதன் அவ்விதமே கூறினான். வந்தியத்தேவனைக் கோட்டைவாசலில் தான் சந்தித்ததிலிருந்து, பழுவூர் ஆட்கள் தன்னை ஆற்றங்கரையில் பார்த்துப் பிடித்துக் கொண்டது வரையில் சொன்னான்.

     “யாரோ முன்பின் தெரியா ஒரு வழிப்போக்கனை நம்பி நீ எதற்காக அவ்வளவு தூரம் உதவி செய்தாய்?” என்று வானதி கேட்டாள்.

     “தாயே! சிலரைப் பார்த்தால் உடனே நமக்குப் பிடித்துப் போகிறது. அவர்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. காரணம் என்னவென்று சொல்வது? இன்னும் சிலரைப் பார்த்தால் அவர்களைக் கொன்றுவிடலாம் என்று தோன்றுகிறது. இன்றைக்கு ஒரு மனிதனை என்னோடு கொஞ்சநேரம் அடைத்து வைத்திருந்தார்கள். அவன் பேரில் எனக்கு வந்த கோபத்துக்கு அளவில்லை. நல்ல வேளையாக சற்று நேரத்துக்கு முன்பு பழுவூர் இளைய ராணியின் ஆட்கள் வந்து அவனை விடுதலை செய்துகொண்டு போனார்கள்…!”

     “அதுவும் அப்படியா?” என்று குந்தவை பற்களினால் தன் செவ்விதழ்களைக் கடித்துக் கொண்டாள். அவளுடைய புருவங்கள் நெரிந்தன. ஆத்திரப் பெருமூச்சு வந்தது.

     “அவ்வளவு அவசரமாக விடுதலையான மனிதன் யார்? உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.

     “தெரியாமல் என்ன? யாரோ பழையாறை வைத்தியன் மகனாம்!”

     “அப்படி என்ன அப்பா, அவன் தகாத வார்த்தைகளைச் சொன்னான்? அவனைக் கொன்றுவிடலாமா என்று அவ்வளவு கோபம் உனக்கு வந்ததாகச் சொன்னாயே?”

     “கோடிக்கரையில் என் மாமன் மகள் பூங்குழலி இருக்கிறாள். அவளைப் பற்றி இவன் தகாத வார்த்தைகளைச் சொன்னான். அதனாலேதான் அவன் பேரில் எனக்கு அவ்வளவு கோபம் வந்தது. ஆனாலும் அவன் ஒரு நல்ல சமாசாரம் சொன்ன படியால் போனால் போகிறதென்று விட்டுவிட்டேன்.”

     “அது என்ன அவ்வளவு நல்ல சமாசாரம், அப்பா?”

     “என்னுடைய நண்பன் வந்தியத்தேவனுடனேதான் இவன் கோடிக்கரைக்குப் போனான். அங்கே இந்தச் சண்டாளன் என் சிநேகிதனுக்குத் துரோகம் செய்து பழுவூர் ஆட்களிடம் பிடித்துக் கொடுத்துவிடப் பார்த்தான். அது முடியவில்லை…”

     “முடியவில்லையா? அப்படியானால் அந்த ஒற்றன் தப்பித்துக் கொண்டு விட்டானா?” என்று வானதியும் குந்தவையும் ஒரே குரலில் ஆர்வத்துடன் கேட்டார்கள். இதைத் தெரிந்து கொள்ளத்தானே அவர்கள் இந்தப் பாதாளச் சிறைக்குள்ளே வந்தது!

     “ஆம், அம்மணி! என் நண்பன் தப்பித்துக்கொண்டு போய்விட்டான். பூங்குழலி அவனை இரவில் படகில் ஏற்றிக்கொண்டு கடலில் இலங்கைத் தீவுக்குச் சென்றுவிட்டாளாம். தேடிப் போனவர்கள் ஏமாந்தார்கள். இந்தப் பாதகனும் ஏமாந்தான்!”

     பெண்மணிகள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுடைய உள்ளத்தில் ததும்பிய மகிழ்ச்சியை அவர்களுடைய முக மலர்கள் வெளியிட்டன.

     குந்தவை சேந்தன் அமுதனைப்பார்த்து, “அப்பனே! ஒற்றன் ஒருவன் தப்பித்துக் கொண்டது பற்றி நீ இவ்வளவு சந்தோஷப்படுகிறாயே? உன்னைச் சிறையில் வைத்திருப்பது சரிதான்!” என்றாள்.

     “தாயே! அந்தக் குற்றத்துக்காக என்னைச் சிறையில் போடுவது சரியானால், உங்கள் இருவரையும்கூட எனக்குப் பக்கத்து அறையில் போட வேண்டுமே!” என்றான்.

     பெண்மணிகள் இருவரும் நகைத்தார்கள். இருளடைந்த அந்தப் பாதாளச் சிறையில், சேந்தன் அமுதனுடைய பாட்டு எவ்வளவு விசித்திரமாயிருந்ததோ, அப்படி அவர்களுடைய சிரிப்பும் அபூர்வமாக ஒலித்தது.

     “நீ வெகு கெட்டிக்காரன்; மிகப் பொல்லாதவன். உன்னை இங்கே வைத்திருத்தால் நீ பாட்டுப் பாடியே இங்கேயுள்ள மற்றவர்களையும் கெடுத்துவிடுவாய். கோட்டைத் தலைவரிடம் சொல்லி உன்னை விடுதலை செய்யப் பண்ணிவிட்டு மறுகாரியம் பார்க்க வேண்டும்” என்றாள் குந்தவை.

     “தாயே! அப்படிச் செய்ய வேண்டாம்! அடுத்த அறையில் ஒரு மனிதன் இருக்கிறான். அவன் என்னிடம் தினம் நூறு தடவை ‘நீ எனக்கு ஒரு பாட்டுச் சொல்லிக் கொடு! சொல்லிக் கொடுத்தால் பாண்டிய குலத்து மணிமகுடத்தையும், மாலையையும் இலங்கையில் எங்கே ஒளித்து வைத்திருக்கிறேன், என்று தெரிவிக்கிறேன்’ என்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான். அந்த இரகசியத்தை நான் தெரிந்து கொள்ளும் வரையில் இங்கேயே விட்டு வைக்கச் சொல்லுங்கள்!” என்றான் சேந்தன் அமுதன்.

     “பாவம்! அந்த மாதிரி உனக்கும் பைத்தியம் பிடிக்கும் வரையில் இங்கேயே இருப்பேன் என்கிறாயா? அப்புறம் உன் தாயார் வாணியம்மையின் கதி என்ன?” என்று கூறிவிட்டு இளைய பிராட்டி அங்கிருந்து புறப்பட, மற்றவர்களும் சென்றார்கள்.

     அரை நாழிகை நேரத்துக்கெல்லாம் சில சேவகர்கள் வந்து சேந்தன் அமுதனைப் பாதாளச் சிறையிலிருந்து விடுதலை செய்து தஞ்சைக் கோட்டை வாசலில் கொண்டுபோய் விட்டார்கள்.

23. நந்தினியின் நிருபம்

     அன்று மாலை நந்தினி லதா மண்டபத்தில் ஹம்ஸதூளிகா மஞ்சத்தில் அமர்ந்து நிருபம் ஒன்று எழுதிக் கொண்டிருந்தாள். சில வரிகள் தான் எழுதினாள். எழுதும் போது சில சமயம் சுழற்காற்றில் இளங்கொடி நடுங்குவதுபோல் அவள் உடம்பு நடுங்கிற்று. அடிக்கடி நெடுமூச்சு விட்டாள். அந்தக் குளிர்ந்த வேளையில் பக்கத்தில் தாதிப் பெண் நின்று மயில் விசிறியால் விசிறிக் கொண்டிருந்தும் அவளுடைய பளிங்கு நெற்றியில் முத்து முத்தாக வியர்வை துளித்திருந்தது. அவள் எழுதிய நிருபமாவது:-

     “அரசிளங்குமரா! தயங்கித் தயங்கி, பயந்து பயந்து, இந்த நிருபம் எழுதத் துணிந்தேன். இராஜ்யத்தின் நிலைமையைப் பற்றிப் பலவிதமான செய்திகள் காதில் விழுகின்றன. தாங்கள் எதையும் கவனிப்பதில்லை. நோயினால் மெலிந்திருக்கும் தங்கள் தந்தை பலமுறை சொல்லி அனுப்பியும் தாங்கள் தஞ்சைக்கு வரவில்லை. இதற்குக் காரணம் நான்தானோ என்ற எண்ணம் என்னை வதைக்கிறது. தங்களை ஒருமுறை சந்தித்தால் எல்லாச் சந்தேகங்களையும் போக்கி விடுவேன். அதற்குத் திருவுளம் இரங்குவீர்களா? தஞ்சைக்கு வர விருப்பமில்லாவிட்டால், கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் சந்திக்கலாம். நான் இன்று தங்கள் பாட்டியின் ஸ்தானத்தில் இருக்கிறேன். நாம் சந்தித்துப் பேசுவதில் என்ன ஆட்சேபம் இருக்க முடியும்? இதைக் கொண்டு வரும் வீர இளைஞர், சம்புவரையர் குமாரரைத் தாங்கள் பூரணமாக நம்பி அவரிடம் எந்தச் செய்தியும் சொல்லி அனுப்பலாம் – இங்ஙனம், துரதிர்ஷ்டத்துடன் கூடப் பிறந்த அபாக்கியவதி நந்தினி.”

     உண்மையிலேயே தயங்கித் தயங்கி, யோசித்து யோசித்து, மேற்கூறிய நிருபத்தை எழுதிய பிறகு, விசிறிக் கொண்டிருந்த தாதிப் பெண்ணைப் பார்த்து, “போடி! போய்க் கடம்பூர் இளவரசரை உடனே அழைத்து வா!” என்றாள் நந்தினி.

     தாதி சென்று கந்தன்மாறனை அழைத்து வந்து விட்டு விட்டுச் சற்று விலகிப் போய் நின்றாள்.

     கந்தன்மாறனின் கண்கள் நந்தினியை ஏறிட்டுப் பார்ப்பதற்குக் கூசின. எங்கேயோ தோட்டத்தைப் பார்த்த வண்ணம் கந்தன்மாறன் நின்றான்.

     “ஐயா! உட்காருங்கள்!” என்று கூறிய நந்தினியின் குரல் நடுக்கம் கந்தன்மாறனை அவளுடைய முகத்தை உற்றுப் பார்க்கும்படி செய்தது.

     நந்தினி தொடர்ந்து, “குந்தவை தேவியைப் பார்த்த கண்களினால் என்னைப் பார்க்க முடியாமலிருப்பதில் வியப்பில்லை!” என்று கூறிப் புன்னகை புரிந்தாள்.

     அந்தச் சொற்கள் கந்தன்மாறனுடைய நெஞ்சைப் பிளந்தன. அவளுடைய புன்னகையோ அவனுடைய தலையைக் கிறு கிறுக்கச் செய்தது.

     தட்டுத் தடுமாறி, “ஆயிரம் குந்தவைகள் ஒரு நந்தினி தேவிக்கு இணையாக மாட்டார்கள்!” என்றான்.

     “ஆயினும், இளையபிராட்டி விரலை அசைத்தால் வானுலகம் சென்று இந்திரனுடைய சிம்மாசனத்தைக் கொண்டு வந்து விடுவீர்கள். நான் வருந்தி வேண்டிக் கொண்டால், உட்காரக்கூடமாட்டீர்கள்!”

     கந்தன்மாறன் உடனே எதிரிலிருந்த மேடையில் உட்கார்ந்து “தாங்கள் பணித்தால் பிரம்மலோகம் சென்று பிரம்மாவின் தலையைக் கொய்து கொண்டு வருவேன்!” என்றான்.

     நந்தினி நடு நடுங்கினாள். கந்தன் மாறனைப் பாராமல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டு, “பரமசிவன் கொய்தது போகப் பிரம்மாவுக்கு மிச்சம் நாலு தலைகள் இருக்கின்றன. தாங்கள் இன்னொன்றைக் கொய்தாலும் பிரம்மா பிழைத்துப் போவார்!” என்றாள்.

     “தேவி! வேறு எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் குந்தவை தேவியைப் பற்றி மட்டும் என்னிடம் புகழ்ந்து பேசவேண்டாம். சிநேகிதத் துரோகியான வந்தியத்தேவனுக்கு அவள் பரிந்து பேசியதை நினைத்தால் என்னுடைய இரத்தம் கொதிக்கிறது!” என்றான் கந்தன்மாறன்.

     “ஆனாலும் இன்று காலையில் தங்களுடைய – கற்பனாசக்தி அபாரமாயிருந்தது என்னவோ உண்மைதான்! தங்களுக்கும் தங்கள் நண்பனுக்கும் நடந்த துவந்த யுத்தம் பற்றி எவ்வளவு கற்பனையாகப் பேசினீர்கள்?” என்று நந்தினி கூறிய வார்த்தைகள் கந்தன்மாறனுக்குச் சிறிது வெட்கத்தை உண்டாக்கின.

     “அவனைச் சந்தித்தது எப்படி என்பதற்கு ஏதாவது சொல்ல வேண்டும் அல்லவா? அதனால் சொன்னேன். அவன் என்னை முதுகில் குத்தியது என்னமோ உண்மைதானே!” என்றான்.

     “ஐயா! அன்று நடந்ததையெல்லாம் தாங்கள் மறுபடியும் ஒரு தடவை ஞாபகப்படுத்திக்கொண்டு பார்ப்பது நல்லதல்லவா?” என்றாள் நந்தினி.

     “தாங்கள்கூட என் வார்த்தையைச் சந்தேகிக்கிறீர்களா, என்ன?”

     “சந்தேகிக்கவில்லை. ஆயினும் தாங்கள் சில விஷயங்களை மறந்து விட்டிருக்கிறீர்கள். வந்தியத்தேவனை என்றைக்காவது ஒரு நாள் சிறைப்படுத்திக் கொண்டு வருவார்கள். அப்போது தாங்கள் அவன்மீது சாட்டும் குற்றம் உண்மையென்று ருசுவாக வேண்டும் அல்லவா?”

     “அதில் எனக்கு ஒன்றும் சிரத்தை இல்லை. அவனை இன்னமும் மன்னித்துவிடவே விரும்புகிறேன்.”

     “தங்களுடைய பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன். ஆயினும் நமக்குள் உண்மையை நிச்சயம் செய்து கொள்வது நல்லது. அன்றிரவு நடந்ததையெல்லாம் மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்திக் கொண்டு பாருங்கள். நிலவறையின் வழியாகத் தாங்கள் வந்தபோது பழுவேட்டரையரையும் என்னையும் வழியில் சந்தித்தீர்கள். தங்களுக்கு அது நினைவிருக்கிறதா?”

     “நன்றாய் நினைவிருக்கிறது. என் உடம்பில் உயிர் உள்ளவரையில் அதை நான் மறக்க முடியாது.”

     “அப்போது தாங்கள் என்ன சொன்னீர்கள் என்பதும் நினைவிருக்கிறதல்லவா?”

     “என்ன சொன்னேன் என்பது நினைவில்லை. தங்களைப் பார்த்தபோது மெய்மறந்து போனேன்.”

     “ஆனால் தாங்கள் சொன்னது எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது. ‘ஐயா! தங்கள் குமாரியின் அழகைப்பற்றி எவ்வளவோ நான் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அதெல்லாம் உண்மைக்கு உறைபோடக் காணாது’ என்று சொன்னீர்கள்!…”

     “ஐயையோ! அப்படியா சொன்னேன்-? அதனால்தான் அவர் முகம் அப்படிச் சிவந்ததாக்கும்! இப்போதுகூட அவருக்கு என்னைக் கண்டால் அவ்வளவாகப் பிடிக்கவில்லை…”

     நந்தினி சிரித்துவிட்டு, “உங்களை அவருக்குப் பிடிக்காவிட்டால் பாதகமில்லை; உங்களுக்கு அவரைப் பிடித்திருக்கிறதல்லவா? அதுவே போதும்!” என்றாள்.

     “தேவி! உண்மையைச் சொல்லுகிறேன். தங்களிடம் மறைப்பதில் பயன் என்ன? எனக்கும் அவரைப் பிடிக்கவில்லை” என்றான் கந்தன்மாறன்.

     “அதனாலும் பாதகமில்லை! எனக்கு அவரைப் பிடித்திருக்கிறது; அதுவே போதும். இப்படிப்பட்ட கணவனைப் பெறுவதற்கு நான் எவ்வளவு தவம் செய்தேனோ?” என்றாள்.

