Skip to content
Home » வலியறிதல்-48

வலியறிதல்-48

பொருட்பால் | அரசியல் |வலியறிதல்

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

குறள்:471

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்

செயலின்‌ வலிமையும்‌, தன்‌ வலிமையும்‌, பகைவனுடைய வலிமையும்‌, இருவர்க்கும்‌ துணையானவரின்‌ வலிமையும்‌ ஆராய்ந்து செய்யவேண்டும்‌.

குறள்:472

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்

தனக்குப்‌ பொருந்தும்‌ செயலையும்‌, அதற்காக அறிய வேண்டியதையும்‌ அறிந்து அதனிடம்‌ நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும்‌ இல்லை ஒன்றும்‌ இல்லை.

குறள்:473

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்

தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல்‌ ஊக்கத்தால்‌ முனைந்து தொடங்கி இடையில்‌ அதை முடிக்க வகையில்லாமல்‌ அழிந்தவர்‌ பலர்‌.

குறள்:474

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்

மற்றவர்களோடு ஒத்து நடக்காமல்‌. தன்‌ வலிமையின்‌ அளவையும்‌ அறியாமல்‌, தன்னை வியந்து மதித்துக்‌ கொண்டிருப்பவன்‌ விரைவில்‌ கெடுவான்‌.

குறள்:475

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும்‌, அந்தப்‌ பண்டமும்‌ (அளவோடு ஏற்றாமல்‌) அளவுகடந்து மிகுதியாக ஏற்றினால்‌ அச்சு முறியும்‌.

குறள்:476

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்

ஒரு மரத்தின்‌ நுனிக்கொம்பில்‌ ஏறியவர்‌, அதையும்‌ கடந்து மேலும்‌ ஏற முனைந்தால்‌, அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்‌

குறள்:477

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி

தக்க வழியில்‌ பிறர்க்குக்‌ கொடுக்கும்‌ அளவு அறிந்து கொடுக்கவேண்டும்‌; அதுவே பொருளைப்‌ போற்றி வாழும்‌ வழியாகும்‌.

குறள்:478

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை

பொருள்‌ வரும்‌ வழி (வருவாய்‌) சிறியதாக இருந்தாலும்‌, போகும்‌ வழி (செலவு) விரிவுபடாவிட்டால்‌ அதனால்‌ தீங்கு இல்லை.

குறள்:479

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்

பொருளின்‌ அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்‌) இருப்பது போல்‌ தோன்றி இல்லாமல்‌ மறைந்து கெட்டுவிடும்‌.

குறள்:480

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்

தனக்குப்‌ பொருள்‌ உள்ள அளவை ஆராயாமல்‌ மேற்கொள்ளும்‌ ஒப்புரவினால்‌, ஒருவனுடைய செல்வத்தின்‌ அளவு விரைவில்‌ கெடும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!