Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே 5

மனம் உன்னாலே பூப்பூக்குதே 5

பூ 5

கோகுல கிருஷ்ணன் வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே செல்லும் முன் தோட்டத்தில் இருந்த தன் தந்தையை நோக்கி கையசைத்து விட்டு கிளம்பினான்.

மகன் போவதை பார்த்தபடியே கையில் இருந்த மூங்கில் கூடை நிறைய மலர்களை பறித்துக் கொண்டு வீட்டின் வாயிலுக்கு வந்து சேர்ந்தார் ஆதிநாதன்.

அவர் பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்றபின் வீட்டு தோட்டத்தை பராமரிப்பது அவ்வப்போது நண்பர்களை சந்தித்து உலக விஷயங்களை பேசுவது என்று ஓய்வு பெற்றவருக்கான அனைத்து குணாதிசயங்களையும் நிரம்பப் பெற்றவர்.

மனைவிடமோ மகனிடமோ அதட்டி ஒரு வார்த்தை பேசாத நல்ல மனிதரும் கூட. மகனே வழி அனுப்ப வந்த மனைவியை நோக்கியவர்,

“அந்த பொண்ணுக்கும் மதிய சாப்பாடு கொடுத்திருக்கலாமே சுபா. நீ தான் சமைச்சுட்டியே!”என்று புருவம் நெறிய தன் மனைவியின் குணம் அதுவல்லவே என்ற குழப்பத்துடன் நோக்கினார்.

“நானும் அவளுக்கு கொடுக்குறதுக்கு டப்பால பேக் பண்ணிட்டேன். ஆனா அவ வீட்ல காபி கூட குடிக்க மாட்டேங்கறா. நானும் இந்த ஒரு வாரமா ஆசையா அவளுக்கு எல்லாம் செய்யணும்னு தான் நினைக்கிறேன். அன்பா தான் பார்த்துக்கிறேன். அம்மா இல்லாத பொண்ணு நான் அம்மாவா இருந்து அவளை கவனிக்கணும்னு என்னென்னவோ கனவெல்லாம் கண்டேன். ஆனா நான் காபி கொடுத்தா ஒண்ணு அப்படியே டைனிங் டேபிள்ல வைச்சூட்டு போயிட்றா. இல்லன்னா கோகுல் கையில் கொடுத்துடறா.” என்று தன் மனதில் இருந்ததை கணவரிடம் வெளிப்படுத்தினார் சுபாஷினி.

“நீயே சொல்லிட்ட தாய் இல்லாத பொண்ணுன்னு, ஏதோ தெரியாம செஞ்சிருப்பா. நீ என்ன சுபா சராசரி மாமியார் மாதிரி பேசுற!” என்று மனைவியை கண்டிப்பான பார்வை பார்த்தார்.

“உங்களுக்கு புரியல. ஒரு வாரமா நான் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்றாளே தவிர, அவளா வாய் திறந்து எதுவுமே பேசறதில்ல. சமையல் கூட நான் செய்யும் போது கூட நிற்கிறா. நானா கேட்டா தான் எடுத்துக் கொடுக்கிறது கூட செய்யறா. நானும் எவ்வளவோ நல்லவிதமா ‘இது உன்னோட வீடு, நீயே எல்லாம் செய்’ன்னு சொல்லி பாத்துட்டேன். ஆனா அவ கிட்ட அந்த மாதிரி எந்த மாற்றமும் தெரியல. அவளுக்கே அந்த அன்பு வேண்டாத போது நான் ஏன் வலிய போய் செய்யணும். எனக்கு செய்ய என் பிள்ளை இருக்கான். நான் அவனுக்கு செஞ்சிட்டு போறேன்” என்று சற்று எரிச்சலாகவே பதில் அளித்துவிட்டு உள்ளே சென்று விட்டார்.

திருமணத்திற்கு முன்னதாக சந்தானலஷ்மி சொன்னதை அசைபோட துவங்கினார் ஆதிநாதன்.