     இதைக்கேட்டுக் கந்தன்மாறன் உள்ளம் குழம்பிற்று. ஒன்றும் சொல்லத் தெரியாமல் சும்மா இருந்தான்.

     “அதுபோனால் போகட்டும்; நிலவறையில் எங்களைப் பார்த்த பிறகு என்ன செய்தீர்கள்?” என்று நந்தினி கேட்டாள்.

     “தீவர்த்தி பிடித்து வந்த காவலன் வழிகாட்டிக்கொண்டு சென்றான். நான் தங்கள் நினைவாகவே கூடச் சென்றேன். இரகசிய மதில் சுவரைத் திறந்து விட்டுக் காவலன் நகர்ந்து கொண்டான். நான் அதில் நுழைந்தேன். உடனே முதுகில் யாரோ குத்தினார்கள், அவ்வளவுதான் நினைவிருக்கிறது. வந்தியத்தேவன் நான் அங்கு வருவேன் என்பதை எப்படியோ தெரிந்து கொண்டு வெளியில் காத்திருந்திருக்க வேண்டும்.”

     “இல்லை, ஐயா! தங்கள் ஊகம் மிகத்தவறானது. வெளியில் அவன் காத்திருக்கவே இல்லை.”

     “தாங்கள் கூட அவன் கட்சியில் சேர்ந்து விட்டீர்கள்?”

     “நான் ஏன் அவன் கட்சியில் சேரவேண்டும்? எனக்கு என்ன லாபம்? அல்லது அவனுக்குத்தான் என்ன லாபம்? இப்படித்தான் நடந்திருக்கவேண்டும் என்று எனக்கு இப்போது நிச்சயமாய்த் தெரிகிறது.”

     “சொல்லுங்கள், தேவி! எப்படியென்று சொல்லுங்கள்!”

     “வந்தியத்தேவன் வெளியே காத்திருக்கவில்லை!…”

     “பின்னே யார் காத்திருந்தார்கள்?”

     “வேறு யாரும் இல்லை; வந்தியத்தேவன் வெளியில் காத்திருக்கவில்லை யென்றுதானே சொன்னேன்? அவன் அந்த பொக்கிஷ நிலவறைக்குள்ளேயேதான் காத்திருக்கிறான்!”

     “என்ன? என்ன? அது எப்படி சாத்தியமாக முடியும், தேவி!”

     “அவன் அன்று திடீரென்று மாயமாய் மறைந்து விட்டான். எப்படி மறைந்திருப்பான்? நீங்களே யோசித்துப் பாருங்கள்! எப்படியோ அவன் பொக்கிஷ நிலவறைக்குள் புகுந்து அவ்விடத்து இரகசியங்களையெல்லாம் அறிந்து கொண்டான். பின்னர், உங்களைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறான். கதவைத் திறந்ததும் தங்களைப் பின்னாலிருந்து குத்தித் தள்ளிவிட்டுத் தானும் வெளியேறியிருக்கிறான். அப்புறம் ஒருவேளை அவன் மனச்சாட்சியே அவனை உறுத்தியிருக்கலாம். தங்களை அந்த ஊமையின் வீட்டில் கொண்டு போய்ப் போட்டு விட்டுப் போயிருக்கிறான்!…”

     “தேவி! தாங்கள் சொல்கிறபடிதான் நடந்திருக்க வேண்டும்; சந்தேகமில்லை. இத்தனை நாளும் இது என் புத்திக்கும் எட்டவில்லை; மற்றவர்களுக்கும் புலப்படவில்லை! இந்தச் சோழ நாட்டிலேயே மதி நுட்பம் அதிகம் உள்ளவர் யார் என்று கேட்டால், தாங்கள்தான் என்று நான் சொல்வேன். இந்த உலகத்தில் அறிவு படைத்தவர்கள் உண்டு; அழகு படைத்தவர் உண்டு. இரண்டும் சேர்ந்துள்ளவர்களைப் பிரம்ம சிருஷ்டியில் காண்பது அபூர்வம். தங்களிடந்தான் அழகு, அறிவு, இரண்டும் பொருந்தியிருக்க காண்கிறேன்!” என்று பரவசமாகக் கூறினான் கந்தன்மாறன்.

     “ஐயா! தாங்கள் இப்போது சொன்னது மனப்பூர்வமாகக் கூறின வார்த்தையா? அல்லது உலகத்தில் விட புருஷர்கள் பர ஸ்திரீகளிடம் சொல்லும் முகஸ்துதியா?”

     “முகஸ்துதியல்ல; சத்தியமாக என் மனத்தில் இருப்பதையே சொன்னேன்.”

     “அப்படியானால் என்னைப் பூரணமாக நம்புவீர்களா? நம்பி எனக்காக ஓர் உதவி செய்வீர்களா?”

     “என்னால் முடிகிற காரியம் எதுவாயிருந்தாலும் அதைச் செய்யச் சித்தமாயிருக்கிறேன்.”

     “எனக்காகத் தாங்கள் காஞ்சிக்குப் போக வேண்டும்.”

     “காசிக்குப் போகச் சொன்னாலும் போகிறேன்.”

     “அவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை. காஞ்சியில் உள்ள இளவரசர் ஆதித்த கரிகாலருக்கு ஒரு நிருபம் கொடுப்பேன். அதை அவரிடம் சேர்ப்பிக்க வேண்டும். சேர்ப்பித்து விட்டு அவரைத் தங்கள் கடம்பூர் அரண்மனைக்கு விருந்தாளியாக அழைக்க வேண்டும்…”

     “தேவி! இது என்ன வார்த்தை சொல்கிறீர்கள்? தங்கள் கணவரும், என் தந்தையும், மற்றும் பல சோழ நாட்டுப் பிரமுகர்களும் இராஜ்யத்தைப் பற்றிச் செய்து வரும் ஏற்பாடு தங்களுக்குத் தெரியாதா?”

     “நன்றாய்த் தெரியும் அதைவிட இன்னும் சில செய்திகளும் தெரியும். ஐயா! தங்கள் குடும்பமும், என் குடும்பமும் மற்றும் பல பெரிய குடும்பங்களும் பெரும் அபாயத்தின் வாசலில் நின்று வருகின்றன. அதற்குக் காரணம் யார் தெரியுமா?”

     “சொல்லுங்கள், தேவி!”

     “இன்று மத்தியானம் இங்கு விருந்தாளியாக வந்திருந்தாளே அந்தப் பாதகிதான்!”

     “ஐயையோ! இளைய பிராட்டியையா சொல்கிறீர்கள்?”

     “அந்த நாகப் பாம்பைத்தான் சொல்கிறேன். பாம்பின் கால் பாம்பு அறியும். குந்தவையின் சூழ்ச்சி இந்த நந்தினிக்குத் தான் தெரியும். உம்முடைய சிநேகிதன் வந்தியத்தேவனை அவள் இலங்கைக்கு அனுப்பியிருக்கிறாள். எதற்காகத் தெரியுமா? மூலிகைகொண்டு வருவதற்கு என்பது பெரும் பொய்! சுந்தரசோழர் பிழைக்க வேண்டுமே என்று அவள் தவித்துக் கொண்டிருக்கவில்லை. அவருக்குப் பிறகு மதுராந்தகரும் பட்டத்துக்கு வரக்கூடாது. ஆதித்த கரிகாலரும் பட்டத்துக்கு வரக்கூடாது. அவளுடைய அருமைத்தம்பி அருள்மொழி வர்மன் வரவேண்டும் என்பது அவள் எண்ணம். அருள்மொழி வர்மன் பட்டத்துக்கு வந்தால் இவள் இஷ்டம்போல் ஆட்டி வைக்கலாம். அப்புறம் சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினி குந்தவை தேவிதான்! சக்கரவர்த்தி யார் தெரியுமா? உங்கள் சிநேகிதன் வந்தியத்தேவன்!”

     “ஆகா! அப்படியா? இதை எப்படியாவது தடுத்தே தீர வேண்டும். என் தந்தையிடமும், பழுவேட்டரையர்களிடமும் உடனே சொல்ல வேண்டும்…”

     “அவர்களிடம் சொல்லிப் பயன் இல்லை. அவர்கள் நம்பமாட்டார்கள். குந்தவையின் தந்திரத்தை மாற்றுத் தந்திரத்தால் வெல்ல வேண்டும். நீர் உதவி செய்தால் வெல்லலாம்!”

     “கட்டளையிடுங்கள், தேவி!”

     “இதோ இந்த ஓலையைச் சர்வ ஜாக்கிரதையாகச் கொண்டுபோய்க் காஞ்சியில் ஆதித்த கரிகாலரிடம் கொடுக்க வேண்டும். கொடுப்பீர்களா?” என்று சொல்லிக் கொண்டே ஓலைச்சுருளையும் அதைப்போட வேண்டிய குழலையும் நீட்டினாள்.

     மோக வெறியில் மூழ்கிப் போயிருந்த கந்தன்மாறன் ஓலைச் சுருளையும் குழலையும் வாங்கிக் கொள்வதற்குப் பதிலாக நந்தினியின் கரத்தைப்பிடித்துக் கொண்டு, “தங்களுக்காக எது வேண்டுமானாலும் செய்வேன்!” என்று உளறினான்.

     அச்சமயம் சடசடவென்று ஒரு சத்தம் கேட்டது. பழுவேட்டரையர் அரண்மனையிலிருந்து லதா மண்டபத்துக்கு வரும் பாதையில் விரைந்து வந்து கொண்டிருந்தார். திடீரென்று எதிர்பாராமல் வந்தவரைக் கண்டு, தாதிப் பெண் திடுக்கிட்டு விலகி நின்றாள். அங்கே மண்டபத்தின் விட்டத்திலிருந்து தொங்கி ஆடிய ஒரு முக்கோணத்தில் ஒரு பெரிய கிளி ஒன்று சங்கிலியால் பிணைத்து வைக்கப்பட்டிருந்தது. வந்த வேகத்தில் பழுவேட்டரையர் தம்மையறியாமல் அந்தக் கிளியைக் கையினால் பற்றினார். அவருடைய மனத்திலிருந்த வேகம் அவருடைய கையின் வழியாகப் பாய்ந்தது. கிளியின் சிறகுகள் சடசடவென்று அடித்துக் கொண்டன. பழுவேட்டரையரின் கொடூரமான பிடியைத் தாங்க முடியாமல் கிளி ‘கிறீச்’சிட்டது.

24. அனலில் இட்ட மெழுகு


     கிளி ‘கிறீச்’சிட்ட சத்தமும், தாதிப் பெண் பயத்துடன் கூவிய சத்தமும் கலந்து வந்து, நந்தினியையும் கந்தன் மாறனையும் திடுக்கிடச் செய்தன. கந்தன் மாறன் திரும்பிப் பார்த்துப் பழுவேட்டரையர் வருகிறார் என்று அறிந்ததும் கதி கலங்கிப் போனான். சற்றுமுன்னால் அவன் ‘பழுவேட்டரையரை எனக்கும் பிடிக்கவில்லை’ என்று சொன்னது அவர் காதில் விழுந்திருக்குமோ என்ற எண்ணம் உதயமாயிற்று. அதை விடப் பீதிகரமான எண்ணம், நந்தினியையும் தன்னையும் பற்றி அவர் ஏதேனும் தவறாக எண்ணிக் கொள்வாரோ என்ற நினைவு, அவனுக்குத் திகிலை உண்டாக்கிற்று. கிழப்பருவத்தில் கலியாணம் செய்து கொண்டவர்களின் போக்கே ஒரு தனி விதமாக இருக்குமல்லவா? ஆகையினாலேயே அவர் அவ்வளவு கோபமாக வந்து கொண்டிருக்க வேண்டும்? வந்து என்ன செய்யப் போகிறாரோ, தெரியவில்லை. எதற்கும் சித்தமாயிருக்க வேண்டியதுதான்.

     இவ்வளவு ஒரு நொடிப் பொழுதில் கந்தன்மாறன் மனத்தில் அலை எறிந்த சிந்தனைகள். ஆனால் அவனுக்கு அன்று ஒரு பெரிய அதிசயத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அவன் நினைத்ததற்கெல்லாம் மாறாக அந்த அதிசயம் நடந்தது. பழுவேட்டரையர் அருகில் நெருங்கியதும் நந்தினி முகமலர்ந்து அவரைத் தன் கரிய விழிகளால் பார்த்து, “நாதா! எங்கே தாங்கள் திரும்பி வருவதற்கு அதிக நாள் ஆகிவிடுமோ என்று பார்த்தேன். நல்லவேளையாக வந்துவிட்டீர்கள்!” என்றாள்.

     அவளுடைய முகத்தைப் பார்த்து அந்தக் குரலையும் கேட்டதும் பழுவேட்டரையரின் கோபாவேசமெல்லாம் பறந்துவிட்டது. அனலில் இட்ட மெழுகைப்போல் உருகிப் போனார். அசட்டுச் சிரிப்பு ஒன்று சிரித்து, “ஆமாம்; போன காரியம் முடிந்து விட்டது; திரும்பி விட்டேன்” என்றார்.

     பிறகு கந்தன்மாறனைப் பார்த்து, “இந்தப் பிள்ளை இங்கே என்ன செய்கிறான்? ஏதாவது காதற் கவிதை புனைந்து கொண்டு வந்து கொடுத்தானோ?” என்று கேட்டுவிட்டுத் தம்முடைய பரிகாசத்தைக் குறித்துத் தாமே சிரித்தார்.

     கந்தன்மாறனுடைய முகம் சிவந்தது. ஆனால் நந்தினி பழுவேட்டரையரைவிட அதிகமாகச் சிரித்துவிட்டு “இவருக்குக் காதலும் தெரியாது; கவிதையும் தெரியாது சண்டை போட்டுக் காயமடையத்தான் தெரியும். நல்ல வேளையாகக் காயம் ஆறிவிட்டது. ஊருக்குப் போக வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்!” என்றாள்.

     “இந்தக் காலத்துப் பிள்ளைகளின் வீரத்தைத்தான் என்னவென்று சொல்லுவது? இருபத்துநாலு யுத்தகளங்களில் நான் அறுபத்துநாலு காயங்கள் அடைந்தவன். ஆனால் ஒரு தடவையாவது படுக்கையில் படுத்ததில்லை. இவனுக்குக் காயம் குணமாக ஒரு பட்சத்துக்கு மேலாகியிருக்கிறது. ஆனால் என் காயங்களெல்லாம் மார்பிலும் தோளிலும் தலையிலும் முகத்திலும் ஏற்பட்டவை. இந்தப் பிள்ளை முதுகிலே காயம் பட்டவன் அல்லவா? அதனால் இவ்வளவு நாள் ஆகிவிட்டது. நியாயந்தான்!” என்று கூறிப் பரிகாசச் சிரிப்புச் சிரித்தார்.

     கந்தன்மாறன் கொதித்து எழுந்து, “ஐயா! தாங்கள் என் தந்தையின் ஸ்தானத்தில் உள்ளவர். அதனால் தங்களுடைய பரிகாசத்தைப் பொறுத்தேன்!” என்றான்.

     “இல்லாவிட்டால், என்ன செய்திருப்பாயடா?” என்று பழுவேட்டரையர் கேட்டுத் தம் உறையிலிருந்த கத்தியில் கையை வைத்தார்.

     நந்தினி இச்சமயம் குறுக்கிட்டாள். “நாதா! இவருக்கு முதுகில் மட்டும் காயமில்லை. நெஞ்சிலும் காயம் பட்டிருக்கிறது என்பது தங்களுக்குத் தெரிந்ததுதானே! இவர் தம்முடைய சிநேகிதன் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் இம்மாதிரி முதுகில் குத்திப் போட்டுவிட்டுப் போய்விட்டான் என்ற எண்ணம் இவர் நெஞ்சில் பெரிய புண்ணை உண்டாக்கியிருக்கிறது. முதுகில் காயம் ஆறியும், நெஞ்சில் புண் ஆறவில்லை. அந்தப் புண்ணில் கோல் இடுவதுபோல் நாம் பேசக்கூடாது தானே? அன்றிரவு, இவர் காயம்பட்ட அன்றிரவு, என்ன நடந்தது என்று தங்களுக்குத் தெரியாதா, என்ன?” என்று சொல்லிக் கொண்டே நந்தினி பழுவேட்டரையரைப் பார்த்த பார்வையில் மறை பொருள் ஏதோ இருந்திருக்க வேண்டும்! பழுவேட்டரையரின் முகத்தோற்றம் உடனே மாறிவிட்டது!

     “ஆமாம்; நீ சொல்லுவது சரிதான்! பாவம், இவன் அறியாப் பிள்ளை. இவன் தந்தையோ என் பிராண சிநேகிதர். இவன் ஏதோ தெரியாத்தனமாகக் கூறியதை நான் பொருட்படுத்தக் கூடாதுதான். இது கிடக்கட்டும். நந்தினி! ஒரு முக்கியமான விஷயம் சொல்வதற்காக இப்போது வந்தேன். அது இவனுக்கும் தெரிந்திருக்க வேண்டியதுதான். இலங்கை மாதோட்டத்தில் ஒருவனை ஒற்றன் என்று சந்தேகித்துப் பிடித்திருக்கிறார்களாம். அவனிடம் இளவரசன் அருள்மொழிவர்மனுக்கு ஓலை ஒன்றிருக்கிறதாம். அங்க அடையாளங்களிலிருந்து அவன் நம் கந்தன்மாறனுடைய அழகான சிநேகிதனாயிருக்கலாமென்று நினைக்கிறேன். அவன் பெரிய கைகாரனாய்த் தானிருக்க வேண்டும். நம் ஆட்களிடம் அகப்படாமல் தப்பி இலங்கைக்குச் சென்று விட்டான் பார்!” என்றார் பழுவேட்டரையர்.

     நந்தினியின் முக பாவத்தில் அப்போது ஏற்பட்ட ஒரு கண நேரமாறுதலை மற்ற இருவரும் கவனிக்கவில்லை.

     “அடே! தப்பிச்சென்று விட்டானா? இலங்கைக்கா போய்விட்டான்?” என்று கந்தன்மாறன் ஏமாற்றத்துடன் கூறினான்.

     “நாதா! அவன் தப்பிச் சென்றது எனக்கு ஒன்றும் அதிசயமாய்த் தோன்றவில்லை. தங்கள் சகோதரர் இந்தக் கோட்டைக் காவலுக்குத் தகுதியற்றவர் என்றுதான் எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறேனே! அவர் அனுப்பிய ஆட்களும் அப்படித்தானே இருப்பார்கள்?” என்றாள் நந்தினி.

     “முன்னெல்லாம் நீ அப்படிச் சொன்னபோது எனக்கு அது சரியாகப் படவில்லை. இப்போது எனக்குக்கூட அப்படித்தான் தோன்றுகிறது. இன்னும் ஒரு விந்தையைக் கேள்! மாதோட்டத்தில் அகப்பட்ட ஒற்றனிடம் நமது பழுவூர் இலச்சினை ஒன்று இருந்ததாம். அது அவனிடம் எப்படிக் கிடைத்தது என்று அவன் சொல்லவில்லையாம்!…”

     நந்தினி இலேசாக ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, “இது என்ன வேடிக்கை? பனை இலச்சினை அவனிடம் எப்படிக் கிடைத்ததாம்? தங்கள் சகோதரர் இதற்கு என்ன சொல்கிறார்?” என்றாள்.

     “அவனா? அவன் சொல்லுவதைக் கேட்டால் உனக்குச் சிரிப்பு வரும்! அந்தப் பனை இலச்சினை உன்னிடமிருந்துதான் அவனிடம் போயிருக்க வேண்டுமென்கிறான் காலாந்தகன்!” என்று சொல்லிவிட்டுப் பழுவேட்டரையர் இடிஇடியென்று சிரித்தார். அந்தச் சிரிப்பினால் லதா மண்டபமே குலுங்கியது போலிருந்தது. அரண்மனை நந்தவனத்து மரங்கள் எல்லாம் சிலிர்த்து நடுநடுங்கின.

     நந்தினியும் அவருடன் சேர்ந்து சிரித்துக்கொண்டே, “என் மைத்துனர் இருக்கிறாரே, அவருக்கு இணையான புத்திக் கூர்மை படைத்தவர் இந்த ஈரேழு பதினாலு உலகத்திலும் கிடையாது!” என்றாள்.

     “இன்னும் உன் மைத்துனன் என்ன சொல்கிறான் தெரியுமா? நல்ல வேடிக்கை! அதை நினைக்க நினைக்க எனக்குச் சிரிப்பு வருகிறது! தஞ்சைக் கோட்டை வாசலில் நீ பல்லக்கில் வந்து கொண்டிருந்தபோது உன்னை அந்த இந்திரஜித்து சந்தித்துப் பேசினானாம். பிறகு இந்த அரண்மனைக்குள்ளும் அந்த மாயாவி வந்திருந்தானாம். ஆகையால் நீயே அவனிடம் பழுவூர் இலச்சினையைக் கொடுத்திருக்கவேணுமாம்! அப்படியில்லாவிட்டால், உன்னிடம் யாரோ ஒரு மந்திரவாதி அடிக்கடி வருகிறானே, அவன் மூலமாக போயிருக்க வேண்டுமாம்! தன்னுடைய முட்டாள் தனத்தை மறைப்பதற்காக அவன் இப்படியெல்லாம் கற்பனை செய்து உளறுகிறான்!” என்று கூறிப் பழுவேட்டரையர் தமது நீண்ட பற்கள் எல்லாம் தெரியும்படியாக மறுபடியும் ‘ஹஹ்ஹஹ்ஹா’ என்று சிரித்தார்.

     “என் மைத்துனருடைய அறிவுக் கூர்மையைப் பற்றி நான் சந்தேகித்தது ரொம்பத் தவறு. அவருடைய அறிவு உலக்கைக் கொழுந்துதான்! சந்தேகமில்லை! ஆனால் இதையெல்லாம் நீங்கள் கேட்டுக் கொண்டு சும்மா இருந்ததை நினைத்தால்தான் எனக்கு வியப்பாயிருக்கிறது!” என்றாள் நந்தினி. அவளுடைய முகபாவம் மறுபடியும் மாறி, அதில் இப்போது எள்ளும் கொள்ளும் வெடித்தது. கண்ணில் தீப்பொறி பறந்தது.

     வீராதி வீரரும் போர்க்களத்தில் எத்தனையோ வேல் வீச்சுக்களை இறுமாந்து தாங்கியவருமான பெரிய பழுவேட்டரையர் நந்தினியின் சிறு கோபத்தைத் தாங்க முடியாமல் தடுமாறினார். அவருடைய தோற்றத்திலும் பேச்சிலும் திடீரென்று ஒரு தளர்ச்சி காணப்பட்டது.

     “தேவி! நான் அதையெல்லாம் சும்மா கேட்டுக் கொண்டிருந்தேன் என்றா நினைக்கிறாய்? அவனுடைய கையாலாகாத் தனத்தைப் பற்றி மிகக் கடுமையாகப் பேசி அவனை அழவைத்து விட்டேன். நீ பார்த்திருந்தால் அவன் பேரில் இரக்கம் அடைந்திருப்பாய்!” என்றார்.

     இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கந்தன்மாறன் பாடு சங்கடமாகி விட்டது. நந்தினியிடம் அவனுக்குச் சிறிது பயமும், பழுவேட்டரையரிடம் இரக்கமும், அவமதிப்பும் ஏற்பட்டன. இந்தச் சதிபதிகளின் தாம்பத்ய விவகாரத்தில் சிக்கிக்கொள்ளாமல் அங்கிருந்து போய்விட விரும்பினான். தொண்டையைக் கனைத்துக் கொண்டு “ஐயா!…” என்றான்.

     நந்தினி குறுக்கிட்டு “என் மைத்துனர் சாமர்த்தியத்தைப் பற்றிப் பேசுகையில் இவரை நாம் மறந்து விட்டோம். இவர் ஊருக்குப் போகிறேன் என்று சொல்கிறாரே, போகலாம் அல்லவா?” என்று கேட்டாள்.

     “நன்றாய்ப் போகலாம். இத்தனை நாள் இங்கு இவன் தங்கியிருந்தது பற்றியே இவனுடைய தந்தை கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்!”

     “இவரிடம் ஓலை ஒன்று கொடுத்தனுப்ப விரும்புகிறேன், கொடுக்கலாம் அல்லவா?”

     “ஓலையா? யாருக்கு?”

     “காஞ்சியிலுள்ள இளவரசருக்கு!”

     பழுவேட்டரையர் நந்தினியையும் கந்தன் மாறனையும் சந்தேகக் கண்ணால் பார்த்து, “இளவரசருக்கு ஓலையா? நீயா எழுதுகிறாய்? எதற்கு?” என்று கேட்டார்.

     “இளையபிராட்டி தம்பிக்கு ஓலை எழுதி இவர் சிநேகிதரிடம் அனுப்பியிருக்கிறார். பழுவூர் இளையராணி அண்ணனுக்கு ஏன் ஓலை எழுதக்கூடாது? எழுதி இவரிடம் ஏன் அனுப்பக்கூடாது?” என்றாள் நந்தினி.

