அத்தியாயம்-8
ரவிபிரகாஷ் தன் மகன் அங்கு சென்று என்ன செய்து வைத்தானோ என்று கோபமாக நிற்க அவரது அலைப்பேசி அடித்தது.
”கமலகண்ணன் தான் போன் பண்ணறான். இந்த கல்யாணம் மட்டும் தடைப்பட்டதா வந்துச்சு. உன் மகனை இங்க இருந்து எனக்கு ஈமச்சடங்கு முடிச்சிட்டு போக சொல்லு. நான் அந்த உத்திரத்துல தூக்கு போட்டு தொங்குவேன்” என்று எச்சரித்து போனை எடுத்தார்.
“என்னடா ஆச்சு” என்று கேட்க, “தெரியலை ரவி. இங்க உன்னிடம் பேசிட்டு வீட்டுக்கு வரவும், மாப்பிள்ளை வந்துட்டு போயிருக்கார். வினோதினி தான் அக்காவை கழுத்தை பிடிச்சு ரூமுக்கு இழுத்துட்டு கதவை அடைச்சி பேசினதா சொன்னா. ஹரிணி எதுவும் சொல்லலை. அவ கல்யாணம் என்னால தடையேற்படாதுப்பானு மட்டும் சொல்லிட்டா. அங்க அவர் ஏதாவது சொன்னாரா?” என்று கேட்டார்.
“அதெல்லாம் எதுவும் தடையேற்படாதுடா.” என்று கூறியவர் நார்மலாய் இரண்டு வார்த்தை பேசி வைத்தனர்.
தன் மனைவி ராதிகாவிடம் ரவிபிரகாஷ் அதட்டலாக, “இங்கபாரு ராதிகா… நம்ம பையனுக்கு, பெத்த அப்பாவா பொறுப்பா, அவனுக்கு வரன் பார்த்துட்டேன். இவளை தான் கட்டிக்கணும். பொண்ணுவீட்டு பக்கம் எந்த எதிர்ப்பும் இல்லை. உன் பையன் ஏதாவது போக்கிரி வேலை பார்த்து வைக்கறதா இருந்தா இப்பவே சொல்ல சொல்லு.
இல்லை… அமைதியா என் பேச்சை கேட்கறதா இருந்தா நல்லது.” என்று சென்றார்.
ராதிகாவோ உத்திரத்தில் தூக்கு என்று ரவிபிரகாஷ் பேசி சென்றப்பின் என்னவென்று பேசுவார்.
ரவிபிரகாஷ் இது போல பேசாமல் இருந்தால் இவர் கூட கல்யாணத்தை மறுத்து நாலு வார்த்தை பேசியிருக்க வாய்ப்புண்டு. இன்று அந்த வழியையும் அடைத்தாயிற்று.
ஹாலில் அமைதிக்கு நோபல் பரிசு பெற்றவன் போல விக்ரம் அமர்ந்திருக்க, நேரமானது.
அஜயோ “சென்னைக்கு கிளம்பலையாடா” என்றதும் தான் அதே மௌனத்துடன் தன் உடைமையை அள்ளி வைத்தான்.
ராதிகா ஏற்கனவே சிலதை பேக் செய்திருக்க, மகனை சாப்பிட வைத்தார்.
இரவு அஜய் தான் திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு நண்பனை அழைத்து வந்திருந்தான்.
“அங்க போயிட்டு போன் பண்ணு.” என்று மொட்டையாக கூற, விக்ரம் கடுப்புடன், “ஏன்டா… இங்க நான் ஒருத்தன் உம்முனு வர்றேனே ஏன் ஏதுக்குன்னு கேட்காம அங்க போய் போன் பண்ணணுமா?” என்று வெடித்தான்.
அஜயோ “ஓ… சாருக்கு இப்ப தான் நீங்க உம்முன்னு இருப்பதை பார்த்தும் நான் உங்களிடம் பேசலைன்னு தெரிதா?
பஜ்ஜி சாப்பிட்டுட்டு இருந்தவன் அரக்கபறக்க பறந்து போன, சரி ஹரிணி வீட்டுக்கு போனியே. திருப்பி வர்றப்ப என்னோட தானே வந்த ஏதாவது பேசி சொல்லியிருக்கலாம்ல. வீட்டுக்கு வந்த இங்க கிளம்பற வரை பேசி தொலைக்க என்னவாம். இப்ப வந்து கேள்வி கேட்கற. என்ன பார்த்தா எப்படி தோணுது?” என்று கத்தவும் விக்ரமோ “எனக்கு எதுக்கு இந்த கல்யாணம்?” என்றான் நிலைக்கொள்ளாத தவிப்புடன்.
“அதை உன் மனசாட்சியிடம் கேளு. எந்த அப்பாவுக்கு உன்னை மாதிரி நிற்கற ஒருத்தனுக்கு கல்யாணம் செய்ய துடிக்கறது தப்பில்லை.” என்றான்.
விக்ரம் ஏதோ கேட்க வாயெடுத்து தவிர்க்க, அஜயோ “ஹரிணியை பார்த்தியே. என்ன சொன்னா? நீ ஏதாவது கிறுக்குத்தனம் செய்தியா?” என்று கேட்க அதற்கு விக்ரம் அவனிடம், “முன்ன ஒருநாள் கொஞ்சம் சரியில்லாத பொண்ணுக்கு நைட்டி வாங்கி மாட்டிவிட்டு ஒருத்தன் அதை வீடியோ எடுத்தப்ப போனை உடைச்சி போட்டதா சொன்னேனே. அந்த வீடியோவை வேறொருத்தனும் எடுத்திருக்கான். அந்த வீடியோ எந்த யூடுயூப் சேனல்லயோ வந்திருக்கு. அதை ஹரிணி பார்த்திருக்கா. அதனால் நான் ஃப..ஃப… பேசியதை தவிர்த்திட்டு கல்யாணம் பண்ண ஓகே சொல்லியிருக்கா. அதோட அவ அப்பா உடல்நிலை காரணத்துக்காகவும். அந்தாளு மாத்திரை அட்டையா வச்சியிருந்தான். என்னனு கூட கவனிக்கலை.” என்றான். நாசுக்காய் தான் திட்டிய வார்த்தையை கூட தவிர்த்துவிட்டு பேசினான் ஜாலக்காரன்.
“அந்தாளு இல்லைடா… மாமனாரு.” என்று திருத்த, “கல்யாணத்துக்கு நான் வரலைன்னா நீ தாலிகட்டு. எங்கப்பாவை அப்பானு தானே சொல்லற” என்றான் விக்ரம்.
“செருப்படி வாங்குவ. ஹரிணி எனக்கு தங்கச்சி முறை. இப்படி ஏதாவது பேசின. அப்பாவிடம் இன்னிக்கே போட்டு தந்து, அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் வச்சிடுவேன்” என்று அஜயும் மிரட்டினான்.
“ம்கூம்… ரவிபிரகாஷ் இந்நேரம் காலண்டரை தூக்கிட்டு நல்ல நாள் மூகூர்த்த நாள்னு தேடுவார். சேலஞ்ச் பண்ணலாமா?” என்று கேட்டான்.
அஜய் ஒரு பெரிய கும்பிடு போட்டு “ஊருக்கு போயிட்டு சேர்ந்துட்டதா மெஸேஜ் பண்ணு சாமி, ஆளை விடு” என்றான்.
பேருந்து கிளம்பியதும் தான் விக்ரம் அந்த பெண்ணை பற்றி என்ன கருத்தை கொண்டுள்ளான் என்று கேட்க மறந்ததை நினைத்தான் அஜய்.
ஆனால் நண்பன் உறங்கட்டும் என்று அஜய் நினைக்க, விக்ரமோ ஆழ்ந்த சிந்தனையில் ஹரிணியை பற்றி தான் நினைத்தான்.
தன் பைக்கில் இடிக்க வந்து மோதி கீழே விழுந்து வெள்ளை சுடிதாரில் சேற்று கறைப்பட, எழுந்து நின்ற கோலம் அழியாமல் கண்முன் வந்தது.
அன்று தான் எப்படி அசுரத்தனமாக மூர்க்கத்தனத்துடன் கோபமாக கத்தினோம் என்றது கூட நினைவுவர, தன் மீதே தப்பான அபிப்ராயம் உண்டானது.
ஒரு பெண்ணிடம் இத்தனை கீழ்தரமான வார்த்தையை விட்டிருக்க கூடாது. ஆனால் பேசியது தவறு. ஹரிணி மட்டும் அம்மாவிடம் அவ்வார்த்தையை கூறி மாட்டிவிட்டிருந்தால் தன் அன்னைக்கும் அல்லவா தலைக்குணிவு. நல்லவேளை அவள் அம்மாவிடம் கூட அவள் கூறவில்லை என்ற நிம்மதி.
அன்று இருந்த நிலைமைக்கு அவன் அதிகப்படியாக பேசியதில், பாவம் ஹரிணி எப்படி அவ்வார்த்தையிலிருந்து விடுபட்டாளோ?!
அது தான் சொன்னாளே… பத்து நாட்களுக்கு மேலாக தான் பேசியது மனதில் உறுத்தியதாக.
இன்று அவள் தாய் தந்தைக்காக என்னை மணக்க சம்மதம் கூறிவிட்டாள்.
இது சரிவருமா? இந்த கல்யாணம் தேவை தானா? இனி ஊருக்கே திரும்பி வராத அளவிற்கு சென்னையில் இருந்துக் கொண்டால் என்ன? இப்படி குதர்க்கமாக யோசித்தவன் அப்படியே ஸ்லீப்பர் கோச்சில் உறங்கி வழிந்தான்.
—
ஹரிணியோ தந்தை வைத்திருந்த மருந்து அட்டையை ஒவ்வொன்றாய் பார்வையிட்டவள் அது எதற்கென்று ஆராயும் முன் தங்கை அம்மா என்று வந்திட, அவர்களை மேலும் அச்சுறுத்தாமல் மருந்து மாத்திரை அட்டைகளை ரசீதை தந்தை போலவே மறைத்தாள்.
பிறகு விக்ரம் வந்து போனதை மேலோட்டமாய் சொன்னதும், மாலதி அப்பொழுதும் “இந்த கல்யாணம் வேண்டாமுங்க. அவன் தான் மாப்பிள்ளையா வரணும்னு என்ன வேண்டுதல்? ஊர்ல வேற பையனே இல்லையா?.” என்று கடிந்தார். ஹரிணி நைஸாக துப்பட்டாவை எடுத்து விக்ரம் கழுத்தை நெறித்தப்பொழுது ஏற்பட்ட கீறலை மறைத்தாள். அந்த நாய்.. இஷ்டத்துக்கு பேசிட்டு கீறிட்டு போயிருக்கு. ஆனாலும் நான் இங்க எல்லாத்தையும் மறைச்சிட்டு இருக்கேன். அப்பா வேற அவருக்கு என்னாச்சுனு சொல்ல மாட்டேங்கறார். என்று மனதில் நினைத்தாள்.
“அம்மா அப்பா ஏதாவது காரணத்தோட செய்யலாம். எனக்கு விக்ரமை கல்யாணம் செய்ய சம்மதம் தான்” என்று முடித்துவிட்டாள்.
வினோதினிக்கு ஆச்சரியம் கூடியது. அந்த விக்ரம் கோபமாக வந்து அக்கா கழுத்தை பிடித்து நெறிக்கியதில் வினோதினி பயந்து கிடக்க, அக்கா கல்யாணத்தில் தடை பிறப்பிக்கவில்லையே.
கமலகண்ணன் மகளை தனியாக கூப்பிட்டு நன்றி நவில, அவளோ தந்தையிடம், “எதுக்குப்பா அவ்ளோ மாத்திரை? என்ன காரணத்துக்காக சாப்பிடறிங்க?” என்று கேட்டாள்.
“அதெல்லாமா கொஞ்ச நாளைக்கு மட்டும் தான்மா. பிறகு மாத்திரை சாப்பிடற தேவை இருக்காது. பயப்பட ஒன்னுமில்லை. கொஞ்சம் கிட்னி பாதிக்கப்பட்டதா ரிப்போர்ட் சொல்லுது வேறொன்னுமில்லை.” என்றார். ரிப்போர்டில் இருந்த மாத்திரை அதற்காக தான் என்று கூகுளும் சொன்னது.
ஹரிணி பயந்திட, “அதான் இரண்டு கிட்னி கடவுள் தந்திருக்காரே.” என்று மகளை சமாதானம் செய்தார்.
ஹரிணி தந்தை நெஞ்சில் சாய்ந்து “வேறொன்னும் இல்லையேப்பா?” என்று வருத்தமாய் கேட்க, “அட.. நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கணும்னு வேண்டினேன். இப்ப அதுவும் நல்லதா முடியுது” என்று சந்தோஷப்படுபவரிடம், ‘இது உங்களுக்காக சம்மதிக்கப்பட்ட திருமணமே தவிர அந்த விக்ரமை என்னால் மனதார ஏற்க முடியாது’ என்று மனதிற்குள் தான் புலம்பினாள்.
யார் என்ன மனதில் நினைத்தால் எனக்கென்ன? உங்களை படைக்கும் பொழுதே, உங்களது தலையெழுத்தை எழுதிவிட்டேன். இனி அடித்தல் திருத்தல் மாற்றல் என்ற எந்த கோட்பாடும் என் எழுத்தாணி கொண்டு மாற்றும் வேலை எனக்கில்லை என்று இறைவன் முடிவெடுத்தார்.
—
ராதிகா தான் வேறு வழியின்றி மருமகளை பார்த்து, பூவைத்து வருவதாக மீண்டும் ஒருமுறை ஹரிணியை காண வந்தார்.
வீட்டில் பறித்த பூவும், பழங்களும், ஸ்வீட்டும் எடுத்து வந்தவர் வேண்டா வெறுப்பாக ஹரிணியிடம் திணித்தார்.
‘இந்த கல்யாணத்துல எனக்கும் அந்த வீணா போன விக்ரமுக்கும் பிடிக்கலைன்னு பார்த்தா, இந்தம்மாவும் என்னை கண்டா முகம் தூக்குது.
இந்த லட்சணத்துல அவனை கல்யாணம் வேற பண்ணறேன். நிஜமாவே இந்த கல்யாணம் தேவைதானா?’ என்று தந்தையை கவனித்தாள். இப்பொழுதே உடல்சுகவீனமாக இருப்பதாக காட்டியது.
தலையை உலுக்கி, அந்த விக்ரமிடம் என்னால சமாதானம் ஆகமுடியாது. இவங்களிடமாவது பேசி ஐஸ் வைப்போம் என்று நினைத்தாள். அதற்கேற்றது போல மாலதி கமலகண்ணன் வேறு அங்கில்லை
ஹரிணி ஏதோ பேசவரவும், ”என் பையனை அவன் இவன்னு நீ பேசியதுமே எனக்கு உன்னை பிடிக்கலை.
எந்த அம்மாவுக்கு தான் தன் பிள்ளையை குறை சொல்லி பேசினா பிடிக்கும்.
அதுலயும் நீ மருமகளா வர்றப்பவே நமக்குள்ள முட்டுதேனு கலக்கமா தான் இருக்கு.
என்னப் பண்ண… இவர் முடிவை மாத்திக்க மாட்டேங்கறார். என் சிநேகிதன் பொண்ணுக்கு என்னடி குறைச்சல். அந்த பொண்ணிடமும் இடக்குமடக்கா என்னத்த பேசினானோ?
தப்பா பேசியிருக்க போய் தான் உன் மகன் விசுக்குன்னு ஓடிவந்துட்டான்.
இல்லை என்ன பேசினேன்னு உன் மகனாவது சொல்வான்லனு கிடுக்கு போடுறார்.
அவரிடமே ஏதாவது கோபமா தான் பேசாவான். அந்தாளு… அந்த மனுஷன், உன் புருஷன், ரவி வீட்ல இல்லை, இப்படி தான் வம்பு இழுப்பான்.
இவருமே அவனை ரொம்ப கண்டிச்சு வளர்ப்பதா இறுக்கி தான் பிடிக்கிறார்.
அதென்னவோ இறுக்கி பிடிக்க பிடிக்க, அவன் அத்துட்டு போறதுல இருக்கான்.
சென்னைக்கு வேலைக்கு போனது கூட அப்படி தான்னு நினைச்சிட்டு இருந்தேன்.
இப்ப தான் தொரியுது. அவன் ஏதோ ஒரு பொண்ணை விரும்பி, அந்த பொண்ணு வேற கல்யாணம் பண்ணிட்டு, இவனை வேண்டாம்னு சொல்லவும் கோபத்துல வெளியூருக்கு போயிட்டான்னு.” என்று மூக்குறிந்து கூறவும், ஹரிணிக்கு திகிலாக இருந்தது.
‘இதுவேறயா? காதலிச்சவளிடமும் அசிங்கமா பேசியிருப்பான். அவ புத்திசாலி கழட்டி விட்டுட்டு போயிருப்பா. இப்ப வகையா நான் தான் முட்டாளாட்டம் மாட்டிக்கிட்டேன்.
அப்பாவுக்கு மட்டும் உடம்பு நல்லாயிருந்தா நான் இப்பவும் இந்த கல்யாணத்தை நிறுத்துவேன். ஆனா அப்பாவுக்கு உடம்பு சரியில்லையே. அதென்ன இத்தனை மாத்திரைன்னு கேட்டதுக்கு இப்ப மொத்தமா மாத்திரையை ஒளிச்சி வச்சிட்டார். அம்மாவுக்கு கூட தெரியாம ஏன் சாப்பிடணும்.’ என்று மனதில் ஓடியது. தந்தை வேறு அன்னையிடம் கூறி பயத்தை கூட்டாதே என்று கோரிக்கை வைத்திருந்தார்.
“ஆமா… என் மகன் உன்னை என்னனு திட்டினான்? விக்ரம் அப்பா.. விக்ரம் காதலிச்சதை உன்னிடம் சொன்னாரா?” என்று ராதிகா கேட்க, இரண்டிற்கும் இல்லை என்பதாக தலையாட்டினாள் ஹரிணி.
ஹரிணிக்கு தனித்து கேட்டாலும் அந்த வார்த்தைகளுக்கு விளக்கமளித்து, என்ன திட்டினான்னு சொல்ல இயலாதவளாக. மற்றொரு கேள்வியான விக்ரம் காதல் விவகாரம் தெரியவில்லை என்றும்.
“அச்சோ… அவன் காதலிச்ச விஷயத்தை நானா தான் உலறிட்டேனா? ஆனா உங்கப்பாவிடம் விக்ரம் காதல் விவகாரம் சொன்னதா விக்ரம் அப்பா சென்னார்.” என்று கேட்க, ராதிகா உலறியதற்கு ஆமென்றது போல ஹரிணி மண்டையை ஆட்டினாள்.
“ஒருவேளை அப்பாவிடம் மட்டும் பிரெண்ட் என்பதால சொல்லியிருக்கலாம்.” என்றாள் ஹரிணி. ராதிகா தலையை சொரிந்தபடி, மாலதி இருக்கும் பக்கம் நகர்ந்தார்.
ஹரிணியோ, ‘அவன் பேசிய பேச்சுக்கு அவனையே கல்யாணம் செய்வதே அதிகம். இதுல அவனுக்கு லவ் பெயிலியர். இவனை எல்லாம் யார்யா… காதலிச்சது. ஸப்பா… குட் வெரி குட்… என்னோட ஒளிமயமான எதிர்காலம் இப்பவே தெரியுது.’ என்று மனதோடு புலம்பினாள். தந்தைக்கு விக்ரம் காதல் விவகாரம் தெரிந்தும் தன்னை மணக்க சம்மதித்து இருக்க, ஹரிணியோ சராசரி பாசமிகு மகளாக இருந்துக் கொண்டாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 harini paavam appa kaga nu yosichi ava life a yosikala🙄 endha vikram amma poi solludha ella unmaiya dhan solludha nu therilaiye 🙄🤔🧐