Skip to content

லாவா மன்னவா-12

53 / 100 SEO Score

அத்தியாயம்-12

 

விக்ரம் திமிராக கீழேயிறங்கிவர அங்கே ரவிபிரகாஷ் இருந்தார்.

சாப்பாடு சாப்பிடும் இடத்தில் அப்பா என்றதும் குறுகுறுப்பாய் பார்த்து வந்தான்.

ரவிபிரகாஷோ மெதுவாய் “ஏன்டா… எந்திரிச்சமா காபி தண்ணி குடிக்க கீழ வந்தம்மானு இல்லாம, மாடிலயே அடகாத்தியா? இதுல சாப்பாடு சாப்பிட அழைக்கணுமோ? அந்த பிள்ளை எத்தனை தடவை மாடிபடி ஏறும்.” என்று அதட்டினார்.

 

“கட்டி வச்சல்ல… மாடிப்படி ஏறட்டும்” என்று அவனும் கிசுகிசுத்தான்.

 

“அப்பாவும் புள்ளையும் என்ன பேசிக்கறிங்க” என்று ராதிகா இடிக்க, “பையனை நம்ம வீட்ல அழைச்சிக்கலாம்னு சொன்னியே அதை தான் கேட்டேன்” என்றார்.

 

கமலகண்ணனோ மகள் தங்களை விட்டு நண்பன் வீட்டு மருமகளாக செல்ல போகின்றாள் என்று ஆனந்தக்கண்ணீர் வடிய, மாலதியோ “இப்ப என்ன அவசரம் அண்ணா. சென்னைக்கு போறவரை மாப்பிள்ளை இங்கன இருக்கட்டுமே” என்றார்.

 

விக்ரமோ “அத்தை சொல்லறது தான் கரெக்ட்” என்றான்.

 

”ஏன்டா… என் பிரெண்டை வச்சி எம் மருமகளை அழவைக்கவா?” என்று மகனை அறிந்த தந்தையாக கேட்க, “கண்டிப்பா… வேண்டாம் வேண்டாம்னு பண்ணி வச்ச கல்யாணம். சும்மா விடமாட்டேன்” என்றான்.

 

“மாப்பிள்ளையும் பொண்ணும் இருக்கட்டும் ரவி. சென்னை போயிட்டா என் பொண்ணை கண்ணாற பார்க்க முடியாது.” என்றார்.

 

ஹரிணிக்கு தந்தை எது பேசினாலும் இதயம் வலித்தது.

 

“ஆங்… மாமாவே சொல்லிட்டார். நான் இங்க இருக்கேன்” என்று விக்ரம் சலுகை கொள்ள, “ஏன்டா அம்மாவை இப்பவே மறந்துடுவ போலயே? மாமனார் மாமியார் பேச்சை கேட்டு ஆடுற” என்று கவலையாய் கேட்டார் ராதிகா.

 

“ஏம்மா… நீ வேற..” என்று விக்ரம் குறைப்பட, “பின்ன என்னடா? இப்பவே வீட்டுக்கு வரமாட்டேங்கற. மாமனார் வீடு தான் பிடிச்சிருக்கோ” என்று வராத கண்ணீரை துடைக்க,  ‘உன் மருமகளை ஒரு வழியாக்கலாம்னு நினைச்சேன்.’ என்றவன் சிந்தனையை கலைக்கும் விதமாக, “ஏன்டி… சாப்பிட விடு” என்று ரவிபிரகாஷ் அதட்டவும் தான் இருவரும் தட்டை கவனித்தார்கள்.

 

ரவிபிரகாஷும் கமலகண்ணனும் சாப்பிட்டப்பின் தனியாக பேச சென்றார்கள்.

“என்னடா இங்க இருந்தா அவன் மருமகளை ஏதாவது வம்பு பண்ணிட்டு, காயப்படுத்திட போறானேனு தான் வீட்டுக்கு கூப்பிடுவது” என்று கூற, கமலகண்ணனோ “எப்படியும் என் பொண்ணு மாப்பிள்ளையோட சென்னைக்கு போயிடுவா. அப்பறம் அவ சுகதுக்கத்தை போன்ல தான் விசாரிக்கணும். மாப்பிள்ளை என்னத்த வம்பு வளர்த்திட போறார்? கல்யாண மண்டபத்துல அத்தனை பேர் முன்ன, முன்னாள் காதலி போட்ட மோதிரத்தை கழுட்டி நெருப்புல போட்டுட்டு தான் என் பொண்ணுக்கு தாலி கட்டியிருக்கார்.

 

யாரோ ஒரு மனநலம் சரியில்லாத பொண்ணுக்கு உடுப்பு எல்லாம் போட்டு, போட்டோ எடுத்து விளையாடியவனை அடிச்சியிருக்கார். இதுலயே மாப்பிள்ளை குணம் புரியுது. வம்பு வளர்த்தாலோ கயப்படுத்தினாலும், எப்படியாவது கொஞ்ச நாட்களில் மாப்பிள்ளை விக்ரம் என் மகளுக்கே நல்ல கணவரா இருப்பார். எனக்கு அதுல சந்தேகமேயில்லை. ஏன்னா அவர் உன்னோட பையன். ” என்று நண்பனிடம் பெருமையாக உரைத்தார்.‌

 

ரவிபிரகாஷோ “இந்த நல்ல மனசுக்கு உனக்கு நல்லதே நடக்கணும்டா. மருமக நிச்சயம் என் பையனை மாத்திடுவா” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.

 

பிறகு விக்ரம் தாய் தந்தையர் அவர்கள் வீட்டை பார்த்து செல்ல, விக்ரம் ஹரிணி வீட்டில் ரிமோர்டும் டிவியுமாக ஹாலிலேயே காலை நீட்டி அமர்ந்து ஓடிடியில் ரிலீஸான புதுப்படத்தை பார்த்தான்.

 

‘அப்பா இருக்காங்க அம்மா இருக்காங்க. மரியாதைக்காகவது காலை கீழே வச்சிட்டு படம் பார்க்கலாம்ல. விஷம் விஷம்.’ என்று ஹரிணி மனதில் பொறும, “அக்கா… அவரை டிவி ரிமோட்டை தர சொல்லு. எனக்கு போரடிக்கு. நான் படம் பார்க்க வேண்டாமா?” என்றாள்.

 

“ஏன்டி நீ வேற. நானே அவனிடம் சிக்கிட்டேனு பொறுமிட்டு இருக்கேன். இதுல நீ வேற” என்று சலித்துக் கொண்டாள்.

 

அன்றைய பொழுதையும் வீணாக்கி இரவு படுக்க வரவும், மெத்தையை ஆக்கிரமிப்பு செய்தவனாக உறங்க தயாராக, ஹரிணியை போனில் தீவிரமாய் சீரிஸ் பார்த்தவள் அவன் வரவும், போனை கீழேயிறக்கினாள்.

 

“நான் உன்கிட்ட பேசலாமா?” என்றாள்.

 

விக்ரமோ “நான் உங்களிடம் பேசலாமா… இப்படி கேட்கணும். அதை விட்டு நான் உன்கிட்டனு கேட்க கூடாது.” என்று திருத்தினான்.‌

 

ஹரிணியோ ‘ஃபக்யூ’னு என்னை அசிங்கமா திட்டினவனுக்கு மரியாதை ஒன்னு தான் குறைச்சல்.’ என்று எண்ணினாலும், “உங்க லவ்…. ஏன் பெயிலியர் ஆச்சு? ஆன்ட்டி லவ் பெயிலியர் என்று மட்டும் சொன்னாங்க.

 

அங்கிளிடம் நான் பேசினப்ப, அவர் அந்த பொண்ணோட போட்டோவை உங்க போன்ல பார்த்ததாகவும். அதே பொண்ணு, ஏதோ ஹோட்டல்ல பார்த்துட்டு ‘படிக்கற பிள்ளை தானே. என் மகனை லவ் பண்ணற. பெத்தவங்க படிக்க வச்சா அவங்களை முட்டாளாக்கிட்டு சுத்தறிங்க’னு திட்டினாராம்.

 

ஆனா அந்த பொண்ணோட பேட்லக் அவங்க பேமிலியா வந்திருந்ததாகவும், அவ வயசு பிள்ளைங்களா இருக்கற கசின் கூட உட்கார்ந்ததால், அவர் அப்படி பேசியதை கேட்டு, அந்த பொண்ணு வீட்ல அடுத்தடுத்து கல்யாணம் பண்ணி வச்சிட்டதா சொன்னார்.

 

இதுல மாமா தப்பு இருந்ததால் தான் நீங்க அவரிடம் முகம் காட்டறதா கூட சொன்னார்.

 

நீங்க அதுக்கு பிறகு அந்த பொண்ணிடமோ, இல்லை அவ பேமிலியுடனோ காம்பர்மைஸ் பண்ணலையா?” என்று கேட்டாள்.

 

விக்ரம் முகம் கோபத்தை கொப்பளித்தபடி, “உங்க மாமா இவ்ளோ டீசண்டா பேசுவாரா?” என்று நக்கலாய் கேட்டான்.

 

ஹரிணிக்கு ஏதோ புரிந்தது. இவனே ‘ஃபக்யூ’ என்று முன்பின் தெரியாத தன்னிடம் பேசியிருக்க, மாமா ஏதாவது வார்த்தை விட்டாரா?’ என்று நினைத்தாள்.

 

விக்ரமோ “உங்க மாமனார் நான் விரும்பின பொண்ணிடம் ‘நீ நதியா தானே. இஞ்சினியர் காலேஜ் படிக்கற பிள்ளை தானே.’னு கேட்டுட்டு, “ஆமா அங்கிள்னு அவளும் சொன்னா.

 

‘என் மகன் விக்ரமை தெரியுமா?’ அடுத்த கேள்வி ரிலேட்டிவ்ஸ் கூட வந்தவ என்ன சொல்றதுன்னு தடுமாறி ‘ஆங் தெரியும் அங்கிள் என் கிளாஸ்மெட்’னு சொல்லிட்டா.

 

அடுத்து உன் மாமனார் ‘ஏன் மா படிச்சு வேலைக்கு போய் நல்லபடியா வாழ தானே காலேஜ் அனுப்பறாங்க. உங்க அப்பா அம்மாவும் அதுக்கு தானே அனுப்புவாங்க. ஆனா நீயும் என் பையனும் லவ் பண்ணறிங்களா லவ்வு. பெத்தவங்க படிக்க வச்சா அவங்களை முட்டாளாக்கிட்டு ஊர் சுத்தறிங்க, என் மகன் போன்ல உன் போட்டோலாம் பார்த்தேன்.

உங்க அப்பா அம்மா பார்த்தா நாண்டுட்டு செத்துடுவாங்க.

அதென்ன ஆம்பள பிள்ளைய உரசிட்டு நிற்கற. இந்த வயசுல ஆம்பள சுகம் தேவையா.

ஒரு நாள் இல்லை ஒரு நாள் உன் வீடு தேடி வந்து உங்கப்பன் ஆத்தாகிட்ட பேச வேண்டியதா போயிடும். கடைசி வருஷம் படிச்சி திருட்டு தனமா கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்காத. இப்படி வேசித்தனம் செய்யறவளை மருமகளா ஏத்துக்க முடியாது.” என்று விக்ரம் கூறவும் ஹரிணிக்கு மாமாவா இப்படி பேசியது என்று அதிர்ச்சி.

இதுவரை ரவிபிரகாஷ் தன்னிடம் கெஞ்சி தானே பேசியது. இப்படி பேசுவாரா? என்று அயர்ந்து போனாள்.

 

“எங்கப்பா இப்படி பேசிட்டு நடையை கட்டிட்டார். அங்க இருந்தவ நிலைமையை யோசித்து பாரு. அவ அம்மா சித்தி பேமிலினு வந்திருக்க, அவங்க அம்மா அடிச்சி இழுத்துட்டு போயிட்டாங்க.

எல்லாம் முடிந்தது. என் காதலுக்கு உன் மாமனார் சவத்தை கட்டிட்டார்.

 

அவளோட அப்பா அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்த்து முடிச்சிட்டார். அவ.. என்கிட்ட போசாம அப்படியே… அப்படியே… போயாச்சு. இப்ப சொல்லு… எங்கப்பாவோட சுமூகமா பேசணுமா? என்னால எப்படி முடியும். இதுல அவர் பார்த்து எனக்கு கல்யாணம் பேசின பொண்ணு… நீ.

இங்க நமக்குள்ள ஏற்கனவே சனிபகவான் விளையாடிட்டு போயிட்டார். என்ன கருமத்துல நான் வாழறது.” என்று கேள்விக்கேட்டான்.

 

ஹரிணி பதில் சொல்ல முடியாது திண்டாடினாள். ரவிபிரகாஷ் மாமா செய்ததும் தவறு தான். அவருக்கு பரிந்துரைத்து பேச இயலாது. ஆனால் இவனை பார்த்தால் இத்தனை பேசிய தந்தையை பழிவாங்க செய்வானே தவிர அவர் காட்டிய பெண்ணான தன்னை மணப்பது ஆச்சரியம் தான்.

 

”ஓகே… மாமா அந்தளவு உங்க லவ்வரை பேசினா, பழிவாங்கறதா இருந்தா என்னை கல்யாணம் செய்யாம கடந்திருக்கணும். பின்ன ஏன் எனக்கு தாலி கட்டின? இந்த கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாமே. இல்லைன்னா.. உங்கப்பா பார்க்கற பொண்ணுனு அவாய்ட் பண்ணிருக்கலாம். ஏன் அப்படில்லாம் செய்யலை.” என்று வினாவை முன் வைத்தாள்.

 

விக்ரமோ அமைதியாக, ”அந்த காரணம் தெரிந்துக்கணும்னா என்னோட பெட்டை ஷேர் பண்ணு. க்ளியரா சொல்லறேன்” என்று மெத்தையை கண்ணால் காட்டி பேசினான்.

 

மறுப்பாய் தலையாட்டிய ஹரிணியை கண்டு, ”முடியாதுல்ல… அப்ப நான் ஏன் உனக்கு என்னோட பெர்சனலை கதை கதையா சொல்லணும்? உன் வேலையை நீ‌ பாரு. என்‌ வேலையை நான் பார்க்கறேன். சும்மா கேள்விக் கேட்கறேன்னு இம்சைப் பண்ணாத.

 

அந்த உரிமையும் அதிகாரமும் உனக்கில்லை.” என்று ஜம்பமாய் உரைத்தான்.

 

ஹரிணிக்கு தான், தானாக வந்து ஏதேனும் பேசி தெரிந்துக்கொண்டு வாழவோ அல்லது, புரிந்துக் கொள்ளவோ முயற்சிக்கும் போது, முகத்திலடித்தாற் போல விக்ரம் பேசவும் எரிச்சலுற்றாள்.

 

தேளின் குணமே கொட்டிக்கொண்டே இருக்குமென முடிவெடுத்தவள் திரும்பிக் கொண்டு படுத்தாள்.

 

விக்ரமோ மெத்தையில் இமை மூடி  படுத்தவனுக்கு, சில காட்சிகள் கண்முன் விரிந்தது.

 

இதே ஹரிணியை முதல் முறை சந்திக்கும் வாய்ப்பு அமையும் சில வினாடிகளுக்கு முன் தான் மீண்டும் நதியாவை சந்தித்தான்.

 

நதியா திருமணம் நிச்சயக்கப்பட்ட நாளெல்லாம் விக்ரமிற்கு தெரியாது. தந்தை பேசியதால் அவனிடம் போனில் சண்டையிட்டு துண்டித்தாள்.

 

விக்ரம் அந்த நேரம் கல்லூரியில் கடை வீதியில் எங்காவது நதியாவை சந்தித்து பேசி சமரசம் செய்ய முயன்றான். ஆனால் நதியா தந்தையோ வீட்டில் அடைத்து வைத்து, ‘படிச்சி கிழிச்சது போதும். எவனோடவோ ஊர்மேய தான் உன்னை காலேஜிக்கு அனுப்பியதா ரோட்ல போறவன் வர்றவன் சொல்லறான். இனிமேலாவது, பொம்பள பிள்ளைக்கு படிப்பு எதுக்கு? சொந்தத்துல மாப்பிள்ளை பார்த்திருக்கு. அவனுக்கு கழுத்தை நீட்டி, குடும்பம் நடத்து” என்று சிறைவாசம் வைத்துவிட்டார்.

 

அதன்பின் விக்ரம் பரீட்சை எழுதி நல்ல வேளையில் சேர்ந்ததும் பேசலாமென வரும் பொழுது திருமணமே முடிந்திருந்தது.

 

விக்ரமால் தன் காதலிக்கு திருமணம் ஆனதை கேள்விப்பட்டதும், மனம் தாளாமல் ஆற்றில் குதித்தான். அங்கிருந்த ஆடுமேய்ப்பவன் காப்பாற்றிவிட்டு, அஜயை வரவழைத்திட, மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஆனது.

தற்கொலை முயற்சியென்றதால் ரவிபிரகாஷிடம் தெரிவிக்க, ஹாஸ்பிடலில் கத்தி கூச்சலிட்டு, “யோவ் உன்னால தான் என் நதியா வேறொருத்தனை கட்டிக்கிட்டா. உனக்கு சந்தோஷமா. என்னைக்காவது தற்கொலை செய்துட்டு நாண்டுட்டு சாவேன். அப்ப தெரியும்” என்று ரவிபிரகாஷை அச்சுறுத்தினான்.

 

ஆனால் எமனை பக்கம் சென்று பார்த்து வந்ததால் விக்ரம் அதுப்போன்ற தவறை மீண்டும் செய்யவில்லை. ஆனால் ரவிபிரகாஷ் அடிக்கடி ‘அந்த பொண்ணு நமக்கு சரிப்பட்டு வராதுடா.’ என்று கூற, அதற்கும் தந்தையை கடித்து வைப்பான்.

 

ஆனால் ஹரிணியை கண்ட அன்று நதியாவை பார்த்த நாளில், ‘நதியாவை எப்படி காதலித்தோம்? இவளுக்கா உயிரை மாய்க்க சென்றோம்’ என்ற ரீதியில் அவளது பேச்சு அந்தளவு அமைந்தது. அந்த கோபத்தில் தான் விக்ரம் வந்தது. ஆனால் என்ன கோபத்திலும் முன்பின் தெரியாத பெண்ணான ஹரிணியிடம் அப்படி வார்த்தையை வீசியிருக்க கூடாது. அவனுக்கே அது தெரிந்தாலும், இனி அவன் தவறை ஒப்புக்க மறுப்பான். ஏனென்றால் அவனுக்கு இருக்கும் ஈகோ.. தவறு என்ற அறிந்தப்பின்னும் ஹரிணியிடம் மன்னிப்பு கேட்க முடியாத வகையில் படைக்கப்பட்டிருந்தான். அவனாக மன்னிப்பு கேட்காமல் ஹரிணியும் தன் மனதை அவனுக்கு பகிரப்போவதும் இல்லை.

 

இங்கே தன் பக்கம் தவறு என்று அறிந்தும் விக்ரம் காலத்தை கடத்துவதில் குறியாக இருந்தான்.

 

-தொடரும்.

 

1 thought on “லாவா மன்னவா-12”

  1. Super sis nice epi 👌😍❤️ avanga appa eppdi ellam pesiyirukaara 🙄 evan eppdiye erundha vaazkhaiya eppdi thodaruvaan parpom 🧐🤔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!