     “இவன் சிநேகிதன் கொண்டு போன ஓலை இளைய பிராட்டி குந்தவை எழுதிய ஓலையா? உனக்கு அந்த விஷயம் எப்படித் தெரிந்தது?” என்று பழுவேட்டரையர் கேட்டார்.

     “பின்னே எதற்காக என்னிடம் மந்திரவாதி அடிக்கடி வருகிறானாம்? அவன் மந்திரத்தின் மூலமாகத் தெரிந்தது. என் மைத்துனர் ஆட்களின் இலட்சணம்தான் தெரிந்திருக்கிறதே! பழுவூர் பனை இலச்சினை அவனிடம் இருப்பதாக கண்டு பிடித்துக் கொண்டு வந்து சொன்னவர்கள் ஓலை குந்தவை அனுப்பியது என்று சொல்லவில்லை, பாருங்கள்!”

     “இலச்சினையைப் பற்றி நம் ஆட்கள் சொல்லவில்லை; அன்பில் பிரமராயர் இராமேசுவரம் போய்விட்டுத் திரும்பி வந்திருக்கிறார். அவர் கொண்டுவந்த செய்தி…”

     “அந்தப் பிராமணனாவது குந்தவை தேவியின் ஓலையைப் பற்றித் தங்களிடம் சொன்னாரா?”

     “இல்லை.”

     “நாதா! நான் தங்களுக்கு எச்சரித்ததை எண்ணிப் பாருங்கள். இந்த இராஜ்யத்தில் உள்ள அவ்வளவு பேரும் சேர்ந்து தங்களை வஞ்சிக்கப் பார்க்கிறார்கள் என்று நான் சொல்லவில்லையா? இது உண்மை என்பது இப்போதாவது தங்களுக்குத் தெரிகிறதா? மந்திரவாதி சொன்னதை மட்டும் நான் நம்பிவிடவில்லை. கோடிக்கரையிலிருந்து சிறைப்படுத்திக் கொண்டு வந்த வைத்தியர் மகனையும் அழைத்து வரச் செய்து விசாரித்தேன். அவனும் அதை உறுதிப் படுத்தினான். இளைய பிராட்டி தன் தம்பிக்கு ஓலை அனுப்பியிருப்பதாகச் சொன்னான்!” என்றாள் நந்தினி.

     பழுவேட்டரையருக்குக் கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டது போலிருந்தது. கந்தன் மாறனை அவர் அருவருப்புடன் பார்த்தார். அந்தச் சிறு பிள்ளையைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் பேசுவது அவருக்குப் பிடிக்கவில்லை.

     இதைக் குறிப்பினால் உணர்ந்த நந்தினி, “நம்முடைய கதை இருக்கவே இருக்கிறது. இவருடைய பிரயாணம் ஏன் தாமதிக்க வேண்டும்!” என்று கூறிவிட்டுக் கந்தன்மாறனைப் பார்த்து “ஐயா! காஞ்சி இளவரசரிடம் இந்த ஓலையை நேரே கொண்டு போய்க் கொடுக்கவேண்டும். கொடுத்துவிட்டு, அவர் மறு ஓலை கொடுத்தால் சர்வ ஜாக்கிரதையாக அனுப்பி வைக்க வேண்டும். தங்களுடைய கடம்பூர் மாளிகைக்கு இளவரசரை அழைப்பதற்கு மறந்துவிட வேண்டாம்!” என்றாள்.

     “என் தந்தையிடம் என்ன சொல்ல? இது பழுவூர் மன்னரின் விருப்பம் என்று சொல்லலாம் அல்லவா?” கந்தன்மாறன் சற்றுத் தயக்கத்துடன் கேட்டான்.

     “தாராளமாகக் சொல்லலாம். என்னுடைய விருப்பந்தான் பழுவூர் மன்னரின் விருப்பமும். நாதா! நான் சொல்வது சரிதானே!” என்றாள் நந்தினி.

     “ஆமாம், ஆமாம்!” என்று பழுவேட்டரையர் தலையை அசைத்தார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. தலை கிறுகிறுத்தது. நந்தினியை எதிர்த்துப் பேசவும் அவரால் இயலவில்லை.

     கந்தன்மாறன் சென்ற பிறகு நந்தினி, பழுவேட்டரையர் மீது தன் காந்தக் கண்களைச் செலுத்தி, கொஞ்சம் கிளியின் குரலில், “நாதா; என்னிடம் தங்களுடைய நம்பிக்கை குன்றிவிட்டதாகத் தோன்றுகிறது! என் மைத்துனருடைய துர்ப்போதனை ஜயித்துவிட்டதுபோல் காண்கிறது!” என்றாள்.

     “ஒருநாளுமில்லை நந்தினி! என் கையில் பிடித்த வேலிலும், அரையில் சொருகிய வாளிலும் எனக்கு நம்பிக்கை குறைந்தாலும் உன்னிடம் நம்பிக்கை குறையாது. வீர சொர்க்கத்தில் நான் நம்பிக்கை இழந்தாலும் உன் வார்த்தையில் நான் நம்பிக்கை இழக்கமாட்டேன்!” என்றார்.

     “இது உண்மையானால் அந்தச் சிறு பிள்ளையை வைத்துக் கொண்டு என்னிடம் அவ்வளவு கேள்வி கேட்டீர்களே, ஏன்? எனக்கு அவமானமாயிருந்தது!” என்று நந்தினி கூறியதுபோது, அவள் கண்களில் கண்ணீர் பெருகத் தொடங்கியது.

     பழுவேட்டரையர் துடிதுடித்துப் போனார். “வேண்டாம், என் கண்ணே! இப்படி! என்னைத் தண்டிக்கவேண்டாம்!” என்று கூறி, நந்தினியின் கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துச் சமாதானம் செய்தார்.

     “ஆயினும் உன்னுடைய காரியங்கள் சில எனக்கு அர்த்தமாகவில்லை. என்ன, ஏது, எதற்காக என்று கேட்க எனக்கு உரிமை இல்லையா?” என்றார்.

     “கேட்பதற்குத் தங்களுக்கு உரிமை உண்டு. சொல்வதற்கும் எனக்கு உரிமையுண்டு. யார் இல்லை என்றார்கள்? அன்னியர்கள் முன்னால் கேட்க வேண்டாம் என்றுதான் சொன்னேன். என்ன வேண்டுமோ இப்போது கேளுங்கள்!” என்றாள்.

     “ஆதித்த கரிகாலனுக்கு நீ எதற்காக ஓலை கொடுத்து அனுப்புகிறாய்? கடம்பூர் மாளிகைக்கு எதற்காக அவனை அழைக்கச் சொல்கிறாய்? அவன் அல்லவா நம்முடைய யோசனை நிறைவேறுவதற்கு முதல் விரோதி?” என்றார் பழுவேட்டரையர்.

     “இல்லை, இல்லை! ஆதித்த கரிகாலர் நம் முதல் விரோதி இல்லை. அந்தப் பழையாறைப் பெண் பாம்புதான் நம் முதல் விரோதி. அவளை எதற்காக நம் அரண்மனைக்கு நான் அழைத்தேன்? அந்தக் காரணத்துக்காகவே தான் ஆதித்த கரிகாலனைக் கடம்பூருக்கு அழைக்கச் சொல்கிறேன். நாதா! நான் அடிக்கடி சொல்லி வந்திருப்பதை இப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இளைய பிராட்டி குந்தவை தன் மனத்திற்குள் ஏதோ ஒரு தனி யோசனை வைத்திருக்கிறாள் என்று சொல்லி வந்தேன் அல்லவா? அது என்னவென்று இப்போது கண்டுபிடித்து விட்டேன். மற்ற எல்லாரையும் விலக்கிவிட்டு, அவளுடைய இளைய சகோதரன் அருள்மொழிவர்மனைத் தஞ்சாவூர்ச் சிம்மாசனத்தில் ஏற்றி வைக்க அவள் தீர்மானித்திருக்கிறாள். அவளுடைய சூழ்ச்சிக்கு எதிர் சூழ்ச்சி செய்து அவளுடைய நோக்கம் நிறைவேறாமல் செய்ய வேண்டும். காஞ்சிக்கு நான் ஓலை அனுப்பியதன் காரணம் இப்போது தெரிகிறதல்லவா?” என்று நந்தினி கேட்டு விட்டுப் பழுவேட்டரையரைப் பார்த்த பார்வை அவருடைய நெஞ்சை ஊடுருவி, அவர் அறிவை நிலை குலையச் செய்தது.

     ஒன்றும் தெரியாவிட்டாலும், “ஆம் தெரிகிறது!” என்று குழறினார் அந்த வீரக்கிழவர்.

     “நாதா! தாங்களும் தங்கள் முன்னோர்களும் புரிந்த அரும்பெரும் வீரச் செயல்களினாலேயே இன்று இந்தச் சோழ சாம்ராஜ்யம் இவ்வளவு பல்கிப் பரவியிருக்கிறது. இந்தத் தஞ்சைபுரியின் தங்கச் சிம்மாசனத்தில் ஒரு நாளாவது தங்களை ஏற்றி வைத்துப் பார்க்கும் வரையில் இந்தப் பாவியின் கண்கள் இரவிலும், பகலிலும் தூங்கப் போவதில்லை! அதற்குள்ளே எந்த விதத்திலாவது தங்களுக்கு என் பேரில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் தங்கள் உடைவாளினால் என்னை ஒரே வெட்டாக வெட்டிக் கொன்று விடுங்கள்!” என்றாள் நந்தினி.

     “என் கண்ணே! இத்தகைய கர்ண கடூரமான மொழிகளைச் சொல்லி என்னைச் சித்திரவதை செய்யாதே!” என்றார் பெரிய பழுவேட்டரையர்.

25. மாதோட்ட மாநகரம்


     நமது கதாநாயகன் வந்தியத்தேவனை நாம் விட்டுப்பிரிந்து நெடுங்காலம் ஆகிவிட்டது. தஞ்சையிலேயே அதிக நாள் தங்கி விட்டோம். சில நாள் தான் என்றாலும் நெடுங்காலமாகத் தோன்றுகிறது. இந்தச் சில நாளைக்குள் வந்தியத்தேவன் ஈழத்துக் கடற்கரையோடு நடந்து சென்று பாலாவி நதிக்கரையில் இருந்த மாதோட்ட மாநகரை அடைந்திருந்தான். இராமேசுவரக் கடலுக்கு அப்புறத்தில் ஈழ நாட்டுக் கடற்கரையில் இருந்த அம்மாநகரம், திருஞான சம்பந்தர் காலத்திலும், சுந்தரமூர்த்தியின் காலத்திலும் இருந்ததுபோலவே இப்போது பசுமையான மரங்கள் அடர்ந்த சோலைகளினால் சூழப்பட்டுக் கண்ணுக்கு இனிய காட்சி அளித்தது. மாவும், பலாவும், தென்னையும், கமுகும், கதலியும், கரும்பும் அந்தக் கரையைச் சுற்றிலும் செழித்து வளர்ந்திருந்தன. அந்த மரங்களில் வானரங்கள் ஊஞ்சலாடின. வரிவண்டுகள் பண்ணிசைத்தன; பைங்கிளிகள் மழலை பேசின.

     அந்நகரின் கோட்டை மதில்களின் மேல் கடல் அலைகள் மோதிச் சலசலவென்று சப்தம் உண்டாக்கின. மாதோட்ட நகரின் துறைமுகத்தின் பெரிய மரக்கலங்கள் முதல் சிறிய படகுகள் வரையில் நெருங்கி நின்றன. அவற்றிலிருந்து இறக்கப்பட்ட பண்டங்கள் மலை மலையாகக் குவிந்துகிடந்தன. இவையெல்லாம் சம்பந்தர் சுந்தரர் காலத்தில் இருந்தது போலவே இருந்தாலும் வேறு சில மாறுதல்கள் காணப்பட்டன. மாதோட்ட நகரின் வீதிகளில் இப்போது கேதீசுவர ஆலயத்துக்குச் செல்லும் அடியார்களின் கூட்டத்தை அதிகம் காணவில்லை. பக்தர்கள் இறைவனைப் பாடிப் பரவசமடைந்த இடங்களிலெல்லாம் இப்போது போர் வீரர்கள் காணப்பட்டனர். கத்தியும் கேடயமும், வாளும் வேலும், கையில் கொண்ட வீரர்கள் அங்கு மிங்கும் திரிந்தார்கள்.

     சென்ற நூறு ஆண்டுகளுக்கு அதிகமாக அந்த நகரம் ஒரு யுத்த கேந்திரஸ்தலமாக விளங்கி வந்தது. தமிழ்நாட்டிலிருந்து ஈழத்துப் போருக்கு வந்த படைகள் பெரும்பாலும் அங்கேதான் இறங்கின. திரும்பிச் சென்ற படைகளும் அங்கேதான் கப்பல் ஏறின. நகரம் பல தடவை கைமாறிவிட்டது. சில சமயம் இலங்கை மன்னர்களிடமும், சில சமயம் பாண்டிய அரசர்களிடமும் அது இருந்தது. பராந்தக சக்கரவர்த்தியின் காலத்திலிருந்து சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது.

     அத்தகைய யுத்த கேந்திர நகரத்தின் கோட்டை மதில் வாசலில் ஒரு நாள் வந்தியத்தேவன் வந்து நின்றான். நகருக்குள் போக வேண்டும் என்றான். சோழ சேநாதிபதியைப் பார்க்க வேண்டும் என்றான். காவலர்கள் அவனை உள்ளே விட மறுத்தார்கள். அதன் பேரில், முன்னர் கடம்பூரில் கையாண்ட யுக்தியை இங்கும் அவன் கையாண்டான். காவலர்களைப் பலவந்தமாகத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழையப் பிரயத்தனம் செய்தான். காவலர்கள் அவனைச் சிறைப் பிடித்துக் கோட்டைத் தலைவனிடம் கொண்டு போனார்கள். வந்தியத்தேவன் கோட்டைத் தலைவனிடம் இளவரசர் அருள்மொழிவர்மருக்கு முக்கியமான ஓலை கொண்டு வந்திருப்பதாகவும், அதைப்பற்றி சோழ சேநாதிபதியிடந்தான் விவரம் சொல்ல முடியும் என்று கூறினான். அவனைப் பரிசோதித்துப் பார்த்தார்கள். ‘பொன்னியின் செல்வ’னுக்கு ஓர் ஓலையும், பழுவூர் பனை இலச்சினையும் அவனிடம் இருக்கக் கண்டார்கள்.

     கொடும்பாளூர்ப் பெரிய வேளார் பூதி விக்கிரம கேசரி அச்சமயம் இலங்கைப் படையின் சேநாதிபதியாக இருந்தார். அவரிடம் போய்ச் சொன்னார்கள். பூதி விக்கிரம கேசரி அப்போது முதன் மந்திரி அநிருத்தப்பிரமராயருடன் பேசிக் கொண்டிருந்தார். அவருடன் இராமேசுவரம் வரையில் போவதற்கு ஆயத்தமாக இருந்தார். ஆகையால் திரும்பி வந்து விசாரிப்பதாகவும் அது வரையில் அந்த வீரனைக் காவலில் வைத்திருக்கும்படியும் சொல்லிவிட்டுப் போனார்.

     பிறகு வந்தியத்தேவனை அழைத்துப்போய் ஒரு பாழடைந்த மாளிகையில் ஓர் அறையில் தள்ளிப் பூட்டினார்கள். வாசலில் காவலும் போட்டார்கள். வந்தியத்தேவன் நீண்ட வழிப்பிரயாணத்தினால் களைப்படைந்திருந்தான் ஆகையால், தன்னைச் சிறைப்படுத்தியது குறித்து அவன் மகிழ்ந்தான். இரண்டொரு நாள் அலைச்சல் இன்றி ஓய்வு பெறலாம் அல்லவா?

     முதல்நாள் அவனுக்கு அத்தகைய ஓய்வு கிடைத்தது. ஆனால் இரண்டாம் நாள் ஒரு தொல்லை ஏற்பட்டது.

     அவன் இருந்த அறைக்கு அடுத்த அறையில் ஏதேதோ விசித்திரமான சப்தங்கள் கேட்கத் தொடங்கின. யாரோ ஒருவன் இன்னொருவனை அதட்டி மிரட்டினான். அவனுடைய வீரப்பேச்சுக்கள் பிரமாதமாயிருந்தன. “இந்தா!”. “சீச்சீ!”, “போ போ!”, “கிட்ட வராதே!” “அருகில் வந்தாயோ கொன்று விடுவேன்!”, “அடித்து நொறுக்கிவிடுவேன்!” “ஜாக்கிரதை!” “உன் உயிர் உன்னுடையதல்ல!” “யமலோகத்துக்கு அனுப்பி விடுவேன்!”, “ஒரே உதையில் உன் உயிர் போய்விடும்!” என்று இப்படியெல்லாம் அடுத்த அறையில் ஒருவன் இரைந்து கொண்டிருந்தான். யாரைப் பார்த்து இப்படி அவன் வீர வாதமிடுகிறான் என்று தெரியவில்லை. ஒரே குரல் தான் கேட்டதே தவிர, அதற்கு எதிர்க்குரல் கேட்கவில்லை. ஒருவேளை யாராவது பைத்தியம் பிடித்த போர் வீரனாயிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அப்படியென்றால், இரவெல்லாம் தூக்கமில்லாமல் செய்துவிடுவானே? கொஞ்சம் நிம்மதியாகத் தூங்கலாம் என்றால் அதற்கும் இடையூறு நேர்ந்து விட்டதே…!

     “சொன்னால் கேட்கமாட்டாயா? சும்மா போகமாட்டாயா சரி, சரி! உன்னை என்ன செய்கிறேன், பார்!” இந்த வார்த்தைகளுக்குப் பிறகு தொப்பென்று அவனுடைய அறையில் வந்து ஏதோ விழுந்தது. படுத்திருந்த வந்தியத்தேவன் தூக்கிவாரிப்போட்டு எழுந்தான். விழுந்தது என்னவென்று உற்றுப் பார்த்தான். உடனே அவனையறியாமல் சிரிப்பு வந்தது. கலகலவென்று சிரித்தான் ஏனெனில், அடுத்த அறையிலிருந்து அப்படி வேகமாக வந்து விழுந்தது ஒரு பூனை என்று தெரிந்தது!

     “ஓஹோ! உனக்குச் சிரிக்க வேறே தெரியுமா? சிரி! சிரி! மறுபடியும் இங்கே மட்டும் வராதே!” என்று அந்தக் குரல் சொல்லியது.

     யாரோ பைத்தியக்காரன் என்பதில் சந்தேகமில்லை. இல்லாவிட்டால் பூனையுடன் இவ்வளவு வாதமிடுவானா? அல்லது பூனை மனிதரைப் போல் சிரிக்கும் என்று தான் எண்ணுவானா? ஆனால் அதிலும் ஓர் அதிசயம் என்னவென்றால் அப்படியெல்லாம் பேசிய குரல் அவனுக்குத் தெரிந்த குரலோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. எங்கேயோ, எப்போதோ கேட்ட குரலாகத் தோன்றியது. ஆனால் யாருடைய குரல்? எங்கே கேட்ட குரல்? – நினைத்து நினைத்துப் பார்த்தும் ஞாபகம் வரவில்லை!

     எப்படியாவது இருக்கட்டும், யாராவது இருக்கட்டும் என்று எண்ணி வந்தியத்தேவன் படுத்துக் கொண்டான். கண்ணைமூடித் தூங்கப் பார்த்தான், ஆனால் தூங்க முடியவில்லை. சற்று நேரத்தில் அவனுடைய உள்ளங்கால்களில் ஏதோ வழவழவென்று தட்டுப்பட்டது. கண்ணைத் திறந்து பார்த்தால் பூனை அங்கே படுத்திருந்தது. அட கடவுளே! இதைக் கால் மாட்டில் வைத்துக் கொண்டு எப்படித் தூங்குவது? உதைத்துத் தள்ளினான். பூனை நகர்ந்து சென்றது. கண்ணை முடினான்; மறுபடி அவன் பக்கத்தில் கையில் ஏதோ மிருதுவாகத் தட்டுப்பட்டது. கண்ணைத் திறந்து பார்த்தால் பூனை அவன் பக்கத்தில் வந்து படுத்துக்கொண்டு செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தது!

     மறுபடியும் கையினால் பிடித்துத் தள்ளினான். பூனை தூரச் சென்றது. மீண்டும் கண்ணை மூடினான். தலைமாட்டில் வந்து பூனை படுத்துக்கொண்டு வாலினால் அவனுடைய நெற்றியைத் தடவத் தொடங்கியது.

     வாளையும் வேலையும் அச்சமின்றித் தாங்கக்கூடிய அவ்வீரனுக்குப் பூனை தன் வாலினால் தடவும் அனுபவத்தைத் தாங்க முடியவில்லை. எழுந்து, பூனையை அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கினான். அவனுடைய அறைக்கும் அடுத்த அறைக்கும் மத்தியில் இருந்த சுவரின் உச்சியில் கொஞ்சம் இடிந்து பொக்கை விழுந்திருந்தது. அதன் வழியாகப் பூனையைத் தூக்கி எறிந்தான்.

     அடுத்த அறையில் சிறிது நேரம் ஒரே ரகளையாயிருந்தது. மனிதக் குரலின் கூப்பாட்டுடன் பூனையின் கரமுரா சத்தமும் சேர்ந்து கொண்டது. சற்று நேரத்துக்குப் பிறகு “போ! தொலை!” என்ற குரல் கேட்டது. பூனையின் ‘மியாவ் மியாவ்’ சத்தம் கொஞ்ச தூரம் வரையில் சென்று மறைந்தது. பிறகு நிசப்தம் நிலவியது.

     வந்தியத்தேவன் கண்ணயர்ந்தான். அரைத்தூக்க நிலையில் ஒரு கனவு கண்டான். மிக இன்பமான கனவு. இளைய பிராட்டி குந்தவை அவன் அருகில் வந்து உட்கார்ந்து அவன் நெற்றியைத் தடவிக் கொடுத்தாள். ஆகா! பூனையின் வாலுக்கும் இளவரசியின் கைவிரலுக்கும் எத்தனை வித்தியாசம்!

     சட்டென்று மறுபடி விழிப்பு வந்தது. கனவு கலைந்துவிட்டதே என்று வருத்தமாயிருந்தது.

     அடுத்த அறையிலிருந்து யாரோ சுவரைத் தட்டினார்கள் அந்தப் பைத்தியமாகத்தான் இருக்க வேண்டும்.

     “யார் அங்கே? பூனையை எடுத்து எறிந்தது யார்?”

     வந்தியத்தேவன் மறுமொழி சொல்லவில்லை. மௌனமாயிருந்தான். ஆ! இது என்ன, பூனை பிறாண்டுவது போன்ற சப்தம் மறுபடியும்? இல்லை, இல்லை! யாரோ அப்புறத்தில் சுவரில் ஏறுவதற்கு முயல்கிறார்கள்!

     வந்தியத்தேவன் எழுந்திருக்கவில்லை. படுத்தபடியே கவனமாய்க் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால் முன் ஜாக்கிரதையாகக் கைமட்டும் கத்திபிடியில் இருந்தது.

     சுவரின் உச்சியிலிருந்து பொக்கையில் முதலில் இரு கைகள் தெரிந்தன. பிறகு ஒரு முண்டாசு தெரிந்தது. முண்டாசுக்கடியில் ஒரு முகம் மேலே வந்து குனிந்து பார்த்தது.

     ஆ! இவன் ஆழ்வார்க்கடியான் அல்லவா? தலைப்பாகை கட்டியிருப்பதால் தோற்றத்தில் சிறிது மாறியிருக்கிறான்! ஆனால் ஆழ்வார்க்கடியான் என்பதில் சந்தேகமில்லை.

     இவன் எதற்காக, எப்படி இங்கே வந்தான்? நாம் இருப்பது தெரிந்துதான் வந்திருக்கவேண்டும்! உதவி செய்ய வந்திருக்கிறானா? அல்லது இடையூறு செய்ய வந்திருக்கிறானா?

     வந்தியத்தேவன் எழுந்து உட்கார்ந்து, “ஓ வீரவைஷ்ணவரே! வருக! வருக! சிவபுண்ணிய ஸ்தலமாகிய திருக்கேதீசுவரத்துக்கு வருக! வருக!” என்றான்.

     “தம்பி! நீதானா? நினைத்தேன்! வேறு யார் இவ்வளவு அமுக்குப் பிள்ளையாராகக் குரல் காட்டாமல் உட்கார்ந்திருக்க முடியும்?” என்று ஆழ்வார்க்கடியான் சொல்லிக்கொண்டு அறையில் குதித்தான்.

கல்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *