Skip to content
Home » மனதில் விழுந்த விதையே-8

மனதில் விழுந்த விதையே-8

அத்தியாயம்-8

Thank you for reading this post, don't forget to subscribe!

     மிருதுளா கண்ணீரை உகுத்தி துடைக்க, “ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பிரச்சனை இருக்குல. நீங்க இதுக்கு பதிலடி கொடுக்கணும்.

   உங்களோட பேன்ஸ் எத்தனை பேர் இருக்காங்க. அவங்க எல்லாம் உங்களை மேரேஜ் பண்ணிக்க எவ்ளோ ஆசைப்படுவாங்க தெரியுமா? நீங்க அவங்க கேட்டது போல டிவோர்ஸ் கொடுத்துட்டு நல்ல ரசிகை இல்லைனா, அழகான நடிகையை கல்யாணம் பண்ணி மூஞ்சில கரியை பூசுங்க” என்று பேசவும் அம்ரிஷ் கலகலவென சிரித்தான்.

     “போட்டிக்காகவோ, நம்ம கேரக்டரை பத்தி பேசவும், நாம நம்ம லைப்பை மாத்த முடியாதே. காதல் கல்யாணம் எல்லாம் மனமுவந்து நடக்கணும்.” என்றதும் மிருதுளா சோகமாய் உருமாறினாள்.

    அம்ரிஷ் சொல்வது போல தனக்கு கல்யாணம் மனமுவந்து நடக்கப் போவதில்லை. ராஜபாண்டியன் தன்னை கண்டறிந்தாளோ, மனமென்ற ஒன்றை மதிக்காமல் மணந்து கொல்வான். ஆம் கொல்வான்… கொன்று புதைப்பது மட்டும் நடக்காது.

   உயிரோடு பிணமாக நடமாடவிடுவான்.

    அம்ரிஷும் அமைதியாக இருக்க, மிருதுளாவும் அமைதியுருவமாக திகழ, இருவரும் மனதில் தங்கள் பிரச்சனையால் வெவ்வேறு  மனநிலையில் திரிந்தனர்.

      “இங்க என்னடா பண்ணிட்டு இருக்க? யாராவது வெளியேயிருந்து உன்னை பார்த்துட்டா கேமிரா மைக் என்று மொத்த மீடியா ஆட்களும் வந்துடுவாங்க. ரிலாக்ஸா இருக்க?” என்று ஆதேஷ் வந்து சேர்ந்தான்.

     “ரிலாக்ஸா இருக்க தானே வந்தது.” என்று அம்ரிஷ் பேசவும், “ஹாய்ங்க?” என்று மிருதுளாவை பார்த்து கையசைத்து அமர்ந்தான்.

   மிருதுளாவுக்கு இதுவரை அம்ரிஷோடு தனியாக பேசும் போது இருந்த மனநிலை மாறி முற்றிலும் தயக்கவுணர்வு பெற்று எழுந்தாள்.

    “நான் போய் என் பிரெண்ட்ஸை எழுப்பி விடறேன்.” என்று சென்றாள்.
    அவள் அம்ரிஷை இரண்டு நொடி பார்த்துவிட்டு வீட்டுக்குள் செல்லவும் “என்னடா நான் வந்ததும் அந்த பொண்ணு போகுது. என்னவாம் வாயை திறந்து பேசுச்சா.. கார்ல மயங்கிட்டே இருந்தது.” என்று ஆதேஷ் படபடவென கேட்டான்.
 
    “ஏன்டா மயக்கம் மருந்தை அடிச்சா, மயங்கி தான் இருப்பாங்க” என்று அம்ரிஷ் நக்கலடித்தான்.

    ஆதேஷிற்கு ஆச்சரியமாக இருந்தது. அம்ரிஷ் மனவுளைச்சலில் திணறி சோகமே உருவமாய் இருப்பானென்று எண்ணியிருக்க, அதற்கு மாறாக நக்கலடிக்கின்றானே.

     காரில் ஏறிய கணம் மிகுந்த வருத்தமும் மனழுத்தமும் பெற்றவனாய் இருந்தான்.
   
   ஏனோ இந்த நான்கு பெண்கள் காரில் ஏறியதில் இருந்து அவனது வருத்தம் குறைந்துள்ளது.
  
    இஷாவின் நேரடி பேட்டியை கண்ட தனக்கே கோபம் கோபமாய் பொங்குகின்றது. இவன் எப்படி நிதானமாய் எடுத்துக்கொள்கின்றான்.

      “அம்ரிஷ்… நீ எதுவும் மறுப்பு பேச்சா சோஷியல் மீடியாவுக்கு கொடுக்கலையா?” என்று தயக்கமாய் கேட்டான் ஆதேஷ்.

     நீண்ட நெடிய மூச்சை உள்ளிழுத்து விட்டான்.

  மதியமாக இருந்ததால் லேசான வெயில் மட்டும் இருந்தது.

   கண்களை சுருக்கி, “ஒரு நடிகன் உண்மையை சொன்னாலும் பொய் சொன்னாலும் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் பலதரப்பட்ட கதைகளா புனையப்பட்டு இல்லாதது இருக்கறதாகவும், இருக்கறது இல்லாததாகவும்னு திரித்து போகும்.

     அவ சொன்ன நான் உடனே என் பக்க நிலைமையை சொல்லணுமா? விடுடா.. நான் கொஞ்சம் மெண்டலி ஸ்டடி ஆனதும் பேட்டி கொடுத்துக்கறேன்.

    இப்ப மறுத்து பேசணும்னு நினைச்சா கூட அவ மேல இருக்கற நேசத்துல வார்த்தை தவறா வராது. தடுமாறுவேன்.

   மொத்தமா நான் முதல்ல ப்ரிப்பர் ஆகிட்டு தைரியமா எந்த கேள்விக்கும் தயங்காம, கூனி குறுகாம ஆன்சர் பண்ணற திடம் வரட்டும்.” என்று தெளிவாக பேசினான்.

   உண்மை தானே… இந்த உலகம் எந்தவொரு நிகழ்ச்சியையும் முன்னுக்கு பின் முரணாக எடுத்து கொண்டு ஆளாளுக்கு தலை கால் வைத்து விடுவார்கள்.

    அதுவும் மீடியாவுக்கு தேவையான நடிகர் நடிகைகள் என சினிமாவின் டிரெண்டிங் ஆட்களின் வாழ்க்கையை மீடியாவே தீர்மானித்துவிடும்.

   முக்கியமாக தனிபட்ட வாழ்க்கையை மூடுவிழா செய்திடும்.

   கொஞ்சம் சுனாமி போன்றதொரு அலைகள் அடித்து ஓயட்டும் என்று தோன்றியது.

    இங்கே மிருதுளா மற்றவர்களை எழுப்பி குளித்து சாப்பிட அழைத்தாள்.

   இங்கே வந்ததும் குளித்து முடித்தது மிருதுளா மட்டுமே. மற்ற மூன்று தேவியர்களும் மட்டமலாக்க படுத்து விட்டார்கள். அவர்களை குறை சொல்ல முடியாது அசதி இருக்க தானே செய்யும்.

    ஒருத்தர் மாற்றி ஒருத்தர் குளித்து முடித்து வரவும் மென்பனி சஹானா எல்லாம் பசிபசி என்று புலம்ப ஆரம்பித்தார்கள்.

  அதனால் ஹாலில் தலையை நீட்டி சாப்பிட வரவும் சாக்ஷியோ ஆண்கள் கும்பலை தேடினாள்.

   அம்ரிஷ் ஆதேஷ் பேசியபடி தோட்டத்து பக்கமிருந்து வந்தார்கள்.
    தமிழோ அப்பொழுது தான் குளித்து முடித்து தலையை சிலுப்பி கொண்டே வந்தான்.
  நீர்த்துளிகள் சாக்ஷி மென்பனி பக்கம் படவும், “சாரி சாரி கேர்ள்ஸ்” என்று அடக்கமாய் பணிந்தான்.

   வேதாந்தோ அவ்விடத்தில் இல்லை. எங்கே என்று சாக்ஷி தேட, அதற்குள் அமர்ந்து உணவினை சாப்பிட எடுத்து வைத்தார்கள்.

    “ஒரு அவசரமும் இல்லைக்கா.. பொறுமையா காய்கறி கட் பண்ணுங்க. வெட்டு சின்னது தான். ஆனா இரத்தம் நிறைய போகுது. அதனால கைக்கு ரெஸ்ட் கொடுங்க” என்று சமையல்கட்டில் வேதாந்த் குரல் கேட்டது.

   சமையல் பெண்மணி கையில் பிளாஸ்திரி இருந்தது. ஏதோ அடிபட்டு கட்டு போட்டிருப்பது தெரிய, ஏதோ வெட்டுகாயம் என்று யூகித்துகொண்டாள்.

   ஆண்கள் நால்வரும், பெண்கள் நால்வரும் அமர்ந்திட, பணியாட்கள் பரிமாறினார்கள்.

    “கூச்சப்படாம சாப்பிடுங்க. செல்வி சமையலில் ஒரு குறையும் இருக்காது.” என்று அம்ரிஷ் தான் பெண்களை சங்கடமின்றி உணவருந்த பேசினான்.

    தமிழுக்கே ஆச்சரியம் தான். இவன் அதிகம் வாய் திறக்க மாட்டானே? என ஆராய்ந்தான்.

    வேதாந்த் மட்டும் பெண்கள் பக்கம் திரும்பி, “உங்க வீட்ல நீங்க பாதுகாப்பா இருப்பதை எப்படி சொல்லப்போறிங்க?” என்று வினவினான்.

    “அது தான் தெரியலையே. போனை ஹாக் பண்ணலாம்னு நீங்க தான் சொன்னிங்க. பிறகு எப்படி பேசறது? போனை ஆன் பண்ணவே பயமாயிருக்கு.

  விளையாட்டா இவளை கிட்னாப் பண்ணி பத்து நாள் கொடைக்கானல்ல தங்கிட்டு பதினோறாவது நாள்ல கல்யாணத்துக்கு குறித்த தேதி முடிந்ததுனு ஹாயா இருக்கலாம்னு பார்த்தா, மாப்பிள்ளை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ என்பதே காலையில தான் தெரிந்தது. இனி எப்படி பேச?” என்று வருத்தம் காட்டி முடித்தாள் சாக்ஷி.

    மென்பனியோ “எங்க அண்ணா அண்ணி அவங்களே போட்டுத்தர சான்ஸ் இருக்கு. என்ன நான் எங்க போறேன்னு சொல்லலை. காரை திருடிட்டு வந்ததால என் மேல ஏகப்பட்ட கடுப்புல இருப்பான். ஏதோ ரஜினி சார் படத்துக்கு கார்ல போகணும்னு பிளான் எல்லாம் போட்டான்.
   இப்ப காரும் இல்லை. ரஜினி சார் படத்துக்கு எப்படி போவாங்களோ?” என்ற மென்பனி கவலையை உதிர்க்க தமிழோ சிரித்து விட்டான்.

   “இதை நான் சொல்லக்கூடாது… இருந்தாலும் சொல்லறேன். உங்க கேர்ல்ஸ் குழுவுல எல்லாருக்கும் வாய் ஜாஸ்திங்க” என்று ஆதேஷ் மனதார பாராட்டு பத்திரத்தை வாசித்து முடித்தான்.

   தட்டில் டைனிங் டேபிளில் வைத்த உணவுகள் காலியாக இப்படி ஒருத்தருக்கொருவர் கிண்டல் கேலியோடு உண்டு முடித்தனர்.

    “ஈவினிங்கா யாராவது ஒருத்தர் எங்களில் யாரோடவாது பைக்ல போய் பொது தொலைப்பேசில பேசிட்டு வாங்க. பெட்டர். அப்ப கூட எங்களை பற்றியோ அம்ரிஷ் பத்தியோ சொல்லாதிங்க.” என்றதும் இப்பொழுதே யார் போவதென்று சிந்திக்க துவங்கினார்கள்.

   எப்படியும் பெண்களில் மிருதுளா போகப்போவதில்லை. அதே போல துணைக்கு அம்ரிஷ் போவதும் சரியாக வராது.

  மற்ற மூன்று ஜோடிகளில் யார் யாரை அழைத்து செல்வார்கள் என்று தான் விழித்தனர்.

    மென்பனி, சாக்ஷி, சஹானா மூவரில் யார் செல்ல என்று இங்கி பிங்கி போட்டு ஆரம்பித்தார்கள்.

     “சாக்ஷி நீயே போ” என்று மற்றயிருவர் உரைத்திடவும், அவள் பார்வை தமிழை அழைப்பதா வேதாந்த்தை அழைப்பதா என்று வருடியது.
  நிச்சயம் ஆதேஷ் வேண்டாமென்று முடிவோடு இருந்தார்கள்.

    தமிழ் “நான் போறேன்” என்று குழப்பத்தை தவிர்க்க தாமாக முன் வந்து நின்றாள்.

    வேதாந்த் ஏதோ சொல்ல வரும் முன் சாக்ஷி தமிழ் செல்வதாக முடிவானது.
  
    அனைத்து பெற்றோரின் எண்களையும் பெற்றவள் தமிழோடு பைக்கில் ஏறியமர, வேதாந்த் முகம் கறுத்தது.

    தமிழோ அங்கே அம்ரிஷின் இருசக்கர வாகனத்தில் ஏறியமர்ந்தவன் சட்டென இறங்கினான்.

   “மச்சான்… நீ போடா.” என்று வேதாந்திடம் சாவியை நீட்டினான்.

   திடீரென தமிழ் இறங்கிவிட்டு சாவியை தன்னிடம் நீட்டவும், வாங்கியவன் அதன் பின்னரே “ஏன்டா நீ போகலை?” என்று கேட்டு வைத்தான்.

   “இல்லை மச்சான்… அம்ரிஷ் டிப்ரஸன்ல இருக்கான். ஆதேஷ் வேற வாயாடுவான். எனக்கென்னவோ இங்கயிருப்பது நல்லதுனுபடுது.

  இந்த பொண்ணை நீ சேப்பா கூட்டிட்டு போ” என்று அறிவுறுத்தினான்.

   வேதாந்த் நொடியும் தாமதிக்காமல் சாக்ஷியோடு கிளம்பினான்.

    செல்லும் வழியில் துப்பட்டா ஷாலால் முக்காடுயிட்டு ‘மெல்லதிறந்தது கதவு’ அமலாவை போல நின்றிருந்தாள்.
  
    “ஏங்க… அழகான முகத்தை மறைச்சிட்டிங்க?” என்று வேதாந்த் பைக் கண்ணாடி வழியாக அவளது முகத்தை மறைத்ததை கண்டு கேட்டான்.
  
  “ஏன்னா… உங்க கேங்லயாவது அம்ரிஷ் சாரை மட்டும் தான் மக்கள் பார்த்தா சூழ்ந்துடுவாங்க. எங்க நாலு பேர்ல யாரையாவது போலீஸ் பார்த்தது ‘மர்கையா தான்'” என்று கழுத்தில் கைவைத்து நாக்கை வெளியே நீட்டி கூறினாள்.

     “கரெக்ட் தான்” என்றவன் ஏற்றயிறக்க பாதையில் கவனமாய் ஓட்டினான்.

   அப்படியோட்டியும் இறக்கமான இடத்தில் வண்டி செல்ல, பெண்ணவள் தேகம் அவனை மோத வந்து சட்டென தோளை பிடித்து கொண்டாள்.

    “கொடைக்கானல் மெயின் இடத்துலயிருந்து ரொம்ப தூரமோ?” என்று சாக்ஷி கேட்டாள்.

   “பின்ன இல்லையா… அம்ரிஷ் கொடைக்கானலுக்கு மத்தியிலையோ, இல்லை மெயின் பிளாஸ்லயோ தனி வில்லா வாங்கினா மத்தவங்களில் யாருக்காவது தெரிந்து நியூஸ் ரிப்போர்டர் யாராவது மோப்பம் பிடிச்சிடுவாங்களே. அதனால தள்ளி தான் வாங்கியது.

      இன்னும் இருபது நிமிஷம் பொறுங்க எங்கயாவது ரீச்சார்ஜ் பண்ணற இடம் வரும். அங்க பிசிஓ இருக்கும்.” என்றான்.

    “எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த காலத்துல பி.சி.ஓ இருக்கும்னு. பிச்சையெடுக்கறவன் கூட ஒரு போன் சிம்னு சுத்தறான்.

   எனக்கென்னவோ அப்பாவுக்கு மெயில் பண்ணிடலாம்னு தோணுது. இல்லைனா..  ஒரு நிமிஷம் போனை ஆன் பண்ணி என் நம்பர்லயிருந்தே பேசிட்டு அணைத்து வச்சிடலாம்.” என்று கூறினாள்.

   “உங்க மிருதுளாவை மணக்க அந்த ராஜபாண்டியன் அதிகளவு மெனக்கெடுத்தார்னா இந்த போன் ஹாக்கிங்ல மாட்டிப்பிங்க. நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கிங்க. ஐநூறு ஆயிரத்துக்கே போன்ல வேலை செய்யறவனுங்க டீடெய்ல் அள்ளி தந்துடுவாங்க. ஹக் பண்ணி இந்த ஏரியாவை ரீச் பண்ணி சிசிடிவில தேடமாட்டாங்களா. அங்க பாருங்க… மூலைக்கு மூலை சிசிடிவி இருக்கு.

  சென்னை சிட்டிமாதிரி ஜனரஞ்சகமான ஏரியா இல்லை. ரொம்ப க்யூக்கா மாட்டிப்பிங்க. மெயில் பண்ணறதாயிருந்தா வீட்லயிருந்து கூட பண்ணலாம். ஆனா ஐபி கூட ஹாக் பண்ண வாய்ப்புண்டு. எனக்கென்ன போன் கால்ஸ் பெட்டர் என்று கூறினான்.

   வேதாந்த் ஹெல்மெட் அணிந்திருக்க சாக்ஷியும் மூடியபடி வந்ததால் “அச்சோ என்னங்க நீங்க ஹாக் பண்ணிடுவாங்கனு சொல்லி சொல்லியே பயமுறுத்தறிங்க” என்று வருந்தினாள்.

   ஒருயிடத்தில் ப்ரவுசிங் செண்டர் மற்றும் பி.சி.ஓ தென்படவும், வேதாந்த் அங்கே நிறுத்தியிருந்தான்.

    சிசிடிவி இருக்க ஹெல்மெட் கழட்டாமல் முகம் மறைத்து தப்பித்து “போன் ஆர் மெயில் எது செய்தாலும் சீக்கிரம்” என்று விரைவுப்படுத்தினான்.
 
  “ம்ம் என்றவள் “ஒரு மெயில் அனுப்பணும்” என்று கேட்டு கணினி முன் அமர்ந்தனர்.

    அப்பொழுதும் கூட வேதாந்த் ஹெல்மெட் கழட்டாமல் முகத்தில் மறைத்த கண்ணாடியை மட்டும் எடுத்து விட்டு, “டைம் ஆச்சு… குயிக்கா அனுப்பிட்டு வா.” என்று தெரிந்தவர்களாக பேசிக்கொண்டார்கள்.

   சாக்ஷியும் மடமடவென தனது மெயிலை கம்போஸ் ஓபன் செய்தாள். போன் வேண்டாமென்று தவிர்த்தார்கள். பெரும்பாலும் எண்களை தான் அதிகமாக ட்ரேஸர் செய்ய வாய்ப்புண்டு என்று.
 
   மடமடவென அவள் தந்தை குருபிரசாத்திற்கும், சஹானா தந்தை சுகுமாருக்கும், மென்பனி அண்ணன் கபிலன் மூவருக்கும் “நாங்கள் நால்வரும் நலம். எங்களை தேடாதீர்கள். பிரச்சனை ஓய்ந்தப்பின் உங்கள் முன் வந்தடைவோம். அதுவரை எங்களை தேடி யார் வந்தாலும், உங்களை துன்புறுத்தினாலும் பொருத்தருள்க. அதை மீறி பிரச்சனை செய்தால் போலீஸில் புகார் அளிக்கவும்.
  நாங்களாக மீண்டும் தொடர்பில் வரும் வரை எங்களை போனில் அழைக்க வேண்டாம். மீறி அழைத்தாலும் அது சுவிட்ச் ஆப் என்றே பதில் தரும்.”
   இப்படிக்கு
   நான்கு திசைகள்.
(சாக்ஷி)
(மென்பனி)
(சஹானா)
(பாவப்பட்ட ஜீவன் மிருதுளா)
   என்று எழுதி முடித்து தட்டிவிட்டாள்.

   கூடவே மதன் என்பவனிடம் “ஏன்டா உங்க அக்காவுக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லியும் விரட்டறிங்க. உங்க அம்மா அப்பாவுக்கு அறிவில்லை. எங்க பிரெண்டை நாங்க பாழங்கிணத்துல தள்ளிடமாட்டோம். மிருதுளா அவயிஷ்டபடி இருப்பா. உங்க அம்மாவிடம் சொல்லி வை. நாங்க இருக்கற வரை மிருதுளாவை இரண்டாம் திருமணம் பண்ணி வைக்க மாட்டோம்.” என்று தட்டிவிட்டாள்.

    வேதாந்த் சாக்ஷி அருகே நெருக்கமாய் அமர்ந்து அனுப்பிய மெயிலை வாசித்திருந்தான்.

  “யாரு மதன்? அந்த பொண்ணு மிருதுளா.. அவளோட தம்பியா?” என்றதும் சாக்ஷி ஆமென்றாள்.

   “மெயில் பார்ப்பாங்களா?” என்று கேட்க, சாக்ஷி முறைக்கவும், “இல்லைங்க சிலருக்கு மெயில் பார்க்கற பழக்கம் இருக்காது. வாரத்துக்கு ஒரு தடவை மாசத்துக்கு ஒரு தடவை எட்டிபார்க்குற ஆட்கள் உண்டு.” என்று எடுத்துரைத்தான்.

   “எங்கப்பா ஏர்டெல்காரன் முதல் ஜோமேட்டோகாரன் போன்ல நோட்டிபிகேஷன் வந்தா கூட முதல் ஆளா செக் பண்ணிடுவார்.
   சஹானா அப்பா அவளோட கல்யாணத்துக்கு மேட்ரிமோனியல்ல சஹானாவை பத்தி டீடெய்ல் போட்டிருக்கார். அதனால தினமும் மெயில் செக் பண்ணுவார்.

  மென்பனி அண்ணா மிருதுளா தம்பி மதன் இந்த காலத்து ஆளுங்க… எந்நேரமும் போன்ல வாழறவங்க. அதெல்லாம் பார்த்திருப்பாங்க. நாம கிளம்பலாம்” என்று அவசரப்படுத்தினாள்.

    வேதாந்த் சாக்ஷி ப்ரவுஸிங் செண்டரில் பணத்தை கொடுத்து வெளிவந்து பைக்கில் திரும்பினார்கள்.

     செக் போஸ்டில் பெண்கள் நால்வரின் சேர்ந்த புகைப்படத்தை கையில் வைத்து வாகனத்தை வழிமறைத்தனர் போலீஸ் ஆட்கள்.

  வேதாந்த் வண்டியை நிறுத்த, சாக்ஷியோ “போச்சி போச்சி” என்று வேதாந்த் முதுகுக்கு பின் மறைந்து முனங்கினாள்.

-தொடரும்.

2 thoughts on “மனதில் விழுந்த விதையே-8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *