Skip to content
Home » வாய்மை-30

வாய்மை-30

அறத்துபால் | துறவறவியல் | வாய்மை-30

குறள்: 291

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால்‌ அது மற்றவர்க்கு ஒரு சிறிதும்‌ தீமை இல்லாத சொற்களைச்‌ சொல்லுதல்‌ ஆகும்‌.

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  
குறள்: 292

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

குற்றம்‌ தீர்ந்த நன்மையை விளைக்குமானால்‌ பொய்யான சொற்களும்‌ வாய்மை என்று கருதத்தக்க இடத்தைப்‌ பெறுவனவாம்‌.

குறள்: 293

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்

ஒருவன்‌ தன்‌ நெஞ்சம்‌ அறிவதாகிய ஒன்றைக்‌ குறித்துப்‌ பொய்‌ சொல்லக்கூடாது. பொய்‌ சொன்னால்‌ அதைக்‌ குறித்துத்‌ தன்‌ நெஞ்சமே தன்னை வருத்தும்‌.

குறள்: 294

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்

ஒருவன்‌ தன்‌ உள்ளம்‌ அறியப்‌ பொய்‌ இல்லாமல்‌ நடப்பானானால்‌, அத்தகையவன்‌ உலகத்தாரின்‌ உள்ளங்களில்‌ எல்லாம்‌ இருப்பவனாவான்‌.

குறள்: 295

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை

ஒருவன்‌ தன்‌ மனத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால்‌, அவன்‌ தவத்தோடு தானமும்‌ ஒருங்கே செய்வாரைவிடச்‌ சிறந்தவன்‌.

குறள்: 296

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்

ஒருவனுக்குப்‌ பொய்‌ இல்லாமல்‌ வாழ்தலைப்‌ போன்ற புகழ்நிலை வேறொன்றும்‌ இல்லை; அஃது அவன்‌ அறியாமலே அவனுக்கு எல்லா அறமும்‌ கொடுக்கும்‌.

குறள்: 297

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று

பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால்‌ மற்ற அறங்களைச்‌ செய்தலும்‌ நல்லது ஆகும்‌.

குறள்: 298

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

புறத்தே தூய்மையாக விளங்குதல்‌ நீரினால்‌ ஏற்படும்‌; அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல்‌ வாய்மையால்‌ உண்டாகும்‌.

குறள்: 299

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு

(புறத்தில்‌ உள்ள இருளை நீக்கும்‌) விளக்குகள்‌ எல்லாம்‌ விளக்குகள்‌ அல்ல; சான்றோர்க்கு (அகத்து இருள்‌ நீக்கும்‌, பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்‌.

குறள்: 300

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற

யாம்‌ உண்மையாகக்‌ கண்ட பொருள்களுள்‌ வாய்மையைவிட எத்தன்மையாலும்‌ சிறந்தவைகளாகச்‌ சொல்லத்‌ தக்கவை வேறு இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *