அத்தியாயம்-24
ராதிகா வந்ததும் மகனை மருமகள் டவல் பாத் எடுப்பதை கண்டு, “துணியை கொண்டா.. நான் என் பிள்ளையை குளிப்பாட்டறேன். நீ உங்க அம்மாவை பாரு” என்றார்.
விக்ரமுக்கோ ‘அவளே டவல் பாத் எடுத்தா என்னவாம்.’ என்று எதுவும் சொல்லாமல் ஹரிணியை ஏறிட்டான்.
அவளோ தன் கையிலிருந்த துண்டு ராதிகா கைக்கு மாறியதை கூட உணாரமல் அவன் நெஞ்சில் கைவைத்தவள், சுதாரித்து, “அம்மாவை பார்த்துட்டு வர்றேன்” என்று ஓடினாள்
“மாமியார் வந்திருக்கேன். ஒரு வார்த்தை எப்படி வந்திங்க அத்தைனு வாய் வருதா. விட்டா போதும்னு ஓடறா. இவளுக்காக என் பையன் கிட்னியை கொடுத்துட்டு படுத்துக்கிடக்கான். என் புள்ளைக்கு கத்திவச்சி கிழிச்சிட்டாங்க” என்று குறைப்பட்டார் ராதிகா.
“அம்மா சும்மாயிருக்கியா?” என்று அதட்ட, “உங்கப்பா ரொம்ப சாமர்த்தியமா சம்பந்திக்கு ஆப்ரேஷன்னு மட்டும் சொன்னார். நீ தான் கிட்னி தர்றேன்னு இங்க வந்து தான் எனக்கே தெரியும். எம்புட்டு கஷ்டமா போச்சு தெரியுமா?” என்று துண்டால் உடலை ஒற்றி எடுத்தார்.
“ஏன்டா… அவ நல்லா தான் பார்த்துக்கறாளா? மெலிஞ்சிட்ட” என்றவரிடம், “அம்மா… அவ என்னை நல்லா பார்த்துக்கறா. தினமும் ஏதாவது டிபன் செய்வா லஞச் கட்டி தருவா. ஈவினிங் வந்ததும் சாப்பிட ஸ்னாக்ஸ், நைட்டு மொறுகலா தோசை. நீ செய்யற தோசை மொத்தையா இருக்கும். இவ நல்லா எண்ணெய் ஊத்தி” என்றதும் துண்டை மெத்தையில் வீசியவரோ, ”நேத்து வந்தவளை புகழ்ந்து பேசற” என்று சுணங்கினார்.
”நான் ஆஸ்பத்திரில இருக்கேன். தயவு செய்து உங்க மாமியார் மருமக சண்டையை என்னிடம் ஆரம்பிக்காதிங்க. நானே ரெஸ்ட்ல இருக்கேன்.” என்றான்.
ராதிகாவோ “ஏன்டா.. தற்கொலை பண்ணிக்க போய் ஆஸ்பத்திரில இருந்தியே அப்ப எனக்கு சொன்னியா? அப்பவும் அதே புத்தி. இப்பவும் இப்படி” என்று கேட்க, “ஹரிணியே இருக்கட்டும். மச் பெட்டர். நீங்க கிளம்புங்க தாய்குலமே. நர்ஸ்… என் ஒய்ஃப்பை கூப்பிடுங்க” என்று விக்ரம் விளையாட்டாய் கூப்பிட நிஜமாகவே ஹரிணி அங்கேயிருந்தாள்.
“அம்மா உங்களை பார்க்க வர்றதா சொன்னாங்க.” என்று கணவனை இம்மியும் நகராதவளை போல வந்திருக்க, ராதிகாவோ, “இவனுக்கு என்ன சாப்பிட கொடுத்த” என்று அதிகாரம் தூள்பறக்க கேட்டார்.
“பேஷண்டுக்கு ஹாஸ்பிடல்லயே புட் தர்றாங்க அத்தை” என்றாள்.
“என் பையன் ஒன்னும் பேஷண்ட் இல்லை. அவங்க கொடுக்கற சாப்பாடு என் பையனை மெலிய வச்சிடும். வீட்டுக்கு போய் கஞ்சி காச்சி நானே கொண்டாறேன்” என்று கணவரை தேடி சென்றார்.
ராதிகா செல்லவும், ‘உப்ஸ்’ என்று பெருமூச்சை வெளியிட்டான். ஹரிணியை கண்டு, “நீயும் வீட்டுக்கு போ.” என்று கூற, மறுப்பாய் தலையசைத்தாள்.
“என்னாச்சு?” என்று கேட்க, “ஒன்னுமில்லை.” என்றவள் அவனருகே ஒரு சேரை இழுத்துபோட்டு மற்ற வேலையை பார்த்தாள்.
விக்ரம் ஹரிணி இருவரும் அவ்வறையில் இருக்க, பழம் துண்டாக்கி நீட்டினாள்.
“வேண்டாம்” என்றான்.
“ஜூஸ்ஸா போட்டு தரவா?” என்று எழுந்திட, “ஒன்னும் வேண்டாம்.” என்றான். அவளுக்கும் இந்த திடீர் பாசம் என்னவோ போல உறுத்தியது. அமைதியாக உட்கார்ந்துவிட்டாள்.
ராதிகா கஞ்சி கொண்டு வந்திருக்க, “உங்களுக்கு எதுக்கு சிரமம் நான் ஊட்டி விடறேன்.” என்று ஸ்பூனை எடுத்திட, அவளிடமிருந்து ஸ்பூனை வாங்கி, “உன் உதவி தேவையில்லை” என்றான்.
“ரெஸ்ட் ரூம் போகணும்னா சொல்லுங்க.” என்று அடுத்து பேச, “கொஞ்சம் உன் நாடகத்தை நிறுத்தறியா? என்ன மைண்ட் செட்ல இருக்க? இத்தனை நாள் டீ டீப்பாய் மேல இருக்கும். நான் உடனே வந்து குடிக்கலைன்னா அது ஆறி ஏடு மிதக்கும். டிபன் எல்லாம் கூட டீப்பாய் மேல லைன் கட்டி வைப்ப. நானா எடுத்து போட்டு சாப்பிடுவேன். மதியம் லஞ்ச் கட்டி டிவி முன்ன வச்சிடுவ. நான் மறக்காம எடுத்துட்டு போவேன். ஈவினிங் வந்தா டிவி பார்க்கறப்ப மறுபடியும் ஸ்னாக்ஸ் ஏதாவது வச்சிட்டு போவ. ஏதோ முன்ன விட ஸ்னாக்ஸ் கிடைக்கும்.
இதுல நைட்டும் சமைச்சதை அங்க கடை பரப்பிட்டு நீ பாட்டுக்கு சாப்பிட்டு பாத்திரம் கழுவ. டிபன் பாக்ஸ் என் துணி, எல்லாம் துவைச்சி மடிச்சி வைப்ப. அவ்ளோ தான். கிட்டதட்ட ஒரு மெயிட் மாதிரி. சாரி.. தப்பா சொல்லலை. மனைவியா செய்வதை காட்டிலும் மெயிடா, ஒன்னா ஒரு வீட்ல இருக்கற கடமைக்கு செய்ததுனு சின்ன குழந்தையிடம் கேட்டா கூட சொல்லிடும்.
இப்ப உங்கப்பாவுக்கு கிட்னி தந்ததும் நான் கடவுளா தெரியறேனா? உன்னை முதல்ல பார்த்தப்பவே ‘ஃபக்யூ’னு அசிங்கமா திட்டியிருக்கேன். அப்படியிருக்க நீ மன்னிக்க இந்த அவகாசம் போதுமா? உங்கப்பாவை காப்பாத்தினதுல நான் நல்லவனா மாறிட்டேனா? உன்னால எப்படி போலியா மாற முடிஞ்சது. இப்படி போலியா மாறி அன்பு செலுத்தறதுக்கு, உண்மையா விரோதியாவே என்னை பாரு. அதுல நாடகம் நடிப்பு எதுவும் இருக்காது. தூய்மையான வெறுப்பு இருக்கும். எனக்கு இந்த பொய்யான அன்பு பிடிக்கலை.
அதுவும் உங்கப்பாவுக்காக என்னிடம் அன்பு காட்டறது சுத்த பேத்தல்.
நீ என்னை வெறுக்கற பாரு.. அந்த துய்மையான வெறுப்பை நான் லைக் பண்ணறேன். ஆனா போலியா அன்பு செலுத்தினா அதனால எனக்கு உன் மேல வெறுப்பு வந்துடுமோனு பயமாயிருக்கு.
நான் ஏற்கனவே ஒரு காதல் வலியை கடந்துட்டேன். அகைன் ஒரு பொண்ணை நம்பி நேசிக்க யோசிக்க வச்சிடாத.” என்றான்.
ஹரிணிக்கு அவன் பேசியதில் திட்டக்கூட மனம் வரவில்லை ஒருவிதத்தில் விக்ரம் பேச்சு சரியானதே!
ஹரிணி அவசரமாய் ”இல்லை… நிஜமாவே உங்களை புரிஞ்சுக்க முயற்சி பண்ணினேன்.” என்று கூற, “ஏதாவது பைத்தியக்காரன் இந்த ஹாஸ்பிடலில் இருப்பான். அவனிடம் சொல்லு.” என்றான் விக்ரம்.
ஹரிணிக்கு லேசாக கண்ணீர் துளிர்த்தது. அவளுக்கு விக்ரமின் பேச்சு இப்பொழுதும் வலிக்கின்றது. ஆனால் முன்பு போல கோபம் வரவில்லை. மாறாக அவன் சொன்னது போல தந்தைக்கு உதவியதால் வரும் அன்பா? என்று தோன்றியது.
ஆனால்.. அதற்காக அவன் மீது கோபம் மட்டும் இருந்து அவன் கட்டிய தாலியை ஏற்கவில்லை. எப்படியும் இருவரும் வாழும் காலத்தில் அவன் ஒரு பெண்ணிடம் இப்படி பேசியது தவறு என்று உணர்ந்து மன்னிப்பு கேட்டப்பின் அவனோடு தன் வாழ்க்கையை பிணைத்திட காலம் கட்டாயப்படுத்தும் என்று அவள் அறிந்தாள். இன்று.. விக்ரம் மன்னிப்பு கேட்காமலேயே அவன் பேசிய வார்த்தைக்கு கோபம் மட்டுப்பட்டு தந்தைக்காக பணிகின்றாள். அவளுக்கே அசிங்கமாக தோன்றியது. உண்மையான பந்தத்தோடு இருக்கப்பட வேண்டிய உறவினில் போலியான வாழ்க்கை எதற்கு?
வினோதினி வரவும் மெதுவாக கண்ணீரை துடைத்தாள்.
”மாமா… அம்மா இந்த சூப்பை குடிக்க சொன்னாங்க” என்று நீட்டினாள்.
“மச்சினிச்சி கையால எது கொடுத்தாலும் குடிப்பேன்.” என்று வாங்கி சுவைத்தான்.
ஹரிணிக்கோ வயிறு பத்தி எரிந்தது. தங்கை இப்பொழுது சிறு பெண் என்றாலும் விக்ரம் பேச்சால் இவளுக்கு பொறாமை உதித்தது.
“ஏய் அப்பாவை பாரு” என்று விரட்ட, “போ அக்கா… அப்பாவும் மாமாவும் கதை பேசறாங்க. போதாதுக்கு அம்மா வேற நடுவுல நடுவுல வந்துட்டு அத்தை கூட கதை அடிக்கறாங்க. எனக்கு போரடிக்கு. நீங்க சூப் குடிச்சிட்டு சாப்பாடு சாப்பிட்டு வீட்டுக்கு போகற வரை, நான் மாமா கூட தான் இருக்க போறேன்.” என்றாள்.
“அடுத்த என்ன படிக்க போற. எந்த காலேஜ் சேர போற?” என்று விக்ரம் பேசவும், “வெங்கடேஸ்வரா காலேஜ் மாமா” என்றாள்.
“அய்ய… அங்க பசங்க எல்லாம் வத்தலும் தொத்தலுமா இருப்பாங்க சைட் அடிக்கவே முடியாது. நீ பேசாம சாராதா காலேஜ்ல சேர்ந்துடு” என்றான்.
“நீங்க அங்கயா படிச்சிங்க மாமா.” என்று கேட்க, “சேசே.. இல்லை. ஆனா அந்த காலேஜ்ல பொண்ணுங்க அழகாயிருப்பாங்க. பசங்களும் நல்லா இருப்பாங்க. டைம் பாஸ் ஆகும்னு கேள்விப்பட்டிருக்கேன். நான் பி.இ ஆச்சே. அன்னைக்கு இஞ்சினியர்னு என்னை நக்கல் பண்ணின.” என்று குறிப்பிட்டான்.
இங்கே ஹரிணிக்கு பொறாமை தீ பொங்க, “ஏய்… இன்னும் ரிசல்டே வரலை. இதுல என்ன பேச்சு. அம்மா கூட இரு போ” என்று அதட்டினாள்.
“நீ வேணும்னா போ. நான் மாமா கூட இருக்கேன்.” என்றாள்.
“அவர் தூங்கப் போறார்.” என்று சமாளிக்க, ‘நான் சொல்லவேயில்லையே.’ என்று பார்வையிட, “என்ன பார்க்கறிங்க. அப்ப சொன்னிங்க. படுங்க.. ஏய் போடி” என்று விரட்டாத குறையாக ஹரிணி கத்த, வினோதினியோ, அக்காவையும் மாமாவையும் பார்த்து பூடகமாக சிரித்து நகர்ந்தாள்.
“எதுக்கு சின்ன பொண்ணை விரட்டின? எனக்கெப்ப தூக்கம் வருதுனு சொன்னேன். ஏய் இதப்பாரு.. ஓவரா… நடிக்காதனு சொன்னேனா இல்லையா” என்றான்.
“இங்க பாருங்க… நான் ஒன்னும் நடிக்கலை. உங்களை பிடிக்கலைனு மூஞ்சிக்கு நேரா சொன்னேன். காபி கூட கொடுக்க பிடிக்காம தான் தட்டை பின்னாடி நகர்த்தி வச்சேன்.
மனவளர்ச்சி குறைவா இருந்த பொண்ணுக்கு நைட்டி போட்டு விட்டிங்களே. அப்ப ஏதோ ஒரு பிளஸ் உங்களிடம் இருக்கும்னு நம்பினேன். உண்மை தான்… எங்கப்பாவுக்காக கல்யாணம் செய்ய தலையாட்டினாலும் அந்த ரீல்ஸ் லேசா உங்க மேல நம்பிக்கையை தந்துச்சு.
தாலி கட்டற நேரம் தங்க மோதிரத்தை நெருப்புல போட்டுட்டு என் கழுத்துல தாலி கட்டினிங்க. என்ன தான் ‘ஃபக்யூ’னு திட்டினாலும், உங்களோட அந்த நேர நேர்மை என்னை அசைச்சுது. இல்லைன்னா தாலி கட்டறப்ப இன்னொருத்தி போட்ட மோதிரம் அத்தனை பேர் பார்க்க நெருப்புல போட்டிங்களே.
இவ்வளோ தெளிவு இருக்கறவன் ஏன் முன்ன பின்ன தெரியாத பொண்ணிடம் ஃபக்யூனு திட்டினார்னு யோசிச்சேன்.
இப்பவரை அந்த வார்த்தை எனக்குள் நெருடல் தருது.
அதுக்காக நான் உங்களை இதுக்கு முன்ன மதிக்காம இல்லையே. ஒரே வீட்ல இருந்தாலும் வீட்டு வேலையில சாப்பாட்டு விஷயத்துல எந்த குறையும் வச்சதில்லை. மெயிடா எதுவும் செய்யலை. நான் ஏன் மெயிடா இருக்கணும்? பொண்டாட்டியா தான் செய்தேன்.
அதுக்காக கோபம் இல்லாம இல்லை. இப்பவும் உங்க மேல இருக்கு. என் தங்கை டிரஸ் மாத்தப்போறானு பதறிட்டு ‘நான் இங்க இருக்கேன். ரூம்ல யாரு இருக்கா இல்லையானு கூட பார்க்க மாட்டியானு திட்டிட்டு வெளியே வந்ததா அவ சொன்னா பாருங்க. இந்தளவு பொண்ணுங்க விஷயத்துல கண்ணியமா இருக்கறவர் என்னிடம் பேசியது தான் ஏன்னு தெரியலையே. அந்த வார்த்தையை மறக்க பார்த்தேன்.
அதை தாண்டி எங்கப்பாவுக்கு இந்த இக்கட்டான நேரத்தில உதவி செய்து, ஒரு மகனா இருக்கிங்க பாருங்க. மாமா சொன்ன மாதிரி என்னைக்காவது அவனை கணவனா அடைஞ்சதுக்கு சந்தோஷப்படுவன்னார். இப்ப சந்தோஷப்படறேன்...
இப்படியொரு கேரக்டர்… அதுவும் தினுசா… திமிர்பிடிச்சவனா… அப்பா சொல்லுக்கு கட்டுப்பட்டவனா… சமூக பொறுப்புள்ளவனா, பேமிலில மச்சினிச்சியை தப்பா பார்க்காம, ஒரு பொண்ணை உண்மையா காதலிச்சு தற்கொலை வரை போனவனை, நல்ல நண்பனை தேர்ந்தெடுத்து இருக்கறவனை, மருமகனா இல்லாம சிட்சுவேஷன்ல மகனா, ஏதோவொரு மேஜிக் என் இதயத்துல பண்ணற… இது போலியான அன்பு இல்லை. கொஞ்சம் கொஞ்சமா… தேனீ மாதிரி அன்பை சேகரிக்க முயற்சி பண்ணறேன்.
என் தூய்மையான வெறுப்பை லைக் பண்ணற நீ. என்னையும் லைக் பண்ண என்ன செய்யணும்னு தெரியாம நிற்கறேன்.” என்றவள் விக்ரமை கண்டு விழிநிமிர்த்தி, “நான் உங்களை நேசிக்க முயற்சி பண்ணறேன்.” என்றவள் கண்ணீரை துடைத்து விட்டு அவ்விடமிருந்து வெளியேறினாள்.
விக்ரமிற்கு புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது. ‘ஹரிணி தன்னை நேசிக்க முயற்சிக்கின்றாளா.’ என்றவனுக்குள் ஆச்சரியம், தனது மெத்தையில் சாய்ந்து கொண்டு நிஜமாகவே இமை மூடிக் கொண்டான்.
-தொடரும்

Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 harini oru vazhiya manasula erukuradha sollita super eppo vikram enna mudivu yedupan parpom 🧐🤔