“அம்மா அப்பா இல்லாத பொண்ணு. நானும் கூடவே வச்சு வளர்க்க முடியாத சூழ்நிலை. நல்ல குணமான பொண்ணு தான். ஏதாவது தெரியாம தப்பு செஞ்சா நீங்க அவளோட அப்பா அம்மா மாதிரி இருந்து திருத்துங்கோ. என் குழந்தையை திட்டிடாதீங்கோ.” என்று கண்களில் கண்ணீர் மின்னக்கூறிய அந்த முதிய பெண்மணி ஆருத்ராவை திருமணம் செய்து கொடுத்துவிட்டு இன்றுவரையிலுமே தங்கள் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக தன் பேத்தியிடம் பேச வேண்டும் என்றோ அவள் எப்படி இருக்கிறாள் என்ற கேள்விகளையோ தாங்கிக்கொண்டு தினமும் கைபேசியில் அழைப்பதில்லை.

திருமணம் முடிந்த மறுநாள் கிரகப்பிரவேசம் கிளம்பிய பேத்தியின் கைகளைப் பற்றிக் கொண்டு “இனி அதுதான் உன் வீடு. அவா தான் உன்னோட சொந்தம். பாட்டியோட காலம் இன்னும் எத்தனை நாளோ? அதனால இனி உன் குடும்பத்தை நீ தான் கவனமா பார்த்துக்கணும். பெரியவாளுக்கு மரியாதை கொடுத்து பணிவா நடந்துக்கணும். எதிர்த்து பேசப்பிடாது. ஆத்துக்காரரை அனுசரிச்சு நல்லபடியா புக்காத்துல பேர் எடுக்கணும். பாட்டி வளர்த்த பொண்ணு அப்படின்னு எந்த விஷயத்துலையும் யாரும் நாக்கு மேல பல்ல போட்டு பேசுற மாதிரி நீ நடந்துக்கப்பிடாது.”என்று கூறி அனுப்பி வைத்தவர்,

ஆதிநாதனிடம் “அவ பத்து நாள் அங்கு இருந்துட்டு அப்பறமா மறுகழிச்சு திருச்சிக்கு வரட்டும். உடனே வந்தாலும் அவளுக்கு பொருந்த நேரம் போறாது. உங்க மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. என் குழந்தையை நல்லா பார்த்துப்பேள்னு தான் மாப்பிள்ளையோட அனுப்பி வைக்கிறேன். நீங்க தான் அவளுக்கு இனிமே எல்லாம்” என்று கிளம்பும்போது கண்ணீர் மல்க கூறியவர்.

இன்று அந்தப் பெண்ணுக்கு மதிய உணவு கூட கொடுக்காமல் மனைவி அனுப்பியது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி விட்டது. ஆனால் மனைவி சொல்வதையும் தவிர்த்து விட முடியாது. இனி இதுதான் அவள் குடும்பம் எனும் போது அவள் ஒரு வாரத்தில் கொஞ்சமேனும் அனுசரணையைக் காட்டி இருக்க வேண்டும் அல்லவா! என்றும் எண்ணிக் கொண்டார்.

ஒரு பெருமூச்சை வெளியிட்டு விட்டு வீட்டினுள் சென்றவர் மாலை மருமகளிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.


தன் இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான் கோகுலகிருஷ்ணன்.

காலையில் ஆருத்ரா பேசிய விதத்தில் அவளைப் பற்றி கொஞ்சம் புரிந்து கொண்டிருந்தான். அதேபோல தாய் வேலை சொல்லியபோது அதை தவிர்க்காமல் தனக்கு நேரமாவதையும் காட்டிக் கொள்ளாமல் முடிந்தவரை அவள் சமாளித்து இருந்ததை பெருமையுடன் நினைத்துக் கொண்டான்.

அன்னை அவளுக்கு உணவு கொடுத்து விடாதது அவன் மனதிற்கு ஏனோ நெருடலாகவே இருந்தது. ஆனால் அன்னைடம் மேலும் இதைப் பற்றி விவாதிக்க அவன் விரும்பவில்லை.

காலை 10 மணிக்கு ஒரு கம்பெனியின் மேனேஜரை பார்த்து சில கணக்குகளை பற்றி பேச வேண்டி இருந்ததால் வேகமாக அலுவலகம் சென்று கோப்புகளை எடுத்துக்கொண்டு கிளம்பலானான்.

வந்தபோது மேஜை மேல் வைத்த அவன் மதிய உணவுப்பை அவனது கவனத்தை ஈர்த்தது.

ஏதோ எண்ணம் தோன்ற சட்டென்று அந்த பையையும் எடுத்துக்கொண்டு தான் செல்ல வேண்டிய வாடிக்கையாளரின் அலுவலகம் நோக்கி செல்லத் துவங்கினான்.


மென்பொருளை தயாரிக்கும் அந்த நிறுவனத்தில் ஆரம்பத்தில் ஜூனியர் ப்ரோக்ராமராக சேர்ந்து இப்பொழுது சீனியர் ப்ரோக்ராமராக பணி உயர்த்தப்பட்டு தன் பணியை செவ்வனே செய்து வருகிறாள் ஆருத்ரா.

அன்று ஒரு முக்கிய மென்பொருளை டெலிவரி கொடுக்க வேண்டி இருந்ததால் கடைசி கட்ட டெஸ்டிங்கில் டெஸ்டிங் டீம் பிஸியாக இருந்தது.

ஏதேனும் தவறுகளோ குளறுபடிகளோ இருந்தால் இவர்கள்தான் அதனை சரி செய்தாக வேண்டும். அதனால் தயார் நிலையில் காத்திருந்தனர்.

வேறு எந்த புதிய ப்ராஜெக்ட்டும் அவர்களுக்கு ஒதுக்கப்படாததால் இது முடியும் வரை அவர்களுக்கு ஓய்வு தான்.

அதைப் பற்றி கேத்தியும் மீராகும் பேசிக் கொண்டிருக்க, மீராவின் மதிய உணவு பையை வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.

சற்று நேரமாகவே தங்களது பேச்சில் கலந்து கொள்ளாமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்த தோழியை கவனித்த கேத்தி,

“என்னடி மீராவோட லஞ்ச இப்படி பாத்துட்டு இருக்க? பசிக்குதா என்ன? கேன்டீன் போலாமா?” என்று ஆருத்ராவின் தோளில் தட்டினாள்.

‘இல்லை’ என்று தலையை இடம்வலமாக ஆட்டிய தோழியை முறைத்த கேத்தி,

“சும்மா இருந்த என்ன லஞ்ச் பாக்ஸ் முறைச்சு கிளப்பி விட்டுட்டு, இப்போ கேண்டீன் வர மாட்டேன்னு சொல்ற? எழுந்துருடி.” என்று உரிமையோடு அவளை விரட்ட மீராவோ,

“உனக்கு சமோசாவோ பப்சோ திங்கணும்னா போய் தின்னு. அவளை ஏன் கூப்பிடுற?’ என்று கேத்தியிடம் சண்டைக்கு வந்தாள்.

“ஓ உன்ன கூப்பிடலைன்னு ஸ்டொமக் பர்னிங்கா?” என்று கேலி செய்தாள் கேத்தி.

இவர்கள் இங்கே சுவாரசியமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலும் ஆருத்ராவின் பார்வை மீராவின் மதிய உணவு பையில் இருந்து நகரவில்லை.

அவளது மனம் காலையில் மாமியார் இரண்டு பைகளை எடுத்து வைத்ததும், அதில் இரண்டு டப்பாக்களில் சாதம் வைத்ததும், கூட்டு தயாரானதும் மற்றொரு அடுக்கில் வைத்துக் கொள்ளலாம் என்று பேசியதும் நினைவில் ஆடியது.

அவள் கோகுல கிருஷ்ணனின் பேச்சை கேட்டு உடனே சமையலறையிலிருந்து கிளம்பி இருக்கக் கூடாதோ?

இருந்து அந்த கூட்டுக்கு அரைத்துக் கொடுத்திருக்க வேண்டுமோ? அதனால் தான் மாமியார் தனக்கு உணவைக் கொடுத்துவிடவில்லையோ? எடுத்து வைத்த உணவை கூட கொடுக்காமல் விட்டு விட்டாரே! தான் கேண்டினில் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொன்ன போதும் அவர் அதை மறுக்கவில்லையே! என்று மனதில் நூறாவது முறையாக எண்ணிக் கொண்டிருந்தாள்.

இவளது மனப்போராட்டம் தெரியாமல் அங்கே யாருடன் யார் கேன்டீன் செல்வதென்ற சண்டை அரங்கேறிக்கொண்டிருந்தது.

ஒரு பெருமூச்சுடன் தன் கணினி திரையின் பக்கம் திரும்பிய ஆருத்ரா, மணி என்னவென்று கவனித்தாள். பன்னிரெண்டு இருபது என்று பார்த்தவள்,

“உங்க சண்டையை நிறுத்திட்டு ரெண்டு பேரும் என்னோட வாங்க. நானே கேத்திக்கு பப்ஸ்சும், மீராவுக்கு கேக்கும் வாங்கித் தர்றேன். அப்படியே எனக்கு லஞ்ச் சொல்லிட்டு வந்திடுவோம். லஞ்ச் பாஸ் ரெனியூ பண்ணனும்ன்னு ஞாபகப்படுத்து மீரா” என்று கூறினாள்.

“எதுக்கு டி? உனக்கு வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு வந்துப்பன்னு நினைச்சேன்.” என்று கேத்தி ஆருத்ரா அருகில் வந்தாள்.

“அது..” என்று இழுத்த ஆரு,

“எதுக்கும் இருக்கட்டும். தேவைப்படலன்னா உன்கிட்ட கொடுத்திடுறேன்.” என்று மென்மையாக சிரித்தாள்.

“ம்ம் ” என்று கேத்தி சமாதானம் ஆகிவிட, மீராவின் கேள்வி பொதிந்த பார்வை ஆருத்ராவைத் தொடர்ந்தது.

“அப்பறம் கேத்தி, மேடவாக்கம் வீட்லேயே லேப்டாப் ஸ்டெண்டை வச்சிட்டு போயிட்டேன். நாளைக்கு ஆபிஸ் வரும்போது கொண்டு வா. நைட் பில்லோல வச்சு லேப்டாப்ல வர்க் பண்ண கஷ்டமா இருக்கு.” என்று தான் இத்தனை நாள் இருந்த வீட்டை கேத்தி தங்கிக்கொள்ள அக்ரிமென்ட் மாற்றிக்கொடுத்திருந்த ஆருத்ரா அவளது பொருட்களையும் அவளிடமே கொடுத்து விட்டிருந்தாள்.

“சரி நாளைக்கு கொண்டு வரேன்” என்று சொன்னவள் நினைவு வந்தவளாக,

“ஏன் டி புதுசா கல்யாணம் ஆனவ, நைட் எதுக்கு டி லேப்டாப்ல வர்க் பண்ற? உனக்கு வேற வேலையே இல்லையா?” என்று கண்மணிகளை சுழன்றினாள்.

“ச்சீ. வாயை மூடு. என்ன டி பேசுற?” என்று மீரா அவளை அடிக்க,

“ஐயோ தூங்க வேண்டாமா? அதை சொன்னேன் டி என் டோமெட்டோ. எதுக்கு டி அடிக்கிற?” என்று மீண்டும் அவர்களுக்குள் போர் மூண்டது.

கேட்கப்பட்ட கேள்வியில் இருந்த உண்மையை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஆருத்ரா ஒன்று சின்னப்பெண் இல்லையே!

இரவுகள் எட்டும் எப்படி கழிந்தது என்று எண்ணிப் பார்த்தாள்.

முதல் இரவில் கணவன் முன்னே தைரியமாக நின்றாலும் உள்ளே நடுங்கிய நடுக்கத்தை அவளைத் தவிர வேறு யார் அறிவார்? ஆனால் அவனோ,

“கல்யாண அலைச்சல், ஹோமப் புகை எல்லாமே ரொம்ப டயர்டா இருந்திருக்கும். நீ ரெஸ்ட் எடு” என்று அமைதியாக கூறிவிட்டு கட்டிலின் அந்தப்பக்கம் படுத்துக் கொண்டான்.

கீழே விரிப்பு விரித்துப் படுக்க ஆருத்ரா என்ன நாவல் உலக கதாநாயகியா? அவளும் அவனைப்போலவே இந்த பக்கத்தில் உறக்கத்தை தழுவினாள்.

கேட்ட கேள்விக்கு பதில், சின்னதாக ஒரு சிரிப்பு, அவ்வப்போது வெளிப்படும் அனுசரணை. இவை தான் கோகுல கிருஷ்ணனிடம் இன்று வரை அவளுக்கு கிடைத்தது. அதிக நேரம் மௌனம் தான்.

ஏனோ அதில் அவள் வருத்தம் கொள்ளவில்லை.

திருமணத்தை நடத்த பாட்டி இவளிடம் பேசிய பேச்சுக்கள் எத்தனை? அது போல அவனுக்கும் நெருக்கடிகள் இருந்திருக்கலாம்.

அவளுக்கும் சில விஷயங்கள் தெரியுமே! என்ன… அதைப் பற்றி அவள் அவனிடம் கேட்டுக் கொள்ளவோ, தெரிந்தது போல காட்டிக் கொள்ளவோ இல்லை.

கணவனின் சிந்தனையில் சிக்குண்டிருந்த அவளின் நினைவுகளை அவளது கைபேசி கீதம் இசைத்து அழைத்து வந்தது.

அவளது ரிங் டோன் எட் ஷெரனின் ‘ஷேப் ஆப் யூ’ பாடல் தான்.

The club isn’t the best place to find a lover
So the bar is where I go
Me and my friends at the table doing shots drinking fast and then we talk slow
you come over and start up a conversation with just me and trust me I’ll give it a chance now
Take my hand stop, put van the man on the jukebox and then we start to dance
And now I’m singing like

Girl you know I want your love
Your love was handmade for somebody like me
Come on now follow my lead

என்று அவளை அழைத்தது.

எடுத்து பெயரைப் பார்த்தவளுக்கு லேசான திகைப்பு முகத்தில் தெரிந்தது.

“போன் அடிச்சா எடுக்க வேண்டியது தானே! ஏன் அதை இப்படி பார்த்திட்டு இருக்க?” என்று மீரா அவளது மொபைல் ஸ்க்ரீனில் வந்த பெயரை நோக்கினாள்.

“ஏய் எடு டி. உன் ஹஸ்பண்ட் தானே!” என்று கத்த,

உணர்வுக்கு வந்த ஆருத்ரா சட்டென்று அழைப்பை ஏற்று காதில் பொருத்தினாள்.

“சொல்லுங்க.” என்று அவள் குரல் தந்தியடிக்க,

“பிஸியா இருந்தியா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று நிதானமாக வினவினான் கோகுல கிருஷ்ணன்.

“இல்ல. ” என்றதும்,

“ஓகே. நான் உன் ஆபிஸ்க்கு வெளில தான் இருக்கேன். வர முடியுமா?” என்றான் கேள்வியாக.

“இதோ வர்றேன்” என்றவள் தோழிகளிடம் ஏதும் சொல்லாமல் வேகவேகமாக லிப்டை நோக்கிச் சென்றாள்.

“ஆளைப் பாரு. புருஷன் கால் பண்ணினதும் அப்படியே ஓடிடுச்சு பக்கி.” என்று கேத்தி திட்ட, மீராவோ

“சும்மா இரு டி. மேரேஜ் பிக்ஸ் ஆனதுல இருந்து அவர் போன் பண்ணியோ, இல்ல நேர்ல வந்தோ நான் பார்க்கவே இல்ல. கல்யாணத்துல சிரிச்ச முகமா இருந்தாலும் இவ திரும்பி வந்ததுல இருந்து நார்மலாவே இல்ல. எல்லாம் சரியானா அதுவே போதும். நீ அவளை சும்மா கேலி பண்ணிட்டே இருக்காத கேத்தரின்.” என்று அறிவுரை கூறவும் மறக்கவில்லை.

கீழே சென்ற ஆருத்ரா கணவனை தேடி தலையை திருப்பிப் திருப்பிப் பார்க்க,

பக்கவாட்டு சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தவன்,

“அடையாளம் தெரியலையா? இல்ல ஆளையே தெரியலையா?” என்று கேலி செய்தான்.

சட்டென சிவந்த முகத்தை மறைத்துக் கொண்டு, “இந்த பக்கம் பார்க்கல” என்று பதிலுரைத்தாள் ஆரு.

“காலைல சாப்பாடு எடுத்துக்காம வந்துட்ட, அதான் கொடுத்துட்டு போகலாமேன்னு வந்தேன்.” என்று தனக்கு தாய் கொடுத்துவிட்ட உணவுப் பையை அவளிடம் நீட்டினான்.

“இது உங்க லஞ்ச்” என்று அவள் உதடை லேசாக கடித்தபடி கூறியதும்,

“உனக்கு எப்படி தெரியும்?” என்றான் சிரிப்புடன்.

“கார்த்தால மாமி இதுல எடுத்து வைக்கும் போதே, கோகுலுக்கு மிளகு குழம்புன்னா ரொம்ப இஷ்டம்ன்னு சொன்னாங்க.” என்றாள் தரையைப் பார்த்தபடி.

“ஓகே. இது என்னோடது தான். நீ சாப்பாடு எடுத்துக்காம போனது எனக்கு ஒரு மாதிரி இருந்தது. அதான் எடுத்துண்டு வந்தேன்.” உண்மையை கூறிவிட்டான்.

“அப்ப உங்களுக்கு?” என்றாள் வேகமாக.

நான் வெளில வாங்கிக்கறேன். என்றவனிடம்,

“இல்ல அதெல்லாம் வேண்டாம். நீங்களே சாப்பிடுங்க. நான் கேன்டீன்ல பார்த்துக்கறேன்.” என்று மறுக்க,

“ஓகே ஓகே. இரு. இங்க சாப்பிட இடம் இருக்கா? நாம ஷேர் பண்ணி சாப்பிடலாமா?” என்று கேட்டதும் அவள் முகத்தில் அத்தனை வெளிச்சம்.

“வாங்க” என்று கேன்டீன் அழைத்துச் சென்றவள் அங்கிருந்த கடைசி இருக்கையில் அமர வைத்தாள்.

“ஏன் என்னை ஒளிச்சு வைக்கிற?” என்று அவளை வம்புக்கு இழுத்தவனிடம்,

“ரெண்டு அராத்து இருக்குதுங்க. பார்த்தா சாப்பாடுல ஒரு பருக்கை கூட நமக்கு மிஞ்சாது” என்று இயல்பாகக் கூறிச் சிரித்தாள்.

அப்பொழுது அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும், அவனிடம் பேசும்போது இருந்த நெருக்கமும் கோகுல கிருஷ்ணனுக்கு ஏதோ செய்தி சொன்னது.

கேன்டீனில் இருந்து இரண்டு தட்டுகளை எடுத்துக்கொண்டு வந்து அவள் அமர,

மிளகு குழம்பும் முட்டைக்கோஸ் கூட்டும் தயிர் சாதமும் இருந்த டிபன் பாக்ஸை எடுத்து அவளுக்கும் ஸ்பூனில் பரிமாறி அவனும் எடுத்துக் கொண்டான்.

அவள் உணவை ருசித்து உண்ணக் கண்டவன், “சாப்பாடுன்னா ரொம்ப இஷ்டமோ?” என்றான்.

அவள் அமென்று தலையசைக்க, “அப்ப சமையல்?” என்றதும், உதடை பிதுக்கினாள்.

ஏனோ அந்த நொடி கோகுல கிருஷ்ணன் மனதில் அவள் அத்தனை அழகாகத் தெரிந்தாள்.

அவன் வாய்விட்டு சிரித்துவிட்டு, “சமைச்சுப் போட்டா நல்லா சாப்பிடுவன்னு சொல்லு” என்று கேலி செய்ய,

“போங்க கிருஷ்.” என்று உரிமையாக முகம் திருப்பி கோபம் காட்டினாள்.

அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்கு இடையில் இருந்த திரையை மெல்ல விலக்கிக் கொண்டிருந்தனர்.

19 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே 5”

  1. M. Sarathi Rio

    மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
    (அத்தியாயம் – 5)

    அய்யோ..! அய்யோ…! இந்த கோகுல கிருஷ்ணனை நேக்கு ரொம்ப பிடிக்குதே…!

    “பிடிக்குதே…. திரும்ப,
    திரும்ப உன்னை….
    பிடிக்குதே…. திரும்ப,
    திரும்ப உன்னை….
    எதற்கு உன்னை பிடித்ததென்று
    தெரியவில்லையே…
    தெரிந்துகொள்ள
    துணிந்த உள்ளம் தொலைந்ததுண்மையே…”

    எத்தனை க்யூட்டா, ஆத்துக்காரிக்கு தன்னோட சாப்பாடு கொண்டு வரான், அதுவும் ஆஃபிஸ்க்கு, இப்ப ஷேர் வேற பண்ணிக்கிறான்,
    பொண்டாட்டியை செல்லச் சீண்டல் வேற செய்யுறான், ரசிக்கிறான், கிரகிக்கிறான்,
    மயங்குறான்….
    சோ,சோ..க்யூட்.. கிருஷ்…!

    அப்படின்னா…. சுபா மாமி &மாமாவும் நல்லவங்க தான், கிருஷ் அதைவிட நல்லவன் தான். பட், இவ தான் சின்னப்ப
    இருந்து பாட்டியோடவும், ஹாஸ்டல்லேயும் இருந்துட்டதால… சரியா பழக தெரியலையா ? ஒட்டத் தெரியலையா..? இல்லை, புருசன் கிட்டவே வராத நேசம்
    அதுக்குள்ள மத்தவா கிட்ட எப்படி காட்டுறதுன்னு
    தயங்குறாளோ என்னவோ..?
    முதல்ல நேசமோ, இல்லை காதலோ ரெண்டுமே புருசன் கிட்ட தானே காட்டத் தோணும்.
    அவன் தானே நம்மளோட முதல் உடைமை & உரிமை…!
    அவன் கிட்ட நெருக்கம் வந்தப் பிறகு தானே, மத்தவாகிட்டேயும்
    நெருங்கச் செய்யும்.
    இதானே ஃபேக்ட்டு…!
    😄😄😄
    CRVS (or) CRVS 2797

  2. Avatar

    Mami ku aaru urimai eduthu kala nu kobam aana aaru enna ku ithu pidikkum.nu kooda keka matragalae nu aathangam ithu la krish oda silence vera but ava manasu avan oda anbu ku yenguthu athu than unmai avan kammi kira chinna chinna care kum avaluku happy ah kudukuthu

  3. Avatar

    மாமா, மாமி கோகுல் எல்லோருமே நல்லவாளா தான் இருக்கா? பொண்டாட்டி சாப்பிட எவ்வளவு பொறுப்பா தன் சாப்பாட எடுத்துண்டு வந்து ஷேர் பண்ணி சாப்பிடறான், சோ ஸ்வீட்❤❤❤❤, இவ தான் பழக தயங்கறாளோ?

  4. Kalidevi

    Paravala ipovathu gokul pesanum ninachi pesitane off vanthu lunch koduthutu onna sapduran ithu mari oru husband irukanumnu ponnu ninaipanaga thane oru chinna santhosam ithu ellam

  5. Avatar

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  6. Avatar

    Super super super super super super super super super super super super super super super super super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *